தமிழகத்தில் 166 நாட்களுக்கு பிறகு தமிழகம் முழுவதும் மாவட்டங்களுக்கு இடையிலான பேருந்து போக்குவரத்து அதிகாலை முதல் தொடங்கியுள்ளது

பின்னர், ஜூன் 26-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை சென்னை மண்டலம் தவிர்த்து ஏனைய மண்டலங்களில் பஸ் போக்குவரத்து நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து கொரோனா தொற்று வேகமாக பரவியதால், ஜூலை 1-ந் தேதி முதல் அனைத்து பஸ் போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டன.
மேலும் விழுப்புரம், கும்பக்கோணம், சேலம், கோயம்புத்தூர், மதுரை, திருநெல்வேலி அரசு போக்குவரத்து கழகங்களில் இருந்தும் மாவட்டங்களுக்கு இடையேயான போக்குவரத்து இன்று முதல் தொடங்கியது. இதில் சென்னையில் இருந்து மட்டும் அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் 260 பஸ்கள் உள்பட பிற அரசு போக்குவரத்து கழக பஸ்களையும் சேர்த்து 800 பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
இதற்காக கோயம்பேடு பணிமனையில், அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்கள் மற்றும் விழுப்புரம் அரசு போக்குவரத்து கழக பஸ்களும் தண்ணீரால் சுத்தம் செய்யப்பட்டு, கிருமிநாசினிகள் தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டன. மேலும், என்ஜின்கள், பேட்டரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. பஸ்களின் இருக்கைகளும் சரி செய்யப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
அரசு பஸ்களில் முன்பதிவு விவரம் குறித்து அரசு விரைவு பஸ் போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
அரசு விரைவு பஸ்களில் பயணம் செய்ய இதுவரை 10 ஆயிரம் பேர் முன்பதிவு செய்து உள்ளனர். அதில், இன்று மட்டும் பயணம் செய்ய 4 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். பயணிகளின் தேவைக்கு ஏற்ப பஸ்கள் இயக்கப்படும். நள்ளிரவு 12 மணி முதல் பஸ்கள் இயக்கப்படும். ஆனால், பயணிகள் வந்தால் மட்டுமே பஸ்கள் இயக்கப்படும். பெரும்பாலும், கோயம்பேட்டில் இருந்து தலா 24 பயணிகளுடன் பஸ்கள் புறப்படும். சமூக இடைவெளியை கடைபிடித்து பஸ்சில் இருக்கைகள் இருந்தால் நடுவழியில் பயணிகளை ஏற்றிக் கொள்ளப்படுவார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.



