நாடு முழுவதும், ஒரே அடையாள அட்டை என்பது, சாத்தியமாகுமா என்ற விவாதம், நிச்சயமாக வலுப்பெறும். இது, மத்திய அரசு கொண்டு வரும் பல்வேறு திட்டங்களில் ஒன்று. வருமான வரி கட்டுவோர் மற்றும் வங்கிகளில் பணம் வைத்திருப்போர், 'பான்' என்ற அடையாள அட்டையை வைத்திருப்பர். சமுதாயத்தில் அந்த எண், எப்படிப்பட்ட அவசியம் என்று, பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

ஆனால், 'ஆதார்' அடையாள அட்டை, இப்போது எல்லாரது வீட்டிலும் இருக்கிறது. ஒவ்வொருவரும், ஆதார் அடையாள அட்டையை, தங்களுடைய முக்கிய அடையாளமாக வைத்திருக்கும் நிலை ஏற்பட்டு வருகிறது. வீட்டில் உள்ள இளையவர்களும், அதைப் பயன்படுத்துவது எளிதாகி விட்டது. இந்த ஆதார் எண் கிடைக்க, அலையாய் அலைந்த நிலை மாறி, இப்போது அதில் சில திருத்தங்கள் உட்பட, பல விஷயங்களை எளிதாக செய்து கொள்ளலாம்.
'ரேஷன் கார்டு, டிரைவிங் லைசன்ஸ்' என்பது, 'ஸ்மார்ட் கார்ட்' உருவத்தில் வரும் காலம் இது. அலுவலகத்தில் தரப்படும் அங்கீகார கார்டு என்று, பல தரப்பட்ட கார்டுகள், ஒருவருடைய பன்முகப் பரிமாணங்களை காட்டுவதாகும். ஆனால், ரேஷன் கார்டு என்பது, அதிக அளவுக்கு மக்களுக்கு தெரிந்தது என்றாலும், இன்றைய நிலையில் ஆதார் கார்டு, அதிக முக்கியத்துவம் பெறுகிறது. மிகப்பெரும் ஜனநாயக நாடுகளில், 'குடிமக்கள் அடையாள கார்டு' தரப்படுகிறது. அதிலும், சிலர் வெளிநாடுகளில் இருந்து வந்து, நீண்ட காலம் தங்கியிருப்பின், அவர்கள் வாரிசுகள் அங்கு பிறக்கக் கூடிய பட்சத்தில், அக்குழந்தைகள், அந்நாட்டின் குடியுரிமை பெற்றவர் ஆவர்.
இன்றைய நிலையில், பல்வேறு விஷயங்களில் மத்திய அரசு, நாடு முழுவதும் சில விஷயங்களை, ஒரே மாதிரியாக கையாள வசதியாக, சில கருத்துகளை கூறி வருகிறது. மத்தியில் உள்ள, பா.ஜ., கட்சி, 17 மாநிலங்களில் ஆட்சியைக் கைக்கொண்டிருப்பதும், இதற்கு காரணம் என்றாலும், முந்தைய கால கட்டத்தில், நாடு முழுவதும் ஒரே ஆட்சி இருந்த போது, சில விஷயங்களை துவங்கிய போதும், முடிவு வராமல் இழுத்தடித்தது. ஆனால், இன்றுள்ள தகவல் தொடர்பு, நிதி பரிவர்த்தனையில், 'டிஜிட்டல்' மயம், உடனுக்குடன் தகவல்களை பரப்பும், 'மொபைல் செயலி' ஆகியவை, இனி அடுத்தகட்ட வளர்ச்சியை நோக்கி பயணிப்பதன் அடையாளம்.
அதிலும், வங்கிகளில் பணம் எடுக்க வசதியாக, 'டெபிட்' அல்லது 'கிரெடிட்' கார்டு என்பது, நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. இது, அதிகளவு வசதிகளைக் கொண்டது. இப்போது பலரும், செலவு வரம்பை முடிவு செய்ய முன்வந்திருப்பதாகக் கூறப்படுகிறது. ஆகவே, 'பான் கார்டு' என்பதையும் தாண்டி, வங்கிப் பரிவர்த்தனைகளுக்கும், 'ஆதார்' என்ற, 12 இலக்கு எண் கார்டு, வசதியாக மாறலாம். 'ஆதார்' உடனடியாக, வங்கிகளில் நடக்கும் ஆதாரங்களை சரிபார்க்க உதவியாக, வெளிப்படையாக வந்து விடுமா என்பதை, நிதியமைச்சகம் இன்னமும் விளக்கவில்லை. ஆனால், போலி ஆதார் களையெடுப்புக்கான சட்ட மசோதா, அனேகமாக அமலாகலாம். அப்படி பார்க்கும் போது, ஆதார் முக்கியத்துவத்தை அதிகரிக்க, மத்திய அரசு முயல்கிறது.

விழி ரேகைகள், கைவிரல் ரேகைப் பதிவு உட்பட, புகைப்படத்துடன் கொண்ட ஆதார் தகவலில் உள்ள எல்லா விஷயங்களையும், எளிதாக கையாளலாம் என்ற குற்றச்சாட்டு உள்ளது. ஏனெனில், நாட்டில் உள்ள முக்கிய தகவல் திரட்டு விஷயத்தை, நம் நாட்டில் மட்டுமே வைத்திருக்கும் நடைமுறையை, உறுதிப்படுத்தியாக வேண்டும். அதை, அன்னிய ஏஜன்சி கையாளும் பட்சத்தில், அது தனி மனித அடிப்படை உரிமைகளை அழித்து விடும் என்ற கருத்தும், அதிக விவாதமாகி இருக்கிறது. ஆகவே, சில முன்னுரிமை விஷயங்களை கையாளும்போது, அதில் உள்ள சாதக, பாதகங்களை கையாண்டு, சிறந்த ஆவணமாக்க, மத்திய அரசு முயல வேண்டும்.
ஒரே தேசம் என்பது, இந்திய வரைபடம் காட்டும் உண்மை என்றாலும், பல மொழிகள், வேற்றுக் கலாசார திணிப்புகளால் பாதிப்பு, உணவு முறை மாற்றங்கள் ஆகியவை இயல்பானவை. ஆனால், வளர்ச்சிக்கான விஷயங்களில், இதைச் சேர்த்துப் பேச வேண்டியதில்லை. ஆணோ, பெண்ணோ, அவர்களின் கல்வியறிவு, வாழ்க்கை நடைமுறைகளுக்கு ஏற்ப, வீட்டை விட்டு வெளியே வந்ததும், இந்தியக் குடிமகனாக பல்வேறு வழிகளில் செயலாற்றா விட்டால், சமூக பாதிப்புகளை சந்திக்க நேரிடும். நாட்டின் இறையாண்மையைக் காக்க, ஏதாவது ஒரு விஷயத்தில், ஒரே அங்கீகாரம் தேவை என்றபோது, மத்திய அரசின் ஆதார் முக்கியத்துவம், ஒரு அடையாளமாக மாறலாம்.
No comments:
Post a Comment