கடந்த, 1996ல், நீலகிரி லோக்சபா தேர்தல் முடிவு அறிவிக்கப்படுகிறது. 'ஆடம்பரம், ஊழலுக்கு எதிராக மக்கள் வாக்களித்திருக்கின்றனர். ஜெ., அரசியல் வாழ்க்கை அஸ்தமனமாகி விட்டது' என, வெற்றிக் களிப்புடன், த.மா.கா., மூத்த தலைவராக இருந்த, எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன் பேட்டி அளிக்கிறார்.நீலகிரியின், 'மண்ணின் மைந்தராகவே' இருந்த காங்கிரசை சேர்ந்த பிரபுவைத் தோற்கடித்த மகிழ்ச்சியும் சேர்ந்து, எஸ்.ஆர்.பி.,யைத் திக்குமுக்காட வைக்கிறது.

பிரபு, எஸ்.ஆர்.பி.,யிடம் தோற்பதற்கு முன், நான்கு முறை, நீலகிரி, எம்.பி.,யாக இருந்தவர். நீலகிரியில் காங்கிரஸ் என்றால், பிரபுதான் என, சின்னக் குழந்தை கூட சொல்லும். காரணம், அவர் முன்னாள் பிரதமர் ராஜிவின் நெருங்கிய நண்பர். மத்தியஅமைச்சராக இருந்தவர்.காங்கிரசில் வழக்கம் போல் கோஷ்டிகள் இருந்தாலும், பிரபு வின் ஜம்பம் தான் செல்லும். அவரை தோற்கடித்த, எஸ்.ஆர்.பி., மத்திய அமைச்சரானார். 2001 - -06ம் ஆண்டில், தமிழக சட்டசபை எதிர்க்கட்சித் தலைவராக செயல்பட்டார். அப்போது, முதல்வராக இருந்த, ஜெ.,க்கு எதிராக, சிறந்த வாதங்களை முன்வைத்தவர் என்ற, சிறப்பை பெற்றார்.ஆனால், அரசியல் பரமபதம் விட்டு வைக்குமா? காலங்கள் மாறின; காட்சிகளும் மாறின.
த.மா.கா.,வில் இருந்து மீண்டும் தாய்க் கட்சியான காங்கிரசில் சேர்ந்து, வாசன் மீண்டும், த.மா.கா.,வைத் துவக்கிய போது, எஸ்.ஆர்.பி., அதில் இணைந்தார். சொல்லப் போனால், வாசனின் வழிகாட்டியாக, எஸ்.ஆர்.பி., இருந்தார்.ஆனால், எதிர்பாராத திருப்பமாக, ஜெ.,யை சந்தித்து, எஸ்.ஆர்.பி.,திடீரென, அ.தி.மு.க.,வில் இணைந்தார். 30 நாளில், அவருக்கு, ராஜ்யசபா, எம்.பி., 'சீட்' வழங்கப்பட்டது.எம்.பி.,யாக இருந்தாலும், தற்போது அரசியலில் இருந்து, எஸ்.ஆர்.பி., ஒதுங்கியேஇருக்கிறார்.

பிரபுவின் நிலைமையும், எஸ்.ஆர்.பி.,க்கு ஒப்பானதே. 2009ல் நீலகிரி, தனி தொகுதியாகி விட்ட தால், கோவை லோக்சபா தொகுதியில், பிரபு போட்டியிட்டு தோல்வியுற்றார்.ஜெ., பிரசாரத்துக்கு வந்த போது, வாக்காளர்களை பார்த்து, பிரபு கைக்கூப்பி வணங்காமல், 'பேன்ட் பாக்கெட்'டில் கைவிட்டு நின்றதாக, அப்போது குற்றஞ்சாட்டப்பட்டது.இதனால், ஜெ., கோபமடைந்த தாகவும், அ.தி.மு.க., தொண்டர்கள் பிரபுவுக்கு ஒத்துழைக்கவில்லை என்றும், இதனாலேயே பிரபு தோற்றார் என்றும் கூறப்படுவதுண்டு. ஆனால், இதை பிரபு ஆதரவாளர்கள் மறுத்தனர். 1980, 1984, 1989, 1991, 2004 என, ஐந்து முறை, எம்.பி.,யாக இருந்த பிரபு, அதன்பின், அரசியலில் ஜொலிக்கவில்லை.எஸ்.ஆர்.பி., மற்றும் பிரபு போன்றவர்கள், தனிப்பட்ட ஆளுமையாக விளங்கிய போதிலும், ஜெ., என்ற ஆளுமைக்கு முன், அவர்களால் ஜொலிக்க முடிய வில்லை.ஜெ.,யிடம் நல்ல பெயர் வாங்குவது கஷ்டம். நல்ல பெயர் வாங்கி விட்டால், அவர்களை ஜொலிக்க வைப்பார். சற்று சறுக்கினாலும், இருக்கும் இடம் தெரியாமல் ஆக்கி விடுவார். இதற்கு, எஸ்.ஆர்.பி., யும், பிரபுவும் இன்றளவும் உதாரணமாக உள்ளனர்.
No comments:
Post a Comment