Tuesday, October 12, 2021

கடலூர் தி.மு.க., - எம்.பி., ரமேஷ்...சிறையில் அடைப்பு!

 முந்திரி தொழிற்சாலை தொழிலாளி மரண வழக்கில் தேடப்பட்ட, கடலுார் தி.மு.க., - எம்.பி., ரமேஷ், 51, பண்ருட்டி நீதிமன்றத்தில் நேற்று சரணடைந்தார். கொரோனா பரிசோதனைக்கு பின், அவர் கடலுார் கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.

கடலுார் தி.மு.க., - எம்.பி., ரமேஷ்...

கடலுார் மாவட்டம் பண்ருட்டி அருகேயுள்ள பனிக்கன் குப்பத்தில், கடலுார் தி.மு.க., - எம்.பி., ரமேஷுக்கு சொந்தமான முந்திரி தொழிற்சாலை உள்ளது. இங்கு, மேல்மாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தராசு, 55, தொழிலாளியாக வேலை செய்தார்.முந்திரி ஆலையில் திருடியதாக செப்., 19ம் தேதி இரவு கோவிந்தராசுவை, காடாம்புலியூர் போலீசார் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.பின், அவரை பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மறுநாள் 20ம் தேதி அதிகாலை கோவிந்தராசு இறந்தார். காடாம்புலியூர் போலீசார், சந்தேக மரணம் பிரிவில் வழக்கு பதிந்தனர்.




சி.பி.சி.ஐ.டி.,



இதற்கிடையில், 'தன் தந்தை கொலை செய்யப்பட்டு உள்ளார். வழக்கை சி.பி.ஐ., விசாரிக்க வேண்டும். ஜிப்மர் டாக்டர்கள் முன்னிலையில், பிரேத பரிசோதனை நடத்த வேண்டும்' என்று கோவிந்தராசுவின் மகன் செந்தில்வேல், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
நீதிமன்ற உத்தரவுப்படி, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை டாக்டர்கள் குழுவினர் முன்னிலையில், செப்., 23ல் விழுப்புரம் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை நடந்தது. அத்துடன், இவ்வழக்கை சி.பி.சி.ஐ.டி., விசாரிக்க, 26ல் தமிழக அரசு உத்தரவிட்டது.



கொலை வழக்கு



விழுப்புரம் ஏ.டி.எஸ்.பி., கோமதி தலைமையில் சி.பி.சி.ஐ.டி., போலீசார், செப்., 28ல் விசாரணையை துவக்கினர். காடாம்புலியூர் இன்ஸ்பெக்டர் நந்தகுமார், எஸ்.எஸ்.ஐ., ஜெயகுமார், போலீஸ்காரர் பாஸ்கர் மற்றும் கோவிந்தராசு மகன் செந்தில்வேல், தொழிற்சாலை ஊழியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.

காடாம்புலியூர் போலீஸ் நிலையத்திற்கு, 19ம் தேதி கோவிந்தராசுவை அழைத்து வந்த 'சிசிடிவி கேமரா' பதிவுகளை ஆய்வு செய்தனர். இதனிடையே, பிரேத பரிசோதனை அறிக்கையில், கோவிந்தராசு அடித்துக் கொல்லப்பட்டது உறுதியானது. சி.பி.சி.ஐ.டி., விசாரணையிலும் கொலை ஊர்ஜிதமானதால், சந்தேக மரண வழக்கை சி.பி.சி.ஐ.டி., போலீசார், இம்மாதம் 8ம் தேதி கொலை வழக்காக மாற்றினர்.


தலைமறைவு



இதையடுத்து, கடலுார் தி.மு.க., - எம்.பி., ரமேஷ், அவரது உதவியாளர் நடராஜன், முந்திரி தொழிற்சாலை மேலாளர் கந்தவேல் மற்றும் அல்லா பிச்சை, சுந்தர்ராஜ், வினோத் ஆகியோர் மீது, 302 - கொலை, 201 - தடயம் மறைப்பது, 149 - சதித் திட்டம், 120 பி - கூட்டு சதித் திட்டம், 147 - ஐந்து பேருக்கு மேல் கூட்டாக சேர்ந்து தாக்குதல் போன்ற பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. எம்.பி., ரமேஷ் தலைமறைவானார். மற்ற ஐந்து பேரையும் போலீசார் கைது செய்து, கடலுார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், போலீசாரால் தேடப்பட்டு வந்த கடலுார் தொகுதி தி.மு.க., - எம்.பி., ரமேஷ், நேற்று காலை 10:30 மணியளவில் பண்ருட்டி மாஜிஸ்திரேட் கோர்ட் - 2ல், நீதிபதி கற்பகவள்ளி முன்னிலையில் சரணடைந்தார். மாஜிஸ்திரேட் விசாரணை நடத்தினார். பின், கடலுார் கிளை சிறையில் அடைக்க உத்தவிட்டார். ரமேஷை, டி.எஸ்.பி., சபியுல்லா தலைமையிலான போலீசார் அழைத்துச் சென்று, கடலுார் அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்தனர்; மாலை 3:00 மணியளவில் சிறையில் அடைக்கப்பட்டார். நாளை 13ம் தேதி, கடலுார் முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சி.பி.சி.ஐ.டி.,போலீசார் விசாரிக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.


தி.மு.க.,வில் 'புதுமுகம்'




பண்ருட்டியில், 69 ஆண்டுகளாக பாரம்பரிய முந்திரி விற்பனையகமாக டி.ஆர்.வி., நிறுவனம் உள்ளது. நிறுவனர் வெங்கடாசலத்தை தொடர்ந்து ரமேஷ் எம்.பி., நிர்வகித்து வருகிறார். புதுச்சேரி மற்றும் தமிழகத்தின் முக்கிய நகரங்களில், 20க்கும் மேற்பட்ட கிளைகள் உள்ளன.
இவர்கள் பாரம்பரியமாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள். பண்ருட்டியில் வீடு கட்ட அனுமதி பெறுவதில், அப்போதைய நகராட்சி சேர்மனாக இருந்த அ.தி.மு.க., பன்னீர்செல்வத்திற்கும், ரமேஷிற்கும் பிரச்னை ஏற்பட்டது. அதனால், 2013ல் தி.மு.க.,வில் ரமேஷ் ஐக்கியமானார். அது முதல், தி.மு.க.,வில் முக்கிய புள்ளிகளின் தொடர்பு ஏற்பட்டதை அடுத்து, மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் பொறுப்பை பெற்றார். தொடர்ந்து, 2019 லோக்சபா தேர்தலில், கடலுார் தொகுதி எம்.பி., வேட்பாளராக அறிவிக்கப்பட்டு வெற்றி பெற்றார்.
தி.மு.க.,விற்கு வந்து 10 ஆண்டுகள் கூட பூர்த்தியாகாதவர் ரமேஷ்.


'வெளியே வருவேன்'




எம்.பி., ரமேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'கோவிந்தராசு மரணம் தொடர்பாக, சி.பி.சி.ஐ.டி., என் மீது முதல் தகவல் அறிக்கை பதிந்துள்ளது. அதை அடிப்படையாக வைத்து, தி.மு.க., மீது அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன், சில அரசியல் கட்சிகள் தவறான பிரசாரம் செய்வது வேதனை அளிக்கிறது. 'தி.மு.க., ஆட்சி மீது வீண் பழி சுமத்துபவர்களுக்கு மேலும் இடம் கொடுக்க வேண்டாம் என்பதற்காக, நீதிமன்றத்தில் சரணடைந்தேன். என் மீது சுமத்தப்பட்டுள்ள புகார் ஆதாரமற்றது என்பதை, சட்டத்தின் முன் நிரூபித்து வெளியே வருவேன்' என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...