தர்ப்பணம், திதி, திவசம், சிரார்த்தம் என்றால் என்ன? - சாஸ்திரம் என்ன சொல்கிறது?..
ஒவ்வொரு மாதம் வரக்கூடிய அமாவாசை, அதிலும் குறிப்பாக தை அமாவாசை, ஆடி அமாவாசை, மகாளய அமாவாசை முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க மிக சிறந்த நாட்களாக கருதப்படுகிறது. அமாவாசை தினத்தில் நம் முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். அதே போன்ற விஷயங்கள் செய்யப்படும், திதி, திவசம் (சிரார்த்தம்) எந்த வகையில் தர்ப்பணத்திலிருந்து வேறுபடுகிறது என பலருக்கு குழப்பமாக இருக்கும். அதை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.
ஒவ்வொரு மாதம் வரக்கூடிய அமாவாசை, அதிலும் குறிப்பாக தை அமாவாசை, ஆடி அமாவாசை, மகாளய அமாவாசை முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க மிக சிறந்த நாட்களாக கருதப்படுகிறது. அமாவாசை தினத்தில் நம் முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் கொடுப்பது வழக்கம்.
●சதர்ப்பணம் என்றால் என்ன?...
தர்ப்பணம் என்பது ஒரு புண்ணிய காரியம். ஒவ்வொரு நாளும் நாம் செய்யலாம். நீர்நிலையில் நின்று சூரியன், அக்னி, வருணன் என எல்லா தேவர்களுக்கும் ஜலத்தை அள்ளி விட்டு, ‘ஆதித்யா தர்ப்பயாமி’ என ஒவ்வொரு தேவர்களுக்கும் செய்வது தர்ப்பணம் ஆகும்.
தர்ப்பணம் என்றால் ஒன்றும் இல்லை. ‘திருப்தி செய்வது’ என்று அர்த்தம். நீரை அளித்து அவர்களை திருப்தி செய்து அருளைப் பெறுதல்.
ஆனால் அமாவாசை, திதி தினத்தில் மட்டும் எள்ளும், நீரும் கலந்து நம் இறந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யலாம்.
இந்த இரு நாட்களில் முன்னோர்களுக்கு ரத்த சம்பந்தமான உறவுகள் மட்டும் தர்ப்பணம் கொடுக்க வேண்டும்.
●சிரார்த்தம் அல்லது திவசம் என்றால் என்ன?..
திவசம் (தெவசம்) என்றால் ஒருவர் இறந்தால், அவர் எந்த மாதத்தில், எந்த திதியில் இறந்தாரோ, அந்த மாதம், அதே திதியில் (தசமி திதி என்றால் அந்த மாதம் தசமி திதி) பிராமணரை அழைத்து, திவசத்திற்கான விரிவான சடங்கும், ஹோமமும் வளர்த்து செய்வதாகும்.
இந்த சடங்கில் முதலில் தேவர்களை அழைத்து திருப்தி செய்ய வேண்டும். பின்னர் மூன்று தர்ப்பை புல் வைத்து, அதன் மீது இறந்து போனவர்கள் மற்றும் திவசம் கொடுப்பவரின் முன்னோர்களை நினைத்து தர்ப்பை புல் மீது பிண்டம் வைத்து உணவளிக்க வேண்டும். அதன் மீது எள், தண்ணீர் விட வேண்டும். பிண்டத்தைப் பசுக்களுக்கு அளிக்க வேண்டும்.
அந்த அந்தணருக்கு அரிசி, காய்கறிகள், தட்சிணை கொடுத்து அவரின் ஆசி பெற வேண்டும்.
●படையல்..
அதோடு முன்னோருக்கு பிடித்த உணவை படையல் இட்டு, தீப, தூபம் காண்பித்து, காகத்திற்கு உணவிட்டு பின்னரே வீட்டில் உள்ளவர்கள் சாப்பிட வேண்டும். இது திவசம் என்றழைக்கப்படும். வசதியுள்ளவர்கள் அந்தணரை அழைத்து இப்படி திவசம் கொடுக்கலாம். தனக்கு வசதி இல்லையே என நினைப்பவர்கள், நீர் நிலையில் எள்ளும், நீரும், தெளித்து தர்ப்பணம் கொடுக்கலாம்.
பிறந்த உடன், உயிருடன் இருக்கும் வரை அவர் பிறந்த நட்சத்திரம் முக்கியம். தன் பிறந்தநாள், அதே மாதம், அதே நட்சத்திரத்தில் கொண்டாடுவது அவசியம். அதே போல இறந்தவர்களுக்கு அவர்கள் இறந்த திதி தான் மிக முக்கியம்.
அமாவாசை மற்றும் அவர்கள் இறந்த திதியில் மட்டுமே அவர்கள் வருகிறார்கள். அவர்கள் இறந்த தேதியைப் பார்த்து திதி கொடுப்பது வீணானது.

No comments:
Post a Comment