ஆடி மாதத்தில் வரக்கூடிய பூர நட்சத்திரம் உச்சம் பெறக்கூடிய நாள் ஆடிப்பூரம் விழாவாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு 2021 ஆகஸ்ட் 11ம் தேதி, ஆடி 26 தேதி ஆடிப்பூரம் திருநாள் கொண்டாடப்பட உள்ளது.
இதே நாளில் ஸ்வர்ண கவுரி விரதமும் கடைபிடிக்கப்படுகிறது. அற்புதமான ஆடிப்பூரம் நாளில் விரதம் இருந்து ஆண்டாளை வேண்டிக்கொண்டாள் மனம் போல மாங்கல்யம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. அம்மன் கோவிலுக்கு வளையல் வாங்கிக் கொடுக்க புத்திரபாக்கியம் கிடைக்கும்.
ஸ்வர்ண கவுரி விரதம் இருந்தால் செல்வ வளம் பெருகும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கவே இந்த விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. கவுரி தேவியின் பதினாறு வடிவங்களில் ஸ்வர்ணகவுரியை விரதம் இருந்து வழிபடும் மரபு ஆந்திரா, கர்நாடகா மற்றும் பல வட மாநிலங்களிலும் கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் உள்ள பிற வட மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் இந்த விரதத்தை அனுஷ்டிக்கின்றனர்.
உலகம் பிரளயத்தில் மூழ்கியபோது, அந்தப் பிரளயத்தில் இருந்து தோன்றிய ஸ்வர்ண லிங்கத்தைத் தேவர்கள் பூஜித்து வழிபட்டபோது, பொன் போன்ற பிரகாசத்துடன் சிவபெருமானும், உமையன்னையும் தோன்றினர். ஸ்வர்ண மயமாகத் தோன்றிய கௌரியை அனைவரும் பூஜித்தனர்.
கதை
இந்த விரத மஹிமை, ஸ்காந்த புராணத்தில், ஸூத பௌராணிகர் திருவாய்மொழியாக அமைந்துள்ளது. ஒரு முறை, கந்தப் பெருமான், சிவனாரிடம், இந்த விரதம் இருப்பதற்கான காரணம் பற்றி கேட்ட போது விளக்கமாக எடுத்துக்கூறியுள்ளார் சிவபெருமான்.
முன்னொரு காலத்தில், சரஸ்வதி நதி தீரத்தில் விமலம் என்ற ஒரு புகழ் பெற்ற நகரம் இருந்தது. அதை சந்திரபிரபன் என்ற அரசன் சிறப்புற ஆட்சி செய்து வந்தான். அவனுக்கு இரு மனைவியர். அவர்களுள் முதல் மனைவியையே அந்த அரசன் வெகு பிரியமாக நடத்தி வந்தான்.
ஒரு நாள், அந்த அரசன் வேட்டையாடக் கானகம் சென்றபோது, அங்குள்ள ஒரு குளக்கரையில் அப்ஸரஸ்கள் ஒரு விரதத்தை மேற்கொண்டிருந்தனர். எதனால் இந்த விரதம் இருக்கிறீர்கள் இதனால் என்ன பலன் என்று அவர்களிடம் கேட்டார் அரசன்.
அந்த தேவ பெண்கள் இது 'ஸ்வர்ண கவுரி விரதம், இந்த விரதத்தை கௌரி தேவியைக் குறித்து 15 ஆண்டுகள் அனுஷ்டிக்க வேண்டும். இதை அனுஷ்டிப்பதால் எல்லா நலமும் உண்டாகும் என்று கூறி விரதம் கடைபிடிக்கும் முறையையும் சொன்னார்கள். அவர்கள் கூறியவற்றை கவனமாகக் கேட்ட அரசன், தானும் அதில் பங்கு கொண்டு விரதத்தை முறையுடன் கடைபிடித்து, 16 முடிச்சுக்கள் அடங்கிய நோன்புச் சரடைக் கையில் கட்டிக் கொண்டான்.
அரண்மனைக்குத் திரும்பியதும், தன் ராணிகளிடம், தான் அனுஷ்டித்த விரதத்தைப் பற்றிக் கூறினான்.
முதல் மனைவி, இதைக் கேட்டு சினம் கொண்டாள். அரசனின் கையில் கட்டியிருந்த நோன்புக் கயிற்றை அறுத்தெறிந்தாள். அது, அரண்மனைத் தோட்டத்திலிருந்த ஒரு பட்ட மரத்தின் மீது விழுந்தது. உடனே, அந்த மரம் துளிர்க்கத் துவங்கி விட்டது. இதைக் கண்டு அதிசயித்த அரசனின் இரண்டாவது மனைவி, உடனே, அந்த நோன்புக் கயிற்றை எடுத்துத் தன் கையில் கட்டிக்கொண்டாள். அதைக் கட்டிக் கொண்ட உடனே அவள் அந்த அரசனின் அன்புக்கு உரியவளாகி விட்டாள்.
முதல் மனைவியோ, அகம்பாவம் கொண்டு தான் செய்த தவறுக்காக, கணவனால் வெறுத்து ஒதுக்கப்பட்டாள்.
இதனால் மனம் வேதனைப்பட்ட முதல் மனைவியோ காட்டிற்கு சென்று, தான் செய்த தவறுக்காக மனம் வருந்தி, தேவியைத் துதித்துக் கொண்டே, அங்கிருக்கும் முனிவர்களின் ஆசிரமங்களைச் சுற்றி வந்தாள். ஆனால் தேவியை நிந்திப்பவர்களுக்கு பிராயச்சித்தமே கிடையாது என்று கூறி முனிவர்கள் விரட்டினர். கவலையோடு வந்த அவளுக்கு குளக்கரையில் உள்ள மரத்தடியில் ஒரு வன தேவதை பூஜை செய்வதைக் கண்டு, அவள் அருகில் சென்றாள். ஆனால் வனதேவதையும் அவளை விரட்டவே, மனம் நொந்து சென்றாள்.
தன்னுடைய கவலை தீர கௌரி தேவியைத் துதித்து, மன்னிப்பு வேண்டினால் ராணி, இதனால் கௌரி தேவி மன மகிழ்ந்து அவள் முன் தோன்றினாள். உடனே, ராணியும், கண்ணீர் மல்க தேவியைப் பலவாறு துதித்து, கௌரி பூஜையையும் விரதத்தையும் அனுஷ்டித்து, கௌரி தேவியிடம் சௌபாக்ய வரம் பெற்று நாடு திரும்பினாள். அங்கு தேவியின் அருளால், அரசன் அவளை மிகப் பிரியமுடனும், மதிப்புடனும் வரவேற்றான். இருவரும் ஒற்றுமையுடன் பல காலம் வாழ்ந்தனர். இந்த ஆண்டு ஆகஸ்ட் 11ஆம் தேதி ஸ்வர்ண கவுரி விரதம் கடைபிடிக்கப்படுகிறது.
ஸ்ரீவில்லிபுத்தூரில் அவதரித்த ஆண்டாள் நாச்சியார் பூமாதேவியின் அம்சமாக போற்றப்படுகிறார். பெருமானின் பல்வேறு அம்சங்களான சங்கு, சக்கரம், வில், கதை, வாள் போன்ற ஆயுதங்கள் மட்டுமே ஆழ்வார்களாக அவதரித்த தருணத்தில், பூமிபிராட்டியும் ஆடிப்பூர நாளில் அவதரித்தாள்.
அரங்கனுக்குச் சூட்ட வேண்டிய மலர்மாலைய தானே சூடிக் கொண்டு அழகு பார்த்தாள் ஆண்டாள்.
தான் சூடிக் களைந்த மாலையைப் பெருமாளுக்கு அளித்து வந்ததால் சூடிக் கொடுத்த சுடர்க்கொடி என்ற பெயரும் பெற்றார்.
ஆடிப்பூரம் நாளில்தான் அம்மனுக்கு மஞ்சள் காப்பு, சந்தனக்காப்பு, குங்குமக்காப்பு, நடத்துவார்கள். அந்த அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகிக்கு வளை காப்பு நடக்கும் நாள் தான் ஆடிப்பூரம். அன்னை உளம் மகிழ்ந்து மாந்தர்கள் அனைவருக்கும் தன் அருளை வழங்கும் நாள். பல்வேறு விதங்களில் அன்னையைக் கொண்டாடும் நாள் திருவாடிப்பூரம். இந்த ஆண்டு திருவாடிப்பூரம் ஆடி 26ஆம் நாள் ஆகஸ்ட் 11ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
இந்த நாளில் விரதம் இருந்து ஆண்டாளையும் பெருமாளையும் வேண்டிக்கொண்டால் மனம் போல திருமண பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
அதே போல அம்மன்கோவில்களில் நடைபெறும் வளைகாப்புக்காக வளையல் வாங்கிக் கொடுத்தால் நம் வீட்டிலும் விரைவில் வளைகாப்பு விழா நடைபெறும் புத்திரபாக்கியம் கிடைக்கும் என்ற நம்பிக்கையும் உள்ளது.

No comments:
Post a Comment