தஞ்சாவூர் நகர தி.மு.க. துணை செயலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட எஸ்.ஐ. ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார்.
தஞ்சாவூரில் நேற்று முன்தினம் அண்ணா சிலை அருகே போக்குவரத்து போலீஸ் எஸ்.ஐ. மோகன் தலைமையிலான போலீசார் ஊரடங்கை மதிக்காதவர்களை எச்சரித்து அனுப்பினர். அப்போது அங்கு வந்த லோடு ஆட்டோவுக்கு எஸ்.ஐ. மோகன் 200 ரூபாய் அபராதம் விதித்துள்ளார். லோடு ஆட்டோவில் வந்தவர்கள் தி.மு.க. நகர துணை செயலர் நீலகண்டனுக்கு போன் செய்துள்ளனர்.
சில நிமிடங்களில் சகாக்களுடன் அங்கு வந்த நீலகண்டன் ஆட்டோவுக்கு அபராதம் விதித்ததை ரத்து செய்யும்படி போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது 'இதற்கு எல்லாம் சிபாரிசுக்கு வரலாமா' என நீலகண்டனிடம் கேட்ட எஸ்.ஐ. மோகன் 'என் தெருவில் இரண்டு வாரமாக தண்ணீர் வரவில்லை. அதை தீர்த்து வைங்க' எனக் கூறியுள்ளார்.
![]() |
இதையடுத்து நீலகண்டன் அங்கிருந்து கிளம்பி சென்றார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. விசாரணை நடத்திய டி.எஸ்.பி. பாரதிராஜன் நேற்று முன்தினம் இரவே எஸ்.ஐ. மோகனை ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவிட்டார். 'தப்பு செய்தது ஒருவர்; பலிகடா நாங்களா' என சக போலீசார் புலம்புகின்றனர்.

No comments:
Post a Comment