டில்லி சட்டசபை தேர்தலில் பதிவான ஓட்டுகள் இன்று எண்ணப்படுகின்றன. இதையடுத்து ஆட்சியை தக்க வைப்போமா என ஆம் ஆத்மியும் இம்முறையாவது ஆட்சியை பிடிப்போமா என பா.ஜ.வும் 'திக்... திக்' மனநிலையில் உள்ளன. இம்முறை ஒரு தொகுதியிலாவது வெற்றி கிடைக்குமா என்ற ஏக்கத்தில் காங்கிரஸ் உள்ளது.
டில்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. 70 தொகுதிகள் அடங்கிய டில்லி சட்டசபைக்கு பிப்.,8ம் தேதி தேர்தல் நடந்தது. மொத்தம் 62.59 சதவீத ஓட்டுகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
டில்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. 70 தொகுதிகள் அடங்கிய டில்லி சட்டசபைக்கு பிப்.,8ம் தேதி தேர்தல் நடந்தது. மொத்தம் 62.59 சதவீத ஓட்டுகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இன்று காலை 8:00 மணி ஓட்டு எண்ணிக்கை துவங்குகிறது. பிற்பகல் 1:00 மணிக்குள் அனைத்து முடிவுகளும் வெளியாகிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.டில்லி சட்டசபைக்கு 2015ல் நடந்த தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 70 தொகுதிகளில் 67ஐ கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. பா.ஜ. மூன்று தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. காங்கிரஸ் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை.
கடந்தாண்டு நடந்த லோக்சபா தேர்தலில் பா.ஜ. தலைமையிலான தே.ஜ. கூட்டணி அமோக வெற்றி பெற்று இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்தது. அதன் பின் நடந்த மஹாராஷ்டிரா, ஹரியானா, ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல்களில் பா.ஜ.வால் எதிர்பார்த்த வெற்றியை பெற முடியவில்லை.
ஹரியானாவில் பா.ஜ. பெரும்பான்மை பெறாத நிலையில் ஜனநாயக் ஜனதா கட்சியுடன் இணைந்து கூட்டணி ஆட்சியை அமைத்தது. மஹாராஷ்டிராவில் பா.ஜ. - சிவசேனா கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைத்த போதிலும் முதல்வர் பதவி போட்டியால் கூட்டணி உடைந்தது. தேசியவாத காங். - காங்., ஆதரவுடன் சிவசேனா ஆட்சி அமைத்துள்ளது.
ஜார்க்கண்டில் பா.ஜ. ஆட்சியை இழந்தது.அதனால் டில்லி சட்டசபை தேர்தலில் இம்முறை வெற்றி பெற்று ஆட்சியை பிடிப்பது பா.ஜ.வுக்கு கவுரவ பிரச்னையாக அமைந்துள்ளது. பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உட்பட மத்திய அமைச்சர்கள் பலரும் பா.ஜ. மூத்த தலைவர்களும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர். அமித் ஷா டில்லியிலேயே முகாமிட்டு பிரசாரம் செய்தார்.டில்லி சட்டசபை தேர்தலில் ஆட்சியை பிடிக்க முடியாமல் தோல்வியடைந்தால் பா.ஜ.வுக்கு சரிவு ஆரம்பித்துவிட்டது என எதிர்க்கட்சிகள் பிரசாரம் செய்யும் என்பதால் தேர்தல் முடிவை பா.ஜ. திக்... திக் மனநிலையுடன் எதிர்பார்த்துள்ளது.
கடந்த சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. ஆனால் கடந்த ஐந்து ஆண்டுகளில் மாநில கட்சி என்ற அளவில் ஆம் ஆத்மி கட்சி சுருங்கிவிட்டது. டில்லியை தவிர அந்த கட்சிக்கு வேறு எங்கும் வெற்றி பெற முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது.அதனால் டில்லியில் மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக் கொண்டால் தான் ஆம் ஆத்மி கட்சியால் தொடர்ந்து செயல்பட முடியும்.
இதனால் முதல்வர் கெஜ்ரிவால் கடந்த ஒரு மாதமாக தீவிர பிரசாரம் செய்தார்; பல இலவச திட்டங்களையும் செயல்படுத்தியுள்ளார். ஆட்சியை தக்க வைத்து டில்லி எங்கள் கோட்டை என்பதை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் ஆம் ஆத்மி உள்ளது.டில்லியில் தொடர்ந்து 15 ஆணடுகள் ஆட்சியில் இருந்த காங்கிரசின் நிலை இப்போது மிகவும் பரிதாபகரமாக உள்ளது.
கடந்த தேர்தலைப் போல் இல்லாமல் ஒரு சில தொகுதிகளிலாவது வெற்றி பெறுவோமோ என்ற கலக்கத்தில் அக்கட்சி உள்ளது.இன்று ஓட்டு எண்ணிக்கை நடக்க உள்ளதையடுத்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. டில்லியில் ஆட்சி அமைப்பது யார் என்பது இன்று மதியம் தெரிந்து விடும்.ஓட்டுப்பதிவுக்கு பின் வெளியான கருத்துக் கணிப்புகள் அனைத்தும் ஆம் ஆத்மி ஆட்சியை தக்க வைக்கும் என தெரிவித்துள்ளன.
No comments:
Post a Comment