Saturday, May 7, 2022

ஆதீன மடங்கள் மட்டும் இல்லை எனில் திராவிட கட்சிகளால் பிழைப்பு நடத்தியிருக்க முடியாது!

 மயிலாடுதுறையில் உள்ள தருமபுர ஆதின மடத்தில் நடக்கும் பாரம்பரிய பட்டின பிரவேச நிகழ்ச்சிக்கு, தி.மு.க., அரசு தடை விதித்துள்ளது. முற்போக்கு, பகுத்தறிவு, சுயமரியாதை, கடவுள் மறுப்பு, மதச்சார்பின்மை என்ற பெயரில், ஹிந்து மத கடவுள்களை, ஹிந்து மத நம்பிக்கைகளை மட்டும் கிண்டல், கேலி, அவமரியாதை செய்வதை, திராவிடர் கழகம் துவங்கிய காலத்திலிருந்தே செய்து வருகின்றனர்.


கடந்த 1967-ல் தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், அதுவும் அண்ணாதுரை மறைவுக்கு பின், கருணாநிதி முதல்வரான பின், தி.க.,வின் வழிவந்த தி.மு.க.,வினரின் கொட்டம் அதிகரித்தது. தி.மு.க.,வினரின் மதச்சார்பின்மை என்பது, ஹிந்து மத வெறுப்பில் துவங்கி, ஹிந்து மத அழிப்பில் வந்து நிற்கிறது.


அராஜக செயல்



தி.மு.க., ஆட்சிக்கு வரும் போதெல்லாம், கோவில்கள் ஆக்கிரமிப்பு என்ற பெயரில் இடிக்கப்படுவதும், கோவில் திருவிழாக்கள், வழிபாட்டு முறைகளில் தலையிடுவதும், அர்ச்சகர்களை தாக்குவதும், அவமானப்படுத்துவதும் வாடிக்கையாகி விட்டது.பத்து ஆண்டுகள் தமிழக மக்களால் ஒதுக்கி வைக்கப்பட்ட தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வந்திருக்கிறது. ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, 'நாங்கள் ஹிந்துக்களுக்கு எதிரானவர்கள் அல்ல; தி.மு.க.,வில் இருப்பவர்களில் 90 சதவீதத்தினர் ஹிந்துக்கள்' என, இன்றைய முதல்வர் ஸ்டாலின் பலமுறை பேசியிருக்கிறார்.


latest tamil news




ஆனால், எல்லாம் பேச்சில் தான்; அரசின் செயல் என்பது அதற்கு எதிராகவே இருக்கிறது.'மதச்சார்பின்மை தான் எங்கள் உயிர் மூச்சு' என்கின்றனர். ஆனால், கோவில்களை மட்டும் நிர்வகிக்கின்றனர். அதற்கு ஆயிரம் காரணங்களை கூறலாம். ஆனால், மதச்சார்பற்ற அரசு, ஒரு மதத்தின் கோவில்களை மட்டும் கட்டுக்குள் வைத்துக் கொள்வது
நியாயமா என்ற கேள்விக்கு, இன்று வரை பதில் இல்லை.மற்ற மதங்களின் பண்டிகைகளுக்கு வாழ்த்துச் சொல்லும் முதல்வர் ஸ்டாலின், ஹிந்து பண்டிகைகளுக்கு மட்டும் வாழ்த்து சொல்வதில்லை. தி.மு.க., தலைவராக எப்படி வேண்டுமானாலும் இருந்து விட்டு போங்கள். ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கும் முதல்வராக இருக்கும் ஒருவர், ஹிந்து பண்டிகைகளுக்கும் வாழ்த்துச் சொல்ல வேண்டாமா?
நான் சட்டசபையில் இதுபற்றி பேசினேன்; அப்போதும் பதில் இல்லை. பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க., கேள்வி எழுப்பியபோது, 'திராவிட மாடல்... சமய சார்பற்ற கூட்டணி...' என்றெல்லாம் முதல்வர் ஸ்டாலின் பேசினாரே தவிர, கடைசி வரை பதில் சொல்லவில்லை.ஆட்டை கடித்து, மாட்டை கடித்து, இப்போது தமிழுக்கும், சைவத்துக்கும் பெரும் தொண்டாற்றி வரும், தருமபுர ஆதீனத்திற்கு வந்திருக்கின்றனர். அங்கு நடக்கும் பட்டின பிரவேசத்திற்கு தடை விதித்திருக்கின்றனர்.
சமீபத்தில் தமிழக கவர்னர் ரவி, தருமபுர ஆதீனத்திற்கு வருகை தந்தார். அப்போது, தி.க., உள்ளிட்ட அமைப்புகளும், தி.மு.க.,வின் கூட்டணி கட்சிகளும் ஆர்ப்பாட்டம் என்ற பெயரில், கவர்னர் பயணித்த காரின் மீதும், உடன் வந்த வாகனங்கள் மீதும் கற்கள், கறுப்புக் கொடிகளை வீசி தாக்குதல் நடத்தினர். 'நாங்கள் எதிர்க்கும் கவர்னரை அழைத்து நிகழ்ச்சி நடத்துகிறீர்களா?' என்று, பழிவாங்கும் போக்கில் தான், தி.மு.க., அரசு, பட்டின பிரவேசத்திற்கு தடை விதித்திருக்கிறது என, தமிழகத்தில் உள்ள மக்கள் பேசத் துவங்கி விட்டனர்.பட்டின பிரவேசம் என்பது, தருமபுர ஆதீன மடத்தின் பக்தர்கள், தங்களது அடியாரான குருவுக்கு செய்யும் காணிக்கை. குருவுக்கு பணிவிடைகள் செய்வது, இறைவனுக்கு செய்யும் தொண்டு. பக்தர்கள் அவர்களாகவே விரும்பி, தங்களது குருவை பல்லக்கில் சுமக்கின்றனர்; யாரும், யாரையும் கட்டாயப்படுத்தவில்லை. ஆதீன மடத்தை சேர்ந்தவர்களோ, பக்தர்களோ இதை எதிர்க்கவில்லை. கடவுள் நம்பிக்கை இல்லாத ஒரு சிறு கூட்டம் எதிர்க்கிறது என்பதற்காக, பாரம்பரிய நிகழ்வுக்கு தடை விதிப்பது அராஜக செயல். இது தான் அசல் பாசிசம்.


தாங்க முடியவில்லை



தருமபுர ஆதீனம், திருவாவடுதுறை ஆதீனம் உள்ளிட்ட ஆதீன மடங்கள் தான், பண்டைய தமிழ் இலக்கியங்களை பாதுகாத்து, நமக்கு அளித்திருக்கின்றன. சங்க கால இலக்கியங்கள் உள்ளிட்ட நம் பண்டைய இலக்கியங்களை, ஊர் ஊராக தேடிச் சென்று பதிப்பித்தவர், 'தமிழ்த் தாத்தா' உ.வே.சாமிநாத அய்யர். அவருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்தது, திருவாவடுதுறை ஆதீனம் உள்ளிட்ட, ஆதீன மடங்கள் தான். ஆதீனங்கள் இல்லை என்றால் தமிழ்த் தாத்தா இல்லை; அவர் இல்லை என்றால், பல்வேறு தமிழ் இலக்கிய நுால்கள் நமக்கு கிடைக்காமல் போயிருக்கும்.

உலகின் மூத்த மொழி, தொன்மையான மொழி என்பதே தெரியாமல் போயிருக்கும்; செம்மொழி அந்தஸ்தும் கிடைத்திருக்காது. ஆதீன மடங்கள் இல்லை என்றால், திராவிட கட்சிகள், தமிழை வைத்து பிழைப்பும் நடத்த முடிந்திருக்காது.இப்படி தமிழுக்கு பெரும் தொண்டாற்றிய தருமை ஆதீனத்தை, உண்மையான தமிழ் பற்று கொண்டவர்கள் ஆதரிக்க தானே செய்ய வேண்டும். தி.மு.க., ஏன் எதிர்க்கிறது என்ற கேள்வி எழலாம். தி.மு.க., மட்டுமல்ல, பிரிவினைவாத சக்திகளுக்கு தருமபுர ஆதீனத்தின் மீது, எப்போதுமே ஒரு எரிச்சல் உண்டு.
தமிழ் என்ற பெயரில், ஒருநாளும் ஆகமத்திற்கு புறம்பான காரியங்களை, தருமபுர ஆதீனம் செய்ததில்லை. சமஸ்கிருத எதிர்ப்பு, வேத எதிர்ப்பு, பிராமண எதிர்ப்பு பேசியதில்லை. தமிழும், சமஸ்கிருதமும் சைவத்தின் இரு கண்கள் என்பது தான் தருமபுர ஆதீனத்தின் கொள்கை. இதனால் தான், தி.மு.க.,வினர் இந்த ஆதீனத்தை குறிவைத்து தாக்க துவங்கி
இருக்கின்றனர்.தற்போதுள்ள 27-வது குருமகா சன்னிதானம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்தர் பொறுப்பேற்ற பின், சோழ மண்டலத்தில், சிதிலமடைந்துள்ள பல சிவாலயங்களை சீரமைத்து, கும்பாபிஷேகம் செய்து வருகிறார். ஜாதி வேறுபாடுகளை மறந்து, மக்கள் ஒன்றிணைய வேண்டும் என, நாயன்மார்களின் வரலாற்றைச் சொல்லி வருகிறார். இதனால் ஏற்பட்டு வரும் எழுச்சியை, தி.மு.க.,வால் தாங்க முடியவில்லை.


தலையிட முடியாது



தமிழகம் முழுதும் பயணம் மேற்கொள்ளும் குருமகா சன்னிதானம், தென் பாரதம் முழுதும் ஞானரத யாத்திரை நடத்தியிருக்கிறார். இப்படி ஆதீனங்கள் மக்களை சந்திக்க துவங்கி விட்டால், தமிழக மக்களிடம் ஆன்மிக எழுச்சி ஏற்படும். அது நடந்து விட்டால், தங்களால் அரசியல் நடத்த முடியாது என்பதால், தருமபுர ஆதீனத்தை குறி வைத்திருக்கின்றனர். பட்டின பிரவேசத்தில் பல்லக்கில் பக்தர்கள் சுமந்து வருவது, மனிதனை மனிதன் சுமப்பது அல்ல. சைவ மரபில் குருவையே சிவமாக பார்க்கும் அருள் நிலையில் நடக்கும் நிகழ்வு இது.
குருமகா சன்னிதானத்தை வெறும் மனிதராக மட்டும், சைவ அன்பர்கள் பார்ப்பதில்லை. நம்பாதவர்கள் இதை ஏற்க வேண்டியதில்லை. நம்புகிறவர்கள் இதுபோன்ற மத நிகழ்வுகளை நடத்த, நம் அரசியலமைப்பு சட்டம் உரிமை வழங்கியுள்ளது. மதச்சார்பற்ற அரசால், மத விவகாரங்களில் தலையிட முடியாது.மனிதர்களை கடத்துவதும், கொத்தடிமைகளாக வைப்பதையும் தான் அரசியலமைப்புச் சட்டத்தின் 23-வது பிரிவு தடை செய்கிறது. பட்டின பிரவேசத்தில் யாரும் கூலிக்கு ஆட்கள் நியமிக்கப்படுவதில்லை. கட்டாயப்படுத்தி யாரையும் வரச் சொல்வதில்லை. எனவே, இந்த சட்டப் பிரிவின் கீழ், தடை விதிக்க முடியாது.
தருமபுர ஆதீன மடத்தை சுற்றியுள்ள நான்கு வீதிகளும், ஆதீனத்திற்குச் சொந்தமானவை. அங்கு மடத்தின் சீடர்களும், பக்தர்களும் நடத்தும் பாரம்பரிய நிகழ்வை தடுக்கும் உரிமை யாருக்கும் இல்லை. தங்களின் அரசியல் சித்தாந்தத்தோடு உடன்பட்டு நிற்கவில்லை என்பதற்காக, தருமபுர ஆதீன மடத்தின் பக்தர்களின் நம்பிக்கைகளோடு விளையாடுவதை, தி.மு.க., அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும்.                                              
வானதி சீனிவாசன் , பா.ஜ., - தெற்கு கோவை எம்.எல்.ஏ.,

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...