Saturday, May 7, 2022

நச்சுனு ஒரு பேச்சு!

 ஒரு பெரிய வீட்டில் ஆடு, மாடு, நாய்கள் இருப்பதை அருகில் சிறிய வீட்டில் இருக்கும் ஒரு குட்டி எலி கவனித்து வந்தது. அதற்கு, இந்த விலங்குகள் எல்லாம் பெரிய வீட்டில் வசதியாக ஆடி பாடி திரிகிறதே ஆனால் நமக்கு மட்டும் வீடு அப்படி இல்லாமல் மிகவும் சிறியதாக இருக்கிறதே என்று வருத்தம். ஒரு நாள் தன் தாயிடம், 'அம்மா ஏன் நமக்கு மட்டும் இப்படி ஒரு படைப்பு? நமக்கும் பெரிய வீடு இருந்தால் நாமும் மற்ற விலங்குகள் போல சந்தோஷமாக இருக்கலாம் அல்லவா?' என்று கேட்க, அதற்கு தாய் எலி இதற்கான காரணத்தை நீயே விரைவில் உணர்ந்து கொள்வாய் என்று கூறியது.

ஒரு நாள் அந்த குட்டி எலி வெளியே சுற்றி திரியும் போது அந்த வழியாக வந்த பூனை அதை பார்த்து துரத்த ஆரம்பித்தது. உடனே உயிர் பயத்தில் அந்த குட்டி எலி அந்த பெரிய பங்களாவின் தோட்டத்துக்குப் போனது. பூனை விடவில்லை. துரத்தியது. அது, ஆடு, மாடு இருக்கும் அந்த பெரிய கொட்டிலுக்குள் ஓடியது. ஆனால், பூனை விடவில்லை, விடாப்பிடியாக துரத்தியது. கடைசியில் குட்டி எலி தன் சிறிய வீட்டிற்குள்ளே புகுந்தது. இப்போது அந்த பூனையால் உள்ளே நுழைய முடியாமல் ஏமாந்து சென்றது.
இதைக் கண்ட அந்த தாய் எலி கூறியது, இப்போது இந்த சிறிய வீட்டின் அருமை புரிகிறதா? எதையும் அதன் அருமை புரியாமல் ஏளனமாக பார்க்கக்கூடாது. இந்த சிறிய வீடு இல்லையென்றால், இன்று நீ உயிரோடு இருக்கமாட்டாய் என்று கூறி, அந்த குட்டி எலிக்கு புரிய வைத்தது. இதை உணர்ந்த அந்த குட்டி எலியும் தன் ஆசைகளை குறைத்து சிறிய வீட்டிலேயே மகிழ்ச்சியோடு வாழ்ந்தது. வீடு மாறவில்லை, மனம் மாறியதால் மகிழ்ச்சி பொங்கியது அந்த எலிக்கு.
இப்படித் தான் நாமும் இருக்கும் இடத்தில் இருக்கின்ற சிறப்புகளை அறியாமல் எதை எதையோ தேடுகிறோம் மற்றும் அடிக்கடி நம்மை படைத்த இறைவனையும் குறை கூறுகிறோம். நமக்கு செல்வாக்கு, பணம், புகழ் கிடைத்தால் தான் சந்தோஷம் என எண்ணி, கிடைத்த வாழ்க்கையை நிம்மதி இல்லாமல், ஆக்கிக் கொள்கிறோம் என்பதையும் உணரவேண்டும். நமக்கு இறைவன் கொடுக்காத ஒன்றை பற்றி எப்பொழுதும் கவலைப் படவேண்டாம். எல்லாத்துக்கும் மிகப்பெரிய காரணம் இருக்கலாம்.
நாம் இப்போது அனுபவிக்கும் சிறிய வலிகளுக்கு பின்னால் இறைவன் மிகப் பெரிய நம்மால் தாங்கமுடியாத வலிகளை மறைத்துக் கூட வைக்கலாம். எனவே, எதையும் ஏற்றுக்கொண்டு, இருப்பதை வைத்து சிறப்போடு வாழ கற்றுக் கொள்வோம். நாம் இப்போது என்ன நிலையில் இருக்கிறோமோ அதுவே சிறந்த ஒன்றுதான் என்பதை உணர்வோம். அதற்காக, இருக்கும் நிலையிலேயே இருக்க வேண்டும் என்றோ, பணம், புகழ், உறவுகள், இதெல்லாம் கூடாது என்று அர்த்தமில்லை.
கிடைக்காத பொருள், உறவுகள், புகழ், பதவி, பணம், நகை, கிடைத்தால் தான் சந்தோஷமும், நிம்மதியும் என நினைப்பது தான் தவறு. கிடைத்தவற்றில் கிடைக்காத நிம்மதியும், சந்தோஷமும், கிடைக்காதவை கிடைத்த பிறகு கிடைக்கும் என்று எப்படி நினைக்கிறோம்? கிடைக்காதவை, கிடைத்த பிறகு அதுவும் கிடைத்ததாக ஆகிவிடுகிறதே. நமக்குத் தான், கிடைத்தவற்றில், சந்தோஷமும், நிம்மதியும், அடையத் தெரிவதில்லையே?! எனவே, இறைவன் சித்தமின்றி எதுவும் நடக்காது. அநீதி என்பது, இறைவனிடத்தில் கிடையாது. எனவே, கிடைத்ததை போற்றி வாழ்வோம். அப்போதுதான் கிடைத்தது, கிடைக்காதது, இருப்பது, இல்லாதது, என்ற இருமைகளை மனம் தாண்டும். இந்த இருமைகளை கடக்கும் போது தான் மனம், அமைதியும், சந்தோஷமும், நிறைவும், கொள்ளும். வாழ்வும் பயனுள்ளதாக இருக்கும்.
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...