மேட்டூர் அணையிலிருந்து காவிரியில் திறக்கப்பட்டுள்ள பல ஆயிரம் கன அடி தண்ணீரில் பெரும் பகுதி, தற்போது வீணாக கடலில் கலக்கிறது. இப்படி வீணாகும் தண்ணீரை சேமிக்க வழியே இல்லையா என, தமிழக கிராமங்களில் உள்ள அனைத்து மக்களாலும் பரவலாக பேசப்படுகிறது.
கடந்த காலங்களில் காவிரியில் தண்ணீர் பெற, விவசாயிகளும், பொதுமக்களும் எத்தனை போராட்டங்களை நடத்தினர் என்பதை நாடே அறியும். அது மட்டுமின்றி, காவிரி தண்ணீர் தடையின்றி கிடைக்க வேண்டும் என்பதற்காக, இன்றும் கர்நாடக மாநிலத்திற்கு எதிரான தமிழக அரசின் சட்டப் போராட்டங்கள் தொடர்கின்றன. அதே நேரத்தில், இயற்கையின் கருணையால் ஆண்டுதோறும் காவிரியில் கிடைக்கும் அளவற்ற தண்ணீரை சேமிக்கின்ற திட்டங்களை இன்னும் தீட்டாமல், தமிழக அரசு மெத்தனமாக இருப்பது வேதனை அளிக்கிறது.

காவிரியில் அளவுக்கு அதிகமான தண்ணீர் செல்லும் அதே நேரத்தில், பல உள்மாவட்டங்களில் உள்ள ஏரிகள், குளங்கள், குட்டைகள் தண்ணீரின்றி வறட்சியாக இருப்பதை, ஊடகங்கள் வாயிலாக அறிய முடிகிறது. இந்த இரண்டு நிலவரங்களையும், தமிழக அரசு பார்த்தும், பார்க்காதது போல இருப்பது ஏற்புடையதல்ல. எனவே, ஒவ்வொரு ஆண்டும் காவிரியில் உபரி நீராக கர்நாடகத்தில் இருந்து வரும் தண்ணீர், கடலில் கலக்காமல் சேமிக்கின்ற முழு முயற்சியை, தொலைநோக்கு பார்வையுடன் தமிழக அரசின் நீர் மேலாண்மை துறை அமைச்சர் துரைமுருகன் உடனடியாக எடுக்க வேண்டும்.

இல்லையெனில், ௧௦௦ ஆண்டுகள் ஆனாலும், தமிழகத்தின் தண்ணீர் பிரச்னையை தீர்க்க முடியாத நிலைமை உருவாகி விடும். முதல்வர் ஸ்டாலினும் இந்த விஷயம் குறித்து உடனே ஆராய்ந்து, தண்ணீரை சேமிப்பதற்கான திட்டங்களை தீட்டிச் செயல்படுத்த உத்தரவிட வேண்டும்.
அதுவே, மக்களின் எதிர்பார்ப்பு. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன், கரிகால் சோழன் கட்டிய கல்லணை இன்றும், அவரின் பெருமையை பறைசாற்றுகிறது. அதேபோல, காவிரி நீர் வீணாகாமல் தடுக்க, சிறப்பான நீர் மேலாண்மை திட்டங்களை, தி.மு.க., அரசு செயல்படுத்தினால், எதிர்கால வரலாறு ஸ்டாலின் பெயர் சொல்லும் என்பதை நினைவில் கொள்ளவும்.

No comments:
Post a Comment