பார்லிமென்டை முடக்க எதிர்க்கட்சிகளுக்கு ஏதாவது காரணம் தேவை. பொதுவாக விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் போன்றவற்றை எடுத்துக் கொள்வர்.இந்த மழைக்கால கூட்டத்தொடரில் வித்தியாசமாக, அமலாக்கத் துறை விசாரணையை கையில் எடுத்துள்ளனர். ஒரு பக்கம், 'அமலாக்கத் துறையை ஏவி விட்டு, என்னை மிரட்ட பிரதமர் மோடி முயற்சிக்கிறார். அவரது மிரட்டலுக்கு பயப்பட மாட்டேன்' என்று கர்ஜிக்கிறார் காங்கிரஸ் எம்.பி., ராகுல்.மறுபக்கம் ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, 'பார்லிமென்ட் நடைபெறும் போது, விசாரணைக்கு வரும்படி, அமலாக்கத்துறை எனக்கு சம்மன் அனுப்புகிறது' என்று கதறியுள்ளார். அமலாக்கத் துறை சம்மன் தானே அனுப்பி இருக்கிறது; கைது வாரன்ட் ஒன்றும் அனுப்பவில்லையே! மடியில் கனம் இல்லை எனில், வழியில் எதற்கு பயம்? பார்லிமென்ட் அலுவல்கள் நடைபெறும் போது என்று, ஒரு கொக்கி போடுகிறார் கார்கே. பார்லிமென்ட் நடக்கும் போது, நாட்டில் பஸ்கள், ரயில்கள், விமானங்கள், அலுவலகங்கள், நீதிமன்றங்கள், பள்ளிகள், கல்லுாரிகள், மருத்துவமனைகள் என எதுவும் இயங்கக் கூடாதா?காங்., தலைவர் சோனியாவுக்கும் தான், அமலாக்கத் துறை சம்மன் அனுப்பி விசாரணைக்கு அழைத்தது. உடல் நலனை காரணம் காட்டி, 'வேறு தேதிக்கு வருகிறேன்' என்று அனுமதி பெறவில்லையா... அதுபோல, கார்கேவும் வாங்கிக் கொள்ள வேண்டியது தானே!என்னமோ, 'என் இசை நின்றால் அடங்கும் உலகே...' என்று திருவிளையாடல் படத்தில் சிவனாக நடித்த சிவாஜி கணேசன் பாடுவது போல, பார்லிமென்ட் அலுவல்கள் நடைபெறும் போது, நாட்டில் வேறு எந்த அலுவலும் இயங்கக் கூடாது என்று சொல்வது வேடிக்கையாக இல்லையா?
மொத்தத்தில், ராகுல், கார்கே ஆகியோரின் நடவடிக்கைகளை பார்க்கும் போது, 'நாங்கள் திருடினாலும், கொள்ளையடித்தாலும் எங்களை யாரும் எதுவும் கேட்கக் கூடாது. 'விசாரணை நடத்தக் கூடாது; வழக்கு தொடுக்கக்கூடாது. தண்டனை வழங்கக் கூடாது; சிறைக்கு அனுப்பக் கூடாது' என்று அரசை மிரட்டுவது போல உள்ளது.இவர்கள் மத்திய அரசை மிரட்டி, மோடி மிரட்டுவதாக கயிறு திரித்து, 'கப்சா' விட்டு நாட்டையும், நாட்டு மக்களையும் கலாய்த்து கொண்டிருக்கின்றனர்.அமலாக்கத் துறைக்கும், நீதிமன்றத்துக்கும் வேண்டுமானால் இவர்கள், 'அல்வா' கொடுக்கலாம். ஆனால், நாட்டையும், நாட்டின் சொத்துக்களையும் இவர்கள் சூறையாடி இருந்தால், ஆண்டவன் வழங்கும் தண்டனையில் இருந்து தப்பிக்கவே முடியாது.
No comments:
Post a Comment