வனத்தை பாதுகாப்பதில் யானைகள் முக்கிய பங்காற்றுகின்றன. இன்று, உலக யானைகள் தினத்தில் அவற்றை பாதுகாக்க மனித சமுதாயம் உறுதியேற்க வேண்டும்.
யானைகளை பாதுகாக்க உலகத்திலுள்ள, 65 அமைப்புகள் மற்றும் யானைகளை கொண்ட நாடுகள், ஆக., 12ல் உலக யானைகள் தினத்தை கடைப்பிடிக்கின்றன. வில்லியம் சாட்னர் எடுத்த 'வனத்திற்குள் திரும்பு' என்ற ஆங்கில படத்தின் கதை, ஒரு தனியார் வளர்க்கும் யானையை, காட்டிற்குள் மீண்டும் விடுவது பற்றியது. இப்படம், 2012 ஆக., 12ல் வெளியானது. அன்றைய தினம், உலக யானைகள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. யானைகளின் சராசரி ஆயுட்காலம் ஏறக்குறைய, 70 ஆண்டுகள். இதன் தும்பிக்கை, 40 ஆயிரம் தசைகளால் ஆனது. இதன் மூலம், 1.5 கி.மீ., தொலைவிலுள்ள மனிதனின் நடமாட்டத்தைக்கூட யானையால் அறிய முடியும். யானையின் இரு தந்தங்களும், 90 கிலோ வரை எடையிருக்கும். ஆப்ரிக்கா பெண் யானைகளுக்கு தந்தம் உண்டு. யானைக்கு மூளையின் அளவு பெரியது என்பதால் நினைவாற்றல் அதிகமுண்டு. இதனால் பரந்த காட்டில் வழித்தடம் மாறாமல் சென்று திரும்புகின்றன. யானையின் பற்கள், ஐந்து கிலோ எடை கொண்டவை. யானைகள், நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் குட்டி போடும். அவை, 100 கிலோ எடை வரை இருக்கும். பெண் யானைகளுக்கு மதம் பிடிக்காது. கூட்டத்தில் இருக்கும் முதுமை அடைந்த யானை, தான் இறப்பது ஊறுதி என்று தெரிந்தால், கூட்டத்தில் இருந்து பிரிந்து உண்ணா நோன்பு இருந்து தன் சாவை தானே தேடிக்கொள்ளும்.
காட்டை உருவாக்கும்: ஒரு யானையை பாதுகாப்பது, 18 லட்சம் விதைகளை விதைப்பதற்கு சமம். நாளொன்றுக்கு யானை, 200 முதல், 250 கிலோ உணவை சாப்பிடும். அதில், 10 கிலோ விதைகளும், குச்சிகளும் திரும்பவும் மண்ணில் விதைக்கப்படும். ஒரு யானை மாதத்துக்கு, 3,000 விதைகள் வீதம் ஆண்டிற்கு, 36 ஆயிரத்து, 500 விதைகளை விதைத்து, தன் வாழ்நாளில், 18 லட்சத்து, 25 ஆயிரம் மரங்கள் வளர காரணமாகின்றன.
உலகில் இரண்டாவது இடம்: அதிக யானைகள் கொண்ட நாடுகளில் இந்தியா இரண்டாமிடத்தை பெற்றுள்ளது. குறிப்பாக, நீலகிரி மாவட்டத்தில்தான் அதிக எண்ணிக்கையில் யானைகள் உள்ளன. உலகிலிருந்த, 24 வகை யானைகளில், 22 வகை இனங்கள் அழிந்து, உலகில் ஆப்பிரிக்க, ஆசிய வகை யானைகள் மட்டுமே உள்ளன. கடந்த, 2017 கணக்கெடுப்பின்படி, ஆசியாவிலுள்ள மொத்த யானைகளின் எண்ணிக்கையில் இந்தியாவில், 44 சதவீதம் அதாவது, 27 ஆயிரத்து, 312 யானைகள் உள்ளன. தற்போது யானைகள், அரியவகை விலங்குகள் பட்டியலில் உள்ளன.
600 யானைகள் இறப்பு: தமிழகத்தில் கடந்த, ஆறு ஆண்டுகளில், 600க்கும் அதிகமான யானைகள் இறந்துள்ளன. யானை வாழ்விடங்களில் ஏற்படும் நாகரிக வளர்ச்சி, வெட்டப்படும் மரங்கள், அதிகரிக்கும் குவாரிகள், வழிப்பாதை ஆக்கிரமிப்பு, வனத்தில் அமைக்கும் தண்டவாளங்கள், சாலைகள் போன்ற பல்வேறு காரணங்களால் ஏற்படும் விபத்துகளால் யானைகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. காடுகளின் குறுக்கில் அமைக்கப்பட்டுள்ள சாலையை கடக்கும் யானைகள் வாகன விபத்தில் சிக்கி உயிரிழக்கின்றன. அதேவேளையில் மனிதர்களின் அலட்சிய செயலால் காட்டு யானைகள் பலியாவதும் தொடர்கிறது. யானைகள் அழிந்தால் காடுகள் முற்றிலும் அழியும். காடுகள் அழிந்தால் மனிதர்கள் வாழவே முடியாது. இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், யானைகளை பாதுகாக்கவும், இந்த தினம் சர்வதேச யானைகள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.

No comments:
Post a Comment