மத்தியில் ஆளும் பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசுக்கு, ராஜ்யசபாவில் மிக முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற தேவையான பெரும்பான்மை பலம் இல்லாத நிலையில், கூட்டணியிலிருந்து ஐக்கிய ஜனதா தளம் வெளியேறி இருப்பது பா.ஜ.,வுக்கு மேலும் பின்னடைவை உண்டாக்கியுள்ளது.
பீஹாரில், முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளத்துடன் கூட்டணி அமைத்து பா.ஜ., ஆட்சியில் இருந்தது. நேற்று முன்தினம் பா.ஜ.,வுடனான கூட்டணியில் இருந்து வெளியேறிய நிதிஷ், ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுடன் இணைந்து, புதிய கூட்டணி ஆட்சியை அமைத்துள்ளார்.தே.ஜ., கூட்டணியில் இருந்து, ஐக்கிய ஐனதா தளம் திடீரென வெளியேறி இருப்பது, வரும் நாட்களில் தேசிய அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். ஆனால், உடனடி தாக்கம் ராஜ்யசபாவில் தான் இருக்கும் என தெரிகிறது. காரணம், அங்கு ஆளும் பா.ஜ.,வுக்கு, பெரும்பான்மை பலம் இல்லை.

பெரும்பான்மை பலம்
கூட்டணி கட்சிகளை சேர்த்தாலும் ராஜ்யசபாவில் பா.ஜ.,வுக்கு பெரும்பான்மை பலம் கிடைக்காது. இதனால் தோழமை கட்சிகளின் தயவில் தான் பா.ஜ., அங்கு செயல்பட்டு வருகிறது.மசோதாக்களை, லோக்சபாவில் மிக எளிதாக நிறைவேற்ற முடியும் பா.ஜ.,வால், ராஜ்யசபாவில் கணக்குப்போட்டு, பிற கட்சிகளிடம் பேசி சமாதானப்படுத்திய பிறகே நிறைவேற்ற முடிகிறது.ராஜ்யசபாவின் தற்போதைய பலம் 237 இடங்கள். ஜம்மு காஷ்மீருக்கான 4 இடங்கள், திரிபுராவுக்கான 1, நியமன இடங்களுக்கான 3 என, மொத்தம் 8 இடங்கள் காலியாக உள்ளன.
ராஜ்யசபாவில் மசோதாக்களை சிக்கலின்றி நிறைவேற்ற, 119 எம்.பி.,க்களின் ஆதரவு தேவை. அது இல்லை என்பதால், பிஜு ஜனதா தளம், ஒய்.எஸ்.ஆர்.காங்., ஆகிய இரண்டு கட்சிகளின் தலா 9 எம்.பி.,க்கள், அ.தி.மு.க.,வின் 4 எம்.பி.,க்களின் ஆதரவை வைத்து தான், பா.ஜ., ராஜ்யசபாவில் மசோதாக்களை நிறைவேற்றி வருகிறது. கூட்டணி கட்சிகளின் எம்.பி.,க்கள், ஒரு சுயேச்சை மற்றும் 5 நியமன எம்.பி.,க்களுடன் பா.ஜ., - எம்.பி.,க்களை சேர்த்தாலும், ராஜ்யசபாவில் தே.ஜ., கூட்டணியின் பலம் 114 ஆகத்தான் உள்ளது. இந்நிலையில், ஐக்கிய ஜனதா தளம், தே.ஜ., கூட்டணியிலிருந்து விலகி உள்ளது. அக்கட்சிக்கு ராஜ்யசபாவில் 5 எம்.பி.,க்கள் உள்ளனர். இவர்களில், ராஜ்யசபா துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் சிங்கும் அடக்கம்.
விரைவில் தேர்தல்
இப்போது, ஐக்கிய ஜனதா தளம் வெளியேறியுள்ள நிலையில், ராஜ்யசபாவில் தே.ஜ., கூட்டணியின் பலம் 109 ஆக குறைந்துள்ளது. பெரும்பான்மை பலத்திற்கு, 10 எம்.பி.,க்கள் குறைவாக உள்ளனர்.மஹாராஷ்டிராவில் சிவசேனா உடைந்ததிலும் பலன் இல்லை. காரணம், சிவசேனாவின் ராஜ்யசபா எம்.பி.,க்கள் மூவருமே, உத்தவ் தாக்கரே அணியில் உள்ளனர். இந்த சூழலில், பா.ஜ., சில நடவடிக்கைகளை எடுக்க உள்ளது.
குளிர்கால கூட்டத்தொடருக்கு முன், அது மீதமிருக்கும் மூன்று நியமன எம்.பி.,க்களை நியமிக்கும். விரைவில் தேர்தல் நடைபெறவுள்ள திரிபுராவில் வெற்றி உறுதி என்பதால், பா.ஜ.,வுக்கு அங்கிருந்தும் ஒரு எம்.பி., கிடைக்கும்.ஆக, வெவ்வேறு வழிகளில் முயற்சி செய்தாலும், ராஜ்யசபாவில் தே.ஜ., கூட்டணியின் பலம் அடுத்த ஓராண்டுக்கு 113 ஆக மட்டுமே இருக்கப் போகிறது. இது தான் பா.ஜ.,வுக்கு சற்று பின்னடைவாக பார்க்கப்படுகிறது.இதன் காரணமாக, ராஜ்யசபாவில் மசோதாக்கள் நிறைவேற்றத்திற்கு, அ.தி.மு.க., - ஒய்.எஸ்.ஆர்.காங்., பிஜு ஜனதா தளம் என, தோழமைக் கட்சிகளை அதிகம் சார்ந்திருக்கும் நிலை பா.ஜ.,வுக்கு ஏற்பட்டுள்ளது.
No comments:
Post a Comment