தமிழகத்தில் அரசே மதுபானங்களை விற்கும் நிலையில், 'போதைப் பொருட்கள் இல்லாத தமிழகம்' திட்டம் சாத்தியமா என்ற கேள்வி எழுப்பப்படுகிறது.
தமிழகத்தை போதை பொருட்கள் இல்லாத மாநிலமாக மாற்ற, அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என, முதல்வர் அழைப்பு விடுத்துள்ளார். நேற்று, 30 லட்சத்துக்கும் மேற்பட்ட, பள்ளி மாணவ, மாணவியர், போதைப் பொருட்களுக்கு எதிராக உறுதிமொழி எடுத்தனர்.
இந்நிலையில், அரசே மதுபானங்கள் விற்கும் நிலையில், போதைப் பொருட்கள் இல்லாத தமிழகம் எப்படி சாத்தியம்; போதைப் பொருட்கள் பட்டியலில், மதுபானங்கள் இல்லையா? என்ற கேள்விகள் எழுந்துள்ளன. போதை இல்லாத தமிழகத்தை உருவாக்க, முதலில் மதுக்கடைகளை மூட வேண்டும் என, பல தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர். அதன் விபரம்:
அண்ணாமலை, தமிழக பா.ஜ., தலைவர் :
போதைப் பொருட்களை முற்றிலுமாக தடுக்க வேண்டும் என்று சொல்வதற்கு முக்கியக் காரணம், சமூகத்தில் நடக்கும் குற்றங்களை தடுக்க வேண்டும் என்பது தான் என, முதல்வர் பேசி உள்ளார். இதுபோன்ற ஒரு விழிப்புணர்வுடன் கூடிய விளக்கத்தைத் தான், முதல்வரிடம் எதிர்பார்த்தேன்.
போதை பழக்கத்தின் தீமைகள் குறித்து அறிந்த முதல்வருக்கு, மதுபானம் தான் அதிக போதை தருகிறது என்பது குறித்த தெளிவு இல்லாமல் இருப்பது தான் வருத்தம். தமிழகத்தில் போதைக்கு அடிமையானவர் எண்ணிக்கையை எடுத்துக் கொண்டால், மதுபானத்திற்கு அடிமையானவர்கள் தான் மிக அதிகம்.
முதல்வர் குறிப்பிட்ட கொலை, கொள்ளை, பாலியல் தொல்லைகள் ஆகியவற்றுக்கு மூலக் காரணமே மதுபானம். எனவே, அரசு தானாக முன்வந்து மதுக் கடைகளை மூடினால், பெண்கள் எல்லாரும் நிம்மதி அடைவர்; குற்றங்கள் குறையும்.
விஜயகாந்த், தே.மு.தி.க., தலைவர்:
கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை ஒழிக்க வேண்டும் எனக் கூறும் தமிழக அரசு, டாஸ்மாக் கடைகளையும், படிப்படியாக மூட வேண்டும். கஞ்சா, மதுபானங்களை முற்றிலும் ஒழிக்க வேண்டும். போதை இல்லாத பாதையில், இன்றைய இளைஞர்களை வழி நடத்தி செல்ல வேண்டியது, தமிழக அரசின் கடமை
ராமரவிக்குமார், இந்து தமிழர் கட்சி தலைவர்:
போதை இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்ற முதல்வரின் முடிவை வரவேற்கிறோம். டாஸ்மாக் மது அரக்கனுக்கு, சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்று விட்டு, போதையில்லா தமிழகம் உருவாக வேண்டும் என்பது பகல் கனவு.
ராஜேஸ்வரி பிரியா, அனைத்து மக்கள் அரசியல் கட்சி தலைவர்:
டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் மதுவும், போதைப் பொருள் வகையிலேயே சேரும். அதை ஏன் அரசு விலைக்கு விற்கிறது? இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

No comments:
Post a Comment