Wednesday, August 10, 2022

ஒருங்கிணைப்பாளர் பதவி காலியாகவில்லை; அ.தி.மு.க., வழக்கில் பன்னீர் தரப்பு வாதம்.

  'அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு, பொதுக்குழுவில் ஒப்புதல் பெறாததால் காலியாகி விட்டதாக கூறுவதை ஏற்க முடியாது' என, சென்னை உயர் நீதிமன்றத்தில், பன்னீர்செல்வம் தரப்பு மூத்த வழக்கறிஞர்கள் வாதாடினர்.

கடந்த மாதம் 11ல், பழனிசாமி தரப்பில் கூட்டப்பட்ட அ.தி.மு.க., பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக் கோரி, கட்சி ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர்.இந்த மனுக்களை விசாரித்த, நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, பொதுக்குழுவுக்கு தடை விதிக்க மறுத்து, மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில், பன்னீர்செல்வம் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.மீண்டும் உயர் நீதிமன்றம் விசாரிக்கவும், இரண்டு வாரங்களில் விசாரணையை முடிக்கவும், உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்படி, இந்த வழக்குகள், நீதிபதி ஜெயச்சந்திரன் முன், நேற்று விசாரணைக்கு வந்தன.போட்டியின்றி தேர்வுபன்னீர்செல்வம் தரப்பில், மூத்த வழக்கறிஞர்கள் குரு கிருஷ்ணகுமார், அரவிந்த் பாண்டியன், வழக்கறிஞர்கள் திருமாறன், ராஜலட்சுமி; பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து சார்பில், வழக்கறிஞர் ஸ்ரீராம்; பழனிசாமி தரப்பில், மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், எஸ்.ஆர்.ராஜகோபால் ஆகியோர் ஆஜராகினர்.வழக்கறிஞர்கள் வாதத்தை துவங்குவதற்கு முன், 'சட்டப்படி பொதுக்குழு கூட்டப்பட்டதா; தகுதியானவர்களால் கூட்டப்பட்டதா; ஜெயலலிதா இறப்புக்கு பின், என்னென்ன திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன?' என, நீதிபதி ஜெயச்சந்திரன் கேள்வி எழுப்பினார்.


latest tamil news


அதைத் தொடர்ந்து, பன்னீர்செல்வம் தரப்பில், டில்லி மூத்த வழக்கறிஞர் குரு கிருஷ்ணகுமார் வாதாடியதாவது:
ஜெயலலிதா மறைவுக்கு பின் அ.தி.மு.க.,வில் பிளவு ஏற்பட்டு, பின், இரு பிரிவினரும் ஒன்று சேர்ந்ததை தொடர்ந்து, 2017ல் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டன. 2017ல் நடந்த பொதுக்குழுவில், நிரந்தர பொதுச்செயலர் ஜெயலலிதா தான் என தீர்மானிக்கப்பட்டது.கட்சி விதிகளின்படி, பொதுச் செயலரை, அடிப்படை உறுப்பினர்கள் தான் தேர்ந்தெடுக்க வேண்டும். இந்த விதியில் திருத்தம் மேற்கொள்ள முடியாது. பொதுச் செயலரை, பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்க முடியாது; அடிப்படை உறுப்பினர்கள் தான் தேர்ந்தெடுக்க வேண்டும்.கடந்த ஆண்டு டிசம்பரில், ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டு, ஒருங்கிணைப்பாளராக பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளராக பழனிசாமி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

தேர்தல் கமிஷனுக்கும் இதுகுறித்து தெரிவிக்கப்பட்டது.ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்வுக்கு, அடுத்த பொதுக்குழுவில் ஒப்புதல் பெறாததால், அந்த பதவிகள் காலியாகி விட்டதாக கூறுவதை ஏற்க முடியாது. ஏனென்றால், இருவரும் தேர்ந்தெடுக்கப்பட்ட பின், பல்வேறு நடவடிக்கைகளை செயல்படுத்தி விட்டனர்.தற்போதைய பொதுக்குழு உறுப்பினர்களைக் கூட, ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் தான் தேர்ந்தெடுத்தனர். ராஜ்யசபா எம்.பி.,க்களை, இவர்கள் தான் தேர்வு செய்தனர். கட்சி தேர்தல் குறித்து, தேர்தல் கமிஷனுக்கும் கடிதம் அனுப்பினர்.செயல்படாத நிலை உருவானதாக எதிர் தரப்பில் கூறியிருப்பது சரியல்ல; பதவி காலியாக இல்லை.

பொதுக்குழு நடக்கும் போது, அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், 'ஜூலை 11ம் தேதி பொதுக்குழு நடக்கும்' என அறிவித்தார். அவர், தற்காலிக அவைத் தலைவர் தான். அவருக்கு அதிகாரம் இல்லை.இவ்வாறு அவர் வாதாடினார்.இதையடுத்து, மூத்த வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன் வாதாடியதாவது:அ.தி.மு.க., பொதுச் செயலரை, கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள் தான் தேர்ந்தெடுப்பர். பொதுச் செயலருக்கான அதிகாரம், ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளருக்கு வழங்கப்பட்டது.இவர்கள், கட்சி உறுப்பினர்களால் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களை, அப்படியே வெளியில் அனுப்பி விட முடியாது. இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்தாலும், விதிகளின்படி செயல்படும் பொறுப்பு உள்ளது.கட்சி தொண்டர்களின் விருப்பப்படி நிரந்தர பொதுச்செயலர் ஜெயலலிதா தான் என்றும், இந்தப் பதவியில் வேறு யாரையும் நியமிக்கக் கூடாது என்றும் முடிவெடுத்து விட்டு, தற்போது, எப்படி இடைக்கால பொதுச் செயலர் நியமனம் வந்தது? இதற்கு, தொண்டர்களின் விருப்பம் கோரப்பட்டதா?ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளில், ஒருவேளை காலியிடம் உருவானால், அந்தப் பதவிகளுக்கு உடனடியாக தேர்தல் நடத்தப்பட வேண்டும். யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம்.இவ்வாறு அவர் வாதாடினார்.

பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து சார்பில், வழக்கறிஞர் ஸ்ரீராம் வாதாடும் போது, ''அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளரை, 2,600 பேர் அடங்கிய பொதுக்குழு உறுப்பினர்கள் செல்லாததாக ஆக்க முடியாது,'' என்றார்.தவறு இல்லைபழனிசாமி தரப்பில், மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண் வாதாடியதாவது:அ.தி.மு.க.,வைப் பொறுத்தவரை, பொதுக்குழு தான் உச்சபட்சமானது. பொதுக்குழு நடத்த, எழுத்துப்பூர்வ நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என விதிகளில் இல்லை. தலைமைக் கழக நிர்வாகிகள், பொதுக்குழுவுக்கு அழைப்பு விடுத்ததில் தவறு இல்லை.கடந்த டிசம்பரில் நடந்த, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலுக்கு, அடுத்த பொதுக்குழுவில் ஒப்புதல் பெற வேண்டும் என, நிர்வாக குழு முடிவெடுத்தது. ஜூன் 23ல் நடந்த பொதுக்குழுவில் ஒப்புதல் பெறாததால், இரு பதவிகளும் காலியாகி விட்டன.

அப்போது, நீதிபதி ஜெயச்சந்திரன், ''இரண்டு பதவிகளும் காலியானால், பொதுக்குழு உறுப்பினர்கள், நிர்வாகிகள் தேர்தலின் நிலை என்ன?'' என கேள்வி எழுப்பினார்.பொதுக்குழுவில் முடிவுஅதற்கு, மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், ''ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் தான் போகும். 2021 டிசம்பர் முதல் 2022 ஜூலை 11 வரை, அவர்கள் எடுத்த முடிவுகள் செல்லும் என பொதுக்குழுவில் முடிவெடுக்கப்பட்டுள்ளது,'' என்றார்.தொடர்ந்து, மூத்த வழக்கறிஞர், 'ஜூன் 23ல் நடந்த பொதுக்குழு கூட்டத்தின் போது, உறுப்பினர்களின் ஒப்புதல் உடன், நிரந்தர அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் நியமிக்கப்பட்டார்.

உறுப்பினர்கள் கேட்டு கொண்டபடி, அடுத்த பொதுக்குழு கூட்டத்தை, அவர் அறிவித்தார். அங்கு, பொதுக்குழு உறுப்பினர்கள் இருந்ததால், அவர்களுக்கு அது தெரியும்' என்றார்.உடனே, மூத்த வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன், ''பொதுக்குழுவுக்கு தலைமை ஏற்க, தற்காலிகமாக தான் தமிழ்மகன் உசேன் நியமிக்கப்பட்டார். அவரை நிரந்தர அவைத் தலைவராக, ஜெயகுமார், சீனிவாசன் வழிமொழிந்தனர். அதற்கு முன், பன்னீர்செல்வம், கூட்டத்தை விட்டு வெளியேறி விட்டார்,'' என்றார். வழக்கறிஞர்களின் வாதம் முடியாததால், விசாரணையை, இன்று காலைக்கு, நீதிபதி ஜெயச்சந்திரன் தள்ளிவைத்துள்ளார்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...