Tuesday, August 5, 2014

தி.மு.க.,வில், வீதிக்கு வந்த குடும்ப சண்டையால்

வீதிக்கு வந்த பிறகும், தி.மு.க.,வில், குடும்ப சண்டை ஓயவில்லை. அழகிரிக்கு எதிராக, ஸ்டாலின் ஆதரவாளர்கள், போஸ்டர்கள் ஒட்டுவது மற்றும் உருவ பொம்மை எரிப்பது போன்ற செயல்களில், தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல், அழகிரி ஆதரவாளர்களும், ஸ்டாலினுக்கு சவால் விடும் வகையில், போஸ்டர்கள் ஒட்டி வருகின்றனர்.

தி.மு.க., தலைவர் கருணாநிதியின், மகன்களான, பொருளாளர் ஸ்டாலின், தென்மண்டல அமைப்புச் செயலர், அழகிரி இடையே, பல ஆண்டுகளாக கருத்து வேறுபாடு இருந்து வருகிறது. இருவருக்கும் தனித்தனியே ஆதரவாளர்கள் உருவாகினர். தென் மாவட்ட நிர்வாகிகள், அழகிரி பக்கமும், மற்ற பகுதி நிர்வாகிகள், ஸ்டாலின் பக்கமும், அணி திரண்டனர். இரு தரப்பினரும், பரஸ்பரம் விமர்சித்து போஸ்டர்கள் ஒட்டுவர்.சட்டசபை தேர்தல் தோல்விக்கு பின், நிலைமை மாறியது. கட்சியில் ஸ்டாலின் ஆதரவாளர்கள் அதிகரித்தனர்; அழகிரி ஆதரவாளர்கள், ஸ்டாலின் பக்கம் சாய்ந்தனர். உள்ளாட்சி தேர்தலின்போது, அழகிரி முடங்கியதால், ஸ்டாலின், கட்சியை, முழுமையாக தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார். சமீபத்தில் நடந்த, தி.மு.க., பொதுக்குழுவில், அழகிரி கலந்து கொள்ளவில்லை.

அதன்பின், தி.மு.க., பொதுக்குழு மதுரையில் நடைபெற இருப்பது போல், அழகிரி ஆதரவாளர்கள், போஸ்டர் ஒட்டினர். இந்த போஸ்டர் விவகாரத்தால், எழுந்த சர்ச்சை காரணமாக, அழகிரியும், அவரின் ஆதரவாளர்களும், கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர்.இந்நிலையில், 'ஸ்டாலினை பற்றி, நெஞ்சு வெடிப்பது போல், ஒரு
சொல்லை அழகிரி கூறியதால், அவரை கட்சியிலிருந்து நீக்கினேன்' என, நேற்று முன்தினம் கருணாநிதி தெரிவித்தது, தி.மு.க.,வில் போஸ்டர் யுத்தம், உருவ பொம்மை எரிப்புகளை தொடரச் செய்துள்ளது.

பிறந்த நாள்: மதுரையில், இன்று பிறந்த நாள் கொண்டாட உள்ள அழகிரிக்கு ஆதரவாகவும், ஸ்டாலினுக்கு எதிராகவும், சென்னை உட்பட, பல இடங்களில், நேற்று போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன.

அவற்றில், 'சத்ருகளுக்கு சத்ரியர், சகுனிகளுக்கு சாணக்கியர்; தெய்வம் எதற்கு, கோவில் எதற்கு, உந்தன் புன்னகை ஒன்றே போதும்; ஒரே நேரத்தில் இரண்டு வேலைகளை செய்ய முடியும், ஒரே நேரத்தில், இரண்டு எஜமானர்களிடம் வேலை செய்ய முடியாது' என, குறிப்பிட்டுள்ளனர். மேலும், சேரன், சோழன், பாண்டியன் மூன்று பேரும் சேர்ந்த உருவம் அழகிரி என்பது போலவும், போஸ்டர்களில்,சித்தரித்துள்ளனர்.

அதேநேரத்தில், ஸ்டாலினுக்கு ஆதரவாகவும், அழகிரிக்கு எதிராகவும், பல இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

அவற்றில், 'கருணாநிதி அவர்களே, சீழ் பிடித்து புரையோடிய புண்ணை அறுத்தெறியுங்கள். அறுவை சிகிச்சையின்போது, சிறிது வலி இருக்கும். மிகக் குறைந்த அளவு ரத்தமும், சீழுடன் வெளியேறும். அறுவை சிகிச்சைக்கு பின், வலியிலிருந்து நிரந்தர விடுதலை கிடைக்கும். உடல் மேலும், வலிமையும், வலிவும் பெறும். உடனே தேவை அறுவை சிகிச்சை' என, அழகிரியை முற்றிலும், கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என்ற அடிப்படையில், வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.மற்றொரு போஸ்டரில், '90 வயது, கருணாநிதியை மிரட்டும் கோழை அழகிரியே, மோதாதே' என, குறிப்பிடப்பட்டுள்ளது. இது தவிர, அழகிரிக்கு எதிரான, வேறு சில போஸ்டர்களில், 'விரும்பத்தகாத வார்த்தைகளைப் பேசி, கருணாநிதியையும், தொண்டர்களையும் மன உளைச்சலுக்கு ஆளாக்கிய அழகிரியை கண்டிக்கிறோம்' என, குறிப்பிடப்பட்டுள்ளது.

தி.மு.க.,வில், வீதிக்கு வந்த குடும்ப சண்டையால், சலசலப்பு உருவாகியுள்ள நிலையில், சகோதரர்களுக்கு இடையேயான விரிசலை, மேலும் அதிகரிக்கும் வகையிலும், கட்சி நிர்வாகிகள், போஸ்டர்கள் ஒட்டி வருவதும், ஆங்காங்கே, உருவ பொம்மைகளை எரித்து வருவதும், மக்களை முகம் சுளிக்க வைத்துள்ளது.

குடும்ப சண்டையில் திருப்பம்: பிரதமரிடம் தி.மு.க., மனு:தி.மு.க., பார்லிமென்ட் கட்சித் தலைவர், டி.ஆர்.பாலு, கடந்த திங்களன்று, பார்லிமென்ட் அலுவலகத்திற்கு சென்றிருந்தார். அங்கு பிரதமரை சந்தித்த அவர், 'தி.மு.க., பொருளாளர், ஸ்டாலினின் உயிருக்கு, அச்சுறுத்தல் இருக்கிறது. உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்' என்றும் கோரி, மனு அளித்துள்ளார்.இந்த மனு அளிக்கப்பட்டது குறித்து, வெளியில், அதிகாரப்பூர்வமாக, தகவல் எதுவும் இல்லை என்றாலும், பிரதமர் அலுவலக வட்டாரங்கள், இதை, உறுதிப்படுத்தியுள்ளன. மேலும், டி.ஆர்.பாலு அளித்துள்ள மனுவில், யாரால் அச்சுறுத்தல் என்பது குறித்து, எந்த தகவலும் இல்லை என்றும், மனுவில், ஒரு இடத்தில் கூட, அழகிரியின் பெயர், குறிப்பிடப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.இந்த மனு, உடனடியாக, மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு, அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஸ்டாலினுக்கான பாதுகாப்பு குறித்து, ஒரு வாரத்தில், மத்திய அரசு முடிவெடுக்கும் என, நம்பப்படுகிறது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...