Sunday, August 5, 2012

எண்ணத்தின் வெளிபாடு....

  • இறை நம்பிக்கை :-
இறைவன் என்கிற ஒருவன் இல்லையென்றால் பாதி பைத்தியமாக இருக்கும் மனிதன் முழு பைத்தியமாக மாறியிருப்பான். நம் மனதிற்கு ஒரு வடிகால் தான் இறைவன்.
  • கையூட்டு :-
நல்ல சம்பளம் வாங்கும், நிலையான பணி என்று இருக்கும் பல அரசு அதிகாரிகள் (மேலாளர் முதல் கடைநிலை ஊழியர் வரை) ஏன் மக்களிடம் தாங்கள் செய்யவேண்டிய பணிக்காக கையூட்டு வாங்குகிறார்கள்? தங்களின் கடமைக்கு சம்பளம் கிடைக்கும் போது ஏன் இதை எதிர்பார்கிறார்கள்! (கையூட்டு வாங்கும் நபர்களுக்கு மட்டும் இது பொருந்தும்). அவர்களாக திருந்தினால் உண்டு இல்லையேல் அரசு அவர்களை திருத்த வேண்டும்.கையூட்டு கொடுப்பவர் அவரின் பணி விரைவாக முடித்து கொள்ள, அல்லது எதுவும் தவறை மறைக்க அதிகாரிகளிடம் பணம் கொடுக்கிறார்கள், இது 30 % உண்டு, மீதி 70 % வலுகட்டயமாக மக்களிடம் கையூட்டு வாங்கப்படுகிறது. இது இரண்டுமே தவறு!  
  • ஊழல்:-
ஊழல் என்கிற நோய் ஒரு நோயை உருவாக்குவதும் நாம் தான், அந்த நோய்க்கு மருந்து தேடி அலையும் நபரும் நாம் தான்... என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும்.
ஒவ்வொரு இந்திய குடிமகனும் ஊழல் இல்லாத இந்தியாவும், நேர்மையான அரசும் , சமஉரிமை கொண்ட தேசமாக என்றாவது மாறுமா என்கிற பேராசை நம் மனதின் ஓரத்தில் இல்லாமல் இல்லை... எனக்கு இருக்கிறது இந்த ஆசை!
  • அலுவலகத்தில் கால நிர்ணயம்:-
அரசு நிர்வாகத்தில் எந்த ஒரு பணிக்கும், கால நிர்ணயம் உண்டு... அது பெரும்பாலும் நம் அனைவருக்கும் தெரிவது இல்லை, குறிப்பிட்ட நேரத்தில் அந்த பணியை ஒருவர் முடிக்கவில்லை என்றால் அவரின் சமந்தப்பட்ட உயர் அதிகாரிக்கு புகார் கொடுக்கலாம்.. நம்மில் எத்தனை பேர் அப்படி செய்கிறோம், அறிகிறோம்!

  • திருநங்கை ஒடுக்குமுறை:-
ஆணாக பெண்ணாக பிறந்த பலரும் திருநங்கைகளின் மாற்றுபாலின நிலையை, உணர்வுகளை ஒருபோதும் நினைத்து பார்ப்பதில்லை. ஆதிக்க சாதி மனநிலை எப்படி ஒடுக்கப்பட்டோரை கொடுமைகளுக்கு ஆளாக்குகிறதோ, அதே போன்றதொரு அல்லது அதைவிடவும் வீரியமிக்க ஒடுக்குமுறைகளை, இச்சமூகத்தின் பல ஆண்களும் பெண்களும் திருநங்கைகள் மீது செலுத்திக் கொண்டிருக்கின்றனர்.
  • எண்ணம்:-
எதுவுமே முடியாது, எதிர்மறை எண்ணம் மட்டுமே பெரும்பாலும் இந்தியர்களுக்கு பின்னடைவை தருகிறது, அப்படி யாரும் நேர்மறை எண்ணங்கள் கொண்டால் அவர்களை பார்த்து சிரிப்பது, இது தான் சராசரி மனிதனின் வேலையாக உள்ளது.. அப்படி இருக்கும் வரையில் எல்லாம் நகைச்சுவை தான், நாம் அனைவரும் கோமாளிகள் தான்! 
  • உண்ணாவிரத போராட்டம்:-
என்னை பொறுத்தவரை உண்ணாவிரத போராட்டம் என்பது தேவையற்ற போராட்டம், தன்னை தானே வருத்தும் செயல்...எவரை எதிர்த்து இந்த போராட்டமோ அவருக்கு இதனால் இந்தவித பாதிப்பும் ஏற்பட வாய்ப்பில்லை... சுத்த கண்துடைப்பு மன்னிக்கவும் வயிருதுடைப்பு!!!அண்ணல் அவர்கள் தோற்றுவித்த உண்ணாவிரத போராட்டம், இன்று பெரும்பாலும் ஒரு கண்துடைப்பு நிகழ்வாகவே பார்க்கமுடிகிறது. மக்களும் இது போன்ற உண்ணாவிரத போராட்டங்கள் நடைபெறுவதை கேள்விபட்டால்.. இவர்களுக்கு வேற புழைப்பு என்ன என்றி கூறி கண்டுகொள்வது இல்லை. எவரை எதிர்த்து இந்த போராட்டம் நடத்த படுகிறதோ... அவர் இவன் வயிர காஞ்ச தானே எழுந்து போய்விடுவான் இன்று அலட்சியபடுத்தி செல்கின்றனர்... ஆகையால் தான் இந்த போராட்டத்தை கண்துடைப்பு என்கிறேன்..சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தில் எடுபட்ட தலைவர்களை சாவின் விளிம்பு வரை செல்ல விட்டு பின்பு பழச்சாறு கொடுத்து முடித்துவைக்க படுகிறது. இதே பாமரன் உண்ணாவிரதம் இருந்தால் ....என்ன நிலை என்பது உங்களுக்கே தெரியும்?ஒரு நாள் உண்ணாவிரத போராட்டம் என்றால் அது கோமாளி தனம்! இன்றைய சுழலில் உள்ளதை தான் தெரிவிக்கிறேன் தவிர அண்ணல் அவர்கள் பயன்படுத்திய ஆயுதாமான உண்ணாவிரதத்தை நான் குறை கூறவில்லை இன்று பலர் கண்துடைப்பாகியுள்ளனர்...
  • ஆண்களின் வலிமை :-
பெண்களுக்கு,திருநங்கைகளுக்கு, குழந்தைகளுக்கு எதிராகவும் தங்கள் வலிமையை காட்டும் ஆண்கள்... ஆண்மையற்ற கோழைகளே! தங்களின் வலிமையை பெண்களிடம், திருநங்கைகளிடம், குழந்தைகளிடம் காட்டும் பெரும்பாலும் ஆண்கள் தங்களின் வலிமைக்கு அப்பாற்பட்டு இருக்கும் ஆண்களிடம் காட்ட முனைவது இல்லை, அடங்கி ஒடுங்கி இருக்கும் இடம் தெரியாமல் கூட ஒளிந்து கொள்வார்கள்... அது வீரத்திற்கு அழகல்ல... ஆண்மை என்பதை நான் உடலியல் குறைபாடாக இதில் கூறவில்லை, வீரம் என்பது ஆண்மைக்கு அறிகுறி.. அந்த வீரத்தை வலிமையை பெண்களிடம், திருநங்கைகளிடம், குழந்தைகளிடம் காட்டுவது தான் இங்கு பலரின் வாடிக்கையாக உள்ளது.  
  • இழப்பீடு:-
விபத்தில் உயிரிழக்கும் நபர்களுக்கு தொகை மதிப்பீடுகள் ; ஒரு மனித உயிரின் மதிப்பு சில லட்சங்கள் மட்டுமே !
  • தோல்வி:-
தோல்வி யாரும் சந்திக்காமல் இல்லை ; அதனால் யாரும் சாதிக்காமல் இல்லை!
  • விபச்சாரி:-
பணம் வாங்கி படுத்தால் விபச்சாரி என்று பொருள்.. அவள் வயிற்று பிழைப்புக்காக படுக்கிறாள்... வேடிக்கைகாக சில ஆண்களுடன் ஊல்லாசமாக படுக்கும் பல மேல்தட்டு பெண்களை என்ன சொல்வது? இது DATING அது விபச்சராம்... என்ன உலகம் இது? 
  • கள்ளத் தொடர்பு :-
கணவனுக்கு தெரியாமல் அடுத்தவனோட கள்ள தொடர்பு வைத்திருக்கும் பெண்களை விட வெளிப்படையாக தொழில் நடத்தும் விலைமாதர்கள் எவ்ளவோ மேல்; அரசு ஒன்று விபச்சாரத்தை முற்றிலும் தடை செய்ய வேண்டும், அல்லது விபச்சாரத்தில் ஈடுபட்ட அத்தனை பெண்களுக்கும் வாழ்வியில் முறை மாற வேலைகள்/அரசின் சலுகையில் சிறுதொழில் தொடங்க மானியம் வழங்க வேண்டும்.
  • காமவெறியன்:-
பெண் வெறி கொண்ட பித்தனுக்கு சதை மட்டுமே தேவை.. அவள் சிறுமியோ, கிழவியோ, கருப்போ, சிகப்போ, எந்த மதமோ, ஜாதியோ, ஊமையோ, செவிடோ, பார்வையற்றவளோ எதுவும் அந்த காமவெறியனின் கண்ணுக்கு தெரியாது.... பெண்களுக்கு எதிரான குற்றங்கள் என்கிற கட்டுரை எழுதும் போது என் மனதில் ஆவேச அனலாய் தோன்றியவை இந்த வரிகள்...
  • குழந்தை திருமணங்கள்:-
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், ஓராண்டில், 64 குழந்தைகள் திருமணத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தியுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் குழந்தை திருமணங்கள் குறைவு என்றாலும் முற்றிலும் இது தடுக்கப்படவேண்டும். இந்தியாவில் UNICEF ன் புள்ளிவிவரப்படி 47 % பெண் குழந்தைகளுக்கு 18 வயதில் திருமணம் நடைபெறுகிறது, 18 % பெண் குழந்தைகளுக்கு 15 வயதிற்குள் திருமணம் நடைபெறுகிறது. பெருன்பான்மையான இந்த திருமணங்கள் பெண் குழந்தைகளின் அனுமதி பெறாமல், அவர்களுக்கு தெரியாமல் நடக்கிறது.The Child Marriage Restraint Act of 1929 என்கிற சட்டம் இருந்தும் கடுமையான தண்டனை (அதிகபட்சம் மூன்று மாத சிறை அல்லது அபராதம் தொகை) அதில் இல்லாததால் இத்தகைய சுழல் நிகழ்கிறது. இன்னும் தண்டனையை கடுமையாக மாற்றவேண்டும்.இளவயது திருமணத்தில் பெண்களுக்கு பல மருத்துவ அபாயங்கள் உள்ளன. பெரும்பாலும் கர்ப்பகாலத்தில் அவர்கள் மரணிக்கும் வாய்ப்பு மிக அதிகம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். நம் சுற்றத்திலும் அருகிலும் இப்படி குழந்தை திருமணங்கள் நடக்காமல் அதை தடுத்து வழிசெய்வோம்.
  • ஈழம்:-
ஈழம் என்பது இலங்கை வாழ்தமிழர்களின் ஆழ்ந்த விடுதலை உணர்வு ; அதில் சொல்லமுடியாத பல வேதனைகள், கடந்து வந்த கடுமையான பாதைகள், வெற்றி முழக்கங்கள், தியாகங்கள் கொண்டது ஈழத்தின் வரலாறு அங்கு வாழ்ந்த ஈழதமிழர்களின் வாழ்வுமுறை முழுவதும் அதில் அடங்கியுள்ளது. தமிழகத்தில் உள்ள கட்சிகள்,இயக்கங்கள்,அதன் தலைவர்கள் தங்களின் ஆதாய யுக்திகாக மட்டும் ஈழத்தை பயன்படுத்தி வேடிக்கை காட்டுவது காயப்பட்ட தமிழ் ஈழமக்களின் மனதை மேலும் புண்படவைக்கும் செயலாகும்.
  • பாவம்:-
பாவங்கள் செய்து பின்பு இறைவனிடம் மன்னிப்பு கேட்பது தவறு செய்த பின் நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்பது போல... நம் தவறுக்கான தண்டனைகள் காலதாமதமாகலாம் ஆனால் தண்டனை என்பது உறுதி.
  • ஆணாதிக்கம்:-
கணவனிடம் அடங்கி இருப்பது பத்தினித்தனம் என்று மனைவியிடம் கூறுவதும் ஒரு வித ஆனாதிக்கதனமே!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...