Saturday, September 19, 2020

2008ல் ரூ.3 லட்சம் கோடி: இன்று ஒரு ரூபாய் இல்லாத அனில் அம்பானி.

 கடந்த, 2008ல், 3 லட்சம் கோடி ரூபாய் சொத்துக்களுடன், உலகின் ஆறாவது பணக்காரராக இருந்த, ரிலையன்ஸ் கம்யூ., குழும தலைவர் அனில் அம்பானி, இன்று சொந்தமாக 1 ரூபாய் கூட இல்லை என, தெரிவித்துள்ளார்.இவரது ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் குழுமம், 69 லட்சம் கோடி ரூபாய் கடனை மறுசீரமைக்க, சீனாவைச் சேர்ந்த மூன்று வங்கிகளிடம், 51 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கியிருந்தது. இதற்கு, அனில் அம்பானி தனிப்பட்ட உத்தரவாதம் அளித்திருந்தார்.

2008ல் ரூ.3 லட்சம் கோடி, இன்று ஒரு ரூபாய் இல்லாத அனில் அம்பானி



நீதிமன்றத்தில் வழக்கு



இந்நிலையில், ரிலையன்ஸ் குழுமம் கடனை திரும்பத் தரத் தவறியதால், சீன வங்கிகள், உத்தரவாதம் அளித்த அனில் அம்பானியின் சொத்துக்களை முடக்கக் கோரி, லண்டன் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தன.இந்த வழக்கு, கடந்த பிப்ரவரியில் விசாரணைக்கு வந்தது. அப்போது, 'அனில் அம்பானிக்கு என, தனிப்பட்ட சொத்து எதுவும் இல்லை' என, அவர் தரப்பு வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே தெரிவித்தார்.இதை ஏற்க மறுத்த, வங்கிகள் தரப்பு வழக்கறிஞர், அனில் அம்பானிக்கு, கார்கள், தனி விமானம், மனைவி டினா அம்பானிக்கு பரிசளித்த ஹெலிகாப்டர், மும்பையில் இரண்டடுக்கு சொகுசு பங்களா ஆகியவை உள்ளதாக தெரிவித்தார். இதற்கு, ''அந்த சொத்துக்கள், ரிலையன்ஸ் குழுமத்திற்கு சொந்தமானவை; அனில் அம்பானியிடம் ஒரு சொத்தும் இல்லை,'' என, ஹரிஷ் சால்வே வாதிட்டிருந்தார்.


கடனாளி



கடந்த, 2012ல் தொலை தொடர்பு துறையில் ஏற்பட்ட சரிவால், ரிலையன்ஸ் நிறுவனங்கள் பெரும் இழப்பை சந்தித்தன. இதையடுத்து, அனில் அம்பானி, தனிப்பட்ட வகையில், 2,200 கோடி ரூபாய் கடனாளியானார். அந்தாண்டு, 52 ஆயிரத்து, 500 கோடி ரூபாயாக இருந்த அவரது தனிப்பட்ட சொத்து மதிப்பு, தற்போது பூஜ்யமாகி விட்டது என, நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதை இன்னும் நீதிமன்றம் ஏற்கவில்லை. கடந்த, 2008ல், 3 லட்சம் கோடி ரூபாய் சொத்து மதிப்புடன், உலகின் ஆறாவது பணக்காரர் என, அனில் அம்பானியை, 'போர்ப்ஸ்' பத்திரிகை பாராட்டியிருந்தது. இதை, 12 ஆண்டுகளில் இழந்ததுடன், தன்னிடம் எந்த சொத்தும் இல்லை என, அனில் அம்பானிஒப்புக் கொண்டுள்ளார். இவரது சகோதரர், முகேஷ் அம்பானி, 6 லட்சம் கோடி ரூபாய் சொத்துக்களுடன், உலக பணக்காரர்களில் நான்காவது இடத்திலும், இந்தியாவில் முதலிடத்திலும் உள்ளார்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...