Monday, November 7, 2011

“கனிமொழி ஜாமீன்தானே? வாங்க.. வாங்க.. இம்முறை முடிச்சிடலாம்”

தனது முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்ரமாதித்தன் மீண்டும் ஒருமுறை டில்லி கோர்ட்டை நாடியுள்ளார்! கனிமொழி, மீண்டும் ஒருமுறை ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார். நேற்று (சனிக்கிழமை) தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுக்கள், டில்லி உயர் நீதிமன்றத்தில் பதிவாகியுள்ளன. கனிமொழியுடன், சரத்குமார், ஆசிஃப் பல்வா, ராஜீவ் அகர்வால் ஆகியோருடைய மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்த புதிய மனுத் தாக்கல்கள், டில்லி மேலிடத்தின் கண் அசைவுக்கு ஏற்பவே தாக்கல் செய்யப்பட்டதாக கூறப்படுகின்றது.
பட்டியாலா நீதிமன்றத்தில் கனிமொழி ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டதால், தி.மு.க. தரப்பிலிருந்து டில்லிக்கு மீண்டும் அழுத்தம் கொடுத்ததாக தெரியவருகின்றது. “நிச்சயம் ஜாமீன் கிடைக்கும் என்று டில்லி மேலிடத்தில் உறுதி கூறப்பட்டதே. ஆனால், இப்படிக் கைவிட்டு விட்டார்களே” என்ற கோபாலபுரத்தின் கோப மெசேஜ், டில்லியில் போய்ச் சேரவேண்டிய இடத்துக்கு உரிய விதத்தில் அனுப்பப்பட்டதாகச் சொல்கிறார்கள்.
டில்லியில் இருந்து சில எக்ஸ்கியூஸ்கள் கூறப்பட்டனவாம். அவற்றையெல்லாம் ஏற்றுக்கொள்ளும் நிலையில் சென்னை இல்லையாம்.
சென்னையால் எப்படி டில்லிக்கு அழுத்தம் கொடுக்கப்படுகின்றது? டில்லியை வளைக்கும் அளவுக்கு இவர்களிடம் ஏதாவது ட்ரம்ப் உள்ளதா? நிச்சயமாக உள்ளது. இதோ அதையும் கூறுகிறோம், பாருங்கள்:
சென்னை-டில்லி ‘டீல்’ நிச்சயம் ஒன்-வே ட்ராபிக் கிடையாது. இரு தரப்பின் லாப, நஷ்டங்களும் இதில் உள்ளன. இவர்களுடைய ‘வரலாறு காணாத கூட்டணியின்’ பின்னணியில் இரு தரப்புக்கும் இருப்பவை நான்கு விஷயங்கள்.
1) காங்கிரஸ் லாபம்: மத்தியில் ஆட்சி தொடர தி.மு.க. தயவு தேவை. தி.மு.க. கைவிட்டால் அ.தி.மு.க.வையோ வேறு உதிரிகளையோ இழுப்பது, கனிமொழி கேஸில் உதவுவதைவிட கடினமான காரியம். பல கம்ரமைஸ்களை செய்ய வேண்டியிருக்கும். அதாவது, ஆதரவு கொடுக்க வரும் உதிரிகளுக்கு வழங்க வேண்டிய சலுகைகள், கனிமொழிக்கு செய்ய வேண்டிய உதவியைவிட அதிகம்!
2) காங்கிரஸ் லாபம்: தி.மு.க.வுக்கு மத்தியிலும், மாநிலத்திலும் கழுத்துவரை ஊழல் வழக்குகள் இருப்பதால், தற்போது கட்டிய பசுவாக உள்ளனர். எதைச் சொன்னாலும் தி.மு.க. போல தலையாட்டக்கூடிய கூட்டணிக் கட்சி ஒன்றை, இன்றைய நிலையில் காங்கிரஸால் தேடிக்கூட பிடிக்க முடியாது. (ராசா மற்றும் தயாநிதியால் இழக்கப்பட்ட அமைச்சு பதவிகளைகூட தி.மு.க.-வால் டிமான்ட் பண்ண முடியவில்லை. வேறு கட்சியென்றால், சண்டைபோட்டு இரு பதவிகளில் ஒன்றையாவது பெற்றிருப்பார்கள்)
3) தி.மு.க. லாபம்: தி.மு.க.வின் தலையாய பிரச்சினை கனிமொழி விடுதலை. இதற்கு சென்ட்ரல் சப்போர்ட் இருந்தால் நல்லது. தவிர, தயாநிதிவேறு திகார் போகும் பாதையில் நிற்கிறார். அவரையும் திகார் பக்கம் சி.பி.ஐ. தள்ளிக்கொண்டு செல்லாமல் தடுக்க வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக, கலைஞர் டி.வி.யின் மிகப்பெரிய பங்குதாரரான தயாளு அம்மாளை குற்றவாளி பட்டியலுக்கு கொண்டுவராமல் சாட்சி லிஸ்டிலேயே வைத்திருக்க வேண்டும்.
4) தி.மு.க. லாபம்: கட்சி, மாநிலத்தில் ஆட்சியில் இல்லை. மத்தியிலாவது ஆட்சியில் இருக்கிறது. அதனால் கிடைக்கும் சலுகைகளை இழந்தால், எந்தப் பகுதியிலும் எந்தச் செல்வாக்கும் இருக்காது. (போனஸ்- மு.க.அழகிரி வேலைக்கு அப்ளை பண்ணினால், ரசாயன அமைச்சில் கிளர்க் வேலைகூட கிடைக்காது. அவரையே ரசாயன துறைக்கு அமைச்சராக சகித்துக்கொள்ள, மன்மோகன் சிங்கால்தான் முடியும்)
சுருக்கமாகச் சொன்னால் மகத்தான ‘பங்காளி நெருக்கத்தில்’ இருக்கிறார்கள் இவர்கள் இருவரும். இரு தரப்பும் ஆளையாள் கைவிட்டு விட முடியாது. கைவிட்டால் இரு தரப்புக்குமே நஷ்டம் உள்ளது.
இப்போது காங்கிரஸ் கட்சிக்கு மற்றொரு பயமும் உள்ளது. கட்சியையும் மீறி கனிமொழி விஷயத்தில் கருணாநிதியின் அக்கறை இருக்கின்றது என்பதே அந்தப் பயம்.
இதில் அவர்களுக்கு என்ன பயம்? வேறு என்ன, டெஸ்பரேஷன்தான். அதாவது கருணாநிதியின் விரக்தி. “கனிமொழியை வெளியே கொண்டுவர எதை வேண்டுமானாலும் செய்யத் தயார்” என்ற நிலைக்கு கலைஞர் சென்றுவிட்டால் என்னாகும்?
“நாம்தான் வீதிக்கு வந்துவிட்டோமே, எல்லோரையும் சந்துக்கு இழுத்து விடுவோம்”  என்று கலைஞர் முடிவெடுத்தால், அந்த முடிவு டில்லிக்கு, ‘ஆளையே விழுங்கும் பூதமாகி’ போகும். டில்லியில் இருந்தும் இரண்டொரு கூட்டாளிகள் சந்துக்கு வரவேண்டியிருக்கும்!
கடந்த வியாழக் கிழமை சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் கனிமொழிக்கு ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது. அதை அப்படியே விட்டுவிட, தி.மு.க.வாலும் முடியாது, காங்கிரஸாலும் முடியாது.
“எல்லா ஏற்பாடுகளும் செய்திருந்தோம். சில அரசியல் காரணங்களுக்காக ஸ்லிப் ஆகிவிட்டது. கவலைப் படாதீர்கள், மீண்டும் தொடங்கலாம். ஹை-கோர்ட்டுக்கு போங்கள். சி.பி.ஐ. கோர்ட்டில் விட்ட தவறுகளை இம்முறை திருத்திக் கொள்ளலாம். ஜெய் ஹிந்த்”

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...