Tuesday, July 31, 2012

சிறுவாச்சூர் மதுர காளியம்மன்

திருச்சியிலிருந்து பெரம்பலூர் செல்லும் வழியில், திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது சிறுவாச்சூர் என்ற ஊர். (சென்னையிலி ருந்து திருச்சிக்கு செல்லும்போது பெரம்பலூரைத் தாண்டி உள்ளது ) சாலைக்கு மேற்கே பிரசித்தி பெற்ற காளி கோயில் அமைந்துள்ளது. ஊர் பெயரையும் இணைத்து சிறுவாச்சூர் மதுர காளியம்மன் என்று அழைக்கப்படுகிறது. ஊரின் மேற்கு கடைசியில் உள்ள கோயிலுக்கு நடந்தே செல்லலாம். மேலே படத்தில் உள்ள நுழைவு வாயிலில் இருந்து மினி பஸ் மற்றும் ஆட்டோ வசதி உண்டு. நடக்க இயலாதவர்கள் இவைகளில் செல்லலாம்.
  

தல புராணம் :

காவிரிப்பூம்பட்டினத்தில் நன்கு வாழ்ந்த கோவலன் கண்ணகி தம்பதியினர் விதி வசத்தால், பிழைப்பைத் தேடி மதுரைக்கு செல்லுகின்றனர். அங்கு கோவலன் கள்வன் என குற்றம் சாட்டப்பட்டு பாண்டிய மன்னனால் இறக்கின்றான். செய்தி கேட்டு வெகுண்டெழுந்த கண்ணகி தன் கணவன் கள்வன் அல்லன் என்று நிரூபித்ததோடு மதுரை பற்றியெரிய சாபம் தருகிறாள். பத்தினி சாபத்தால் மதுரை எரிந்தது. அப்போது மதுரா தெய்வம் கண்ணகி முன் தோன்றுகிறது. அது எல்லாவற்றிற்கும் ஊழ்வினை தான் காரணம் என்று கண்ணகியை அமைதிப் படுத்துகிறது. மதுரையை விட்டு வெளியேறிய கண்ணகி மேற்கு தொடர்ச்சி மலை செல்கிறாள். அங்கு வானுலகம் அடைகிறாள். ஆனாலும் ஆவேச வடிவ கண்ணகியானவள்  மலையை விட்டு கீழிறங்கி கிழக்கு திசை நோக்கி காளி வடிவில் வருகிறாள். சிறுவாச்சூர் என்ற இந்த இடம் வரும் போது இருட்டி விடுகிறது. அப்போது அங்கிருந்த கோயிலில் தங்க இடம் கேட்கிறாள். உள்ளேயிருந்த செல்லியம்மன் என்னும் தெய்வம், தன்னால் வரம் பெற்ற தீய மந்திரவாதி ஒருவன் தன்னை மந்திரத்தால் கட்டி போட்டு இருப்பதாக கூறியது. அன்றிரவு செல்லியம்மனோடு தங்கும் காளி வழக்கப்படி மந்திர வேலைகள் செய்ய வந்த மந்திரவாதியை ஆவேசம் கொண்டு அழித்தாள். விடிந்ததும் செல்லியம்மன்  நீயே இங்கிரு என்று காளியிடம் சொல்லிவிட்டு, மேற்கில் அருகிலுள்ள பெரியசாமி மலைக்கு சென்றுவிடுகிறது.  சிறுவாச்சூரில் அமைதியாக (மதுரமாக) அமர்ந்ததால் மதுரகாளி என்று அழைக்கப் படுகிறாள். வெளியே சென்ற செல்லியம்மன் கோயிலில் எப்போதும் முதல் மரியாதை தனக்கு தரப்பட வேண்டும் என்றபடியினால்,  தீபாராதனை காட்டும் போது, செல்லியம்மன் இருக்கும் மேற்கு திசை நோக்கி முதலில் காட்டுகிறார்கள். வெள்ளிக்கிழமை கோயிலுக்கு வந்த காளி, திங்கட் கிழமைதான் பக்தர்களுக்கு காட்சி தந்தாள். எனவே திங்கள் மற்றும் வெள்ளி ஆகிய இரண்டு கிழமைகளில் மட்டும் கோயில் திறந்து இருக்கும். இப்போது ஆங்கிலப் புத்தாண்டு, தமிழ்ப் புத்தாண்டு, மற்றைய விழாக் காலங்களிலும், தமிழ் விசேட தினங்களிலும் கோயில் திறந்து வைக்கப் படுகிறது.

இன்னும் சிலர் கண்ணகி மதுரையை எரித்ததால், மதுரையை விட்டு வெளியேறிய மதுரா தெய்வம்தான் இவ்வாறு சிறுவாச்சூரில் அமர்ந்தது என்றும், அது முதலில் மதுரை காளி என்று அழைக்கப்பட்டு பின்னர் மதுர காளி ஆயிற்று என்றும் கதை சொல்லுவார்கள்.

ஆதி சங்கரர் ஒருமுறை யாத்திரை செல்லும்போது அவருக்கு தண்ணீர் தாகம் எடுக்கிறது. அப்போது ஒரு மரத்தடியில் ஒரு சுனை நீர் தோன்றுகிறது. தாகம் தீர்த்துக் கொள்ளும் போது சுனை வடிவில் வந்தது நான்தான் என்று மதுரகாளியம்மன் காட்சி தந்துவிட்டு சிலையாக மாறி விடுகிறாள். ஆதி சங்கரர் வைத்து வழிபட்ட, அந்த மதுர காளியம்மன் சிலைதான் இப்போதுள்ளது என்றும் ஒரு கதை உண்டு.

நம்பிக்கைகள் :

இந்த கோயிலில் இருக்கும் கிணற்று நீரில் குளித்துவிட்டு, அங்கேயே மாவு இடித்து மாவிளக்கு, நெய்விளக்கு போடுவது சிறப்பு. கோயில் வளாகத்திலேயே மாவிடிக்க உரல்களும், உலக்கைகளும் இருக்கின்றன. முடியாதவர்களுக்கு மாவு இடித்துத் தர அங்கேயே கூலிக்கு ஆட்கள் இருக்கிறார்கள்.கோயில் வளாகத்தில் குளித்துவிட்டு துணிகளை மாற்ற வெளிப்புற மண்டபங்கள் உள்ளன.

செல்லியம்மனை மந்திரத்தால் கட்டிப் போட்ட மந்திரவாதி பில்லி, சூன்யம் போன்ற வித்தைகள் தெரிந்தவன். அவனை காளி அழித்த இடம் என்பதால் இங்கு வந்து சென்றால் பில்லி, சூன்யம் சம்பந்தப்பட்ட துன்பங்கள் நீங்கும் என்று நம்புகிறார்கள். அம்மன் என்றாலே மக்கள் வைத்திருக்கும் பொதுவான நம்பிக்கைகளும், வழிபாடும் உண்டு. இந்த கோயிலின் தல மரம் மருத மரம் ஆகும்.

கோயில் திருவிழாக்கள்:

சித்திரை மாதத்தில் சிறுவாச்சூர் மதுர காளியம்மன் கோயிலில் திருவிழா நடைபெறுகிறது. அப்போது மலை வழிபாடு, திருக் கல்யாணம், வெள்ளிக் குதிரை வாகனம், தேர் இழுத்தல் முதலிய சிறப்பம்சங்கள் நடைபெறும்.

அருகில் உள்ள கோயில்கள் :


மேற்கே செல்லியம்மன் கோயில், ஆத்தடி குருசாமி கோயில், கம்பப் பெருமாள் சன்னதி ஆகிவையும், வடக்கே ஆலயத்தின் முன்புறம் சோலைமுத்து அய்யனார் ஆலயமும், தெற்கில் ஊர்சுத்தியான் கோயிலும், மேற்புற மேட்டில் பெரியசாமி ஆலயமும் உள்ளன.

(மேலே உள்ள இரு படங்களும் சோலைமுத்து அய்யனார் கோயிலில் எடுக்கப்பட்டவை. கீழே உள்ள இரண்டு படங்களும் ஊர்சுத்தியான் கோயிலில் எடுக்கப்பட்டவை) 




தங்கும் விடுதிகள்:

சிறுவாச்சூரிலேயே இப்போது திருச்சி சென்னை சாலையில் தங்கும் விடுதிகள் உள்ளன. அருகிலுள்ள திருச்சி, பெரம்பலூர் ஊர்களில் தங்கியும் இங்கு வரலாம். இரண்டு இடத்திலிருந்தும் பஸ் வசதி அதிகம்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...