Monday, July 9, 2012

தேவைப்படுகிறார் ஒரு சுப்ரமணியன் சுவாமி ….!!


பிடிக்கிறதோ இல்லையோ – இங்கே அவசியம்
தேவைப்படுகிறார் ஒரு சுப்ரமணியன் சுவாமி ….!!



எப்படியாவது ஜனாதிபதி பதவியைப் பிடிக்க வேண்டும் என்று
திட்டம் போட்டு  பல  “தகிடு தித்தங்கள்”  செய்திருக்கும்
பிரனாப் முகர்ஜியைப் பற்றி மேலும் சில தகவல்கள்
கிடைத்திருக்கின்றன -

நிலுவையில் இருக்கும் சிபிஐ வழக்குகளை முன் வைத்து
மாயாவதி, முலாயம், லாலு ஆகியோரை பிடித்துப்
போட்டது போல் எதிரணியில் இருந்து இன்னும் யாரையாவது
வளைக்கலாமா என்று பார்த்தவர் வலையில் நிதிஷ்குமார்
வசமாகச் சிக்கி இருக்கிறார். நிதிஷ்குமாரை வசப்படுத்த
பிரனாப் செய்திருப்பவை -

மத்திய அரசின் ஒதுக்கீடு என்கிற பெயரில்2012-13ஆம்
ஆண்டிற்கான நிதியாக பீகாருக்கு அளிக்கப்பட்டிருப்பது
28,000 கோடி ரூபாய். கடந்த ஆண்டை விட இது
31 % அதிகமாம் !

இதைத்தவிர -  2012 முதல் 2017 வரை மத்திய அரசின்
“சிறப்பு நிதி”யாக ஆண்டுதோறும் 4000 கோடி ரூபாய்
வழங்கப்படும் !

இதைத்தவிர -  ஜார்கண்டு மாநிலம் பிரிக்கப்பட்டபோது,
தனியே -சமரச நிதியாக  11வது ஐந்தாண்டு திட்டத்தின் கீழ்
மத்திய அரசு பீகாருக்கு 10,000 கோடி ரூபாய் வழங்க
முடிவு செய்யப்பட்டு, அதன்படி கொடுக்கப்பட்டும் விட்டது.

இப்போது புதிதாக – 12வது ஐந்தாண்டு திட்டத்திலும்
இந்த  நிதி உதவி தொடரும் என்றும், ஏற்கெனவே
வழங்கப்பட்ட 10,000 கோடி உயர்த்தப்பட்டு 20,000
கோடியாக கொடுக்கப்படவும் மத்திய அரசு உத்திரவிட்டுள்ளது !

இதைத்தவிர -  நிதிஷ்குமாரின் தொகுதியில் புதிய
விமான நிலையம் ஒன்று கட்ட அனுமதி
கொடுக்கப்பட்டுள்ளது !

இதைத்தவிர – பாட்னாவில் “மெட்ரோ” ரயில்
போக்குவரத்து அமைக்கவும் மத்திய அரசு ஒப்புதல்
கொடுத்துள்ளது !

இந்த ஒதுக்கீடுகள் அனைத்தும், ஐக்கிய முற்போக்கு
கூட்டணியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிறகும்,
நிதியமைச்சர் பொறுப்பில் இருந்து கொண்டு
பிரனாப் எடுத்த முடிவுகள் !

இதைத்தவிர, உத்திரப் பிரதேசத்திற்காக, தங்கள்
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற நிதி ஒதுக்கீடு
கேட்டு, முலாயம் சிங்கும் அவரது மகன் அகிலேஷ்
யாதவும்  முன்வைத்த கோரிக்கைகளுக்கு நிதியமைச்சர்
பதவியில் இருந்து விலகும் முன்னர் “ஆவன”
செய்யப்பட்டிருக்கிறதாம் !

நாடு முழுவதும் மாநில அரசுகள் மூலம் வசூலிக்கப்பட்டு
மத்திய அரசின் கஜானாவில் நிரம்பியுள்ள நிதியை
தங்கள் வசதிக்காக,
தங்கள் இஷ்டம் போல் -
தாங்கள் விரும்பியவர்களுக்கு,
தங்களுக்கு ஆதரவு தர ஒப்புக்கொள்ளும் மாநிலங்களுக்கு,
அதுவும் தேர்தல் ஆதாயம் கருதி
அள்ளித் தரப்படுகிறது.
( மம்தாவிற்கு கொடுத்தால் – அதை வெளியே போட்டு
உடைத்து விடுவார் என்கிற அச்சம் காரணமாக
தற்போது கொடுக்கப்படாமல்  இருக்கலாம் ! )

இது பிரனாப் முகர்ஜியின் பாட்டன், முப்பாட்டன் சொத்து
அல்ல - தனக்கு ஆதரவு கொடுப்பவர்களுக்கு எல்லாம்
இஷ்டம் போல வெட்ட … !!

பொதுவாக தேர்தல் சமயத்தில் வேட்பாளர்களின் செலவுக்கு
உச்சவரம்பு விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஜனாதிபதி தேர்தலில்
இத்தகைய விதிமுறைகள் ஏதும் இல்லை.

தற்சமயம்  எந்த வித பதவியிலும் இல்லாத முகர்ஜி
மாநிலம் மாநிலமாக தனி விமானத்தில் பயணம் செய்வது
எப்படி ? இது யார் பணம் ?

அவரது விமானப் பயணங்களுக்கு ஏற்பாடு செய்யும்
பண முதலைகள், பெரும் முதலாளிகள் யார் -

என்று யார் கேட்பது ?
அரசியல் சட்டத்தை உருவாக்கியவர்கள் இத்தகைய
விபரீதங்கள் எதிர்காலத்தில் நிகழக்கூடும் என்று
எதிர்பார்க்கவில்லை போலும். 1940-களில் இப்படி
ஒரு பிரனாபையோ, ப.சி.யையோ, லாலுவையோ,
முலாயமையோ, அரசியல் வாழ்வில்
யாராவது நினைத்துக் கூட பார்த்திருக்க முடியுமா ?

பிரனாப் அளித்துள்ள ஒதுக்கீடுகள்
அப்பட்டமான “லஞ்சம்”
என்று ஒரிஸ்ஸா முதல்வர் பிஜூ பட்நாயக்
வெளிப்படையாகவே குற்றம் சாட்டுகிறார்.

வேட்பாளர் மனு தாக்கல் செய்யும் நேரத்தில் பிரனாப்
இன்னும் இரண்டு ஆதாயம் பெறும் பதவிகளில் இருந்தார்
என்று டாக்டர் சுப்ரமணியன் சுவாமி நேற்று மாலை குற்றம்
சாட்டி இருந்தார்.

உடனடியாக – இரண்டு மணி நேரத்திற்கு உள்ளாக,  
சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் அவற்றிற்கு
“மறுப்பு” தெரிவிக்க “ஏற்பாடு” செய்யப்பட்டு
விட்டது.

உலகத்தின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்று
ஜம்பமாக மார் தட்டி சொல்லிக் கொள்கிறோம்.

இதையெல்லாம் பார்த்தால் ……………..
காரி உமிழ வேண்டும் போல இருக்கிறது !

நான் சென்ற முறை ஒரு தடவை டாக்டர் சுப்ரமணியன்
சுவாமியை அவரது விடாமுயற்சிக்காகப் பாராட்டி
எழுதிய போது அதற்காக சிலர் வருத்தப்பட்டிருந்தார்கள்.


டாக்டர் சுவாமி ஒரு முற்றிலும் மாறுபட்ட கேரக்டர்.
அவரை சிலருக்கு ரொம்ப பிடிக்கும்.
சிலருக்கு பிடிக்கவே பிடிக்காது.

எனக்கு இப்படியும் இல்லை -அப்படியும் இல்லை.
அவரிடம் சில விஷயங்கள் பிடிக்கும்.
சில விஷயங்களில் பிடிக்காது.

சென்னையில் செய்தியாளர்கள்
பிரனாப் முகர்ஜியிடம் அவரது வெற்றி வாய்ப்பைப்பற்றி
கேட்டபோது, இது வெறும் நம்பர் கணக்கு தான், எனவே
தான் வெற்றி பெறுவது உறுதி  என்றும்
ஜனாதிபதி தேர்தலில் “மிராகிள்”களை எதிர்பார்க்க
வேண்டாம் என்றும் என்றும் கூறி இருந்தார்.

ஆனால் ஒரு வேளை அந்த – “மிராகிள்” நிகழந்தாலும்
நிகழக்கூடும் என்று நமக்கு இலேசாக ஒரு நம்பிக்கை
ஊட்டக்கூடிய   நபர் ஒருவர் இருக்கிறார்  !

நமக்குப் பிடிக்கிறதோ இல்லையோ -
இங்கே, இந்த இடத்தில், அவசியம் தேவைப்படுகிறார் -
டாக்டர் சுப்ரமணியன் சுவாமி ….!!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...