Friday, July 27, 2012

முட்டாப் பயலுக்கு வந்த இரண்டு சந்தேகங்கள்......





நீதிமன்றங்களில் எதற்கு வக்கீல்கள்?




மன்னர் ஆட்சி காலத்தில இரண்டு மனிதர்களுக்குள்ளே பிணக்கு ஏற்ப்பட்டால்; அவர்களில் யார் பக்கம் நியாயம் உள்ளது என்பதை மன்னன் விசாரித்து தீர்ப்பளித்ததாக கதைகளிலும், புத்தகங்களிலும் அறிந்திருக்கின்றோம். அதன் பின்னர் பஞ்சாயத்து, ஊர் பெரியவர்கள் சம்பந்தப்பட்ட இருவரையும் விசாரித்து தீர்ப்பை சொல்லும் வழக்கம் காணப்பட்டது. ஆனால் இன்று ஜனநாயக நாடுகளில் நீதிபதிகள் சம்பந்தப்பட்ட இருவரையும் விசாரித்து தீர்ப்பை சொல்வதற்கு எதற்கு வக்கீல்கள் என்கின்ற மூன்றாம் தரப்பை பயன்படுத்துகின்றார்கள்? தாமாக விசாரித்து நீதி யார்பக்கம் என்பதை அறியும் அளவுக்கு நீதிபதிகளுக்கு விபரம் போதாதா? மன்னனாலும், பஞ்சாயத்து பெரிசாலும் முடிந்தது ஏன் இன்று படித்த அனுபவம் வாய்ந்த நீதிபதிகளுக்கு முடிவதில்லை?

ஒருவேளை ஆயிரம் குற்றவாளி தப்பிக்கலாம் ஆனால் ஒரு நிரபராதி தண்டிக்க பட கூடாது என்கின்ற ஜனநாயக சிந்தாந்தத்தை காப்பாற்றவா வக்கீல்கள்? ஆம் என்றால் சிரிப்பதை தவிர வேறு வழியில்லை. வக்கீல்களை ஒட்டுமொத்தமாக குறை சொல்வதற்காக இதை சொல்லவில்லை, அடிப்பையில் கீழ்த்தட்டு, நடுத்தட்டு மக்கள் நீதிமன்றத்திற்கு சென்றால் எதிர் நோக்கும் முக்கிய பிரச்சனை வக்கீல் பீஸ்!! எதுக்கு குடுக்கிறம், ஏன் குடுக்கிறம் என்கிறது தெரியாமலே நிறையபேர் கடன் வாங்கி வக்கீலுக்கு படி அளக்கிறாங்க!! வக்கீல்களை குறை சொல்ல முடியாது, ஏன்னா அதுதான் அவங்க பொழைப்பு, எதுக்கு வக்கீலுங்க என்கிறதுதான் என்னோட சந்தேகமே!!!


ஜீ.ஜீ. பொன்னம்பலம் என்று ஒரு வக்கீல் இருந்தாராம், அவர் எந்த வழக்கையும் வென்று கொடுப்பாராம், தனது கட்சிக்காரன் கொலையாளி என்றாலும் காப்பாறும் அளவுக்கு வாத திறமையும், சாட்சிகளை பார்வையாலேயே மிரட்டி குழப்பும் அளவிற்கு திரமயானவராம்!!! இவர் ஒரு உதாரணம், இப்படி ஒவ்வொரு நாட்டிலும், மாகாணத்திலும், மாவட்டத்திலும் சில, பல வக்கீல்கள் இருக்கத்தான் செய்கின்றார்கள். நியாயம் இல்லாத பணம், அதிகாரம் இருக்கிறவன் பக்கம் சிறப்பான வக்கீல்களும், நியாயம் இருக்கின்ற பணம் இல்லாத அன்றாடம் காய்ச்சி பக்கம் ஒப்புக்கு ஒரு வக்கீலும் நீதிக்காக முன்னிற்பது நீதியின் முன் எவ்வகையில் நியாப்படுத்தப்படுகின்றது!!!! அதிகாரம் உள்ளவன், அரசியல்வாதி, பணக்காரன் நீதியை வாங்குவதற்கும்; பணம், வசதி வாய்ப்பு இல்லாதவன் நியாயத்தை அதிகாரம், பணத்தின் முன் இழப்பதற்கும் சட்டத்தின் ஓட்டைகள்தான் காரணம் என்றால்; அந்த ஓட்டைகளை தேவைக்கு ஏற்ப பயன்படுத்தும் வக்கீல்கள் மக்களுக்கு நீதி சொல்ல எதுக்கு துணைக்கு வரணும்?

ஒரு நீதிபதிக்கு ஒரு வழக்கினை விசாரித்து தீர்ப்பளிக்க தடுமாற்றம், நம்பிக்கை இல்லை என்றால் இரண்டு மூன்று நீதிபதிகள் இணைந்தாவது ஒவ்வொரு வழக்கையும் விசாரித்து தீர்ப்பளிக்கலாமே! நேரம் போதாதா? வக்கீல்கள் வாய்தா வாங்கிற காலத்தைவிடவா நேரச்சிக்கல் ஏற்ப்படப் போகிறது!!! சம்பந்தப்பட இரு தரப்பையும், சாட்சிகளையும் ஒரே நபர் (நீதிபதி) விசாரித்து வழங்கும் தீர்ப்பைவிட; ஒருபக்கம் சிறந்த வக்கீலும், ஒரு பக்கம் சாதாரண வக்கீலும் துணைநிற்க இருதரப்பு நியாயங்களையும் கேட்டுவிட்டு வாத திறமைக்கு கிடைக்கும் தீர்ப்பா சிறந்தது? சட்ட ஆலோசனை வழங்கும் ஆலோசகர்களாக வக்கீல்களை ஏற்றுக்கொள்ளலாம், நீதியை கேட்டு நீதிமன்றை நாடும் மக்களின் துணையாக நின்று நீதியை பெற்றுக்கொடுக்கும் (?) ஒருவராக அவர்களை ஏற்றுக்கொள்ள முடியவில்லை!!!!

மறதி குற்றச்செயலா?




மோட்டார் வாகனம் ஒன்றை வீதியில் செலுத்தும்போது மூன்று முக்கிய ஆவணங்கள் எப்போதும் எம்முடன் எடுத்துச்செல்ல வேண்டும் என்கிறது போக்குவரத்துப் பிரிவு சட்டம். ஓட்டுனர் உரிமம், வரி கட்டிய பற்றுச்சீட்டு, காப்புறுதி கட்டிய பற்றுச்சீட்டு என்பவைதான் அந்த மூன்றும். இவை கையில் இல்லாத பொழுது போக்குவரத்து போலிஸ் இடைமறித்து சோதனை செய்தால், அந்த இடத்தில் வாகனம் பொலிசாரால் பறிமுதல் செய்யப்படும், பின்னர் தண்டப்பணம் செலுத்த வேண்டும். அதிகமானவர்கள் இவை அனைத்தையும் தமது பர்சில் தான் வைத்திருப்பார்கள். பர்சை மறந்துபோய் வீட்டில் வைத்துவிட்டு போகும் நாளில் போக்குவரத்து போலீஸின் கைகளில் சிக்கினால்; ஏகப்பட்ட நேர விரயம் மற்றும் தண்டப்பணமாக மாத வருமானத்தின் ஒரு பகுதியை கட்டவேண்டிய கட்டாயம், இது 1% - 50%வரை பலதரப்பட்ட மக்களின் மாத வருமானத் தொகையாக இருக்கின்றது!! இந்த இடத்தில் போக்குவரத்து பொலிசாருக்கு 500 ரூபாவை லஞ்சமாக கொடுப்பது சிறந்த முடிவென்று பலரும் செயற்படுவது குறிப்பிடத்தக்கது!!!

குறிப்பிட்ட ஆவணங்கள் இல்லாதவர்கள், திருடப்பட்ட வாகனங்கள் போன்றவற்றையும்; மறதியால் மேற்ப்படி ஆவணங்கள் தவறவிட்டு சென்றவர்களையும் கண்டறிவதில் இருக்கும் நடைமுறை சிக்கலையும் மறுப்பதற்கில்லை. அதே நரம் மறதி என்னும் ஒரு உளவியல் வியாதிக்கு இந்த தண்டனையை ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை!!! இதற்கு எது சரியான தீர்வென்று எனக்கு சொல்லத் தெரியவில்லை, ஆனால் இவ்வகையில் சிலர் அவ்வப்போது பாதிக்கப்பட்டுக்கொண்டும், அதனால் லஞ்சம் கொடுத்து தப்பித்துக் கொண்டும்தான் இருக்கின்றார்கள் என்பதையும் மறுக்க முடியாது!!!

இந்த மறதிக்கான தண்டனை பொலிசாரால் மட்டுமல்ல; பெற்றோர், ஆசிரியர்கள் போன்றோராலும் சிறுவயதுமுதலே வழங்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றது. கடைக்கு போகும்போது சொல்லிவிட்ட பொருட்களில் ஒன்றிரண்டை வாங்க மறந்து வந்து வீட்டில் திட்டு, அடி வாங்கிய பெருமக்கள் இதை அறிவார்கள் :-) அதேபோல பாடசாலையில் மறந்துபோய் சொன்ன பொருட்களை கொண்டு செல்லாமல், வீட்டு பாடத்தை செய்யாமல் போய் அடிவாங்கிய பலரும் அறிவார்கள்; ஆனாலென்ன பஞ்சியில், விளயாட்டுத்தனத்தில் வீட்டு பாடங்களை செய்யாமல் இருப்பவர்களும் மறதியை காரணம் காட்டுவதால் அங்கும் ஆசிரியர்களுக்கு பிரித்தறிவதில் சங்கடம் ஏற்ப்படலாம், ஆனால் நம்ம ஆசிரியர்கள் மறதிக்குத்தான் அதிக ஷொட் போடுவார்கள்; குறிப்பாக "இந்த வயதிலேயே உனக்கு மறதியா" என்று பஞ்சு டயலாக் பேசி மாணவர்களை வெளுத்து வாங்குவதையும் சொல்லியே ஆகவேண்டும் :-)
குறிப்பு :-
நாலுநாள் இண்டர்நெட், கம்பியூட்டர் இல்லாம ப்ரீயா இருந்து பாருங்க, உங்களுக்கும் இதேபோல பல சந்தேகங்கள் கிளம்பும் 

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...