Monday, December 5, 2011

முல்லைப் பெரியாறு பிரச்சினை, என்ன செய்யலாம்?

முல்லைப் பெரியாறு அணைதான் தற்போதைய தலைவலி. இந்த பிரச்சினையை அலசும் முன் ஒரு அனுபவம்.

ஒரு ரயில் பயணம். (பம்பாயிலிருந்து அகமதாபாத்தோ அல்லது இங்கேயிருந்து அங்கேயோ) அன்ரிசர்வ்ட் கம்பார்ட்மெண்டில் அநியாயத்துக்கு கூட்டம். டாய்லெட்டில் கூட சில வியாபாரிகள் மூட்டைகளை அடுக்கி இருந்ததை கவனித்தேன். கூட்டம் நடை பாதையிலேயே உட்கார்ந்திருந்தது. அதிலும் ஒருவர் ஏற முயற்சிக்கிறார். ஆனால் வழியில் உட்கார்ந்திருப்பவர்கள் அனுமதிக்கவில்லை. உள்ளே இடமில்லை என்கிறார்கள். அவர் காட்டு கத்தல் கத்துகிறார். நானும் டிக்கட் வாங்கி இருக்கிறேன் என்று உரிமை கீதம் பாடுகிறார். கடைசியில் அவருடைய கத்தலை சமாளிக்க முடியாமல் அவருக்கு வழி விடுகிறார்கள். அவரும் அந்த நெருக்கடியில் பயணிக்கிறார்.

வண்டி கிளம்பிய பிறகு அந்த விரோதம் மறைந்து அவரும் அந்த நெருக்கடியில் அமர்கிறார். அடுத்த ஸ்டேஷனில் வண்டி நிற்கிறது. அங்கேயும் ஒருவர் ஏற முயற்சிக்கிறார். இங்கேயிருந்து அதே பதில். அங்கேயிருந்து அதே உரிமை கீதம். ஆனால் கடைசியாக ஏறிய நபர் இப்போது அந்த நபரின் உரிமைக்காக குரல் கொடுக்கவில்லை.

இதை எப்படி புரிந்து கொள்வது? தனக்கு பாதிப்பு எனும் போது ஆவேசப்படுபவர்கள் மற்றவர்கள் பாதிக்கும் போது (பெரும்பாலும்) மவுனமாகி விடுகிறார்கள் என்றா? அல்லது உள்ளே இருக்கும் சூழ்நிலையை வெளியே இருந்து உணர முடியாதவர்கள், உள்ளே போய் கண்ணால் கண்ட பிறகு அதை புரிந்து கொள்கிறார்கள் என்றா? இரண்டுமே பொருந்தினாலும் இரண்டாவது காரணம்தான் பல இடங்களில் பொருந்தும். இந்த யதார்த்தம்தான் இன்றைய அரசியலே. எதிர்கட்சியாக இருக்கும்போது விலை ஏற்றத்துக்கும் அரசின் கொள்கை முடிவுகளுக்கும் எதிராக குரல் கொடுப்பவர்கள், அதிகாரத்துக்கு வந்த உடன் யதார்த்தத்தை புரிந்து கொள்கிறார்கள்.

கூடங்குளம் பிரச்சினைக்கு அடுத்து முல்லைப் பெரியாறு பிரச்சினையை அணுகும்போது, இந்த யதார்த்தம் கொஞ்சம் அதிகமாகவே சுடுகிறது. இங்கே ஆபத்து நிச்சயம் என்று பிரச்சாரம் செய்பவர்கள் அங்கே எந்த ஆபத்தும் இல்லை என்று வாதிடுகிறார்கள். ஒரு சக தமிழன் வீட்டில் விளக்கு எரிய நான் எதற்கு ரிஸ்க் எடுக்க வேண்டும் என்று சொல்பவர்கள், கேரளாக்காரர்களுக்கு சொல்லும் உபதேசமே வேறு.

என்னதான் பிரச்சினை?

இந்த விஷயத்தில் தகவலைத் தேட இணையம் உபயோகமாக இல்லை. அணைக்கு ஆபத்து, எனவே புதிய அணை தேவை என்பது கேரளாவின் வாதம். அணை பலமாக இருக்கிறது என்பது தமிழ் நாட்டின் வாதம். இதுதான் பத்திரிக்கை செய்தி. இதில் தமிழர்கள் சொல்வதையும் நம்ப முடியாது, கேரளாக்காரர்களையும் நம்ப முடியாது. நடுநிலையாளர்கள் கருத்து என்பதே இங்கு இல்லை. எனவே கேள்வி ஞானம் என்ற அடிப்படையில் கூட கருத்து சொல்ல முடியாது.

இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் முதன் முதலில் அறிவிக்கப்பட்டபோது, அதன் நோக்கம் பல நாடுகளில் விவாதிக்கப்பட்டதால், இந்தியா, அமெரிக்கா மற்றுமின்றி பல நடுநிலையான நாடுகளின் பத்திரிக்கைகளையும் படித்தேன். எனவே அது குறித்து பதிவு போடுவதிலோ அல்லது அணு உலைகளை ஆதரிப்பதிலோ தயக்கம் ஏற்படவில்லை.

ஆனால் முல்லைப் பெரியாறு அணை பிரச்சினையில் என்ன சொல்வது? இரண்டு மாநில அரசியல்வாதிகளுமே இதை அரசியலாகத்தான் பார்கிறார்கள்.
If we had ministers who have at least basic qualifications rather than some goons, illiterate, or celebrities, these kind of issues would never have emerged. even if emerged, it would have been already solved or steps would have taken wisely. India needs to have politicians who should be qualified enough to handle situation like this.
இது மனோரமா இணையத்தில் பார்த்த ஒரு கேரளாக்காரரின் யதார்த்தமான பின்னூட்டம். வேறு சில பின்னூட்டங்கள் அதிர்ச்சி அளிக்கிறது. மாநில மக்களுக்கிடையே வெறுப்புணர்வு வளர்ந்து வருவதை காட்டுகிறது. இந்நிலை தொடர்ந்தால், இந்தியாவை துண்டாட எதிரிகள் வேண்டாம், மாநிலங்களுகிடையான பிரச்சினைகளை விரைவில் தீர்க்காமல் இழுத்தடித்தாலே போதும், மக்களுக்கு இந்திய அமைப்பின் மீது வெறுப்பு ஏற்பட்டு தானாகவே உடைந்துவிடும்.

வாதம்.

முல்லைப் பெரியாறு குறித்து பல தகவலைத் தேடி கடைசியில் காவிரி மைந்தன் தளம் படித்தேன். அவர் சொன்ன கருத்துக்கள் உண்மையானால் தமிழகத்தின் பக்கம் நியாயம் இருப்பதாக தெரிகிறது. அதேபோல் ஒரு கேரளாக்காரரின் பதிவையும் படித்தால், அவர் ஒரு தியரியையை மட்டுமே பிடித்துக் கொண்டாலும், அதுவும் நியாயமான கவலையாகத்தான் இருக்கிறது.

இன்று இல்லாவிட்டாலும் என்றாவது ஒரு நாள் புது அணை கட்டியாக வேண்டும், அதை ஏன் இப்போதே செய்யக் கூடாது என்பது அவர்களின் கேள்வி. அத்துடன் கூடங்குளம் விஷயத்தில் தமிழக அரசியல்வாதிகளின் ஸ்டன்ட் அவர்களுக்கு மேலும் ஊக்கம் கொடுத்துவிட்டது.       

இன்னொரு தலைவலி என்னவென்றால், பொதுவாக மக்களுக்கு அவர்கள் சார்ந்த பகுதியின் செய்திகளையே அதிகம் கேட்கும் வாய்ப்பு ஏற்படும். மாற்றுக் கருத்து அவர்களுக்கு கிடைப்பதும் இல்லை சராசரி மனிதனுக்கு அதை தேடும் அளவுக்கு நேரமும் இல்லை. அவர்கள் காதில் விழும் செய்திகளே அவர்கள் மனதில் ஆழமாக பதிந்து விடுகிறது. இதனால் நாம் கேரளாவையும், அவர்கள் நம்மையும் குறை சொல்லிக் கொண்டிருப்போம்.

எனவே இந்த பிரச்சினையை ஆழமாகப் புரிந்து கொண்டு நீதிமன்றங்கள் தீர்பளிக்கும் வரை நியாயம் யார் பக்கம் என்று கணிப்பது சிரமம். தற்போதைய கேரளாவின் கோரிக்கை லாஜிக்காக இருப்பதால், மற்றவர்களின் மனதில் தமிழகத்தின் நிலைப்பாடுதான் சந்தேகம் கொள்ளவைக்கும்.

அப்படியானால் தீர்வுதான் என்ன?

நீதிமன்றங்கள்தான் ஒரே வழி. ஆனால் அவர்களால் பிரச்சினையை தீர்க்க முடியவில்லை. இந்திய நீதிமன்றங்கள் ஆமை வேகத்துக்கு செயல்பட்டாலும், மாநிலங்களுகிடையான வழக்குகள் முடியாமல் இழுக்கப்படுவதற்கு, நான் மத்திய அரசையோ, நீதிமன்றங்களையோ குறை சொல்ல மாட்டேன்.

ஒரு கூட்டுக் குடும்பத்தில் இரு பிள்ளைகளுகிடையில் பிரச்சினை ஏற்பட்டால் குடும்பத்தில் பிளவு வராமல் தடுக்க சமாதானப்படுத்தத்தான் முயற்சிப்பார்களே ஒழிய, வெட்டு ஓன்று துண்டு ரெண்டுன்னு அங்கே தீர்ப்பு கிடைக்காது. இது தமிழகத்துக்கு மட்டுமில்லை இந்தியாவின் எல்லா மாநிலத்துக்கும் பொதுவானது. எனவே உச்ச நீதிமன்றங்கள் மாநிலங்களுகிடையான பிரச்சினைகளை விரைவாக தீர்பதற்கு தற்போதைக்கு வாய்ப்பில்லை. அவை நியாயமான தீர்ப்பை வழங்கினாலும், பாதிக்கப்படும் மாநிலங்களை சேர்ந்த அரசியல்வாதிகள் மக்களின் உணர்வுகளை தூண்டுவார்கள்.

என்னதான் வழி?

நீதிக்கு கட்டுபடுவோம் என்று இரு மாநில அரசுகளும் முடிவெடுத்தால் வழி இருக்கிறது. ஒய்வு பெற்ற, நேர்மையான உச்ச நீதிபதிகளை கொண்டு நாமே தனி நீதிமன்றம் அமைக்கலாம். தென் மாநிலங்களை சேராத 3 அல்லது 5 நீதிபதிகளை தேர்ந்தெடுத்து இதை அமைக்கலாம். அதே சமயம் ஜனநாயகத்தின் ஒரு அமைப்பு இன்னொரு அமைப்பை அவமதிக்க முடியாது. எனவே மாநில அரசுகள் இதை செய்ய முடியாது.மக்களின் நிதி உதவியுடன் பொதுநல அமைப்புகள் இதை செய்தால் அது இன்னும் சிறப்பாக இருக்கும்.அவர்கள் வழங்கும் தீர்ப்பை அமல்படுத்துகிறார்களோ இல்லையோ ஆனால் அரசியல்வாதிகள் தவறான தகவல் மூலம் மக்களிடையே பிளவை ஏற்படுத்தும் முயற்சி தடுக்கப்படும்.
    
அவர்கள் வழங்கும் தீர்ப்பை இன உணர்வுக்கு பலியாகாமல் இரு மாநிலங்களும் கட்டுபாட்டால், மாநிலங்களுகிடையான மற்ற பிரச்சினைகளையும் இதேபோல் தீர்த்துக் கொள்ளலாம். 

இதே வேலையை உச்ச நீதிமன்றமும் செய்யலாம். ஆனால் அவர்களுக்கு வேலைப்பளு அதிகமோ அல்லது நமது தீர்ப்பு மாநிலங்களில் எப்படி எடுத்துக்கொள்ளப்படும் என்ற தயக்கமோ, ஏதோ ஓன்று அவர்களை செயல்பட விடாமல் தடுக்கிறது. எனவே மாத்தி யோசிக்க வேண்டியதுதான்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...