Thursday, January 31, 2019

எம்.ஆர்.ஐ ஸ்கேன் ...

எம்.ஆர்.ஐ ஸ்கேன் இயந்திரம் எப்படி உயிர்பலி வாங்குகிறது? -
உடலில் என்ன பிரச்னை என்பதைக் கண்டுபிடிக்கும் எம்.ஆர்.ஐ ஸ்கேன் அவ்வளவு ஆபத்தானதா?
மருத்துவமனை லேப்களில் பயன்படுத்தப்படும் பல வகை ஸ்கேன் மெஷின்களில் முக்கியமானது எம்.ஆர்.ஐ ஸ்கேன் மெஷின். இதன் மூலம் உடலின் எந்த பாகத்தையும் நுணுக்கமாக ஆராயலாம். ஆனால், கொஞ்சம் ஆபத்தானதும்கூட. கவனக்குறைவாக இருந்தால் நம்மை உள்ளிழுத்து, உயிரையே எடுத்துவிடும். பொதுவாக எம்.ஆர்.ஐ ஸ்கேன் மெஷின் இருக்கும் அறைக்குள் உலோகப் பொருள்களைக் கொண்டு செல்லக் கூடாது. இதிலுள்ள மிக அதிகமான காந்தப்புலம், உலோகங்களை ஈர்த்துக்கொள்ளும். இதனால் பல விபத்துகள் நிகழ்ந்திருக்கின்றன. அமெரிக்காவில் 2001-ம் ஆண்டு, 6 வயதுச் சிறுவனை ஸ்கேன் செய்வதற்காக அழைத்துச் சென்றபோது, மெஷினின் காந்தப்புலத்தால் ஆக்சிஜன் சிலிண்டர் அதிவேகமாக ஈர்க்கப்பட்டது. சிலிண்டர் சிறுவனின் தலையில் மோதியதால், தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். இதேபோல இன்னொரு சம்பவம்... டெல்லியிலிருக்கும் மருத்துவமனையில் வேலை செய்பவர் ஆக்சிஜ ன் சிலிண்டருக்கும் எம்.ஆர்.ஐ ஸ்கேன் மெஷினுக்கும் நடுவில் மாட்டிக்கொண்டதில், அவரின் உள்ளுறுப்புகள் செயலிழந்தன. இதுபோன்ற விபத்துகள் பெரும்பாலும் ஆக்சிஜன் சிலிண்டரை ஸ்கேன் அறைக்கு எடுத்துச் சென்றதாலேயே நிகழ்ந்திருக்கின்றன.
``எம்.ஆர்.ஐ ஸ்கேன் மெஷினில், அதன் திறன், விலைக்கு ஏற்ப பல வகைகள் உள்ளன. `டெஸ்லா’ (Tesla) என்பது ஸ்கேன் மெஷினின் திறனைக் குறிக்கும் அறிவியல் சொல். 0.5 டெஸ்லா முதல் 3 டெஸ்லா திறனுடைய ஸ்கேன் மெஷின்கள் மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படுகின்றன. பூமியின் காந்தப்புலம் 0.5 காஸ் (gauss). ஒரு டெஸ்லா என்பது 10,000 காஸ். அப்படியானால், 0.5 டெஸ்லா என்பது 5,000 காஸ். 3 டெஸ்லா என்றால் 30,000 காஸ். இதிலிருந்து அதன் ஈர்ப்பு சக்தியை நாம் புரிந்துகொள்ளலாம்.
எம்.ஆர்.ஐ ஸ்கேன் மெஷின்கள் டைட்டானியம், பிரத்யேக ஸ்டெயின்லெஸ் ஸ்டீல்களைத் தவிர மற்ற அனைத்து உலோகங்களையும் ஈர்க்கக்கூடியவை. ஸ்கேன் அறைக்குள் பிரத்யேக ஸ்டெயின்லெஸ் ஸ்டீலால் தயாரிக்கப்பட்ட படுக்கை (MRI compatible Strecher) மற்றும் ஆக்சிஜன் சிலிண்டர்களையே பயன்படுத்த வேண்டும். நோயாளிகளையும், உடன் வருபவர்களையும் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் பரிசோதித்த பின்னரே, ஸ்கேன் அறைக்குள் அனுமதிக்கின்றனர். ஸ்கேன் மெஷின் இருக்கும் அறையின் சுவர்கள், காந்தப்புலம் வெளியே செல்ல அனுமதிக்காத பொருள்களைக் கொண்டு கட்டப்பட்டிருக்கிறது.
ஸ்கேன் அறைக்குள் நாம் அன்றாடம் பயன்படுத்தும் பல பொருள்களைக் கொண்டு செல்லக் கூடாது. கைக்கடிகாரம், மோதிரம், சாவிக் கொத்துகள், ஹெட்போன்கள், சில்லறைக் காசுகள், மருத்துவர்கள் பயன்படுத்தும் ஸ்டெதஸ்கோப் உள்ளிட்ட எந்த உலோகப் பொருள்களையும் எடுத்துச் செல்லக் கூடாது. குறிப்பாக வங்கி டெபிட், கிரெடிட் கார்டுகளை எடுத்துச் சென்றால், அவை செயலிழந்துவிடும்.
இனி எம்.ஆர்.ஐ ஸ்கேன் அறைக்குள் செல்லும்போது மருத்துவர்களும், மருத்துவமனை ஊழியர்களும் சொல்லும் வழிமுறைகளைத் தவறாமல் பின்பற்றுவோம்... விபத்துகளைத் தவிர்ப்போம்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...