Wednesday, January 30, 2019

💐ஒருவருக்கு ஒரு குரு தானே இருக்க முடியும்? - 💐

குரு என்றால் யார்? ஒருவருக்கு எத்தனை குருக்கள் இருக்க வேண்டும்? ஒரே ஒரு குரு போதுமா? போன்ற கேள்விகளுக்கு விடை சொல்வதே இந்தப் பதிவின் நோக்கம்.
குரு என்ற சொல்லில் கு என்ற எழுத்து அறியாமையையும், ரு என்பது அழித்தலையும் குறிக்கும். ஆக குரு என்பவர் அறியாமையை அழித்து மெய்யுணர்வு புகட்டுபவர் ஆவார். மேலும் கு என்பது சத்துவ, ராஜச, தாமச குணங்களை கடந்தவர் என்று, குணாதீத நிலைமையையும், ரு என்பது ரூபாதீதம் எனும் உருவைக் கடந்த நிலையினைக் குறிக்கும். ஆக, குரு என்பவர் குணங்களையும், ரூபத்தையும் கடந்த பரப்பிரமமே ஆவார். இதனைத் தான் குருவே சிவம் என்பர்.
"குருவே சிவம் எனக் கூறினன் நந்தி
குருவே சிவம் என்பது குறித்து ஓரார்
குருவே சிவனும் ஆய்க் கோனும் ஆய் நிற்கும்
குருவே உரை உணர்வு அற்றது ஓர் கோவே."
நடைமுறையில், நம்மில் பெரும்பாலானவர்களுக்கு ஆசிரியர் யார், குரு யார் என்பதைத் தீர்மானிப்பதில் தடுமாற்றம் காணப்படுகின்றது. ஆசிரியரைக் குரு என்பதும் குருவை ஆசிரியர் என்பதுமாக நாம் குழப்பமடைந்துள்ளோம். பல சந்தர்ப்பங்களில் ஆசிரியர் ஒருவரை அவருக்கு விசேஷ மதிப்பைக் கொடுப்பதற்காக குரு என்றும் குறிப்பிடுகின்றோம். கலை உலகில் இந்தப் பிரயோகத்தை நாம் காணலாம். உதாரணமாக, நடனக் கலையைக் கற்பிக்கும் நடன ஆசிரியரை நடன அரங்கேற்ற மேடைகளில் குரு எனக் கௌரவிக்கப்படுவதைக் காணலாம்.
ஒருவர் ஆசிரியரா அல்லது குருவா எனத் தீர்மானிப்பதில் அடிப்படையாகக் கொள்ளப்படும் உண்மை எது? என்பது தான் ஆசிரியருக்கும் குருவுக்குமான வேறுபாட்டைக் கொடுக்கின்றது. மாதா, பிதா, குரு, தெய்வம் என்பதில் குறிப்பிடப்படும் குரு என்பவர் ஆசிரியராக இருப்பின் ஒருவருக்கு எத்தனை குருக்கள் என்பதை நாம் கவனத்தில் கொள்ளல் வேண்டும். அதேபோன்று 'தாரமும் குருவும் தலைவிதிப்படி' என்பதில் தாரம் ஒன்று, குரு ஒன்று என்பது வெளிப்படையானதே.
இதிலிருந்து ஒரு விஷயத்தை நாம் தெளிவாக அறிந்து கொள்ளலாம். அதாவது, நாம் பல ஆசிரியர்களைப் பெற்றுக்கொள்கிறோம் ஆனால் குரு, தாரத்தைப் போல் அமைய வேண்டியதாகின்றது என்பதே. இங்கு அமையவேண்டியது என்பது எமது தேடலின் அடிப்படையில் இடம்பெறுகின்றது என்பதாகும். இப்போது ஒரு ஆசிரியரின் செயற்பாடு என்ன என்பதைப் பார்ப்போம். ஒரு ஆசிரியர் தான் கற்றுக்கொண்ட அறிவை மாணவர்களுக்கு மாற்றம் செய்பவராவார். அதாவது, ஒரு தலைமுறையில் இருந்து இன்னொரு தலைமுறைக்கு அறிவை (Knowledge) மாற்றம் செய்பவர் ஆசிரியராவார்.
இவ்வாறு அறிவை மாற்றம் செய்யும் ஆசிரியர்கள் தமது அறிவைப் பாடசாலை மாணவர்களுக்கு மாற்றம் செய்பவர்கள் மட்டுமல்ல, கொள்கைகள், கோட்பாடுகள், தத்துவங்கள் என முன்னோர்கள் கூறியவற்றைக் கற்றுப் பெற்ற அறிவைப் பிறருக்கு மாற்றம் செய்பவர்களும் ஆசிரியர்களே. இதே போன்றே கலைகளிலும் தாம் கற்றுக் கொண்ட அறிவை இன்னொருவருக்கு மாற்றும் போது அவரும் ஆசிரியராகின்றார். அப்படியாயின் குரு என்பவர் யார்?
குரு என்பவர் ஒரு தலைமுறையில் இருந்து இன்னொரு தலைமுறைக்கு புரிந்துகொள்ளுதலைக் (understanding) கொடுப்பவராவார். இங்கே அறிவுப்பரிமாற்றம் இடம் பெறுவதில்லை. அறிவுப்பரிமாற்றமானது மனம் சார்ந்தது. ஆனால் குருவால் கொடுக்கப்படும் புரிந்துகொள்ளல் என்பது உள்ளுணர்வு சார்ந்ததோடு ஒவ்வொருவருக்கும் பிரத்தியேகமானதாயும், தனித்துவமானதாயும், வார்த்தைகளின் விளக்கங்களுக்கு அப்பாற்பட்டதாயும் அமையும்.
எனவே ஒரு தலைமுறையிலிருந்து இன்னொரு தலைமுறைக்கு அறிவை மாற்றம் செய்பவர் ஆசிரியர், ஒரு தலைமுறையிலிருந்து இன்னொரு தலைமுறைக்கு புரிந்து கொள்ளலைக் கொடுப்பவர் குரு.
எமக்குக் கிடைப்பது அறிவு சார்ந்ததா அல்லது உள்ளுணர்வு சார்ந்ததா என்பதன் மூலம் கொடுப்பவர் ஆசிரியரா அல்லது குருவா என்பதைத் தீர்மானிக்கலாம். சரி, இனி அடுத்த கேள்விக்கு செல்வோம்.
தத்தாத்ரேயர் எனும் அவதூதர் காட்டில் சுற்றிக் கொண்டிருந்த போது, ஒரு நாட்டின் மன்னனைச் சந்தித்தார். தத்தாத்ரேயர் மிக மகிழ்ச்சியாக இருந்ததைக்கண்ட அரசன், அவரது மகிழ்ச்சிக்கான காரணத்தையும், அவரது குரு யார்? என்பதையும் கேட்டான்.
"எனக்கு 24 குருமார்கள் இருக்கின்றனர்...' என்றார் தத்தாத்ரேயர்.
இந்தப் பதிலைக் கேட்டு ஆச்சரியப்பட்ட நாட்டின் அரசன், "சுவாமி! ஒருவருக்கு ஒரு குரு தானே இருக்க முடியும்? தங்கள் பதில் வித்தியாசமாக உள்ளதே...' என்றான். அவனிடம், "பஞ்சபூதங்களான ஆகாயம், நீர், நிலம், நெருப்பு, காற்று, சந்திரன், புறா, மலைப்பாம்பு, கடல், விட்டில்பூச்சி, வண்டு, தேனீ, குளவி, சிலந்தி, யானை, மான், மீன், பருந்து, பாம்பு ஆகியவையும், நாட்டியக்காரி பிங்களா, ஒரு குழந்தை, ஒரு பணிப்பெண், அம்பு தயாரிப்பவன், சூரியன் ஆகியோரும் என் குருக்கள் ஆவர்...' என்றார் தத்தாத்ரேயர்.
மன்னன் ஏதும் புரியாமல் நின்றதைக் கண்ட தத்தாத்ரேயர் இதற்கு விளக்கமளித்தார்...
"மன்னா! பொறுமையைப் பூமியிடம் கற்றேன்;
தூய்மையைத் தண்ணீரிடம் தெரிந்து கொண்டேன்.
பலருடன் பழகினாலும், பட்டும், படாமல் இருக்க வேண்டும் என்பதைக் காற்றிடம் படித்தேன்.
எதிலும் பிரகாசிக்க வேண்டும் என்பதை தீ (நெருப்பு)உணர்த்தியது;
பரந்து விரிந்த எல்லையற்ற மனம் வேண்டும் என்பதை ஆகாயம் - தெரிவித்தது.
"ஒரே சூரியன் இருந்தாலும் பல குடங்களில் உள்ள தண்ணீரில் பிரதிபலிப்பது போல மெய்ப்பொருள் ஒன்றாக இருந்தாலும் மனம் பலவாறாக சிந்திப்பதை உணர்ந்தேன்.
"வேடன் ஒருவன் புறாக்குஞ்சுகளைப் பிடித்தான். அவற்றின் மீது அன்பு கொண்ட தாய்ப்புறா தானும் வலியச் சென்று வலையில் சிக்கியது. இதில் இருந்து பாசமே துன்பத்திற்குக் காரணம் என்பதை உணர்ந்தேன்.
"எங்கும் அலையாமல் தன்னைத்தேடி வரும் உணவைப் பிடித்துக் கொள்வது போல, கிடைப்பதை உண்டு பிழைக்க வேண்டும் என்பதை மலைப்பாம்பிடம் கற்றேன்.
பல்லாயிரம் நதிகளை ஏற்றுக்கொள்ளும் கடல் போல, எவ்வளவு துன்பம் வந்தாலும் ஏற்கும் பக்குவத்தை கடலிடம் படித்தேன்.
பார்வையைச் சிதற விடாமல் ஒரே இடத்தில் மனதைச் செலுத்துவதை விட்டில்பூச்சி கற்றுத் தந்தது.
"எல்லாவற்றையும் மறந்து மகிழ்ச்சியாயிருப்பதைத் தாயிடம் பால் குடிக்கும் குழந்தையிடம் கற்றேன்.
பணிப்பெண் ஒருத்தி அரிசி புடைக்கும்போது வளையல்கள் உரசி ஒலி எழுப்பின; இரண்டு வளையல்களில் ஒன்றை அவள் கழற்றியதும், ஒலி அடங்கியது. இதில் இருந்து இரண்டு பேர் இருந்தாலும் தேவையற்ற விவாதம் ஏற்படும் என்பதைப் புரிந்து கொண்டு, தனிமையே சிறந்ததென்ற முடிவுக்கு வந்தேன்.
"பிங்களா என்ற நாட்டியக்காரி ஏற்கனவே பலரிடம் வருமானம் பார்த்தபின், இன்னும் யாராவது வரமாட்டார்களா எனக் காத்திருந்தாள். யாரும் வராததால், கிடைத்தது போதும் என்று உறங்கி விட்டாள். இதில் இருந்து ஆசையை விட்டால் எல்லாமே திருப்தியாகும் என்பதைப் புரிந்து கொண்டேன்.
"புற்களால் குழிக்குள் மாட்டிக்கொண்ட பெண் யானையை பார்த்த ஆண் யானை, அதன் மேல் ஆசை கொண்டு அதுவும் வீழ்ந்தது. இதில் இருந்து, பெண்ணாசையும் துன்பத்துக்கு காரணம் என்பதை உணர்ந்தேன்...' என்று ஒவ்வொரு பொருளுக்கும் விளக்கமளித்தார்.
இதைக் கேட்ட அரசன், பூரண அமைதி அடைந்தான்.. தத்தாத்ரேயர் இயற்கையிடம் கற்ற இந்த உயர்ந்த பாடம் நம் எல்லோருக்குமே பொருந்தும் தானே..
தத்தாத்ரேயரின் ”அவதூதகீதை” ரமணர், ராமகிருஸ்னபரமஹம்சர் போன்ற பல மகான்களால் சீடர்களுக்குப் பரிந்துரைக்கப்பட்ட அத்வைத கிரந்தமாகும். நல்ல சீடனுக்கு எல்லாமே குரு தான்... உத்தவ கீதையிலிருந்து ஒரு குரு சமர்ப்பணம்
ஸ்ரீ தத்தாத்ரேயர் அருளிய இயற்கை தந்த 24 குருமார்கள்
கிருஷ்ணாவதாரம் முடியும்தருவாயில் உத்தவரும், கிருஷ்ணரும் உரையாடியது உத்தவகீதை ஆகிறது. இதில் கிருஷ்ணர் தனது அவதாரம் முடியும் காலம் வந்ததை உதவருக்குச் சொன்னபோது, கிருஷ்ணர் இல்லாத உலகில் தான் மட்டும் இருந்து "நான்", "என்னுடைய" என்ற சபல புத்தியை எப்படி வெல்வது என்று உத்தவர் தேம்புகிறார். அதற்கு கிருஷ்ணர் ஒரு அவதூதர் (தத்தாத்ரேயர்) இயற்கையே தனது குரு என்று 24 குருமார்களைக் காட்டியதை இங்கு விளக்குகிறார்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...