Monday, October 15, 2012

அலர்ஜி அலர்ஜி என்று அல்லல்படுபவரா?

சிலருக்குக் கத்தரிக்காய் சாப்பிட்டால் ஒப்புக்காது. சிலருக்கு தூசு ஆகாது. இப்படி நம்முடைய உடம்பு ஒரு சில விஷயங்களை ஏற்றுக்கொள்ளாது. இந்த ஒவ்வாமையைத்தான் அலர்ஜி என்கிறோம். ஒருத்தருக்கு உடம்பு ஏற்றுக்கொள்கிற விஷயம் இன்னொருத்தருக்கு அலர்ஜியாக இருக்கலாம். இது அவரவர் உடம்பைப் பொறுத்தது. 

பலருக்கு மருந்தாக இருக்கிற `பென் சிலின்' சிலருக்கு விஷமாகவே இருக்கிறது. பென்சிலின் ஊசி போடுவதற்கு முன்பு அலர்ஜி டெஸ்ட்டாக ஒரு `குட்டி ஊசி' போட்ட செக் செய்வதைக் கவனித்திருப்பீர்கள். சரி, அலர்ஜிக்கான அறிகுறிகள் என்ன? தொடர்ச்சியாகத் தும்மல் போடுவார்கள். மூக்கில் நீர் கொட்டும். நமைச்சல், மூக்கடைப்பு போன்றவை உண்டாகி, அதனால் வாசனை அறியும் திறன் குறையும். தலை வலிக்கும்.
 
இந்த அலர்ஜியானது நுனிமூக்கோடு நிற்காமல், சைனஸ் பிரச்சினை. காதில் சீழ் வழிவது, தொண்டைப்புண் என்று மற்ற பிரச்சினைகளுக்கும் வழிவகுக்கும். மூக்கில் அலர்ஜி உண்டானால் மூக்கை கசக்கிக்கொண்டே இருப்பார்கள். ஒரு சிலர் மூக்கை உள்ளங்கையால் அழுத்தித் தேய்ப்பார்கள். இதை நாங்கள் செல்லமாக `அலர்ஜி சல்யூட்' என்று சொல்வோம். 

அப்பாவுக்கோ, அம்மாவுக்கோ அலர்ஜி, எக்ஸிமா என்கிற தோல் வியாதி, ஆஸ்துமா இப்படி ஏதாவது இருந்தால் அது குழந்தைக்கு அலர்ஜியாக வர வாய்ப்பு இருக்கிறது. இது குழந்தைப் பருவத்தில் தோல் சம்பந்தப்பட்ட அலர்ஜியாகவும் இளம் பருவத்தில் மூக்கு சம்பந்தப்பட்ட அலர்ஜியாகவும் வயதான பருவத்தில் ஆஸ்துமாவாகவும் வர வாய்ப்புகள் உண்டு. 

சிலருக்கு ஏ.சி. அறைக்குள் நுழைந்தால் ஒப்புக்காது. தும்மல் போட்டு ரகளை பண்ணி விடுவார்கள். ஈரத்தன்மை கூட சிலருக்கு அலர்ஜியை ஏற்படுத்துவது உண்டு. குறிப்பிட வேண்டிய இன்னொரு காரணம்... தூசு! வீட்டில் ஒட்டடை அடிக்கும்போதோ, பழைய பேப்பர்களைக் கையாளும் போதோ சிலருக்குத் தும்மல் வருவதைப் பார்த்திருப்பீர்கள். 

வீட்டில் வளர்க்கப்படுகிற நாய், பூனை, ஆடு, மாடு, குதிரை, கோழி, வாத்து என மிருகங்கள், பறவைகள் மூலமாகவும் சிலருக்கு அலர்ஜி ஏற்படுகிறது. அலர்ஜி வருவதற்கான முக்கியமான வில்லன்களை உங்களுக் குத் தெரியுமா? மைட்ஸ்! நம்ம வீட்டு மெத்தை, தலையணைகளிலும் கார்பெட்களிலும் இவர்கள் கோடிக்கணக்கில் இருக்கிறார்கள். 

கண்ணுக்குத் தெரியாத மிகமிக நுண்ணியபூச்சிகள் இவை. துல்லியமாகச் சுத்தம் செய்த தலையணை ஒன்றில் சுமார் நாற்பதாயிரம் `மைட்ஸ்' இருக்குமாம்! நம்முடைய தோலில் இருக்கும் இறந்த செல்கள்தான் இவற்றுக்குத் தீனி! இதன் மூலம்தான் பலருக்கு அலர்ஜி உண்டாகிறது. 

நான் ஆரம்பத்தில் சொன்னதுபோல, நாம் சாப்பிடுகிற ஒரு சில உணவுகளாலும் அலர்ஜி ஏற்படும். இப்படித்தான், என்னிடம் ஒரு பேஷண்ட் வந்தார். காதில் சீழ் வழிவதாகச் சொன்னார். பலவித சிகிச்சைகள் செய்தும் குணமாகவில்லை. ஆபரேஷன் செய்வது என முடிவு செய்தேன். கடைசி கட்டத்தில் பேஷண்ட் திடீரென்று தொடர்ச்சியாகத் தும்மல்போட ஆரம்பித்தார். விசாரித்தபோது, சீஸ்... அதாவது பாலாடைக் கட்டி சாப்பிட்டதாகவும், அதனால் தான் தும்மல் என்றும்... பல காலமாக இதைச் சாப்பிடும் போதெல்லாம் தும்மல் வரும் என்றும் சொன்னார். 

ஆரம்பத்திலேயே நாங்கள் உணவு அலர்ஜி பற்றிக் கேட்டிருந்தோம். அப்போது, `அப்படி எதுவும் இல்லை' என்று அவர் சொல்லி விட்டதால் தான் அவ்வளவு குழப்பம்! அந்த பேஷண்ட்டுக்கு ஆபரேஷன் செய் யாமல் அலர்ஜிக்கான ட்ரீட்மெண்ட் மட்டும் கொடுத்து, சீஸ் சாப்பிடுவதைத் தவிர்க்கச் சொல்லி அனுப்பினோம். இங்கிலாந்தில் வித்தியாசமான அலர்ஜி இருக்கிறது. அங்கேயெல்லாம் ஜுன் மாதத்திலிருந்து செப்டம்பர்வரை பூக்கள் பூக்கிற சமயம். அதிக அளவில் மதுரந்தச்சேர்க்கை நடக்கும் என்பதால் காற்றிலேயே மகரந்தம் கலந்திருக்கும். அதை சுவாசிக்கும் பலருக்கு அலர்ஜி ஏற்படுகிறது. இந்த மகரந்த அலர்ஜியை `ஹே ஃபீவர்' என்கிறார்கள். 

மே மாதம் வந்தால் போதும்... உஷாராக இந்த `ஹே ஃபீவரு'க்கான தடுப்பு ஊசிகளை அவர்கள் போட்டுக் கொண்டு விடுவார்கள்! இந்த மகரந்த அலர்ஜியெல்லாம் ஒரு சீஸனில்தான் வரும். இந்த மாதிரி அலர்ஜியை சீஸனல் அலர்ஜி என்றும், எப்போதும் இருக்கிற அலர்ஜியை பெரினியல் அலர்ஜி என்றும் சொல்வார்கள். 

அலர்ஜி எதனால் ஏற்படுகிறது என்பதைச் சுலபமாகக் கண்டு பிடிக்க முடியும். டைரி ஒன்றை வைத்துக்கொண்டு, தும்மல், அரிப்பு, போன்ற அலர்ஜி அறிகுறிகள் ஏற்படும்போதெல்லாம் என்ன சாப்பிட்டீர்கள். அப்போதைய சூழ்நிலை, இருந்த இடம் போன்ற விவரங்களை எழுதி வரலாம். 

ஐந்து அல்லது ஆறு தடவை இப்படி எழுதிய குறிப்பை வைத்து, அதில் பொதுவாக உள்ள அம்சங்களை அலர்ஜிக்கான பொருள்களாக (அலர்ஜன்) தீர்மானிக்கலாம். அலர்ஜி பற்றி மட்டுமே கவனம் செலுத்துகிற `அலர்ஜி கிளினிக்'குகள் இப்போது நிறைய வந்து விட்டன. இவர்களிடம் சென்றால் நமக்கு அலர்ஜி டெஸ்ட்... அதாவது அலர்ஜி உண்டாக்குகிற `அலர்ஜன்'களை பட்டியல் போட்டு வைத்திருக்கிறார்கள். 

பேஷண்ட்டோடு  பேசி ஒரு குறிப்பிட்ட அலர்ஜன்களை மட்டும் அவர் கையில் `டெஸ்ட்டிங் டோஸ்' ஆக ஊசி மூலம் செலுத்துவார்கள். அந்த இடத்தில் வீக்கம், அரிப்பு, சிவந்து விடுவது போன்ற ரியாக்ஷன் களை வைத்துச் சரியான அலர்ஜனைக் கண்டுபிடிக்கிறார்கள். 
இந்த பேஷண்ட்டுக்கு அலர்ஜியை ஏற்படுத்துகிற அந்தப் பொருளையே தான் மருந்தாகத் தருகிறார்கள். இதை `இம்யூனோ தெரபி' என்பார்கள். அதாவது அலர்ஜியைத் தரக்கூடிய அந்தப் பொருளின் பவரை நூறாயிரம் மடங்கு குறைத்து அதிலிருந்து 0.1 மில்லியை வாரம் இரண்டு தடவை பேஷண்ட் உடம்பில் ஏற்றுகிறார்கள்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...