Friday, September 7, 2012

வெளிப்படையான பாராட்டுதல் -

அன்றாட வாழ்வில் நாம் எவ்வளவோ பேருடன் தொடர்ந்து
பழகிக் கொண்டிருக்கிறோம். பெற்றோர், மனைவி,
குழந்தைகள், மற்ற உறவினர்கள், அலுவலகத்தில்,
வெளியில் – நண்பர்கள், என்று
பலதரப்பட்ட மக்கள் ! அவர்களில் பலரையும் நாம்
அவர்களின் பலவித குண விசேஷங்களுக்காக விரும்புகிறோம்.
ஆனால், எவ்வளவு பேரிடம் அதைப்பற்றி சொல்லி
இருப்போம் ?
பல வருடங்களுக்கு  முன் ஆங்கிலத்தில்
ஒரு கட்டுரை படித்தேன்.
நினைவில் இருப்பதை வைத்துக்கொண்டு அதை என் வழியில்
இங்கு தமிழில் தருகிறேன்.
————–
ஒரு டீச்சர் தன் வகுப்பு மாணவர்களிடம் வெற்றுத் தாள்களைக்
கொடுத்து, ஒவ்வொருவரையும், வகுப்பில் உள்ள மற்ற
மாணவர்கள் அனைவரின் பெயரையும் அதில் எழுதச் சொன்னார் -
ஒரு பெயருக்கும், அடுத்த பெயருக்கும் இடையே சிறிது
இடைவெளியுடன் !
மாணவர்கள் எழுதி முடித்தவுடன், டீச்சர் சொல்கிறார் -
“ஒவ்வொரு பெயருக்கும்  எதிரே, அவர்களிடம் நீங்கள்
காணும் – உங்களுக்கு பிடித்த நல்ல விஷயம் ஒன்றைப்பற்றி
எழுதுங்கள்.”
மாணவர்கள் ஒவ்வொருவரும், யோசித்து, தங்களுக்கு
தோன்றியதை எல்லாம் எழுதிக் கொடுத்தனர்.
வாரக்கடைசி - டீச்சர் ஒவ்வொரு மாணவனின் பெயரிலும்
ஒரு தாள் தயார் செய்து, அதில்  மற்ற மாணவர்கள்
அவனைப்பற்றி எழுதியிருந்த உயர்வான வார்த்தைகளை
வரிசையாகத் தொகுத்து எழுதி கீழே தன் கையெழுத்தையும்
போட்டு, மாணவர்கள் ஒவ்வொருவராக அழைத்து அவர்களின்
பெயரிட்ட தாளைக் கொடுத்தார். மாணவர்கள் அவரவர்
இடத்திற்கு சென்று அமர்ந்து படிக்கிறார்கள்.
10 நிமிடங்கள் – வகுப்பறையே சந்தோஷக்கடலில்
மிதக்கிறது.
“நான் இவ்வளவு சிறப்பானவனா – என்னைப் பற்றி
மற்றவர்கள் இவ்வளவு நல்ல அபிப்பிராயம்
வைத்திருக்கிறார்களா ?” – அத்தனை மாணவர்களும்
ஆனந்தத்தில் திளைக்கிறார்கள். அந்த பட்டியலில்
குறிப்பிடப்பட்டுள்ள குணாதிசயங்களை மேலும் மேலும்
வளர்த்துக் கொள்ள முயற்சி செய்கிறார்கள். தன்னைப்பற்றி
உயர்வாகச் சொன்னதற்காக, ஒவ்வொரு மாணவனுக்கும்,
சக மாணவர்கள் மேல் அன்பு அதிகரிக்கிறது.
பல வருடங்கள் கழிகின்றன. அந்த வகுப்பில் படித்த
மாணவன் ஒருவன் வளர்ந்த பிறகு ராணுவத்தில் சேர்கிறான்.
பிறகு போர் ஒன்றில் வீர சாகசம் புரிந்து,
மரணம் அடைகிறான். அவன் உடல் ராணுவ மரியாதையுடன்
சொந்த ஊர் கொண்டு  வரப்படுகிறது. இறுதிச் சடங்கில்
கலந்து கொள்ள அந்த டீச்சரும் செல்கிறார்.
மிடுக்கான ராணுவ உடையில் -
நாட்டின் தேசியக்கொடு போர்த்தப்பட்டு,
சவப்பெட்டியிலும்  கம்பீரத்துடன் காணப்பட்ட அந்த
மாணவனைக் கண்டு பெருமிதத்துடன் கண் கலங்குகிறார்.
ஒவ்வொருவராக வரிசையில் வந்து இறுதி மரியாதை
செலுத்துகின்றனர். டீச்சர் கடைசியாகச் செல்கிறார்.
பின்னர், பக்கத்திலேயே நிற்கிறார். உடலைத் தாங்கி
வந்த, ராணுவ சக வீரர்கள் அருகிலேயே நின்றிருந்தனர்.
ஒரு வீரர் கேட்கிறார் -”நீங்கள் சரவணனின் 10ஆம் வகுப்பு
டீச்சரா ?” என்று. டீச்சர் ஆம் என்று தலையசைக்கிறார்.
பின்னர் அந்த ராணுவ வீரன் சொல்கிறான் “டீச்சர் -
எனக்கு உங்களைத் தெரியும். சரவணன் உங்களைப்பற்றி
எப்போதும் சொல்லிக்கொண்டே இருப்பான்”
சடங்குகள் முடிந்த பின்னர், சரவணனின் பழைய வகுப்புத்
தோழர்கள் அங்கு டீச்சருடன் ஒன்றாக நின்றிருந்தனர். அங்கு
சரவணனின் தாயும் தந்தையும் வருகின்றனர்.
அந்த சோகத்திலும் தந்தை டீச்சரிடம்  கூறுகிறார் -
“டீச்சர் நான் உங்களுக்கு ஒன்றைக் காட்ட வேண்டும்.
இது சரவணன் போரில் கொல்லப்பட்டபோது, அவனது
பாக்கெட்டிலிருந்து இறுதியாக கண்டெடுக்கப்பட்டது “.
அவர் காட்டியது, பெரிய பர்ஸ்  ஒன்றில் பத்திரமாக -
பல முறை மடிக்கப்பட்டு,
மடிப்புகள் எல்லாம் டேப் போட்டு ஒட்டப்பட்டு பத்திரமாக
பாதுகாக்கப்பட்ட  ஒரு தாள். ஆமாம் – பல வருடங்களுக்கு
முன்னர் அந்த டீச்சர் சரவணனைப் பற்றிய நல்ல
குணங்களை வரிசைப்படுத்தி தொகுத்து எழுதிக் கொடுத்திருந்த
அதே  காகிதம் தான் !
கண்ணீர்ப் பெருக்குடன் சரவணனின் தாய் கூறுகிறார் -
ரொம்ப நன்றி டீச்சர் – உங்கள் கடிதத்தை அவன்
உயிரையும்விட மேலாக விரும்பினான். இத்தனை வருடங்களும்
அதை அவ்வளவு பத்திரமாக பாதுகாத்து வந்தான்.
அவனுக்கு வாழ்க்கையில் மிகுந்த தன்னம்பிக்கையும், பிடிப்பும்  
ஏற்பட இந்த காகிதம் தான் உதவியது.”
டீச்சரும் மற்ற மாணவர்களும் சரவணனை நினைத்து
கதறி அழுகின்றனர்.
—————–
இந்த வாழ்க்கைப் பாதை  கரடு முரடானது.
எங்கே துவங்கும் – எப்படி இருக்கும் -எப்போது,
எப்படி முடியும் ?
யாருக்கும் தெரியாது.
இருக்கின்ற காலத்தில் – நம்முடன் இருப்பவர்களை
அவர்களின் நல்ல இயல்புகளுக்காக நேசிப்போம்.
நல்லதும் கெட்டதும் கலந்தது தான் மனித குணம்.
ஒருவர் விரும்பத்தகாத குணத்தைக் கொண்டிருந்தால்,
நாம் அதை விரும்பவில்லை என்பதை எரிச்சல் காரணமாக,
அநேகமாக உடனேயே வெளிப்படுத்தி விடுகிறோம்.
ஆனால், ஒருவரிடம் உள்ள நற்பண்புகளை, குணங்களை -
அநேகமாக – நாம் வெளிப்படையாக பாராட்டத் தவறி
விடுகிறோம்.
கூடாது என்றல்ல. அதன் அவசியம் நமக்குத் தெரிவதில்லை.
சாம்பாரில் சற்று உப்பு அதிகமாக இருந்தால் கூட உடனடியாக
மனைவியிடம் அதைக்கூறும் கணவர்கள், அந்த சமையல்
நன்றாக இருக்கும்போது – பாராட்டுவது இல்லை !
பாராட்ட வேண்டும் என்று தோன்றுவதில்லை !
இந்த உலகில் அனைத்து உயிர்களுமே,
பாராட்டுதலை எதிர்பார்க்கிறது.கிடைத்தால் சந்தோஷப்படுகிறது !
நீங்களோ, நானோ -
யாருமே அதற்கு விதிவிலக்கல்ல.
வெளிப்படையான பாராட்டுதல் -
அவர்களிடையே  தன்னம்பிக்கையை கொடுக்கும்.
நல்ல குணங்கள் மேலும் மேம்பட உதவும்.
தோழமை உணர்வு அதிகப்பட உதவும்.
மனிதர்களை மேலும் நல்லவர்களாக  
உருவாக்க இது  உதவும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...