Wednesday, September 26, 2012

கிரானைட் புதையல்..! இதுவரை அறிந்திடாத தகவல்கள்

தற்போது கிரானைட் குவாரி முறைகேடு தொடர்பான செய்திகள் தினமும் வந்து கொண்டிருக்கின்றன. கிரானைட் என்றால் என்ன, அது எவ்வாறு உருவாகிறது என்பதை சற்று விரிவாக பார்க்கலாம்.

கிரானைட் உருவாகும் விதம்

புவியின் மேல் ஓட்டில், இயற்கையாக உருவாகும் மிக உறுதியான கற்பாறை தான் கிரானைட். புவியின் அடியில் உள்ள ‘மாக்மா’ என்ற கற்குழம்பு குளிர்வடைந்து ப்ளுட்டோனிக் பாறை உருவாகிறது. இதுவே நாளடைவில் கிரானைட்டாக மாறுகிறது. பூமிக்குள் 1.5 கி.மீ., முதல் 50 கி.மீ., ஆழத்துக்குள் இம்மாற்றம் நடக்கிறது. இப்பாறைகள், மிக கடினமாகவும், பளபளப்பாகவும் இருக்கும். கிடைக்கும் இடங்களை பொறுத்து கிரானைட்டின் தன்மை அமைகிறது. இதை வைத்து, தரம் பிரிக்கப்பட்டு, விழி நிர்ணயிக்கப்படுகிறது. கிரானைட்டில் குவார்ட்ஸ், பெல்ட்ஸ்பார், மைக்கா ஆகிய தாதுக்கள் உள்ளன.
 
கிரானைட் கற்களின் பண்புகள்

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன், பூமிக்கு அடியில் இருந்த எரிமலைகள், பாறைகளை உருக்கி திரவ நிலையில் குழம்புகளாக மாற்றின.

நாளடைவில் இந்த குழம்பு, குளிர்ந்து கடினத்தன்மையுடைய எரிமலை பாறைகளாக மாறின.

இந்த பாறைகள் பல வகைப்படும். அதில் ஒன்று தான் ‘கிரானைட்’. படிகங்களாலும், களிமண் பாறைகளாலும் இந்த கிரானைட்,தனித்தன்மை, வடிவம் பெற்றன. மைக்கா மற்றும் சில தாதுக்கள் இதில் உள்ளன. இந்த தாதுக்களை பொறுத்து, வலிமையையும், நீடித்து உழைக்கும் தன்மையும் பெற்று, மற்றவற்றிலிருந்து தனித்துவம் பெறுகின்றன.

உயர்தர ‘பாலிஷ்’ செய்த பின்னும், கிரானைடின் சில இடங்கள் மங்கலாக இருக்கும். பார்ப்பதற்கு ‘வாட்டர் மார்க்’ போல் தெரியும். இதை மந்தமான புள்ளிகள் என்பர்.

கிரானைட்டின் மற்றொரு பண்பு, குழி விழுதல், கிரானைடில் உள்ள சிறிய தாதுப் பொருட்கள், ‘பாலிஷ்’ செய்யும்போதும், வேறு சில காரணங்களாலும் நீங்கி விடும். அந்த இடத்தில் சிறு குழி விழும். இதையும் சரி செய்யும் தொழில்நுட்பம் தற்போது உள்ளன.

பாறை குழம்புகள், குளிர்ந்து தனி கல்லாக மாறும் போது, அதில் சில துவாரங்கள் இயற்கையாக உருவாகின்றன. இந்த துவாரங்கள், கிரானைடில் இருக்கும். ஆனால் நாளடைவில் இந்த துவாரங்கள், பெரிதாவதோ, சுருங்குவதோ கிடையாது.

கிரானைட் தயாராவது எப்படி

கிரானைட் பாறைகள், மலைகளை குடைந்து, வெட்டி அல்லது வெடி வைத்து தகர்த்து எறியப்படுகின்றன. முதலில் கிரானைட் கல்லின அளவு திட்டமிடப்படுகிறது. அப்போது தான், வெட்டும்போது கற்கள் வீணாவது தவிர்க்கப்படும்.

வெட்டி எடுத்த கிரானைட் கற்கள், தேவையான அளவிற்கு மாற்றப்படுகின்றன. ‘வாட்டர் ஜெட் கட்டிங்’ என்ற தொழில்நுட்பம் வெட்டுவதற்கு பயன்படுகின்றது.

சரியான அளவில் வெட்டி எடுக்கப்பட்ட கிரானைட்டின் ஓரங்கள், பக்கவாட்டுப்பகுதிகள் சரி செய்யப்பட்டு செப்பனிடப்படும். இது கல் குவாரியிலேயே நடக்கும். பின் மொத்தமாக இருக்கும் கிரானைட்டுகள் தேவையான எண்ணிக்கையில், சரியான அளவில் ‘கேலிப்ரேஷன்’ முறையில் சிறு சிறு துண்டுகளாக்கப்படும்.

கற்கள் பாலிஷ் செய்யப்படும். பின் கம்ப்யூட்டர் தொழில்நுட்பத்துடன் கூடிய இயந்திரத்தின் உதவியுடன், கற்களின் பரிமாணங்கள் சரிசெய்யப்படும். இதை ‘ஆஷ்லர்’ முறை என்பர். இதன் பின் கற்கள் விற்பனைக்கு தயாராகும்.

கிரானைட்டில் இருப்பது என்ன

கிரானைட் பாறைகளில், களிமண் பாறைத் தனிமங்கள், படிகக்கல், கருப்பு அப்ரகம் (பயோடைட்) ஆகியவை இதன் முதன்மை உட்பொருட்கள்.

களிமண் பாறை தனிமங்கள், 65 முதல் 90 சதவீதமும், படிகக்கல் 10 முதல் 15 சதவீதமும் இருக்கும். இது தவிர, வேறு சில வேதிப்போருட்களும் இதில் உள்ளன.இவற்றை 2000 க்கும் அதிகமான ஆய்வுகள் மேற்கொண்டு கண்டுபிடித்தனர்.

இதில் உள்ள தனிமங்கள்:

சிலிகான் டை ஆக்சைடு – 72.04 %

அலுமினியம் ஆக்சைடு – 14.42 %

பொட்டாசியம் ஆக்சைடு – 4.12 %

சோடியம் ஆக்சைடு – 3.69 %

கால்சியம் ஆக்சைடு – 1.82 %

இரும்பு (II) ஆக்சைடு – 1.68 %

இரும்பு (III) ஆக்சைடு – 1.22 %

மக்னீசியம் ஆக்சைடு – 0.71 %

டைட்டானியம் டை ஆக்சைடு – 0.30 %

பாஸ்பரஸ் பென்டாக்சைடு – 0.12 %

மாங்கனீஸ் (II) ஆக்சைடு – 0.05 %

தண்ணீர் – 0.03 %
காலத்தால் அழியாத பல நினைவுச்சின்னங்கள், கிரானைட் கற்களால் கட்டப்பட்டுள்ளன. எகிப்து பிரமிடுகள், கிரானைட் கற்களால் ஆனவை. பல்லவ மன்னர்கள், மகாபலிபுரத்தில் உருவாக்கிய சிற்பங்கள் ஒரு வகை கிரானைட் கற்கள் தான். 11 ம் நூற்றாண்டின் தென்னிந்திய அரசர்கள், கிரானைட்டின் பயனை அறிந்திருந்தனர். ராஜ ராஜ சோழன், கிரானைட் கற்களை பயன்படுத்தி கோவில்களில், கலை நயம மிக்க சிற்பங்களை அமைத்தார்.
பிரிட்டனில் 1832 ம் ஆண்டு, முதன்முதலில் கிரானைட் கற்கள், பாலிஷ் செய்து பயன்படுத்தப்பட்டன. இக்கால கட்டத்தில்தான், கிரானைட் கற்களின் உபயோகம், கவுரவத்தின் அடையாளமாக கருதப்பட்டது.

நவீன காலத்தில், நினைவு சின்னங்கள் அமைக்கவும், சிற்பங்கள் வடிக்கவும் கிரனைட் கற்கள் பயன்படுகின்றன. கட்டடங்களில் அதிக அளவு கிரானைட் உபயோகம் இருக்கிறது. ஸ்காட்லாந்தில் உள்ள ‘அபெர்தீன்’ நகரில் கிரானைட் கற்களை பயன்படுத்தி அதிக கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. இதனால் இந்த நகரம் ‘கிரானைட் சிட்டி’ என்று அழைக்கப்படுகிறது. அமெரிக்காவில் கிரானைட் கற்களை பயன்படுத்தி ரயில் பாதையே அமைக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...