Sunday, July 23, 2017

எலுமிச்சம் பழ தீபம் ஏற்றலாமா ?

எலுமிச்சம்பழ தீபம் ஏற்றுவது நல்லதா ?
அன்பானவர்களே, வணக்கம்.
சமீபகாலமாக கோவில்களில் தீபங்கள் ஏற்றுவது அதிகரித்துள்ளது காண்கிறோம்.
குறிப்பாக .. ஸ்ரீ பைரவருக்கு தேங்காய் தீபம் , ஸ்ரீ ஹனுமனுக்கு வாழைப்பழத்திலும், ஸ்ரீ துர்க்கைக்கு எலுமிச்சம்பழத்திலும் தீபங்கள் ஏற்றப்படுகின்றன. மேலும் சாம்பல் பூசணியிலும் தீபங்கள் ஏற்றப்படுகின்றன.
கோவில்களிலும், இல்லங்களிலும் இவ்வகையில் தீபங்கள் ஏற்றுவது நல்லதா ?
நற்பலன்களை தருமா ? தீப எண்ணை என்று விற்பனை செய்யப்படும் எண்ணையை பயன்படுத்தலாமா ? அல்லது விளக்கெண்ணையை தீபம் ஏற்ற பயன்படுத்தலாமா ? தீபம் ஏற்ற எந்த எண்ணை சிறந்தது ?
அப்படி ஏற்றப்படும் தீபம் எந்த விளக்கினில் ஏற்றலாம்? பித்தளை விளக்கு, பொன் விளக்கு, சில்வர் விளக்கு , வெண்கல விளக்கு, இரும்பு விளக்கு, மண் அகல்விளக்கு இதில் எதில் தீபம் ஏற்றுவது நல்லது ?
எத்தனை முகங்களில் தீபம் ஏற்றப்படவேண்டும் , எந்த திசையை நோக்கி தீபத்தின் முகம் இருப்பது நலம் , எந்த வகை திரிகளை தீபம் ஏற்றுவதற்கு உபயோகிக்கலாம்? வீடுகளிலும் , கோவில்களிலும் ஒரேமாதிரி தீப வழிபாடு செய்யலாமா? என்பது போன்ற கேள்விகளுக்கு பதில் காண்போம்.
சாஸ்திரப்படியும், ஒரு சில ஜோதிட க்ரந்தங்களிலும், பெரியோர்களின் வாய்மொழியின்படியும் விளக்கேற்றுவதை சிலவகைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
மேலும் தீப வழிபாடு என்பது ஆதிகாலம் முதலாக உள்ளதாக அறிகிறோம்.
அந்த காலம் முதல் இந்த காலம் வரையிலும் உள்ள ஜோதிடர்கள், தாங்கள் ஜாதக பலன்களை கூறும்போது “ தற்சமயம் இன்ன திசை நடப்பதால் இந்த ஸ்வாமிக்கு இந்த வகை தீபம் ஏற்றுங்கள் “ என்று கூறுவதுண்டு. இந்த முறைகள் வழி வழியாக தொடர்ந்து அதுவே ஒரு முறையாக ஆக்கப்பட்டு விட்டது .
வீட்டிலுள்ள வயது முதிர்ந்த பெரியோர்கள் (பெண்கள்), செவ்வாய் , வெள்ளிக்கிழமைகளில் வீட்டில் இந்த தீபம் ஏற்றுவது நல்லது என்று தங்களின் அனுபவ சாதக பலனை தனது குடும்ப பெண்களுக்கு சொல்லித்தந்து அதுவும் ஒரு வகையில் சம்பிரதாயமாக ஆகிவிட்டது.
ஆனால் இந்த வகையினால் தீபம் ஏற்றினால் பலன் உண்டா – இல்லையா ? அல்லது இதற்கென்று வேறு ஏதேனும் முறைகள் இருக்கின்றதா ? என்றால், உண்டு.
எந்த ஒரு செயலுக்கும் அதற்கென்று சில வழிமுறைகளை நமது சாஸ்திரமும் , ஜோதிட கிரந்தங்களும் சொல்லியிருக்கின்றன.
Image may contain: one or more people and indoor
மக்களின் வாழ்வை எண்ணி கவலையுற்ற தெய்வீக அருள்சக்தி பெற்ற மகான்கள் மக்களின் நலனுக்காக அருளிச் செய்த தீப வழிபாடு எனும் தெய்வ அனுகூல வழிபாடு இன்று கேலிக் கூத்தாகி எல்லா தெய்வங்களுக்கும் ஏதோ ஒரு தீபம் ஏற்றுவதை மக்கள் வழக்கமாக்கிக் கொண்டுள்ளார்கள் என்பதை காணும்போது மனம் சங்கடப்படுகிறது.
இதற்காக எழுந்ததுதான் இந்த கட்டுரை.
முதலில் தீபம் ஏற்றும் விளக்கினை பார்ப்போம்.
இறைவனுக்கு எல்லாமே அவனால் உருவாக்கப்பட்ட காரணத்தினால் பொன்னும், மண்ணும் ஒன்றே !!!!
ஆகவே பொன்னால் செய்த விளக்கேற்றினால் எந்த வகையான பலன்கள் சொல்லப்படுகின்றதோ அவை அனைத்தும் மண்ணாலான அகல்விளக்கினை ஏற்றி வைத்து வழிபட்டாலும் கிடைக்கும், பித்தளை , வெண்கலம் போன்றவையும் அப்படித்தான் .
செல்வ வசதிமிகுந்தவர்கள் , கோவிலில் அல்லது வீட்டில் விலை உயர்ந்த விளக்குகளை ஏற்றி வழிபடும்போது , வசதியற்ற ஏழைமக்களின் உள்ளம் “இறைவா, எங்களுக்கு விலை உயர்ந்த விளக்குகளால் உனக்கு தீபம் ஏற்றி வழிபட முடியாததால்தான் எங்களுக்கு உனதருள் கிடைக்கவில்லையா ?” என்றேங்கும் அல்லவா ? அதனால்தான் , எல்லா விளக்குகளையும் தனக்கான தீபவிளக்காக இறைவன் ஏற்று நமக்கு அருள்பாலித்தான் .
ஆனால்,
இரும்பு எனும் உலோகத்தினால் தீபம் ஏற்றுவது மட்டும் சில காரணங்களினால் அனைத்து வீடுகளிலும் , ஒரு சில கோவில்களிலும் தடை செய்யப்பட்டிருக்கின்றது.
ஏன் என்றால், இரும்பு ஸ்ரீ சனைச்வரரின் அம்சமாக திகழ்கின்றது. ஆகையால்,
தாந்த்ரீக வழிபாட்டிலும் , சில மாந்த்ரீக செயல்பாட்டின் போதும் இரும்பினால் ஆன விளக்கு பயன்படுத்தப்படுகின்றது. (சில காரணங்களுக்காக அந்த விபரம் தரப்படவில்லை).
சில்வர் எனும் உலோக விளக்கினைப் பற்றிய குறிப்புகள் ஏதும் இல்லை , ஆனால் காந்தம் அதனை ஈர்ப்பதால் அதனை இரும்பின் ஒரு கூறாகவே கருதுவதற்கு வாய்ப்புள்ளது , (வெண்ணிற இரும்பு?) மேலும் சில்வர் விளக்குகளை எந்த ஒரு காரியத்திலும் ஏற்றுவது உசிதமானதாக கருதுவதற்கு இல்லை , அது ஒரு அலங்கார பொருளாகவே கருதவேண்டும். (மேலும் சில்வரால் உருவாக்கப்பட்ட விளக்குகள் நீண்ட நேரம் எரியும் போது அவை அதிக சூடாகி (சூடு தாங்காமல்) வேறு சில தொல்லைகள் உருவாக வாய்ப்புள்ளது, ஜாக்கிரதை.).
ஆக, பொன் விளக்கு, பித்தளை விளக்கு, வெண்கல விளக்கு போன்றவைகள் தரும் அதே பலன்களை சற்றும் கூட்டாமல் , குறைக்காமல் மண்ணாலான விளக்கும் தரும்.
அனைத்து வீடுகளிலும் , ஒருசில கோவில்களிலும் இரும்பாலான விளக்குகளால் தீபம் ஏற்றுவது நல்லதல்ல . சில்வரால் ஆன விளக்குகள் அலங்கார பொருளே அன்றி தெய்வ வழிபாட்டிற்கு ஆகாது.
அடுத்து விளக்கின் முகங்கள்,
தீப விளக்கின் முகங்கள் என்பது தீபம் ஏற்றப்படும் திரிகளின் ஒளி ஜோதியைக் குறிக்கும் சொல்லாகும்.
அனைத்து இல்லங்களிலும், கோவில்களிலும் ஏகமுக தீபம் சிறந்ததாக கருதப் படுகிறது .
ஆனால், சில இல்லங்களில் இரண்டு மகா லக்ஷ்மி விளக்குகள் ஏற்றுவதுண்டு. அவை பெரும்பாலும் ஒன்றைஒன்று பார்த்தவண்ணம் இருக்கும் அல்லது சுவாமியின் படம் – விக்ரஹத்தின் எதிர்ப்புறம் பார்த்தபடி அமையும். கோவில்களில் எந்த திசையை வேண்டுமானாலும் தீபங்கள் பார்க்கலாம். ஆனால் தக்ஷ்ணாமூர்த்தி , துர்கை இவர்கள் ஒரு குறிப்பிட்ட திசையை நோக்குவதால் இவர்களுக்கு நம்மால் வைக்கப்படும் தீபங்கள், குருதக்ஷ்ணாமூர்த்திக்கு சுவாமியை நோக்கியும் , ஸ்ரீ துர்க்கைக்கு நம்மை நோக்கியும் வைக்கவேண்டும் – அதாவது இருதெய்வங்களுக்கும் தீபம் வடக்கு நோக்கி வைக்கப்பட வேண்டும்.
இல்லங்களில் விசேஷ காலங்களில் ஐந்து முக தீபம் ஏற்றுவார்கள். ஏதேனும் சுவாமிக்கு படைக்கும் காலங்களில் இரண்டு ஐந்து முக குத்துவிளக்குகள் ஏற்றி வைப்பார்கள்.
ஐந்து முகங்களிலும் தீபங்கள் ஏற்றப்படும் போது அவைகளில் ஒன்றுகூட அணைந்து போகாமல் பார்த்துக் கொள்ளவேண்டும், குறிப்பிட்ட நிகழ்ச்சி நடைபெறும் போது ஏதேனும் ஒரு திசையை நோக்கும் தீபம் அணைந்து போகுமானால் அந்த குறிப்பிட்ட திசையின் சுப அனுகூல பலன்கள் வராது போக வாய்ப்புள்ளது அல்லது அசுப அனுகூல பலன்களைத் தரும் திசையின் தீபம் எரிந்து அதன் காரணமாக அசுப அனுகூலங்கள் நிறைந்து விடவும் கூடும்.
ஆக ஐந்து முகங்களில் தீபங்கள் ஏற்றி அதனால் சுப பலன்களை பெருகின்றோமோ, அசுப பலன்களை பெருகின்றோமோ என்றெண்ணி சங்கடப்படுவதைவிட ஏக முக தீபம் ஏற்றி சுப பலன்களை மட்டுமே பெறலாம்.
பொதுவாக தமிழ்நாட்டில் ஒரு விளக்கு மட்டுமே ஏற்றி வழிபடுவதை ஒருசில பகுதிகளில் ஏற்பதில்லை என தெரிகிறது. அதற்கு அவர்கள் கூறும் காரணம் விநோதமானது அதாவது இறந்தவர்களின் தலைமாட்டுப் பகுதியில் ஒற்றை தீபம் ஏற்றுவதால் இறைவனுக்கும் அப்படி ஒற்றையில் தீபம் ஏற்றலாகாது என்பதாகும், இந்த வழக்கம் காலகாலமாக செயல்பாட்டில் உள்ளதால் அந்த வழக்கிலிருந்து மாற்றுவது ஆகாது. ஆனால் அந்த பழக்கம் அதாவது இறைவனுக்கு இரண்டு தீபம் என்ற பழக்கம் முற்றிலும் தவறானதாகும். இறைவன் ஏகனாக உள்ளவன் அவனுக்கு இந்த வகையில் செய்வதே உகந்ததாகும். சரி விஷயத்துக்கு வருவோம்.
ஏக முகதீபம் ஏற்றப்படும் போது அந்த தீப சுடர் எந்த திசையை நோக்கிட வேண்டும் ?
வடக்கு நோக்கிய விளக்கின் தீப சுடர் – தெய்வங்களையும், நமது குலதெய்வம், நமது முன்னோர் மேலும் நல்ல ஆன்மாக்களை நம் பால் ஈர்க்கும் , அவர்களின் அன்பும், ஆசியும் கிடைக்கும் – பலன்: நோய்,நொடிகள் அகலும் , நோய்,நொடி அண்டாது.
கிழக்கு நோக்கிய விளக்கின் தீப சுடர் – அந்த அந்த ஊரில் உள்ள மாரியம்மனையும்,
ஸ்ரீ சூர்யனையும் நமது பால் ஈர்க்கும், அவர்களின் அன்பும் ஆசியும் கிடைக்கும்- பலன்: தொழில் மேன்மை , பொருளாதாரம் மற்றும் குடும்ப சுபிக்ஷம்.
மேற்கு நோக்கிய விளக்கின் தீப சுடர் – பொதுவாக எந்த தெய்வ, ஆன்ம, குல தெய்வங்களின் ஆதிக்கத்திலும் உட்படாததால் நமது ப்ரார்த்தனைக்கான பலன்கள் நமக்கு தாமதமாக கிடைக்கும் – பலன்: தொழில் முடக்கம், பொருளாதார சீர்குலைவு, குடும்பத்தில் குழப்பம்- ஒற்றுமையின்மை.
ஆனால்,
தெற்கு நோக்கிய விளக்கின் தீப சுடர் – இந்த திசை யமனின் ஆதிக்கமாக உள்ளதால் நிறைந்த துன்பம் தரும் பலன்: வறுமை, நோய்நொடிகள் தேடிவரும் , வம்பு வழக்குகள் உண்டாகும். அமைதி கெடும். அளவில்லாத சங்கடங்கள் நமது சொந்தமாகும்.
ஆக வடக்கு , கிழக்கு , வடகிழக்கு திசையை நோக்கி ஏற்றப்படும் தீபங்கள் நமக்கு நன்மையை தரும் , ஏனைய மற்ற திசைகளான மேற்கு , தெற்கு , தென்கிழக்கு, வடமேற்கு, தென்மேற்கு திசையை நோக்கிய தீபங்கள் நன்மையை தராதது மட்டுமல்ல தீமையைத் தரும்.
அடுத்து தீப விளக்கின் திரி..
தற்போது கடைகளில் விற்கப்படும் விளக்கு திரிகள் பழைய மெத்தை , தலையணை போன்றவைகளில் இருந்து எடுத்து அதனை 10, 15 என பாக்கெட் செய்து விறபனை செய்கின்றார்கள். ஆனால் முன்பெல்லாம் புதிய பருத்தி பஞ்சினை பாக்கெட் செய்து விற்பனை செய்தார்கள் , இப்போது பக்தர்களின் வருகை அதிகம் ஆனதால் ஏதோவொரு பஞ்சு என்று இலவம்பஞ்சை கூட தற்போது திரியாக்கி விற்கின்றார்கள்.
விளக்கின் திரி புதிய பருத்தி பஞ்சாக இருக்க வேண்டும் – மற்றவிதமான திரிகள் ஆகாது , திரி வெள்ளையாக இருக்கவேண்டும் அதுதான் புதியது , மஞ்சள் கலந்த பழுப்பு கலரில் கடைகளில் விற்கப்படுவது பழைய மெத்தை, தலையணையிலிருந்து எடுக்கப்பட்டதாகும்.(அதனை பயன்படுத்தக்கூடாது .
சிலர் வேறுசில கார்யங்களுக்காக சிலவகையான திரிககளில் தீபம் ஏற்றுவர்.
அனைத்து இல்லங்கள், கோவில்களில் ஏற்றப்படும் தீபங்களுக்கும் புதிய பஞ்சின் திரியே உகந்தது.
ஆக விளக்கின் திரி புதிய பருத்தியின் பஞ்சு திரியாக இருத்தல்வேண்டும் .
இனி தீபத்திற்கான எண்ணையைப் பார்ப்போம்.
இல்லங்களிலும், கோவில்களிலும் தீபம் ஏற்றுவதில் எண்ணை முக்கிய பங்கு வகிக்கின்றது, காரணம் நமது பூஜை, வேண்டுதல்கள் போன்றவற்றை குறிப்பிட்ட தெய்வங்கள், தேவதைகள், எல்லா அதிதேவதைகள் மற்றும் கிரகங்களுக்கு கொண்டு செல்லும் ( அந்த அந்த கதிர் வீச்சுகளோடு சேர்ப்பிக்கும்) உன்னதமான பணியை நாம் ஏற்றும் தீப சுடரின் அதிர்வுகளே செய்கின்றன.
தற்போது சில இல்லங்களிலும், கோவில்களிலும் பயன்பாட்டில் உள்ள சில எண்ணெய்களை பார்ப்போம்.
ஒருசிலர் விளக்கெண்ணையை விளக்கேற்றுவதற்க்கு உபயோகிக்கின்றனர், காரணம் அது விளக்கெண்ணெய் என்றபெயருடன் உள்ளது , மேலும் விளக்கு நன்றாக நின்று எரியும் என்பார்கள்.
அதன் பெயர் விளக்கெண்ணெய் அல்ல விலக்கெண்ணெய்.
அதாவது நமது உடலில் உள்ள மலக்கழிவுகள் சரிவர வெளியேராதபோது அந்த எண்ணையை கொஞ்சம் உட்கொண்டால் அது உள் சென்று பேதியாகி மலக்கழிவுகளை வெளியேற்றம் செய்யும்.
அதற்கும் விளக்குக்கும் எந்த சம்பந்தமுமில்லை. ஆனால் விளக்கெண்ணையால் விளக்கேற்றினால் அந்த வீட்டில் சங்கடமும், சச்சரவுமே மிகுதியாகும். ஏனென்றால் அந்த தீபத்திலிருந்து வெளியாகும் கதிரில் ஒரு வகை கசப்புத் தன்மை நிறைந்து உள்ளதால் நாம் எவ்வளவுதான் கடினமாக உழைத்தாலும் அதன் பயனை அனுபவிக்க முடியாது. ஸ்வாமி குமபிட அமர்ந்தாலே ஏதாவது ஒரு பிரச்சினை வந்தே தீரும். வீட்டில் சுவாமி கும்பிடவே மனம் ஒத்து வராது. ஏதோ பேருக்கு கொஞ்சநேரம் அமர்ந்து எழுவோம்.
அதனால் விளக்கெண்ணையை இல்லங்களிலும், கோவில்களிலும் விளக்கேற்று வதற்க்கு பயன்படுத்தக்கூடாது.
அடுத்து தற்போது எங்கும் விற்பனை செய்யப்படும் தீபஎண்ணை எனும் எண்ணை.
இதில் மூன்று எண்ணெய்களை கலந்து தீபத்திற்கென்றே தயாரானதாக சொல்கிறார்கள்.
உண்மையில் மூன்று வித எண்ணைகள், ஐந்து வித எண்ணைகள் போற்றவற்றை கலந்து வீடுகளில் அல்லது கோவில்களில் விளக்கேற்றுவது ஆகாது.
ஏனென்றல் அவ்விதமான கலப்பு எண்ணையை மாந்த்ரீக வேலைகள் செய்யும் போதும் , சில அமானுஷ்ய சக்திகளை பெறும் நோக்கிலும் பூஜையில் ஈடுபடுவோர் தங்களது பூஜைக்கு மேற்கண்ட கலப்பில் உள்ள எண்ணெய்களை விளக்கிற்கு பயன்படுத்துவர்.
நாம் இவ்வகை எண்ணெய்களை விளக்கேற்றி வணங்கினால் துஷ்ட தேவதைகள், ஆவிகள், அமானுஷ்யமான சில உருவங்கள் உடனே வந்து விடும், ஆனால் நமக்கு இவைகளில் பழக்கமில்லாததால் , அவைகள் வந்ததே தெரியாமல் நாம் நமது பூஜையை முடித்துக்கொண்டு எழுந்துவிடுவோம்,
ஆனால் அந்த குறிப்பிட்ட தேவதைகளோ,ஆவியோ,அமானுஷ்யமோ வந்திருந்தும் நாம் அதனை (அறியாத காரணத்தினால்) வரவேற்கவில்லை , அதற்கான நைவேத்யம் படைக்கவில்லை என நம்மீது கோபமாகி விடும்.
அதனால் நல்லநாள் , ஒரு பண்டிகை போல மற்ற எந்த விசேஷ காலமானாலும் அதனை சந்தோஷமாக கொண்டாட முடியாது. மேலும் விசேஷ நாளில் சண்டைகள் வந்து, நம்மால் அந்தநாளின் பெரும்பகுதி நிம்மதியற்று விடும். மேலும் நிறைய பொருட்கள் நல்லநாட்களில் உடைவதும், கிழிபடுவதும் நடைபெறுவது வாடிக்கையாகி விடும். இதனால் ஸ்வாமி கும்பிடவே பயமாக இருக்கும்.
ஏனென்றால் ஸ்வாமி கும்பிடும் அன்று ஏதாவது ஒரு பிரச்சினை வந்தே தீருமே.
ஆனால் மேற்படி நபர்கள் அந்த தேவதையோ , ஆவியோ, அமானுஷ்யமோ வந்தவுடன் அதற்குண்டான நைவேத்யம் இரத்தமோ, இறைச்சியோ ஏதோ ஒன்றினை அதற்கு உடனே தந்து விடுவதால் அவர்களுக்குண்டான தேவையை பூர்த்தி செய்யும்.
நமக்கு அது வந்ததே தெரியாது, அப்புறம் எங்கே அதற்கு படைப்பது?
ஆகையால் , அந்த தீப எண்ணை என்று விற்கப்படும், கலப்பு எண்ணையை வீட்டிலும், கோவில்களிலும் இல்லறவாசிகள் பயன்படுத்தலாகாது.
சரி எந்த எண்ணையைத்தான் விளக்கேற்ற பயன்படுத்தலாம்?
இல்லங்களிலும் கோவில்களிலும் விளக்கேற்று வதற்கு உரிய எண்ணைகள் மூன்று .
1. முதல் தரமானது , நெய் , இது நித்ய வழிபாட்டிற்கும், கோவில்களில் பூஜைக்கும் மிகவும் உகந்ததாகும் , எளிதில் நமது கோரிக்கைகளை குறிப்பிட்ட இடத்தில் மிக வேகமாக கொண்டு சேர்க்கவல்லது.
2. இரண்டாவது தேங்காய்எண்ணை, இதுவும் நித்ய வழிபாட்டிற்கும், கோவில்களில் பூஜைக்கும் மிகவும் உகந்ததாகும் , எளிதில் நமது கோரிக்கைகளை குறிப்பிட்ட இடத்தில் வேகமாக கொண்டு சேர்க்கவல்லது.
3. மூன்றாவதாக நல்லெண்ணெய், இதுவும் நித்ய வழிபாட்டிற்கும், கோவில்களில் பூஜைக்கும் மிகவும் உகந்ததாகும் , எளிதில் நமது கோரிக்கைகளை குறிப்பிட்ட இடத்தில் மிதமான வேகத்தில் கொண்டு சேர்க்கவல்லது.
எல்லா இல்லங்களிலும், கோவில்களிலும், எந்தவிதமான விழாக்களுக்கும், எந்த விதமான சூழலுக்கும் விளக்கேற்றி பூஜிக்க தகுந்த எண்ணைகள் மேலே சொல்லப்பட்ட மூன்று எண்ணைகள்தான் உகந்தவை.
இவைகளையும் (நெய்யை, தேங்காய்எண்ணையை, நல்லெண்ணையை)
தனித் தனியாகத்தான் உபயோகிக்கவேண்டும், கலந்து உபயோகிக்கக் கூடாது.
இப்போது எலுமிச்சம்பழத்தில் தீபம் நல்லதா? ஏற்றலாமா? பார்க்கலாம்.
கனிகளில் ராஜகனி என்று போற்றப்படுகிறது எலுமிச்சம்பழம்.
மதிப்புக்குரியவர்களை காணும்போது அவர்கள் கைகளில் எலுமிச்சம்கனியை அளிப்பது இன்றும் வழக்கில் உள்ள செயலாகும்.
இறைவியான துர்க்கைக்கு நிகரானதாக கருதப்படும் எலுமிச்சம்பழம் , தனது பிஞ்சு, காய், பழம், ஊறுகாய் போன்ற எல்லா நிலைகளிலும் தனது புளிப்புத்தன்மையை மாற்றிக் கொள்ளாதது. (இறைவனும் எந்த நிலையிலும் தன் இறைத்தன்மை மாறாதவன்).
இப்படி எல்லா வகையிலும் உயர்ந்த கனியை ஸ்ரீஸ்ரீ துர்க்கைக்கு முன்பாகவே வைத்து இருதுண்டாக்கி , அதனை பிதுக்கி திருப்பி அதில் எண்ணையை ஊற்றி விளக்கேற்றினால் அதனால் நிச்சயமாக எந்த நற்ப் பலனும் ஏற்படாது. மேலும் தீய பலன்கள் நடைபெறத்தான் வழியுள்ளது.
ஏதோ விபரமறியாத சில ஜோதிடர்கள் சொன்ன வார்த்தையை கேட்டு எலுமிச்சம்பழத்தில் விளக்கேற்றி அதனால் அவர்களுக்கே தெரியாமல் மேலும் மேலும் துன்பங்களை அடைகிறார்கள். இந்த காரியத்தினால்தான் நாம் துன்பம் அடைகிறோம் என அறியாமல் மக்கள், “ நானும் துர்க்கைக்கு வாராவாரம் விளக்கெல்லாம் வைத்தேன் , ஆனால் ஒரு பயனும் இல்லை “ என சலித்துக் கொள்வார்கள் .
அதுமட்டுமல்ல எலுமிச்சம்பழ விளக்கினால் கர்ப்பப்பையில் கோளாறுகள் ஏற்படுவதாக ஆய்வுகள் சொல்கின்றன , அதிலுள்ள சிட்ரிட் எனும் அமிலம் நமது சுவாசத்தில் கலந்து உள்சென்று தீங்கினை செய்கின்றது.
அதாவது ஒருவர் வைத்து விட்டுப் போன எலுமிச்சம்பழ விளக்கு எரிந்து கொண்டிருக்கும்போது மற்றொருவர் தனக்காக சில எலுமிச்சம்பழ விளக்குகளை ஏற்றுவார் அல்லவா? அப்போது இவருக்கு முன்னர் ஏற்றப்பட்ட விளக்கிலிருந்து எலுமிச்சம்பழத்தின் ஓரங்கள் கருகி எரியும் போது அதிலிருந்து வெளிப்படும் சிட்ரிட் அமிலப் புகையானது நமது உள்சென்று கர்ப்பப் பையினை அரித்து குழந்தையினை தாங்கும் வலிமையை இழந்து விடுவதாகவும் அதனால் புத்திரபாக்கியமே கிடைக்காது எனவும் தெரிவிக்கின்றார்கள் ஆய்வாளர்கள்.
அப்படியென்றால் எலுமிச்சம்பழத்தில் தீபம் ஏற்றக்கூடாதா ? என்றால் ஏற்றலாம்.
ஆனால் , சாஸ்திரம் என்ன சொல்கிறது என்றால்...
எலுமிச்சை மரத்தில் எப்போதாவது ஒருமுறை எலுமிச்சம்பழம் மேல் நோக்கியவாறு காய்க்குமாம், அந்த பழத்தில் தீபம் ஏற்றலாம் . (எல்லா பழங்களும் கீழ்நோக்கி நிற்க ஒன்றுமட்டும் மேல்நோக்கி இயற்கையை எதிர்த்து நிற்பதால்) அந்த பழம் பாதிஅளவு மஞ்சளும், பாதியளவு பச்சையுமாக கனிந்துவரும் போது ஒரு வெள்ளிக்கிழமை காலையில் முதல்ஓரையான சுக்கிர ஓரையில், அந்த பழத்தை ஆயுதமின்றி விரல்களால் கிள்ளி எடுத்து , அதனை ஒரு சிகப்பு கலர் பட்டுத்துணியின் உள்வைத்து , இரண்டு கைகளாலும் அப்படியே அந்த பழத்தை கசக்கி வேண்டும். அதிலிருந்து கொஞ்சமும் நீர் வெளியாகாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.
பின்னர் அந்த பழத்தினை விரல் நகத்தினால் இரண்டாக கிழித்து அந்த சாற்றினை அந்த பட்டுத் துணியிலேயே பிழிந்து அந்ததுணியை ஸ்ரீஸ்ரீ துர்க்கையின் பாதங்களில் சார்த்தி , பின் அந்த எலுமிச்சம்பழத்தை பிதுக்கி திருப்பாமல் அப்படியே வைத்து விளக்கேற்ற வேண்டும்.
இப்படி விளக்கேற்ற முடியுமானால் யார் வேண்டுமானாலும் எலுமிச்சம்பழ விளக்கேற்றுங்கள்.
இறைவன், இறைவி உலக மக்களின் நன்மையை கருதி தரும் எல்லாமே கீழ்நோக்கி இருக்கும், நாம் கையேந்தி வாங்குவதாக அமையும் , ஆனால் இயற்கையை மீறி இறைவனை எதிர்த்து மேல் நோக்கி இருக்கும் அந்த எலுமிச்சம்கனியை அன்னை தனக்கே தீபமேற்ற பணிக்கிறாள் , அதை விடுத்து அவள் நமது நன்மைக்காக தந்த பரிசினை அவள் எதிரிலேயே கசக்கி பிழிந்து எரியூட்டினால் நன்மை விளையுமா ? தீமை விளையுமா?
எல்லோராலும் எலுமிச்சம்பழ விளக்கேற்ற முடியாது , எலுமிச்சம்பழ மரம் வீட்டில் இருப்பவர்கள் வேண்டுமானால் கவனித்து பார்த்து ஏற்றி மகிழலாம், அன்னையை மகிழ்விக்கலாம்.
ஆகவே , எலுமிச்சம்பழ தீபம் ஏற்றுவது எல்லோருக்கும் உகந்ததல்ல எனும் காரணத்தினால் நல்லதல்ல. 

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...