Monday, September 23, 2019

நாங்குநேரி இடைத்தேர்தலில் காங்., சார்பில்...குமரி அனந்தன்?

தமிழக காங்கிரஸ் கட்சியின், முன்னாள் தலைவர், குமரி அனந்தன், நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட, விருப்ப மனு பெற்றுள்ளார்.

ஆளுங்கட்சியின் அதிகார பலம் பொருந்திய வேட்பாளருக்கு எதிராக, 87 வயதான குமரி அனந்தனை நிறுத்தி, வேடிக்கை பார்க்க, தமிழக காங்கிரஸ் தலைமை திட்டமிட்டுள்ளதா என்ற சந்தேகம், அக்கட்சியினர் மத்தியில் எழுந்துள்ளது.காலியாக உள்ள, விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டசபை தொகுதிகளுக்கு, அடுத்த மாதம், 21ல் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இரு தொகுதிகளிலும், அ.தி.மு.க., நேரடியாக களம் இறங்குகிறது. விக்கிரவாண்டி தொகுதியில், தி.மு.க.,வும், அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸ், நாங்குநேரி தொகுதியிலும், அ.தி.மு.க.,வுடன் மோதுகின்றன.
நாங்குநேரியில் குமரி அனந்தன் போட்டி?

மனு


விக்கிரவாண்டி தொகுதியில், தி.மு.க., இளைஞரணி செயலர், உதயநிதி போட்டியிட வலியுறுத்தி, தி.மு.க., - எம்.பி.,யும், முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மகனுமான கவுதமசிகாமணி, நேற்று சென்னை, அறிவாலயத்தில், விருப்ப மனு வழங்கினார். விழுப்புரம் மத்திய மாவட்ட, தி.மு.க., பொருளாளர் புகழேந்தி, மாவட்ட துணை செயலர், ஜெயசந்திரன், மாவட்ட இலக்கிய அணி தலைவர், ராஜாராமன், முன்னாள், எம்.எல்.ஏ.,வான, ஏ.ஜி.சம்பத் உட்பட, 20க்கும் மேற்பட்டோர், விருப்ப மனுக்கள் பெற்றுள்ளனர்.
தி.மு.க., தலைவர், ஸ்டாலின் தலைமையில், அறிவாலயத்தில், இன்று நேர்காணல் நடத்தப்பட்டு, பின், வேட்பாளர் பெயர் அறிவிக்கப்பட உள்ளது. தமிழக, காங்., தலைமை அலுவலகமான, சென்னை, சத்தியமூர்த்தி பவனில், நேற்று நாங்குநேரி தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து, குமரி அனந்தன், காங்., - எம்.பி., வசந்தகுமாரின் மகனும், நடிகருமான விஜய் வசந்த் உட்பட, 12 பேர் மனுக்கள் பெற்றுள்ளனர்.


விருப்பம்


ஏற்கனவே, சத்தியமூர்த்தி பவனில் நடந்த கூட்டம் ஒன்றில், தமிழக காங்கிரஸ் தலைவர், கே.எஸ்.அழகிரி பேசுகையில், 'நாங்குநேரியில் போட்டியிட, குமரி அனந்தன் விரும்புகிறார். தனக்கு வயதாகி விட்டதாகவும், இளைஞரை நிறுத்தும்படியும் சொல்ல, அவர் முன்வரவில்லை.
'எனவே, அவருக்கு வாய்ப்பு கொடுக்கலாம் என்ற எண்ணம், எனக்கு ஏற்படுகிறது' என்றார். தேர்தலில் போட்டியிட விரும்பும், குமரி அனந்தனுக்கு, தற்போது, 87 வயதாகிறது, தன், 16வது வயதில், காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளர், தமிழக காங்கிரஸ் செயலர், தலைவர் போன்ற பதவிகளை வகித்துள்ளார். திருச்செந்துார், ராதாபுரம் தொகுதிகளில், தலா, ஒரு முறை; சாத்தான்குளம் தொகுதியில், இரு முறை என, நான்கு முறை, எம்.எல்.ஏ.,வாகவும், நாகர்கோவில் தொகுதி, எம்.பி.,யாக, ஒரு முறையும் இருந்துள்ளார். பூரண மதுவிலக்கு வேண்டும்; பாரத மாதா கோவில், அணைக்கட்டுகள் கட்ட வேண்டும்; மீனவர்கள், நெசவாளர்கள், விவசாயிகள் நலன் காக்கப்பட வேண்டும் எனக் கோரி, 16 முறை, பாதயாத்திரை நடத்திஉள்ளார்.
பனை மரம் பாதுகாப்பு உள்ளிட்ட, பல்வேறு போராட்டங்களை நடத்தி, ஆறேழு முறை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

கவுரவம்


தமிழக, பா.ஜ., தலைவராக இருந்த, இவரது மகள், தமிழிசைக்கு, கவர்னர் பதவி அளித்து, பா.ஜ., தலைமை கவுரவித்துஉள்ளது. அதேபோல், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான குமரி அனந்தனை கவுரவிக்கும் விதமாக, இந்த தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கலாம் என, காங்., கருதுகிறது.
அதேநேரத்தில், 'பண பலம், அதிகார பலம் பொருந்திய, ஆளுங்கட்சியின் வேட்பாளருக்கு ஈடுகொடுக்க, மூத்தவர் குமரி அனந்தனால் முடியாது; தேர்தல் செலவுக்கு தேவையான பண பலமும், அவருக்கு இல்லை; ஆளும் கட்சிக்கு இணையாக, அவரால் தேர்தல் செலவு செய்ய முடியாது. 'தோற்று விடுவோம் என்று கருதியே, வயதானவரை நிறுத்துகிறீர்களா?' என, காங்., கோஷ்டிகள் சில, எதிர் கருத்து தெரிவிக்கின்றன. கடும் போட்டி நிறைந்த களமான, இடைத்தேர்தலில், 87 வயது மூத்தவரை நிறுத்தி, தமிழக காங்கிரஸ் தலைமை வேடிக்கை பார்க்க திட்டமிட்டுள்ளதோ என, அவர்கள் சந்தேகம் எழுப்புகின்றனர்.

கூட்டணி துணை நின்றால் வெற்றி!


தமிழக காங்கிரஸ் தலைவர், கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் போட்டியிடும், காங்கிரஸ், தி.மு.க., வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்வதற்கு, கண் துஞ்சாமல், கட்சியினர் உழைக்க வேண்டும். மதச்சார்பற்ற, முற்போக்கு கூட்டணி கட்சியினர் துணை புரிவர் என நம்புகிறேன். அவர்களின் ஒத்துழைப்பின் வாயிலாக, வெற்றிக் கனியை, நம்மால் பறிக்க முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.காங்கிரசை விட்டு நீக்கப்பட்டுள்ள, கராத்தே தியாகராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'நாங்குநேரி தொகுதியை, காங்கிரசுக்கு ஒதுக்கிய, ஸ்டாலினுக்கு நன்றி. ஹிந்தி திணிப்புக்கு எதிராக அறிவிக்கப்பட்ட போராட்டத்தை ஒத்திவைத்த விவகாரம், கூட்டணிக் கட்சிகளிடம் முணுமுணுப்பை ஏற்படுத்தியுள்ளது, 'இதை கருத்தில் வைத்து எடுத்த, ராஜதந்திர முடிவு என சொல்லப்பட்டாலும், காங்., தொண்டர்களுக்கு கிடைத்த வெற்றி. நேரு சொன்னதை போல, மீண்டும் பல்லக்கு துாக்க முன்வந்ததற்கு மகிழ்ச்சி' என, கூறியுள்ளார்.

தே.மு.தி.க.,வுடன் அ.தி.மு.க., பேச்சு


இடைத்தேர்தலில், தே.மு.தி.க., ஆதரவை பெற, அ.தி.மு.க., தலைமை பேச்சு நடத்த துவங்கியுள்ளது.நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிகளுக்கு, அக்., 21ல் இடைத்தேர்தல் நடக்கிறது. இத்தேர்தலில், அ.தி.மு.க.,வை எதிர்த்து, தி.மு.க., - காங்., கட்சிகள் போட்டியிட உள்ளன. அ.தி.மு.க., தரப்பில், வேட்பாளர் தேர்வு தீவிரமாக நடக்கிறது. அது மட்டுமின்றி, கூட்டணி கட்சிகளின் ஆதரவை பெற, ரகசிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஏற்கனவே, அ.தி.மு.க., கூட்டணியில், தே.மு.தி.க., இடம் பெற்று உள்ளது. இந்த கட்சிக்கு, விழுப்புரம் மாவட்டத்தில் செல்வாக்கு அதிகம். அக்கட்சி ஆதரவு அளித்தால், விக்கிரவாண்டி தொகுதியில், அ.தி.மு.க.,வின் பலம் அதிகரிக்கும். எனவே, தே.மு.தி.க., ஆதரவு பெறும் நடவடிக்கையை, அ.தி.மு.க., தலைமை துவக்கி உள்ளது.
இது தொடர்பாக, விஜயகாந்த் மைத்துனர், சுதீஷ் உடன், அமைச்சர்கள், ஜெயகுமார், வேலுமணி ஆகியோர் ரகசிய பேச்சு நடத்தி வருகின்றனர். அ.தி.மு.க.,விற்கு ஆதரவளிப்பது தொடர்பான அறிவிப்பை, தே.மு.தி.க., தலைவர், விஜயகாந்த் விரைவில் அறிவிக்க வாய்ப்புள்ளது.-

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...