Thursday, September 26, 2019

நல்ல மருத்துவ பதிவு....Very useful......

உணவைத் தயாரித்த பின்னர் தாளித்துச் சாப்பிடும் வழக்கம் நம்மிடம் எத்தனை நாட்களாக இருக்கிறது எனச் சரியாகத் தெரியவில்லை. ஆனால், இந்தத் தாளிப்புப் பழக்கம் வெளிநாட்டு உணவுகளில் பெரும்பாலும் கிடையாது. இந்த தாளிப்புப் பழக்கத்தில் மருத்துவக் காரணங்கள் அடங்கியிருப்பது பலருக்கும் தெரியாது. இப்போது சேர்ப்பதுபோல் தாளிக்க, கடுகு, உளுத்தம்பருப்பு மட்டும் அன்று போட்டதில்லை.
திரிதோஷ சமப் பொருட்கள் என்ற பெயருடன் ஏலம், சுக்கு, வெந்தயம், பூண்டு, மஞ்சள், மிளகு, சீரகம், பெருங்காயம் எனும் எட்டுப் பொருட்கள்தான் அந்தக் காலத்தில் சமையலுக்குத் தாளிக்கப் பயன்பட்டன. ஒவ்வோர் உணவுப் பொருளுக்கும் உள்ள ஒரு பிரத்யேகச் சுவையினால், அதற்கான மருத்துவக் குணம் வருகிறதென்பது சித்த மருத்துவ, ஆயுர்வேத மருத்துவத் துறைகளின் அடிப்படைப் புரிதல். நாம் அன்றாடம் சாப்பிடும் உணவின் சுவையும் குணமும்தான் வளி, அழல், ஐயம் என்ற திரிதோஷத்தைச் சமமாக வைத்திருக்கவோ அல்லது சங்கடப்படுத்தவோ செய்கிறது.
'மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று’
என வள்ளுவர் சொன்ன மூன்றும் இந்த வளி (வாதம்) அழல் (பித்தம்), ஐயம் (கபம்) ஆகியவற்றைத்தான். 'இனிப்பு சாப்பிட்டால், கபம் சேரும். புளிப்பு சாப்பிட்டால், மூட்டு வலி வரும். உப்பு சாப்பிட்டால், பித்தம் ஏறும்’ என்று உங்கள் பாட்டியும் பரம்பரை மருத்துவர்களும் சொல்வது இந்த உண்மையை ஆழமாக உணர்ந்ததால்தான்.
ஒவ்வொரு தனி உணவுப்பொருளின் சுவை, குணம் நமக்குத் தெரியும். சாம்பாரோ, கூட்டாஞ்சோறோ சமைக்கும்போது, நிறையப் பொருட்களை ஒன்றாகச் சேர்க்கும்போது, உணவின் திரிதோஷ சமநிலைத்தன்மை மாறிவிடும் வாய்ப்பு உண்டல்லவா? இதனைத் தவிர்க்கத்தான் திரிதோஷ சமப் பொருட்கள்கொண்டு தாளிக்கும் வழக்கமே வந்தது. ஏலக்காயை இனிப்பு சேர்ந்துள்ள எல்லாப் பொருட்களிலும் சேர்ப்பது, மணம் தர மட்டுமல்ல... கூடவே, அது கபத்தைத் தரக் கூடாது; அஜீரணத்தைத் தந்துவிடக் கூடாது என்ற அக்கறையிலும்தான். இன்றும் லட்டும் பூந்தியும் செய்கையில் ஏலக்காய் எவ்வளவு விலை விற்றாலும் லேசாகத் தூவுவது, அந்தப் பழக்கத்தின் நீட்சியால்தான். புலால் உணவின்போது பெருங்காயம், பூண்டு சேர்ப்பதும், நீர்க் காய்கறிகளின் கூட்டுக்கறிக்கு மிளகு சேர்ப்பதும் இந்தப் பின்னணியில்தான்.
வாசம் கொடுத்துவிட்டு தட்டில் ஓரமாக ஒருக்களித்து நிற்கும் கறிவேப்பிலையின் carbazole alkaloids சத்து சர்க்கரையையும், கொழுப்பையும், குடல் புற்றையும் தடுக்கிறதாம். அல்சிமர் எனும் வயோதிகத்து நினைவாற்றல் நோயையும்கூட கறிவேப்பிலை ஓரளவு தடுக்குமாம். நம் பாட்டிக்கு இந்த விஷயம் தெரியாது. ஆனால், 'கறிவேப்பிலையை ஒதுக்காதடா... முடி நரைச்சுக்கும். சோகை தட்டும்’ என்று அவர் சொல்வதை மறக்க முடியுமா?
கொத்துமல்லி - தனியாவின் linalool கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைத்து நல்ல கொலஸ்ட்ராலை உயர்த்தும். இளம்பெண்களின் சினைப்பை நீர்க்கட்டி சிக்கலுக்குப் பயனளிக்கும். சிலோன் லவங்கப்பட்டை இளைஞர்களுக்குச் சீக்கிரமே சர்க்கரை நோய் வராது தடுக்க உதவிடும். சோம்பும் வெந்தயமும் நடுத்தர வயதின் சிம்ம சொப்பனமான சர்க்கரை நோயைத் தடுக்க உதவும்.
பித்த நோய்களுக்கு எல்லாம் முதல் மருந்தாகப் போற்றப்பட்ட சீரகம், நம் ஊரில் மட்டுமல்ல... நெதர்லாந்து நாட்டு சீஸ் உணவு, மெக்ஸிகோவின் பரிட்டோஸ், மொராக்கோவின் ரஸ்எல்ஹேனோ என உலகின் அத்தனை கண்டங்களின் பாரம்பரிய உணவுகளிலும் பயன்படுவதற்கான காரணம், அதன் பிரத்யேக மணமும் அந்த மணத்தில் ஒளிந்திருக்கும் CUMINALDEHYDE என்ற மருத்துவக் குணமளிக்கும் பொருளினாலும்தான்.
இந்த சீரகம், சர்க்கரை மிகுதிக்காரர்களுக்குப் பயனளிக்கும் என்பது பழைய செய்தி. கூடவே, கண் புரையில் இருந்தும் பாதுகாக்கும் என்பதுதான் புதிய செய்தி. மஞ்சள், மிளகு, அன்னாசிப்பூ, பெருங்காயம், பூண்டு என மணமூட்டிகளைப் பற்றி அன்று நம் ஊர் சித்தர்கள் சொன்னதை, இன்றைய விஞ்ஞானம் பல்வேறு மருத்துவ முடிவு களாக உறுதிப்படுத்திக்கொண்டே வருகிறது. இனி குழம்போ, குருமாவோ, தேநீரோ, மணமூட்டி இல்லாமல் இருக்க வேண்டாம்.
இந்தியாவில் பத்தில் நான்கு பேருக்கு உளவியல் நோய் உள்ளது. மன அழுத்த நோயின் பரவல் வெகுவாகப் பெருகிவருகிறது என்கிறது தேசிய மனநோய் மருத்துவக் கழகப் புள்ளிவிவரம். அதிக மன அழுத்தமும் மன உளைச்சலும் உள்ளதா? நீங்கள் மன நோயாளி ஆகாமல் இருக்க, நம் பாரம்பரியம் சொன்ன எளிய பரிந்துரை மாதுளைச் சாறு. இதைப் போலவே அமுக்கிராங் கிழங்கும் சாதிக்காயும் நம் மனம் மகிழ்வித்து, நரம்பை வலுவாக்கும் மூலிகைகள். இவற்றின் மருத்துவ மகத்துவம் அறிந்த இன்றைய அறிவியல் இதனை மனநோய்க்கு மருந்தாக மாற்ற முயல்கிறது.
நடுத்தரவர்க்கத்துக்கும், ஏழைக்கும் நோய் வராது காத்துக்கொள்வது மட்டும்தான் இப்போதைக்குக் குறைந்தபட்ச சாத்தியம். அதைத்தான் வள்ளுவர்,
'மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின்’
என அன்றே அழுத்தமாகப் பதிந்திருக்கிறார்!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...