Sunday, April 24, 2022

அதற்கு காரணம் புரிதல் இல்லாதமையே!

 ஒரு கணவனும் மனைவியும் மாலைப்பொழுதில் நடைப் பயிற்சியை முடித்துக்கொண்டு வீட்டிற்கு திரும்பினர். சற்று நேரத்தில் திடீரென இருட்டியதால் இருவரும் வேகமாக நடக்கத் தொடங்கினர். சில நிமிடங்களில் சடசடவென மழையும் சாரலுமாக வீசத் தொடங்கியது. வேகமாக நடந்து கொண்டிருந்தவர்கள் ஓடத் தொடங்கினர்.

வழியில் அவர்கள் கடக்க வேண்டிய கயிற்றுப்பாலம் மழைநீரில் அடித்துக் கொண்டு செல்லும் நிலையில் இருப்பதை கண்ட கணவன், சீக்கிரம் வா என்று மனைவியை அழைத்தபடி முதல் ஆளாக வேகமாக ஓடி பாலத்தை கடந்து விடுகிறான்.
கயிற்றுப் பாலத்தை கணவன் கடந்து முடிக்கும்போது தான் மனைவி பாலத்தின் நடுவே நின்றுகொண்டு தடுமாறிக் கொண்டிருந்தாள். மழைச்சாரலோடு கும்மிருட்டும் சேர்ந்துவிட்டதால் மனைவி எஞ்சியுள்ள பாலத்தை கடக்க பயந்தாள். இருட்டில் எதுவும் தெரியவில்லை. இடையிடையே மின்னலடிக்கவே பாலத்தின் எதிர்முனையில் நின்ற கணவனைக் கண்டு கூவி தனக்கு துணைக்கு அழைத்தாள்.
கணவன் அவளைத் திரும்பிப் பார்க்கவுமில்லை; எந்த பதிலும் கொடுக்கவுமில்லை.
துணைக்கும் வரவில்லை!
"என்ன இந்த மனுசன்! பொண்டாட்டி ஆபத்தில் இருக்கும்போது சுயநலத்துடன் கண்டு கொள்ளாமல் காதில் விழாததுபோல் திரும்பி நிற்கிறான்" என்று அவளுக்குள் ஆத்திரமும் அழுகையும் பொங்கியது...
வேறு வழியின்றி மிகவும் பயத்துடன் கண்களை மூடிக் கொண்டு கயிற்றுப் பால கைபிடியை இறுகப் பற்றிக் கொண்டு மெல்ல மெல்ல பாலத்தை கடந்தாள்!
பாலத்தை கடக்கும்போது இப்படி ஒரு இக்கட்டான நிலைமையில் தனக்கு உதவிக்கு ஓடிவராத கணவனை நினைத்து வருந்தினாள். ஒரு வழியாக பாலத்தை கடந்து கரை சேர்கிறாள். கணவனை கோபத்தோடு பார்க்கிறாள்!
அங்கு கணவன் மழையில் ஒரு பக்கம் அறுந்து தொங்கிக் கொண்டிருந்த கயிற்றுப்பாலத்தை வயிற்றில் சுற்றிக் கொண்டு வாயாலும், இரு கையாலும் இழுத்து பிடித்துக் கொண்டிருந்தான். மனைவி கரை சேர்ந்ததைக் கண்டதும் கயிற்றை விட்டு விடுகிறான். கயிற்றுப் பாலத்தை மழைநீர் இழுத்துக் கொண்டு ஓடியது.
"வாழ்க்கையின் சில நேரங்களிலும் நான் உனக்கு பக்க துணையாக இருக்க இயலாது போய் விடலாம். சில பிரச்சினைகளை நீயே தான் சமாளித்து கடக்க வேண்டும்" என்கிறான்.
நீங்கள் இருக்கும்போது எனக்கென்ன கவலை என்றவள் கண்ணீருடன் கணவனை கட்டியணைத்து முத்தமிடுகிறாள்!
சில சமயம் நிறைய பெண்கள் தன் கணவன் தன்னையும் குடும்பத்தையும் கண்டு கொள்ளாதது போலத்தான் தெரியும், இதனால் நிறைய குடும்பங்களில் பிரச்சினைகள் உருவாகிறது; பெரிதாகிறது.
அதற்கு காரணம் புரிதல் இல்லாதமையே!
உண்மையிலேயே தன் மனைவி மற்றும் குடும்பத்தை நேசிக்கும் ஆண்மகன் தன் மகிழ்ச்சியை தொலைத்துவிட்டு குடும்பத்துக்காக வாழ ஆரம்பித்து விடுகிறான் என்பதே உண்மை நிலை. அவன் ஒவ்வொரு நொடியும் தன் குடும்பத்தை தாங்கிப் பிடித்துக் கொண்டு தான் இருக்கிறான்!
தூரத்திலிருந்து பார்த்தால் இவனென்ன பெரிதாக செய்து விடப் போகிறான்? சுயநலம் பிடித்தவன் என்று தான் தோன்றும். அருகில் சென்று உண்மை நிலை தெரியும்போது தான் அவன் குடும்பத்திற்காக என்னென்ன சிரமப்படுகிறான் என்பது தெரியவரும்!
நண்பர்களே! வாழ்க்கை ஒரு விசித்திரமான விந்தை!
இங்கே ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான பிரச்சினை இருந்து கொண்டு தான் இருக்கிறது, அந்த பிரச்சினை அவனவனுக்கு வரும்போது மட்டும் தான் அதன் உண்மைநிலை என்னவென்பது புரிகிறது!
உண்மையான அன்போடும், நிலையான நம்பிக்கையோடும் கிடைத்த இந்த வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் வாழுங்கள்! ரசித்து வாழுங்கள்! கிடைத்ததைக் கொண்டு திருப்தியுடன் வாழுங்கள்!
வாழ்க்கை வசப்படும்!
வாழ்க வளமுடன்!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...