Thursday, June 22, 2017

வைத்தீஸ்வரன் என்ற "God of medicine"

ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு தனித்தன்மை உண்டு. ஒருவித துணிச்சல் உண்டு.
பணம் வைத்திருப்பவன் பணம் நம்மைக் காப்பாற்றும் என்று எதற்கும் கவலைப் படாமல் தெனாவெட்டாக இருப்பான். பணம் இல்லாதவன் நம்மைப் படைத்தவன் இருக்கிறான். அவன் பார்த்துக்கொள்வான் என்ற நம்பிக்கையோடு துணிச்சலாக இருப்பான். மரம் வைத்தவன் தண்ணீர் ஊற்றுவான் என்பான்.
அதெல்லாம் பொது நம்பிக்கை. மனித குணம்.
ஆனால் ஜாதகப்படி நேரம் சரியில்லாத போது எது நடக்கும் எப்படி நடக்கும் என்றே சொல்ல முடியாது.
நீங்கள் நெடுஞ்சாலையில் பயணிக்கும் போது, உங்களுடைய வாகனத்தை, எதிரில் வரும் டிப்பர் லாரிக்காரன் முத்தமிட்டால் என்ன நடக்கும் தெரியுமா? யோசித்துப் பாருங்கள். கண நேரத்தில் உங்கள் உதட்டைச் சிவக்க வைத்துவிடுவான்.
‘spot out' என்றால் பிரச்சினை இல்லை. சிவலோகம் அல்லது வைகுண்டம் போய்விடலாம். குற்றுயிரும் குலை உயிருமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டால் என்ன செய்ய முடியும்?
இன்றையத் தேதியில் சாதாரண சிகிச்சை என்றால், வங்கி இருப்பை வழித்துக் கொடுக்க வேண்டும். சீரியசான சிகிச்சை என்றால் சொத்தை எழுதிக் கொடுக்க வேண்டும்!
அதிர்ஷ்டம் வாசல் வழியாகத்தான் வரும். ஆனால் துன்பம் எப்படி வேண்டுமென்றாலும் வரும். கதவைச் சாத்தி வைத்திருந்தாலும், கதவு இடுக்கின் வழியாக வரும். சாவித் துவாரத்தின் வழியாக வரும். சாரளத்தின் வளியாக வரும். எப்படி வேண்டுமென்றாலும் வரும். எப்படி செக்யூரிட்டி போட்டிருந்தாலும் வரும். செக்யூரிட்டியைத் தட்டிப் படுக்க வைத்துவிட்டு வரும்.
“அதிர்ஷ்டம் தபாலில் வரும். தரித்திரம் தந்தியில் வரும்” என்று என் தந்தையார் சொல்வார்.
அதுதான் கிரகங்களின் விளையாட்டு. சனி, ராகுவெல்லாம் பெளலிங் போட்டால் ‘மிடில் ஸ்டம்ப்’ பறக்கும். இரண்டாக ஒடிந்து பதினைந்தடி தூரத்தில் இருக்கும் விக்கெட் கீப்பரின் கைக்குப் போய்ச் சேரும்.
தீய கிரகங்கள் என்றில்லை. நல்ல கிரகங்களே ஒரு ஜாதகத்தின் ஆறாம் அதிபதியாக இருக்கும்போது, தன்னுடைய தசா புத்தியில் ஜாதகனைப் போட்டுப் பார்த்துவிடுவான். புரட்டி எடுத்துவிடுவான். அதற்கு யாரும் விதிவிலக்காக முடியாது.
ஆறாம் இடத்தானின் (அவன்தான் ஜாதகத்தின் நம்பர் ஒன் வில்லன்) மகாதிசை அல்லது வேறு திசையில் அவனுடைய புத்தி உங்களுக்கு நடந்தால் எச்சரிக்கையாக இருங்கள். தினமும் இறைவனை வழிபடுங்கள். குறிப்பாக விநாயகப் பெருமானை வழிபடுங்கள். அவர்தான் அங்கிங்கெனாதபடி எங்கும் - குளக்கரை, அரசமரத்தடி என்று எங்கும் இருக்கிறார். 27 நாட்களுக்கு ஒருமுறை உங்கள் ஜன்ம நட்சத்திர நாள் அன்று சிவன் கோவிலுக்குச் சென்று சிவபெருமானை அர்ச்சித்து வழிபடுங்கள். நம்பிக்கையோடு மனம் உருக வழிபடுங்கள்.
அந்த நம்பிக்கைதான் வழிபாட்டில் முக்கியம்!
----------------------------------------------------------------------
சீர்காழி அருகே உள்ள வைத்தீஸ்வரன் கோவில் என்னும் சிவஸ்தலம், இரண்டு விதங்களில் முக்கியமானது.
பார்த்தால் அசரவைக்ககூடிய பிரம்மாண்டமான கோவில் உள்ளது.
அங்கே உறைகின்ற சிவனாருக்கு, வைத்தியநாதர் என்று பெயர். நோயால் அவதிப்பட்டு, தன்னிடம் அடைக்கலமாக வரும் பக்தர்களுக்கு வைத்தியம் பார்க்கும் வைத்தியர் அவர்! Fees எதுவும் வாங்காத மருத்துவர் அவர். இந்திய மருத்துவக் கழகத்தின் (Medical Council of India) அனுமதியைப் பற்றிக் கவலைப் படாமல் வைத்தியம் பார்க்கின்றவர். Blood Test, Urine Test, ECG Test, CT Scan என்று நம்மிடம் பணம் பிடுங்கும் மருத்துவ பரிசோதனைகளுக்கெல்லாம் அவரிடம் வேலை இல்லை!
நம்பிக்கையுடன் அவரைப் பார்த்து, மனம் உருகப் பிரார்த்தனை செய்தால் போதும். நோய்கள் ஓடிவிடும்.
இரண்டு அந்த ஊரில் உறையும் செவ்வாய் பகவானுக்கு தனி சன்னதி உண்டு. அங்கார தோஷம் உள்ளவர்கள் அங்கே சென்று வழிபட வேண்டும்.
முருகப்பெருமான் முத்துக்குமாரசாமி என்ற பெயரில் அங்கே இருக்கிறார். அவரை வழிபட்டால் கிரகக் கோளாறுகளை எல்லாம் அவர் நீக்குவார்!
வைத்தீஸ்வரன் கோவில் எங்கே உள்ளது? எத்தனை தூரத்தில் உள்ளது? அதன் தலபுராணம் என்ன? அதன் முழுச் சிறப்பு என்ன? என்று
தெரிந்துகொள்ள விரும்புகிறவர்களுக்கான பக்கம் இணையத்தில் உள்ளது. அதன் சுட்டியைக் கொடுத்துள்ளேன். இங்கே க்ளிக்கிப் பாருங்கள்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...