Tuesday, May 18, 2021

கொரோனா ஆரம்பநிலை நோயாளிகளை வீட்டிலேயே பாதுகாப்பாக பராமரிக்கும் முறை.

 நாடெங்கும் பெரும்பாலான நோயாளிகள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்கின்றனர்.

இந்தப் பதிவு ஆரம்ப நிலை நோயாளிகளுக்கு மட்டுமே.
1. ஆரம்ப நிலை அறிகுறிகள்
80% வரை ஆரம்ப நிலையில் உள்ளவர்களே. இவர்களை வீட்டில் 2 வாரங்களுக்குத் தனி அறையில் வைத்துப் பராமரித்துக் கொள்ளலாம்.
லேசான காய்ச்சல், இருமல், தொண்டை வலி, தலை வலி, உடல் அசதி, வாசனை, சுவை இழப்பு, வாந்தி, வயிற்று வலி, வயிற்றுப்போக்கு போன்றவற்றுடன் ஆக்சிஜன் அளவு 94%-க்கும் அதிகம் என்றால் ஆரம்ப நிலை.
இவர்கள் ஆரம்பக்கட்ட மாத்திரைகளை மருத்துவரிடம் பெற்றுக்கொண்டு, வீட்டிலேயே 2 வாரங்களுக்குத் தனிமைப்படுத்திக் கொள்ளலாம்.
அடுத்த 5 நாட்களில் அறிகுறிகள் குறைந்துவிடும்; வாசனையும், சுவையும் படிப்படியாக மீண்டுவிடும்.
வெப்பமானி, பல்ஸ் ஆக்ஸிமீட்டர், ரத்த அழுத்தமானி ஆகியவை வீட்டில் இருக்க வேண்டும்.
இவர்கள் இணையம் அல்லது தொலைபேசி வழியாக மருத்துவர் ஒருவரின் தொடர் கண்காணிப்பில் இருக்க வேண்டும்.
முக்கியம்
5 நாட்கள் கடந்த பிறகும் காய்ச்சல் நீடிப்பது, இடைவிடாத இருமல் என அறிகுறிகள் தீவிரமடைந்தால், நிமிடத்துக்கு 24 முறைக்கும் மேல் மூச்சுவிடல், ஆக்சிஜன் அளவு 94% கீழே இறங்குவது போன்றவை நோயாளி அடுத்த நிலை அடைந்துவிட்டார் என்பதற்கு அறிகுறி. அவருக்கு மருத்துவமனை உதவி தேவை.
2. வீட்டில் பராமரிக்கும் முறைகள்
அறை ஜன்னல்களைத் திறந்து, காற்றோட்டத்துக்கு வழிசெய்யுங்கள். A/C உபயோகிக்க வேண்டாம்.
அறை, கழிப்பறை, நோயாளி பயன்படுத்தும் உணவுத்தட்டு, கதவுக் கைப்பிடி உள்ளிட்ட எல்லாப் பொருள்களையும் தினமும் 1% சோடியம் ஹைப்போகுளோரேட் கிருமிநாசினியால் சுத்தப்படுத்துங்கள்.
தொற்றாளர் தனிமையில் இருந்தாலும், அவர் பகல் முழுவதும் முகக்கவசம் அணிய வேண்டும்.
அவர் அடிக்கடி சோப்பு போட்டுக் கைகளைக் கழுவிக்கொள்ள வேண்டும்.
மற்றவர்கள் அவரிடமிருந்து 6 - 10 அடி தூரம் தள்ளியிருக்க வேண்டும். அவரைப் பராமரிப்பவரும் வீட்டில் உள்ள மற்றவர்களும் முகக்கவசம் அணிய வேண்டியது கட்டாயம்.
தினமும் குறைந்தது 2 முறை அதை மாற்றிக்கொள்ள வேண்டும். வீட்டில் உள்ளவர்கள் அவசியமில்லாமல் வெளியில் செல்லக் கூடாது. அடுத்தவர்கள் வீட்டுக்கு வரவும் அனுமதிக்க கூடாது.
பராமரிப்பவரும் கைகளை அடிக்கடி சோப்பு போட்டுக் கழுவிக்கொள்ள வேண்டும்.
தொற்றாளருக்கான உணவுகள் அவரது அறையின் கதவுக்கு அருகில் வைக்கப்பட்டு, தொற்றாளர் எடுத்துக்கொள்ளச் செய்ய வேண்டும்.
பயன்படுத்திய முகக்கவசங்களைக் கிருமிநாசினி கலக்கப்பட்ட தண்ணீரில் நனைத்த பின், மூடி உள்ள குப்பைத் தொட்டியில் போடவேண்டும்.
அவரது துணிகளைக் கிருமிநாசினி கலக்கப்பட்ட தண்ணீரில் அல்லது வெந்நீரில் நனைத்த பின்பு சலவை செய்யலாம்.
தொற்றாளர் குணமானதும் அவரது அறையைச் சுத்தப்படுத்தி, 5 நாட்கள் கழித்து மற்றவர்கள் பயன்படுத்தலாம்.
உடல் வெப்பத்தையும், பல்ஸ் ஆக்ஸிமீட்டரில் ஆக்சிஜன் அளவையும், ரத்த அழுத்தத்தையும், தினமும் தலா 4 முறை அளந்து குறித்துக் கொள்ள வேண்டும்.
மாறுதல் தெரிந்தால் மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும்.
துணை நோய்கள் இருந்தால் அவற்றுக்கான மாத்திரைகளைத் தவறாமல் எடுத்துக்கொள்ள வேண்டும்.
3. ஆக்சிஜன் அளவை அதிகரிக்கக் குப்புறப் படுப்பது
ஆக்சிஜன் அளவை அதிகரிக்கத் தொடர்ந்து 2 - 4 மணி நேரம் குப்புறப் படுக்க வேண்டும்.
தினமும் 4 - 8 முறை இப்படிப் படுத்துக்கொண்டால் நல்லது.
இரவில் தொடர்ந்துகூடக் குப்புறப் படுத்துக் கொள்ளலாம்.
ஆனால், கர்ப்பிணிகள், தீவிர இதயப் பிரச்சினை இருப்பவர்கள், முதுகெலும்பில் பிரச்சினை உள்ளவர்கள் இதற்கு விதிவிலக்கு.
சாப்பிட்ட பின் அரை மணி நேரத்துக்குக் குப்புறப் படுக்கக் கூடாது.
எந்நேரமும் படுத்தே இருக்காமல் அறைக்குள்ளே அவ்வப்போது நடக்கலாம். இதனால் ரத்த உறைவு ஏற்படாது.
பிராணயாமம், பலூன் ஊதுவது, ஸ்பைரோமீட்டரில் காற்றை ஊதுவது உள்ளிட்ட மூச்சுப் பயிற்சிகளையும் செய்யலாம்.
4. உணவும், ஊட்டச்சத்தும்
குறைந்தது ஒரு மாதத்துக்குப் புரதச்சத்து, நீர்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்துள்ள உணவுகளைத் தர வேண்டும்.
காலை டிபன்: இட்லி, தோசை, ஊத்தாப்பம், பொங்கல், கிச்சடி, கேசரி, சப்பாத்தி, பருப்பு, சாம்பார், சட்னி.
மதியம்: சோறு, சப்பாத்தி, பாசிப்பருப்பு சாம்பார், கீரை, மிளகு ரசம், மோர், தயிர். தினமும் இரண்டு வகைக் காய்கள், ஒரு பழம்.
மாலை ஸ்நாக்ஸ் : பயறு, சுண்டல், கொண்டைக்கடலை, சூப் கொடுப்பது நல்லது.
இரவு டிபன்: காலை உணவு போலவே
மீன், இறைச்சிகளை அடிக்கடி எடுத்துக்கொள்ளலாம்.
இடைவேளையில் மஞ்சள் பால், மிளகுப் பால், சுக்கு, இஞ்சி கலந்த தேநீர் குடிப்பது ஆரோக்கியம் தரும்.
தினமும் 2 முட்டை அவசியம்; அரை லிட்டர் பால், 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். மதுவும் புகையும் ஆகாது.
தொற்றாளர் மூன்று முறையேனும் நீராவி பிடிப்பதும் தொண்டையை உப்புநீரில் கொப்பளிப்பதும் நல்லது. தொற்றாளர் மட்டுமல்லாமல் வீட்டில் உள்ள அனைவரும் மேற்கொள்ளலாம்.
இவை எல்லாமே கரோனா தொற்றாளர்களுக்கு ஆற்றலைக் கொடுப்பதோடு, நோய் எதிர்ப்பாற்றலையும் மேம்படுத்தும். கரோனா மறுபடியும் தொற்றாத அளவுக்குப் பாதுகாப்பு கொடுக்கும்.
90 நாட்கள் கழித்து நோயாளி கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்.
வீட்டில் வைத்து பராமரிப்பது, நோயாளிக்கும், குடும்பத்தினருக்கும் மிகுந்த மனவலிமை கோரும் விஷயம்.
முதல் அடியை எடுத்து வையுங்கள்; இறைவன் வலிமை தருவார்.
நன்றி : மருத்துவர் : திரு .கு.கணேசன் | ஹிந்து தமிழ் | அரசு உதவி கையேடு

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...