Friday, April 13, 2018

12 ராசிக்களுக்கான விளம்பி வருட தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்*

ஜோதிடர் சோ.சந்திரசேகரன் துல்லியமாகக் கணித்து நமக்கு வழங்கியுள்ளார்.
ஸ்வஸ்தி ஸ்ரீ மங்களகரமான விளம்பி வருஷம் சித்திரை மாதம் 1-ம் தேதி (14-04-2018) சனிக்கிழமை காலை 08-13 க்கு அதாவது சூரிய உதயாதி நாழிகை 5-30 க்கு ரிஷபலக்கினத்தில் கும்ப நவாம்ச லக்கினத்தில் மங்களகரமான விளம்பி வருஷம் பிறக்கிறது.
விளம்பி வருஷத்திய நவநாயகர்கள்
ராஜா - சூரியன்
மந்திரி - சனி
சேனாதிபதி - சுக்கிரன்
அர்க்காதிபதி - சுக்கிரன்
மேகாதிபதி - சுக்கிரன்
ஸஸ்யாதிபதி - சந்திரன்
ரஸாதிபதி - புதன்
நீரஸாதிபதி - சந்திரன்
தானியாதிபதி - சூரியன்

பொதுப் பலன்கள்
ராஜா சூரியனாக இருப்பதால், நாட்டில் பல இடங்களில் ஆட்சி மாற்றம் இருக்கும். கோடைக்காலத்தில் அதிக உஷ்ணம் இந்த ஆண்டு இருக்கும். சேனாதிபதி, அர்க்காதிபதி, மேகாதிபதி ஆகியவை சுக்கிரனாக இருப்பதால், மழைக்குக் குறைவில்லை. பயிர்கள் செழித்து தானிய உற்பத்தி நன்கு விருத்தியடையும். விவசாயம் செழிக்கும். சுக்கிரனும் சூரியனுடன் சேர்ந்து குரு பார்வை பெறுவதால், பெண்களுக்குத் தேவையான துணிமணிகள், வாசனைத் திரவியங்கள், அணிகலன்கள் ஆகியவை நன்கு வியாபாரம் ஆகும். அவற்றின் உற்பத்தியும் பெருகும். பசுக்கள் நன்கு பால் கறந்து பால் உற்பத்தி பெருகும். கலைகளில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
இந்த ஆண்டின் பிற்பகுதியில் வெள்ளி, தங்கத்தின் விலை உயரும். இந்த ஆண்டு இரண்டு சந்திர கிரகணமும் மூன்று சூரிய கிரகணமும் ஏற்படும். ஒரே ஒரு சந்திர கிரகணம் மட்டும், அதாவது 27.07.2018 அன்று ஏற்படும் சந்திர கிரகணம் மட்டும் இந்தியாவில் தெரியும். மற்ற கிரகணங்கள் இந்தியாவில் தெரியாது.
இந்த ஆண்டு சனிப் பெயர்ச்சி கிடையாது. ஆண்டு முழுதும் தனுசு ராசியிலேயே அவர் சஞ்சாரம் செய்கிறார். குரு, 11.10.18 அன்று துலாமில் இருந்து விருச்சிகத்துக்கும், ராகு கேதுக்கள் 6.3.2019 அன்று முறையே கடகத்திலிருந்து மிதுனத்துக்கும், மகரத்திலிருந்து தனுசுக்கும் பெயர்கிறார்கள்.
இந்த ஆண்டு ஆதாயம், விரயம் கணக்குப் பார்க்கும்போது, ஆதாயம் 65-ஆகவும் விரயம் 59-ஆகவும் இருக்கிறது. விரயத்தைவிட ஆதாயம் அதிகம் இருப்பதால், செலவைவிட வரவு அதிகமாக இருக்கும். இது ஒரு நிம்மதியான செய்தி.
இந்த ஆண்டு ரிஷப லக்கினத்தில் ஆண்டு பிறக்கிறது. லக்கினத்துக்கு 8-ம் இடத்தில் செவ்வாய், சனி இருப்பதால், இவ்வாண்டில் சனி அல்லது செவ்வாய் தசை அல்லது புத்தி நடப்பவர்கள், தங்கள் வீட்டில் ஆயுஷ் ஹோமம், மிருத்யுஞ்ஜய ஹோமம் செய்துகொள்வது நல்லது.
அடுத்து, 12 ராசிகளுக்கான தனிப்பட்ட பலன்களைப் பார்ப்போம
🔯மேஷம்
(அஸ்வினி, பரணி, கார்த்திகை 1-ம் பாதம்)
அஷ்டமத்துச் சனியின் பாதிப்பால் கடந்த இரண்டரை ஆண்டுகாலமாக கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு, இந்த வருடம் அதன் பிடியிலிருந்து விடுபட்டதற்காக நிம்மதிப் பெருமூச்சு விடலாம். ஜென்ம ராசிக்கு குரு பார்வை இருப்பதால், வரும் கஷ்டங்கள் யாவும் சூரியனைக் கண்ட பனியென விலகும்.
சித்திரை மாதம், கலைஞர்களுக்கு ஒரு ஆதரவான மாதம். அவர்கள் திறமைகள் வெளிப்பட்டு மற்றவர்களால் மதிக்கப்படும். ராசி அதிபதியாகிய செவ்வாய் 9-ம் வீட்டில் சனியுடன் சேர்ந்து இருப்பதால், வெளிநாடு சென்று சம்பாதிக்க வேண்டும் என்று விழைபவர்களுக்கு இது ஒரு ஆதரவான மாதம். அவர்கள் விருப்பம் நிறைவேறும் மாதம்.
வைகாசி மாதம், இந்த ராசிக்காரர்கள் தங்கள் உடல் நலத்தை கவனித்துக்கொள்ள வேண்டிய மாதம். ராசிக்கு 6-ம் அதிபதியாகிய புதன் இந்த ராசியில் சஞ்சாரம் செய்வதால் உடல்நிலை பாதிப்புக்கு உள்ளாகும். அதேபோல், ஐப்பசி மாதமும் இந்த ராசிக்காரர்களுக்கு உடல் நிலை பாதிப்புக்கு உள்ளாகும். அப்போது 6-ம் வீட்டுக்குரிய புதனின் நேர்பார்வை இந்த ராசிக்குக் கிடைக்கிறது. ஆகவே இந்த ராசிக்காரர்கள் இந்த மாதங்களில் தங்கள் உடல் நலத்தில் அதிக கவனம் செலுத்துவது நலம்.
வீடு கட்டவேண்டுமென்ற அவா எல்லோருக்கும் எழக்கூடியதே! எவ்வளவு முயன்றும் அது முடியாமல்போவது மிகுந்த மனத் தளர்ச்சியைக் கொடுக்கும். இந்த ஆண்டு தொடக்கம் முதல் ஐப்பசி மாதம் முடிய, உங்களுக்கு வீடுகட்ட அனுகூலமான காலமாக இருப்பதால், அது சம்மந்தமான எண்ணம் உடையவர்கள் தங்கள் முயற்சியைத் தொடரலாம். உங்கள் முயற்சி பலிதமாகும்.
புரட்டாசி, ஐப்பசி மாதங்களில் வாகனங்களில் செல்வோர் கவனத்துடன் செல்ல வேண்டிய காலமிது. உடல் காயங்கள் ஏற்படக்கூடிய காலமிது.
கவனமாக இருப்பது நமக்கு நல்லது.
தனாதிபதியாகிய சுக்கிரன் வைகாசி, புரட்டாசி மாதங்களில் தன் சொந்த வீட்டிலேயே சஞ்சாரம் செய்கிறார். அதுவும் புரட்டாசி மாதத்தில் குருவுடன் சஞ்சாரம் செய்கிரார். அந்த மாதங்களில் திருமணத்துக்குக் காத்திருப்பவர்களுக்கு திருமண யோகம் வருகிறது.
பொருளாதாரத்தைப் பார்க்கும்போது ஆவணி, தை மாதங்கள் சற்று நெருக்கடியைக் கொடுக்கக்கூடியவை. மற்ற மாதங்கள் பொருளாதாரம் சரளமாகவே தென்படுகிறது.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு, ஆனி மாதத்தில் இடமாறுதல் ஏற்பட வாய்ப்புக்கள் அதிகம். புரட்டாசி முதல் மார்கழி மாதம் உள்ள காலங்களில் உங்கள் தனித்தன்மை மற்றவர்களால் போற்றப்படும். அப்போது உங்கள் கௌரவமும் சுற்றம், மற்றும் நண்பர்கள் மத்தியில் உயரும்.
இந்த ஆண்டுஆதாயம், விரயம் கணக்குப் பார்க்கும்போது, ஆதாயத்திவிட விரயமே அதிகமாகக் காணப்படுகிறது. ஆகவே செலவு அதிகரிக்கும்.
🔯 ரிஷபம்
(கார்த்திகை 2,3,4-ம் பாதங்கள், ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ம் பாதங்கள்)
ராசியதிபதி சுக்கிரன். அவர் 12-ம் இடத்தில் சூரியனுடன் சேர்ந்து வருட ஆரம்பத்தில் இருக்கிறார். 6-ம் இடத்திலுள்ள குருவின் பார்வை வேறு சுக்கிரனுக்குக் கிடைக்கிறது. ஆக, உங்கள் உடல் நிலையில் உபாதைகள் ஏற்படக்கூடும். சுக்கிரனுடன் தன்வந்திரியான சூரியனும் இருப்பதால், பாதிப்புக்கள் கட்டுக்குள் இருந்து வரும். மருத்துவ உதவியுடன் உங்கள் உபாதையை வெல்லலாம். அதேபோன்று, புரட்டாசி மாதமும் உங்கள் உடல்நிலை பாதிப்புக்கு உள்ளாகும்.
வைகாசி மாதத்தில் சுக்கிரன் 2-ம் வீட்டில் சஞ்சரிப்பதால், உங்கள் பொருளாதாரம் சரளமாக இருக்கும். ஆனி, ஆடி மாதங்களில் வாகனங்களில் செல்வோர் எச்சரிக்கையுடன் வாகனங்களை ஓட்டுவது நல்லது.
ஆடி, கார்த்திகை மாதங்கள் சொந்த வீட்டுக் கனவில் இருப்போருக்கு அனுகூலமான மாதங்கள். ஆக அதற்கான முயற்சியில் ஈடுபட்டால் உங்கள் முயற்சி பலிதமாகும். அதேபோன்று, நான்கு சக்கர வாகனம் வாங்க வேண்டுமென விழைவோருக்கு இது ஒரு ஆதரவான காலம். முயற்சி செய்யுங்கள். உங்கள் முயற்சி பலிதமாகும்.
படிக்கும் மாணவர்களுக்கு ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை, பங்குனி மாதங்கள் அனுகூலமாகத் தெரிகின்றன. இந்த மாதங்களில் வரும் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெறமுடியும். தை மாதம் மாணவர்கள் தங்கள் கல்வியில் சற்று அதிகப்படியாக கவனத்துடன் இருத்தில் அவசியம்.
அடுத்து, வேலை தேடுபவர்கள். படித்துவிட்டு வேலை தேடும் படலத்தில் இருப்பார்கள். அவர்களுக்கு வைகாசி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, பங்குனி மாதங்கள் அனுகூலமாக இருக்கின்றன. அப்போது அவர்கள் கூடுதல் முயற்சி செய்தால் அவர்கள் முயற்சிக்குப் பலன் கிடைக்கும்.
பொருளாதாரத்தைப் பார்க்கும்போது, சித்திரை, ஆனி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை, மாசி, பங்குனி மாதங்கள் மிக்க அனுகூலமாக இருக்கின்றன. அந்தக் காலங்களில் பணப்புழக்கம் மிக சரளமாக இருப்பதோடு, கொடுக்கல் வாங்கல்களும் தடையின்றி நடைபெறும்.
இந்த ஆண்டு முழுவதும் சனி பகவான் 8-ம் இடத்தில் சஞ்சாரம் செய்கிறார். சனி பகவான் 9, 10–ம் வீடுகளுக்கு அதிபதியல்லவா! ஆக, இந்த ராசிக்காரர்களின் தகப்பனார் உடல்நிலை சற்று பாதிப்புக்கு உள்ளாகும். பிறந்த ஜாதகத்தில் ஆயுள் பாவம் நன்றாக இருப்பின் ஆயுளுக்குக் குறைவில்லை.
வேலையில் இருப்போருக்கு அதில் பல சிறு, சிறு தொந்தரவுகள் இருக்கக்கூடும். அதுவும் சனி தசை நடந்து வருவோருக்கு சனியின் பாதிப்புகள் சற்று அதிகமாகவே இருக்கும். அவர்கள் வீட்டில் “கோளறு பதிகம்” என்ற ஸ்லோகத்தைப் படித்துவரவும். இது திருஞானசம்மந்தர் பாடியது. தமிழில்தான் உள்ளது.
🔯மிதுனம்
(மிருகசீரிஷம் 3,4-ம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3-ம் பாதங்கள்)
இந்த ஆண்டுத் தொடக்கத்திலேயே குருவின் பார்வை இந்த ராசிக்குக் கிடைக்கிறது. குரு பார்க்கக் கோடிப் புண்ணியமன்றோ. இந்த ஆண்டு பணப் பற்றாக்குறை அகலும். சம்பாத்தியதைப் பெருக்கிக்கொள்வீர்கள். லாபஸ்தானமான மேஷத்தில் சூரியனும் சுக்கிரனும் இருக்கிறார்கள். சூரியன் 3-ம் வீட்டுக்கு அதிபதியல்லவா! அதேபோல், சுக்கிரன் 5-ம் வீட்டுக்கு அதிபதி. இவர்களுக்குக் குருவின் பார்வை வேறு இருப்பதால், இந்த ராசிக்காரர்கள் சகோதரராலும், தன் குழந்தைகளாலும் பலன் பெறுவர். ராசிக்கு 7-ல் சனியும் செவ்வாயும் சேர்ந்து இருக்கிறார்கள். 7-ம் இடம் களத்திர ஸ்தானமன்றோ! ஆக, திருமணமானவர்களுக்கு களத்திரத்திடனான உறவு சுமுகமாக இருக்காது. அவ்வப்போது பிரச்சனைகள் தலை தூக்கும். ஆக, குடும்பத்தில் எழும் பிரச்னைகளை நிதானத்துடனும், சாமர்த்தியமாகவும் கையாள்வது நல்லது. முடிந்தால் சனி பகவானுக்காக திருநள்ளாருக்கும், செவ்வாய்க்காக வைத்தீஸ்வரன் கோவிலுக்கும் சென்று பரிகாரம் செய்து வருவது நல்லது. செவ்வாயின் பார்வை ராசி மேல் விழுவதால் உடலில் காயங்கள், ரணங்கள் ஏற்படக்கூடும்.
அடுத்து, இந்த ஆண்டு பொருளாதாரம் எப்படிருக்கிறதென்று பார்ப்போம். 2-ம் வீடான கடகம், தன ஸ்தானம் என்றழைக்கப்படுகிறது. அதில் ராகு இருக்கிறார். அவர் அநேகமாக இந்த ஆண்டு முழுவதும், அதாவது 6.3.2019 வரை கடகத்திலேயே இருக்கிறார். ராகு, மற்ற கிரகங்களின் பார்வைக்கேற்ப பலனைக் கொடுப்பார் என்றாலும், பொதுவாக நல்ல பலன்களையே கொடுப்பார்.
வீடு கட்டும் யோகம் இந்த ராசிக்காரகளுக்கு எப்படி இருக்கிறதென்று பார்ப்போம். ஆண்டின் பிற்பகுதியில் இவர்களுக்கு வீடு கட்டும் யோகம் வருகிறது. அதாவது, கார்த்திகை முதல் பங்குனி முடிய உள்ள காலம் வீடு கட்டுவதற்கு மிக்க அனுகூலமான காலம்.
அடுத்து, வேலை தேடும் முயற்சியில் இருப்போருக்கு அனுகூலமான காலத்தைப் பார்ப்போம். 10-ம் வீட்டுக்கு உரியவர் குரு. அவர் 5-ம் வீட்டில் தற்போது சஞ்சாரம் செய்கிறார். அவர் 6-ம் இடமான விருச்சிகத்துக்கு இந்த அக்டோபர் மாதம் பெயர்கிறார். அப்போதிலிருந்து ஆண்டு இறுதிவரை அவர் விருச்சிகத்திலேயே இருக்கிறார். இந்தக் காலம், வேலை தேடுபவர்களுக்கு மிக்க அனுகூலமான காலம். இந்த ராசிக்காரர்கள் திருமாலை வணங்கிவருவது அவர்களுக்கு நன்மை பயக்கும். ஸ்ரீ ராமஜெயம் எழுதும் பழக்கம் உள்ளவர்களுக்கு அனுகூலமான பலன்கள் காணப்படுகின்றன.
🔯கடகம்
(புனர்பூசம் 4-ம் பாதம், பூசம், ஆயில்யம்)
இந்த ஆண்டு, அநேகமாக முழுவதும் ஜென்ம ராசியில் ராகுவும், 7-ம் இடத்தில் கேதுவும் இருக்கிறார்கள். இது சர்ப்ப தோஷமே. இதற்குப் பரிகாரம் செய்துகொள்ள, காளஹஸ்தியோ அல்லது திருநாகேஸ்வரமோ செல்வது நல்லது.
இந்த ஆண்டு முழுவதும் 7-ம் வீட்டின் அதிபதியான சனி 6-ம் வீட்டில் மறைந்துவிடுகிறார். ஆகவே, இந்த ராசிக்காரர்களுக்கு தங்கள் களத்திரத்துடன் மன வேற்றுமை, கருத்து வேற்றுமை ஆகியவை ஏற்பட வழி உண்டு. சில சமயங்களில் பிரிவும் ஏற்படலாம். ஆக, சந்தர்ப்பத்துக்கு ஏற்றவாறு நடந்துகொள்ளுதல், ஒருவருக்கொருவர் புரிந்துகொண்டு நடப்பது, பொறுமையை கடைப்பிடிப்பது ஆகியவை மிக இன்றியமையாதவை.
11.10.2018-க்குப் பிறகு, குருவானவர் விருச்சிகத்துக்குப் பெயர்கிறார். அவர் 6-ம் வீட்டுக்கு அதிபதியல்லவா! 6-ம் வீட்டுக்கு அதிபதியாகி ஜென்ம ராசியைப் பார்ப்பதால், உடல் அசௌகரியங்கள் இருந்து வரும். ஆகவே, வியாழக்கிழமைகளில் அருகிலுள்ள கோவிலுக்குச் சென்று குருவுக்கு அர்ச்சனை செய்துவருவது நல்லது.
அடுத்து, பொருளாதாரத்தைப் பார்ப்போம். 2-ம் வீட்டுக்கு அதிபதி சூரியன். அவர் சித்திரை, வைகாசி மாதங்களில் முறையே 10-ம் வீட்டிலும், 11-ம் வீட்டிலும் சஞ்சாரம் செய்கிறார். 10-ம் வீடு உச்ச வீடன்றோ. ஆகவே சித்தரை மாதத்தில் பொருளாதாரம் மிகச் சரளமாக இருக்கும். வைகாசியில் லாபஸ்தானத்தில் சஞ்சரிப்பதால், பணப்புழக்கம் நன்றாகவே இருக்கிறது.
வேலை தேடும் படலத்தில் இருப்போருக்கு வேலை கிடைக்கக்கூடிய வாய்ப்புக்கள் இருக்கின்றன. ஆனி மாதத்தில் சூரியன் விரய ஸ்தானத்துக்குச் சென்றுவிடுகிறார். ஆகவே, செலவுகள் சற்று அதிகமாகவே இருக்கும். ஆடி, ஆவணி மாதத்தில் சரளமான பொருளாதர நிலையை எதிர்பார்க்கலாம். புரட்டாசி மற்றும் மாசி மாதத்தில் பொருளாதாரத்தில் சற்று சுணக்கம் ஏற்படும். மார்கழி மாதத்தில் சூரியன் 6-ம் வீட்டில் இருப்பதால், அப்போதும் வேலை வாய்ப்புகள் உண்டாகும்.
புதன் உங்களுக்குப் பயணங்களைக் கொடுப்பவர். சித்திரை மாதம் சிலருக்கு அயல்நாட்டுப் பயணம் ஏற்படலாம். சித்திரை, வைகாசி மாதங்களில் உத்தியோகம் சம்மந்தமான பயணம் சிலருக்கு ஏற்படும். கார்த்திகை மாதத்தில் மற்றும் மாசி மாதத்தில் புதன் வக்கிர கதியில் இருக்கிறார். அப்போது வியாபாரத்தில் இருப்போருக்கு வியாபாரம் அனுகூலமாக இருக்காது.
வீடு கட்ட வேண்டுமென்ற அவா எல்லோருக்கும் இருக்கும். இந்த ராசிக்காரர்கள் மட்டும் இதற்கு விதிவிலக்கா என்ன? இந்த ஆண்டு தை, மாசி, பங்குனி மாதங்கள் இவர்களுக்கு மனை வாங்க, வீடு கட்ட, அனுகூலமான மாதங்கள். வீடு கட்டும் எண்ணம் உள்ளவர்கள் இந்த மாதங்களில் முயற்சி செய்தால், அவர்கள் எண்ணம் பலிதமாகும்.
இந்த ஆண்டு இவர்களுக்கு ஆதாயம் 14 ஆகவும், விரயம் 8 ஆகவும் இருப்பதால், செலவைவிட வரவு அதிகமாகி, சேமிக்கமுடியும்.
🔯சிம்மம்
(மகம், பூரம், உத்திரம் 1-ம் பாதம்)
ராசி அதிபதியாகிய சூரியன் மேஷத்தில் உச்சம். அதாவது 9-வது வீட்டில் உச்சம். அவருடன் சுக்கிரனும் சேர்ந்துகொள்கிறார். ஆக, இந்த ராசிக்கரர்களுக்கு உத்தியோக விஷயமாக வெளிநாட்டுப் பயணமோ அல்லது நெடுந்தூரப் பயணமோ அமைவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. அதுமட்டுமன்றி கலைத் துறையினருக்கு மிகவும் அனுகூலமாக இந்தக் காலம் இருக்கும்.
சூரியனுடன் சுக்கிரன் சேர்வதால், சூரியன் அஸ்தங்க தோஷம் அடைவார் என்ற தவறான கருத்து இருக்கிறது. சுக்கிரன், சூரியன் சேர்க்கை சுக்கிரனை மேலும் பலப்படுத்த்தும். சுக்கிரன் இன்னும் அதிக நன்மைகளைக் கொடுக்கும். இதுதான் அனுபவபூர்வ உண்மை.
அடுத்ததாக, இந்த ராசிக்காரகளுக்கு 5-ம் வீட்டில் சனியும், செவ்வாயும். இரண்டு பாவிகள் புத்திர ஸ்தானத்தில் இருப்பது நல்லது அல்ல; சித்திரை 19-ல் செவ்வாயானவர் மகரத்துக்குப் பிரவேசம் செய்துவிடுகிறார். இருப்பினும், இந்த ஆண்டு முழுவதும் சனியானவர் 5-ம் பாவத்திலேயே இருக்கிறார். ஆக, இந்த ராசிக்காரர்களுக்கு சந்தான விருத்திக்குத் தாமதம் ஆகலாம். சிலருக்குக் கருச்சிதைவுகூட ஏற்படக்கூடும். ஆக, கர்ப்பிணியாக இருக்கும் இந்த ராசிப் பெண்கள், தேவையான மருத்துவ ஆலோசனைகளைப் பெற்று மருத்துவ உதவியுடன் இருக்கவும்.
அடுத்து, பொருளாதாரத்தைப் பார்ப்போம். இந்த ராசிக்காரர்களுக்கு சித்திரை, ஆடி, பங்குனி மாதங்களில் மற்ற மாதங்களைவிட சற்று கூடுதலான பொருளாதார நெருக்கடி இருக்கக்கூடும்.
உத்தியோக ஸ்தானத்தைப் பார்க்கும்போது சித்திரை, வைகாசி ஆடி மாதங்கள் அனுகூலமாக இருக்கின்றன. அப்போது வேலை தேடும் படலத்தில் இருப்போருக்கு வேலைவாய்ப்பு கிட்டுதலும், ஏற்கெனவே வேலையில் இருப்போருக்கு அதில் சுமுகமான நிலையோ, அல்லது பதவி உயர்வோ கிட்டக்கூடும். தை, பங்குனி மாதங்களில் வேலையில் இருப்போர் சற்று எச்சரிக்கையுடன் இருத்தல் நல்லது. அதிகப்படியான வேலைப்பளு, மேலதிகாரிகளுடன் நல்லுறவின்மை ஆகியவை இருக்கக்கூடும்.
இந்த ராசியில் திருமண வயது வந்த ஆணும், பெண்ணும் இருப்பார்கள். அவர்களுக்கு திருமணத்துக்கு நிறைய தடங்கல்கள் வரும். ராசிக்கு 5-ல் சனி இருப்பதால் இந்தத் தடங்கல்கள் வரும். ஆக, அவர்கள் சனிக்கிழமைகளில் அருகிலுள்ள சிவாலயத்துக்குச் சென்று சனி பகவானுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுதல் நன்மை பயக்கும்.
வீடு கட்ட விழைவோருக்கு இந்த ஆண்டுக் கடைசியில், அதாவது தை, மாசி, பங்குனி மாதங்கள் அனுகூலமாக இருக்கின்றன. வெகு நாளாக வீடு கட்ட முயற்சித்து அது நடக்காமல் இருப்போர், மாயவரம் அருகிலுள்ள ‘திருப்புகலூர்’ என்னும் தலத்துக்குச் சென்று பரிகாரம் செய்து வரவும். அவர்கள் கனவு நனவாகும
🔯கன்னி (உத்திரம் 2,3,4-ம் பாதங்கள், ஹஸ்தம், சித்திரை 1,2-ம் பாதங்கள்)
ராசியதிபதி புதன், ஆண்டுத் தொடக்கத்தில் மீனத்தில் நீசம் பெறுகிறார். அவரை செவ்வாய் தன் 4-ம் பார்வையால் பார்க்கிறார். செவ்வாய் இந்த ராசிக்கு அஷ்டமாதிபதியல்லவா? ஆக, உடலில் காயங்கள், ரணங்கள் ஏற்படக்கூடும். வாகனத்தில் செல்லும்போதோ அல்லது கூரிய ஆயுதங்களைக் கையாளும்போதோ எச்சரிக்கையுடன் இருத்தல் நல்லது.
குரு 2-ம் இடத்தில், அநேகமாக புரட்டாசி மாதம் வரையிலும் சஞ்சாரம் செய்கிறார். ஆக, இந்தக் காலத்தில் உங்களுக்கு பணப்புழக்கத்துக்குக் குறைவில்லை. மனைவி மூலமாகவும் சிலருக்குப் பணம் கிடைப்பதற்கு வழி உண்டு. வியாபாரத்தில் இருப்போருக்கும் இந்த புரட்டாசி மாதம் முடிய பணப்புழக்கத்துக்குக் குறைவில்லை.
அடுத்ததாக, சனியின் பலன்களைப் பார்ப்போம். சனி இந்த ஆண்டு முழுவதும் தனுசிலேயே இருக்கிறார். அதனில் இருந்து ஜென்ம ராசியைப் பார்க்கிறார். சனி 6-ம் வீட்டுக்கு உடையவரல்லவா? ஆக, உங்கள் உடல் நிலை அடிக்கடி பாதிப்புக்கு உள்ளாகும். சனி ஒரு குளிர்ந்த கிரகமல்லவா? ஆக, உங்களை குளிர்ச்சி சம்பந்தமான நோய்கள் உபாதைகளைக் கொடுக்கும். சனி 5-ம் வீட்டுக்கும் அதிபதியல்லவா? நோயைக் கொடுப்பதுபோல குணத்தையும் சனி கொடுப்பார். ஆகவே, நீங்கள் கவலைப்பட வேண்டாம்.
அடுத்தது, உங்களுக்கு 5-ல் கேது. கேது 5-ல் இருப்பதால் நீங்கள் விநாயகரையோ அல்லது ஆஞ்சநேயரையோ வழிபட்டு வாருங்கள். உங்கள் குறைகள் களையப்படும். அதே நேரத்தில், நீங்கள் மற்றவர்களுக்குச் செய்யும் உதவிகள் அவர்களால் மறக்கப்படும். நீங்கள் எதிர்பார்ப்பதுபோல் அவர்கள் உங்களுக்கு நன்றி உள்ளவர்களாக இருக்கமாட்டார்கள். உங்களுக்கு அவர்கள் காரியங்களால் மன வருத்தம் உண்டாகும். இது தவிர்க்க முடியாதது. ஆகவே, செய்த உதவிக்கு பிரதிபலன் எதுவும் எதிர்பார்க்காதீர்கள்.
அடுத்தது குருவின் பார்வையை நாம் பார்க்க வேண்டும். குரு, இந்த ஆண்டு புரட்டாசி 25-ம் தேதி வரையிலும் துலாமிலேயே இருக்கிறார். அங்கிருந்து 6-ம் வீடு, 8-ம் வீடு, 10-ம் வீடுகளைப் பார்க்கிறார். 6-ம் வீடு நாம் செய்யும் அடிமைத் தொழிலைக் குறிக்கிறது. அந்த வீட்டுக்கு குருவின் பார்வை இருப்பதால், பணிபுரியும் இடத்திலுள்ள தொல்லைகள் குறைந்து காணப்படும். அத்துடன் இல்லாமல், அங்கு அனுகூலமான சூழ்நிலைகள்கூடக் காணப்படும்.
அடுத்தது 8-ம் இடம். அது நமக்க வர வேண்டிய பிதுரார்ஜித சொத்துகள், பிராவிடண்ட் ஃபண்டு, கிராஜுவிடி போன்றவற்றைக் குறிக்கிறது. அந்த வீட்டுக்கு குரு பார்வை இருப்பதால், அவை கிடைக்க வேண்டியவர்களுக்கு அந்தப் பணம் வந்து சேரும். 10-ம் இடம் ஜீவன ஸ்தானம். அதற்கும் குரு பார்வை கிடைப்பதால், தொழிலில் உள்ள சுணக்கங்கள் தீர்ந்து சுமுகமான சூழ்நிலை உருவாகும்.
திருமணத்துக்காகக் காத்திருப்பவர்களுக்கு இந்த ஆண்டின் முன்பாதி பிரகாசமாக இருக்கிறது. பின்பாதி அவ்வளவு பிரகாசமாக இல்லை. ஜென்ம ஜாதகத்தில் குருபலன் வலுவாக இல்லாவிடில், இந்த ஆண்டு திருமணம் நடப்பது சிரமம்.
🔯துலாம்
(சித்திரை 3,4-ம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3-ம் பாதங்கள்)
இந்த ராசிக்காரர்களுக்கு ஜென்மத்தில் குரு; அவர் 6-ம் வீட்டுக்கு அதிபதி. 6-ம் வீடும் லக்கினமும் சம்பந்தப்பட்டால் என்னவாகும்? உடல் நலன் பாதிக்கும். குரு, புரட்டாசி மாதம் 25-ம் தேதி முடிய துலாமில் இருக்கிறார். ஆக, இந்தக் காலத்தில் உங்கள் உடல் நலன் பாதிப்புக்கு உள்ளாகும். குரு பெயர்ச்சியாகிவிட்டால் இந்தத் தொந்தரவு இருக்காது.
அடுத்து, குருவானவர் 7-ம் வீட்டைப் பார்க்கிறார். 6-ம் வீட்டுக்கு உரியவர் 7-ம் வீட்டைப் பார்த்தால் என்னவாகும்? ஏற்கெனவே திருமணம் ஆனவருக்கு, தன் வாழ்க்கைத் துணைவியருடன் கருத்து வேற்றுமை உண்டாகும். சமயங்களில் பிரிவும் சம்பவிக்கலாம். திருமணம் ஆகாதோருக்குத் திருமண வாய்ப்புகள் தள்ளிக்கொண்டே போகும். ஆக, இந்த ராசிக்காரக்களுக்கு குருப் பெயர்ச்சி ஆகும் வரையிலும் இந்தப் பிரச்சனை இருந்துகொண்டுதான் இருக்கும். இதற்குப் பரிகாரமாக, வியாழக்கிழமைகளில் குரு பகவானுக்கு மஞ்சள் பூ சாற்றி குரு காயத்ரியை ஜபித்து வழிபடுவது ஓரளவு பரிகாரமாக இருக்கும்.
அடுத்து, 7-ம் வீட்டில் 11-ம் வீட்டின் அதிபதியாகிய சூரியனும், லக்கினாதிபதியாகிய சுக்கிரனும் சேர்ந்து இருப்பதோடு லக்கினத்தையும் பார்க்கிறார்கள். இந்தப் பார்வை உங்களுக்கு நன்மையைக் கொடுக்கும். நீங்கள் இறங்கும் புது முயற்சிகள் உங்களுக்கு சாதகமாகவே இருக்கும். வைகாசி மாதத்தில் ராசியதிபதி சுக்கிரன் மிதுனத்தில் சஞ்சாரம் செய்கிறார். அப்போது சுக்கிரனுக்கு சனியின் நேர்பார்வை கிட்டுகிறது. அந்தச் சமயத்தில் தோல் சம்பந்தமான பிரச்னை இந்த ராசிக்காரர்களுக்கு இருக்கும். உடனே மருத்துவரிடம் காட்டி தகுந்த சிகிச்சை பெறுவது அவர்களுக்கு நல்லது.
அடுத்து, பொருளாதார நிலையைப் பார்ப்போம். ஐப்பசியிலிருந்து குருவானவர் 2-ம் இடத்துக்கு சஞ்சாரம் செய்கிறார். ஆகவே, அவர்களின் பொருளாதாரம் மீதமுள்ள மாதங்களில் மேம்படும். வேலை தேடும் படலத்தில் இருப்போருக்கு வேலை வாய்ப்புக்கள் உருவாகும். 3-ம் இடம் என்பது நமக்குப் பக்கத்திலிருக்கும் அண்டை வீட்டாரைக் குறிக்கிறது. அங்கு சனி இருப்பதால் அவர்களுடன் சுமுகமான உறவைப் பேணுதல் கடினம். ஆகவே, தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பது வேண்டாத வம்புகளைக் குறைக்கும்.
சித்திரை 19-ம் தேதி முதல் ஐப்பசி 20-ம் தேதி முடிய செவ்வாயானவர் ஜென்ம ராசிக்கு 4-ம் இடத்தில் சஞ்சாரம் செய்கிறார். 4-ம் இடம் ஸ்திர சொத்துகளைக் குறிக்கிறதன்றோ! ஆக, வீடு, வாசல் வாங்க விழைவோர் இந்த சாதகமான கிரக சஞ்சாரத்தை பயன்படுத்திக்கொண்டு, அதற்கான முயற்சியில் ஈடுபடலாம். உங்கள் முயற்சிக்குப் பலன் கிடைக்கும். அதே சமயத்தில், நீங்கள் சற்று நிதானத்துடன் யோசனையுடனும் செயல்பட வேண்டும். அவசரப்பட்டு
காரியங்களில் இறங்கத் தோன்றும். எதிலும் நிதானிப்பது அவசியம்.
கார்த்திகை, மார்கழி மாதங்களில் செவ்வாய் 5-ம் இடத்தில் சஞ்சாரம் செய்கிறார். அந்த மாதங்களில் கருவுற்றிருக்கும் பெண்கள் தங்கள் உடல்நிலையில் அதிக கவனம் எடுத்துக்கொள்வது நல்லது. தை, மாசி மாதங்களில் செவ்வாயின் பார்வை ஜென்ம ராசியின் மேல் விழுகிறது. இந்தக் காலத்தில், உடலில் காயங்கள் ரணங்கள் ஏற்படக்கூடுமாதலால், மிகுந்த கவனத்துடன் இருப்பது நல்லது.
இந்த ஆண்டுக் கடைசியில், அதாவது மாசி 22-ல், கேதுவானவர் தனுசுக்குப் பிரவேசம் செய்கிறார். அதாவது, 3-ம் இடத்தில் கேது. கேது 3-ம் இடத்தில் இருந்தால் என்னவாகும்? அந்த ஜாதகக்காரர் நவீன நாரதராக இருப்பார். அதாவது, அடுத்தவர் விவகாரங்களில் தேவையின்றி தலையிடுவார். இது வேண்டாத வேலை. ஆக, உங்கள் வேலையைத் தவிர மற்றவர் வேலைகளில் தலையிட வேண்டாம
🔯விருச்சிகம்
(விசாகம் 4-ம் பாதம், அனுஷம், கேட்டை)
ஆண்டுத் தொடக்கத்திலேயே, லக்கினாதிபதி செவ்வாய் 2-ம் வீட்டில் சனியுடன் சேர்ந்து இருக்கிறார். ராசியதிபதி 2-ல் தன ஸ்தானத்தில் இருப்பது சுயமாக சம்பாதிப்பதைக் குறித்தாலும், சனியுடன் சேர்ந்து இருப்பது அவ்வளவு நல்லதல்ல. குடும்பத்தில் அமைதியின்மை, வீண் சச்சரவுகளுக்கு இடமுண்டு. இந்த நிலை சித்திரை 19-ம் தேதி வரை இருக்கும். அதற்குப் பிறகு செவ்வாயானவர் 3-ம் பாவத்துக்கு மாறிவிடுகிறார். அதனால் வீண் சச்சரவுகள் குறையும்.
இந்த ஆண்டு மாசி மாதம் 22-ம் தேதி வரை கேதுவானவர் 3-ம் வீட்டில். கேது 3-ல் இருப்பது நல்லதல்லவே! வீண் கலகங்களை நீங்கள் உண்டாக்கக்கூடிய சூழல் உண்டாகும். ஆகவே, நீங்கள் உண்டு, உங்கள் வேலை உண்டு என்று இருப்பது உங்களுக்கு நல்லது.
சித்திரை மாதம் முழுவதும், 10-ம் வீட்டு அதிபதியான சூரியன், 6-ம் இடத்தில். ஆக, வேலை தேடும் படலத்தில் இருப்போருக்கு வேலை கிடைக்கும் மாதம் இது. முயற்சி செய்யுங்கள். உங்களுக்கு வேலை கிடைக்கும்.
உங்கள் பொருளாதாரத்தைப் பற்றி இனி பார்ப்போம். இந்த ஆண்டு முழுவதும் தன ஸ்தானத்தில் சனி. சனி பொதுவாக எதையும் குறைவாகக் கொடுப்பவர். ஆக, பணவரவு அளவோடுதான் இருக்கும். அதேபோல், பணம் சேர்ப்பதும் குறைவாகத்தான் இருக்கும். பொருளாதார சேமிப்பைக் குறிப்பது 11-ம் வீடு. அந்த வீட்டுக்கு சனியின் பார்வை இருப்பதால், சேமிப்பும் அளவோடுதான் இருக்கும். அதிகமாக இருக்காது.
புரட்டாசி 25-ம் தேதி, குருவானவர் துலாமில் இருந்து விருச்சிகத்துக்கு வருகிறார். அவர் பார்வை 5-ம் இடமான புத்திர ஸ்தானத்துக்குக் கிடைக்கிறது. ஆக, புத்திரபாக்கியத்துக்காக ஏங்குபவர்களுக்கு அவர்கள் ஆசை நிறைவேறும். அதேபோல், 7-ம் பாவமான களத்திர ஸ்தானத்துக்கும் குருவின் பார்வை கிட்டுகிறது. ஆக, திருமணத்துக்கு இருக்கும் இந்த ராசிக்காரர்களுக்கு திருமண யோகம் வருகிறது. ஆக, புரட்டாசியில் வரும் குருப் பெயர்ச்சி இந்த ராசிக்காரர்களுக்கு பல நன்மைகளைச் செய்யக் காத்திருக்கிறது.
மாசி மாதம் வரும் ராகு, கேதுப் பெயர்ச்சியில் ராகு 8-ம் வீட்டுக்கும் கேது 2-ம் வீட்டுக்கும் பெயர்கிறார்கள். 8-ல் உள்ள ராகு பல பிரச்னைகளைக் கொடுப்பார். ராகு 8-ல் இருப்பதோடு, 2-ம் வீட்டு சனியின் பார்வையிலும் இருக்கிரார். ஆக, ராகுவுக்குப் பரிகாரம் செய்வது அவசியம். காளஹஸ்தியோ அல்லது திருநாகேஸ்வரமோ சென்று, அப்போது பரிகாரம் செய்துகொள்வது மிக அவசியம்.
அதேபோல், குடும்ப ஸ்தானத்திலும் சனியுடன் கேதுவும் சேர்ந்து இருக்கிறார். இரண்டு பாபிகள் சேர்ந்து இருப்பது குடும்ப அமைதியைக் கெடுத்துவிடும்.
சொந்தவீட்டுக் கனவோடு இருப்பவர்களுக்கு அவர்கள் கனவு நினைவாக தாமதம் ஆகும். ஏனெனில், 4-ம் பாவம் சனியின் பார்வையின் கீழ் வருகிறது. சனி எதையும் தாமதம் செய்பவரன்றோ!. ஆக, ஸ்திர சொத்துகள் சேர்க்கும் முயற்சி பலிதமாக தாமதம் ஆகும்.
🔯 தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1-ம் பாதம்)
வருட ஆரம்பத்திலேயே ஜென்ம ராசியில் சனியும், செவ்வாயும் இருக்கிறார்கள். இந்த சேர்க்கை நல்ல சேர்க்கை இல்லை. சித்திரை 19-ல் செவ்வாயானவர் மகரத்துக்குப் பெயர்ந்துவிடுகிறார். இருப்பினும், இந்தக் குறுகியகாலத்திலேயே இருவரும் தன் சொந்த சுயரூபத்தைக் காட்டக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. உடலில் காயங்கள், ரணங்கள் ஏற்படக்கூடும். ஆகவே, வெளியில் வாகனங்களில் செல்லும்போதோ அல்லது ஆயுதங்களைக் கையாளும்போதோ எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. அதேபோல், இவர்களின் பார்வை 7-ம் வீட்டின் மேல் விழுவதால், களத்திரத்துடன் மனக்கசப்பு ஏற்படக்கூடும். இதை அனுசரித்து, விட்டுக்கொடுத்துச் செல்லுதல் நன்று.
கேதுவானவர் 2-ம் வீட்டில். 2-ம் இடம் வாக்கு ஸ்தானம். அதில் கேது இருப்பது அவ்வளவு நல்லதல்ல; சமயங்களில் பிறறைக் காயப்படுத்திப் பேசச் சொல்லும். ஆகவே, நாவைக் கட்டுப்பாட்டில் வைத்திருங்கள்.
இந்த ஆண்டு புரட்டாசி 25-ம் தேதி வரையிலும் குருவானவர் ராசிக்கு 11-ம் வீட்டில் சஞ்சாரம் செய்கிறார். ஆக, இந்த சஞ்சாரம் உங்களுக்கு நன்மை பயக்கக்கூடியது. பொதுவாக, பல நன்மைகளைப் பயக்கக்கூடியது. எடுத்த காரியங்களில் வெற்றி, சமூகத்தில் நல்ல மதிப்பு ஆகியவை ஏற்படக்கூடும்.
வருட ஆரம்பத்தில் சூரியன், சுக்கிரனை குருவானவர் தன் 7-ம் பார்வையால் பார்க்கிறார். ஆக, பெண்களுக்கு ஆடை, அணிகலன் சேர்க்கை அழகுப் பொருள்கள் சேர்க்கை ஆகியவை ஏற்படக்கூடும்.
வைகாசி 25-ம் தேதி சுக்கிரனானவர் கடகத்துக்குப் பெயர்கிறார். ஆனி 20 முடிய கடகத்திலேயே இருக்கிறார். இந்தக் காலத்தில் சுக்கிரனுக்கு ராகுவின் சேர்க்கை மட்டும் இல்லாமல் செவ்வாய், கேதுவின் பார்வையும் கிட்டுகிறது. இருவரின் பார்வையும் நன்மை விளைவிப்பது அல்ல; கணவன் - மனைவி உறவில் விரிசல், சண்டைகள் ஏற்படக்கூடும். ஆகவே, நிதானத்தைக் கடைப்பிடித்து குடும்பத்தில் அமைதிக்கு வழிகோலுங்கள்.
புரட்டாசி 25-ல் குருவானவர் 12-ம் வீட்டுக்கு வருகிறார். இந்த ஆண்டின் மீதமுள்ள காலத்தில் விரயங்களும், செலவுகளும், உடல்நலக் குறைவும் இருந்து வரும். முடிந்தால், அப்போது கும்பகோணத்துக்கு அருகில் உள்ள ஆலங்குளத்துக்குச் சென்று குருவுக்குப் பரிகாரம் செய்துகொள்ளுதல் நன்மை பயக்கும். அங்கு செல்ல முடியாதவர்கள் தங்கள் வீட்டுக்கு அருகில் உள்ள கோவிலுக்குச் சென்று குருவுக்குப் பரிகாரம் செய்து கொள்ளலாம்.
குரு 12-ம் வீட்டுக்கு வருவதால் சில நன்மைகளும் கிடைக்கும். 4-ம் வீடு, 6-ம் வீடு, 8-ம் வீடு ஆகிய இடங்களுக்கு குருவின் பார்வை கிடைக்கிறது. 4-ம் வீட்டுக்கு குரு பார்வை கிடைப்பதால் வீடு கட்டுவது, வாங்குவது போன்ற செயல்களில் ஈடுபட்டால், அது வெற்றிகரமாக முடியும்.
தாயாருடன் யாருக்காவது பிணக்கு இருந்தால், அவை மறைந்து நல்லுறவு ஏற்படும். தொழில் செய்யும் இடத்தில் மனக்கசப்புகள், மேலதிகாரிகளுடன் மனக்கசப்பு ஆகியவை இருந்தால், அவை எல்லாம் மறைந்துவிடும். அதேபோல், கடன் தொல்லையால் கவலைப்பட்டு, அவதிப்பட்டு வந்தோருக்கு நல்ல நிவாரணம் கிடைக்கும்.
வியாழக்கிழமைதோறும் குரு பகவானை வணங்க மறக்காதீர்கள். அருகிலுள்ள கோவிலுக்குச் சென்று குரு காயத்ரியைச் சொல்லி வணங்கி வாருங்கள், பலன் கிட்டும்.
🔯மகரம்
(உத்திராடம் 2,3,4-ம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2-ம் பாதங்கள்)
ஆண்டுத் துவக்கத்திலேயே ஜென்ம ராசியில் கேதுவும், 7-ம் வீட்டில் ராகுவும் இருக்கிறார்கள். இது ஒரு சர்ப்ப தோஷம்தான். இந்தக் கிரக நிலை மாசி மாதம் 22-ம் தேதி முடிய நீடிக்கிறது. இதற்குப் பரிகாரம் செய்துகொள்வது நல்லது. திருநாகேஸ்வரமோ, காளஹஸ்தியோ அல்லது கும்பகோணம் அருகிலுள்ள திருப்பாம்புரம் சென்று பரிகாரம் செய்துகொள்வது நல்லது.
ராசியதிபதி சனி 12-ம் இடத்தில் சஞ்சாரம் செய்கிறார். இவர் ஆண்டு முழுதும் தனுசிலேயே இருக்கிறார். 12-ம் இடம் என்பது புதிய இடத்தில், பழக்கமில்லாத இடத்தில் வசிப்பது என்றும் கொள்ளலாம். ஆகவே, தனிப்பட்ட ஜாதகத்தைப் பார்த்து கோச்சார ரீதியான இந்த நிலை, அதாவது புதிய இடத்தில் வாழும்படியான நிலை வருமா அல்லது வராதா எனத் தெரிந்துகொள்ளலாம்.
சனியானவர் ராசியதிபதி மட்டுமல்ல; தனாதிபதியும்கூட. தனாதிபதி 12-ம் இடத்தில், அதாவது விரய ஸ்தானத்தில். ஆக, இந்த ஆண்டு விரயமான செலவுகள் இருக்குமென்று எதிர்பார்க்கலாம். 12-ம் இடம் விரயம் மட்டுமல்ல; IT IS A HOUSE OF INVESTMENT. ஆக, இந்த ராசிக்காரர்கள் தங்களுடைய பணத்தை முதலீடு செய்வார்கள் என்றும் கொள்ளலாம். ஆக, இந்த ராசிக்காரர்களுக்கு விரயச் செலவு இருக்குமா அல்லது பணம் முதலீடு செய்யப்படுமா என்பதை அவரவர்கள் தனிப்பட்ட ஜாதகத்தைப் பார்த்துத்தான் தெரிந்துகொள்ளமுடியும்.
இந்த ராசிக்காரர்களுக்கு குருவானவர் 3 மற்றும் 12-ம் வீடுகளுக்கு அதிபதி. அவர் 10-ம் வீடான ஜீவன ஸ்தானத்தில் இருக்கிறார். மூன்று, பன்னிரண்டு வீடுகள் பயணத்தைக் குறிக்கின்றன. ஆக, இவர்களுக்கு இந்த ஆண்டு புரட்டாசி 25-ம் தேதி முடிய தொழில்ரீதியான பயணங்கள் இருக்கும்.
அடுத்து, இவர்கள் பொருளாதாரத்தைப் பார்க்கும்போது, தன ஸ்தானமான 2-ம் இடத்துக்கு குருவின் பார்வை இருக்கிறது. ஆக, பொதுவாக சரளமான பணப்புழக்கம் இருக்குமெனக் கொள்ளலாம். புரட்டாசி 25-க்குப் பிறகு குருவானவர் 11-ம் இடமான லாப ஸ்தானத்துக்குச் செல்கின்றார். அதாவது, இந்த ராசிக்காரர்கள் செய்யும் பயணங்கள் எல்லாம் இவர்களுக்கு அனுகூலத்தில் முடியும். அதாவது, இவர்கள் எந்த நோக்கத்துடன் பயணம் செய்கின்றார்களோ அந்த நோக்கம் நிறைவேறும்.
அதேபோல், 7-ம் இடத்துக்கும் குருவின் பார்வை கிட்டுகிறது. திருமண வயதில் இருக்கும் ஆண், பெண்களுக்கு அப்போது திருமணத்துக்கான யோகம் வருகிறது. 5-ம் இடமான புத்திர ஸ்தானத்துக்கும் குருவின் 7-ம் பார்வை கிட்டுகிறது. ஆக, மழலைச் செல்வத்தை எதிர்பார்க்கும் தம்பதியினருக்கும் காலம் அனுகூலமாக இருக்கிறது.
பொதுவாக, இந்த குரு பெயர்ச்சியால் இந்த ராசிக்காரர்கள் அனுகூலத்தையே அடைவார்கள். சித்திரை 19-ம் தேதியிலிருந்து ஐப்பசி 20-ம் தேதி முடிய, செவ்வாயானவர் ஜென்ம ராசியில் சஞ்சாரம் செய்கிறார். ஆகவே, அக்காலங்களில் உடலில் காயம், ரணம் போன்றவற்றுக்கு வாய்ப்புகள் உண்டு. ஆகவே, சற்று எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.
இதே நேரத்தில், 4-ம் இடத்துக்கு செவ்வாய் பார்வை இருப்பதால், வீடு, வாசல் வாங்கும் யோகம் இந்த ராசிக்காரர்களுக்குக் கிடைக்கிறது.
🔯கும்பம்
(அவிட்டம் 3,4-ம் பதங்கள், சதயம், பூரட்டாதி 1,2,3-ம் பாதங்கள்)
இந்த ஆண்டுத் தொடக்கத்தில், ராசியதிபதி சனி 11-ம் வீட்டில்; 2 மற்றும் 11-ம் வீட்டு அதிபதி குரு 9-ம் வீட்டில்; இவை முக்கியமான கிரக நிலைகள். ராசியதிபதி 11-ம் வீட்டில் இந்த ஆண்டு முழுதும் இருப்பது ஒரு நல்ல செய்திதான். எடுத்த காரியங்களில் வெற்றி; சுற்றம் மற்றும் நண்பர்கள் நடுவில் நன்மதிப்பு ஆகியவை கிட்டும். ராசியதிபதி சனியானவர் செவ்வாயுடன் சேர்ந்து இருப்பது ஒரு நல்ல அம்சம்தான். எதையும் தைரியத்துடன் எதிர்கொள்வீர்கள். வெற்றி உங்களுக்கே!
சனியானவர் 11-ல் இருந்து ஜென்ம ராசி, 5-ம் இடம், மற்றும் 8-ம் இடத்தைப் பார்க்கிறார். 11-ல் இருந்து ஜென்மராசியைப் பார்ப்பதால் தேக ஆரோக்கியம் நன்றாக இருக்கும். 6-ம் வீட்டுக்கு உரிய சந்திரன் ஜென்ம ராசியில் சஞ்சாரம் செய்யும் நாள்களில் மட்டும் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். அதுவும் நீர் சம்பந்தமான ஜலதோஷம், ஆஸ்துமா போன்ற பிரச்னைகள் இருக்கக் கூடும். மற்றபடி, தேக ஆரோக்கியத்துக்குக் குறைவில்லை;
5-ம் இடம் புத்திர ஸ்தானம். 11-ல் இருந்து சனி பார்ப்பதால், சந்தான பாக்கியம் வேண்டுவோருக்கு அது கிடைக்கலாம். ஏற்கெனவே குழந்தைகள் இருப்போருக்கு, இது அவர்களுக்கு முன்னேற்றம் தரும் ஆண்டாக இருக்கும். 8-ம் இடத்துக்கு லாபஸ்தான சனியின் பார்வை இருப்பதால் அவர்கள் கஷ்டங்களுக்குத் தீர்வு கிடைக்கும்.
அடுத்து, குருவின் கோள்சாரத்தைப் பார்ப்போம். 2 மற்றும் 11-க்கு உடைய குரு 9-ம் வீட்டில்; புரட்டாசி 25-ம் தேதி முடிய குருவானவர் 9-ம் வீட்டில் இருக்கிறார். ஆக, இந்த ராசிக்காரர்களுக்கு தகப்பனார் மூலம் ஆதாயம் கிட்டும். தகப்பனாருடன் சுமுகமான உறவு இல்லாதவர்களுக்கு, இந்த ஆண்டு அந்த உறவு மேம்பாடு அடையும்.
உயர் கல்வியில் இருப்போருக்கு அவர்கள் கல்வியில் முன்னேற்றம் இருக்கும். குரு ஜென்மராசியைப் பார்ப்பதால், உங்களுக்கு தெய்வ அனுகூலம் நிறையவே இருக்கிறது. 3-ம் இடத்தையும் குரு பார்ப்பதால் இளைய சகோதரத்துடனான உறவு மேம்படும். வெளியூர்ப் பயணங்களில் வெற்றியும், அனுகூலங்களும் வந்து சேரும். 5-ம் பாவத்துக்கும் குரு பார்வை இருப்பதால் குழந்தை பாக்கியம் இல்லாதோருக்கு அவர்கள் ஆசைகள் நிறைவேறும்.
புரட்டாசி 25-க்குப் பிறகு குருவானவர் 10-ம் பாவத்துக்குப் பெயர்கிறார். ஆக, வேலை தேடும் வேட்டையில் இருப்போருக்கு இந்தப் பெயர்ச்சி ஒரு அனுகூலமான பெயர்ச்சி; இந்த ராசி நேயர்களின் பொருளாதாரமும் மிகவும் சரளமாகவும், தாராளமாகவும் இருக்கிறது.
ராகு, கேதுவின் நிலையைப் பார்க்கும்போது, ராகு 6-ம் வீட்டிலும் கேது 12-ம் வீட்டிலும் இருக்கிறார்கள். இந்த ஆண்டு மாசி மாதம் 22-ம் தேதி வரையிலும் இவர்கள் நிலை அப்படியேதான் இருக்கிறது. அதற்குப்பின்தான் அவர்கள் முறையே மிதுனத்துக்கும், தனுசுக்கும் பெயர்கிறார்கள். அதுவரையில் அவர்கள் நிலையில் மாறுதல் எதுவும் இல்லை. கேது 11-க்கு வந்த பிறகு நிலைமையில் முன்னேற்றம் காணப்படும்.
🔯மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)
ராசிநாதன் குரு 8-ம் வீட்டில் காணப்படுகிறார். இதை குரு மறைந்துவிட்டார் என்று கூறுவார்கள். அதை அப்படியே ஏற்றுக்கொள்ள இயலாது. 8-ம் இடம் என்பது 7-ம் இடத்துக்கு, அதாவது களத்திர ஸ்தானத்துக்கு 2-ம் வீடு. அதாவது, வாழ்க்கைத் துணைவர் அல்லது வாழ்க்கைத் துணைவியின் தனஸ்தானம். அதில் குரு இருப்பது நல்லது அன்றோ. அதாவது, கணவன் அல்லது மனைவியின் பொருளாதாரம் நன்றாக இருக்கும்.
திருமணம் ஆகப்போகும் ஆண் அல்லது பெண்ணுக்கு வரும் வாழ்க்கைத் துணையின் பொருளாதாரம் நன்றாக இருக்கும். 8-ம் இடத்திலுள்ள குரு இந்த ராசிக்காரரின் தனஸ்தானத்தியும் பார்க்கிறார். ஆக, இவரின் பொருளாதாரமும் நன்றாக இருக்கும். குருவானவர் இந்த ராசிக்காரரின் 4-ம் இடத்தையும் பார்க்கிறார். நான்காம் இடம் ஸ்திர சொத்தைக் குறிக்கிறது அல்லவா! 4-ம் வீட்டுக்கு செவ்வாயின் பார்வையும் இருக்கிறது. ஆக, செவ்வாய், குரு ஆகிய இருவரின் பார்வையும் இவர்களுக்கு ஸ்திர சொத்து யோகத்தைக் கொடுக்கிறது.
சித்திரை மதம் முழுவதும் 6-ம் வீட்டின் அதிபதியான சூரியன் 2-ம் இடத்தில் உச்சம். 6-ம் வீடு நாம் செய்யும் அடிமைத் தொழிலைக் குறிக்கிறது அல்லவா? ஆக, வேலை தேடுவோருக்கு அது கிடைக்கக்கூடிய மாதமாக இது இருக்கிறது.
புரட்டாசி 25-ம் தேதிக்குப் பிறகு, குருவானவர் 9-ம் வீட்டுக்குப் பெயர்கிறார். அங்கிருந்து ஜென்ம ராசியை குருவானவர் பார்க்கிறார். 5-ம் வீட்டையும் பார்க்கிறார். அப்போது சிலருக்கு ஆன்மிகச் சுற்றுப்பயணம் செய்யும் யோகம் வரும்.
5-ம் இடத்தில் ராகு இருக்கிறார். இது சர்ப்ப தோஷம்தான். இதற்குப் பரிகாரமாக திருநாகேஸ்வரமோ, காளஹஸ்தியோ அல்லது திருப்பாம்புரமோ சென்று பரிகாரம் செய்துகொள்வது நன்மை பயக்கும்.
இந்த ராசிக்காரர்களின் திருமண யோகம் பற்றிப் பார்ப்போம். புரட்டாசி 25-ம் தேதிக்குப் பிறகு, ராசிக்கு 9-ம் இடத்தில் குரு வருகிறார் எனப் பார்த்தோமல்லவா? அப்போது, குரு பார்வை இந்த ராசிக்காரர்களுக்குக் கிடைக்கிறது. அதற்குப் பிறகு, இந்த ஆண்டு முடியும் வரையிலும் திருமணத்துக்கு அனுகூலமான மாதங்கள்தான்.
இந்த ராசிக்காரக்கள் சிலர் வியாபாரத்தில் இருப்பார்கள். வியாபாரத்தைக் குறிக்கும் வீடு 7-ம் வீடு. அதற்கு சனியின் பார்வை இந்த ஆண்டு முழுவதும் கிடைக்கிறது. ஆக, வியாபாரம் மற்ற ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது சற்று மந்தமாகத்தான் இருக்கும்.
இந்த ஆண்டுக் கடைசியில், உங்கள் உடல் நிலையில் சற்று பாதிப்புகள் ஏற்படும். ஆனால் கவலைப்படும்படியாக ஒன்றும் இருக்காது.
சர்வம் கிருஷ்ணார்ப்பயாமி.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...