Monday, April 22, 2019

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் மோசடி செய்ய இயலுமா?

இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது
36 ஆண்டுகளுக்கு முன்பு, 1982ல் இந்தியாவில்
முதன் முதலாக மின்னணு வாக்குப் பதிவு எந்திரம்
(Electronic Voting Machine) அறிமுகப் படுத்தப்பட்டது.
பரீட்சார்த்த முறையில் கேரள மாநிலம் வடக்கு பரவூர்
தொகுதியின் 50 வாக்குச் சாவடிகளில் மட்டும் மின்னணு
வாக்குப் பதிவு எந்திரங்கள் மூலம் வாக்காளர்கள் வாக்களித்தனர்.
(இனி இக்கட்டுரையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் என்பது
EVM என்று குறிக்கப்படும்).
தேர்தலில் EVMகளை அறிமுகப்படுத்தியதன் மூலம்
இந்திய அரசு அறிவியலுக்குப் பெரும் பங்காற்றியுள்ளது. .
1999ல் சிறிய மாநிலமான கோவாவில் தேர்தல்
முழுவதுமே EVM மூலமாக நடத்தப்பட்டது. இதுதான்
EVM மூலமாக நடைபெற்ற முதல் மாநில சட்டமன்றத்
தேர்தல் ஆகும்.
பின்னர் நாடு முழுவதும் 2004ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தல்
முற்றிலுமாக EVM மூலம் நடைபெற்றது.
மொத்தமுள்ள 543 தொகுதிகளிலும் EVM மூலம்
நடத்தப்பட்ட முதல் தேர்தல் இதுதான்.
அடுத்து 2009 நாடாளுமன்றத் தேர்தலும் ,
2014 நாடாளுமன்றத் தேர்தலும் EVM மூலமாகவே நடைபெற்றன.
ஆக, தொடர்ச்சியாக மூன்று நாடாளுமன்றத்
தேர்தல்கள் EVM மூலமாகவே நடைபெற்றுள்ளன.
இந்தக் காலக்கட்டத்தில் நடைபெற்ற அனைத்து
மாநில சட்டமன்றத் தேர்தல்களும், பல்வேறு இடைத்தேர்தல்களும் EVM மூலமாகவே
நடைபெற்றன. 2000ஆம் ஆண்டிற்குப் பிறகு 113 சட்ட மன்றத் தேர்தல்களும் மூன்று நாடாளுமன்றத் தேர்தல்களும்
EVM மூலமாகவே நடைபெற்றுள்ளன. இவ்வாறு இந்தியத்
தேர்தல்களில் நிலைபேறு உடையதாக EVM ஆகிவிட்டது.
வாக்களித்த சின்னத்துக்கே வாக்கு பதிவாகுதல்!
---------------------------------------------------------------
டாக்டர் சுப்பிரமணியம் சாமி EVM குறித்து பல்வேறு
சந்தர்ப்பங்களில் நீதிமன்றங்களில் வழக்குகள்
தொடுத்தார்.வாக்காளர்கள் தாங்கள் என்ன
சின்னத்துக்கு வாக்களித்தோம் என்பதை
அறிந்திட ஏதேனும் ஒரு நிரூபணம் தரப்பட
வேண்டும் என்றும் EVMகளில் அத்தகைய நிரூபணம்
இல்லை என்றும் டாக்டர் சுவாமி டில்லி உயர்நீதி
மன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அவரது வழக்கு
தள்ளுபடியானது.
இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் டாக்டர் சுவாமி
மேல்முறையீடு செய்தார். உச்சநீதிமன்றம் மனுதாரர்
கோரியவாறு ஒரு நிரூபணத்தை வழங்க வேண்டும்
என்று தீர்ப்பளித்தது. பிரசித்தி பெற்ற இந்தத்
தீர்ப்பை வழங்கியவர் அன்றைய உச்சநீதிமன்றத்தின்
தலைமை நீதியரசர் சதாசிவம் அவர்கள்.
இத்தீர்ப்பின் விளைவாக VVPAT (Voter Verifiable Paper Audit Trail)
என்னும் கருவி EVMகளில் பொருத்தப்
பட்டது. வாக்களித்த பின்னர் எந்தச் சின்னத்துக்கு
வாக்களித்தோம் என்று வாக்காளர் சரி பார்க்கும் வசதி இது.
ஒரு கண்ணாடிப் பேழைக்குள் உள்ள காகிதத்தில்
நாம் வாக்களித்த வேட்பாளரின் பெயரும் அவரின்
தேர்தல் சின்னமும் தெரியும். 7 நொடிகள் வரை தெரியும்
இந்தக் காட்சியை வாக்களித்தவர்கள் பார்க்கலாம்.
ஏழு நொடிகளுக்குப் பின்னர் அக்காகிதம் பேழையின் அடியில் சேமிக்கப்பட்டு விடும். வாக்களித்ததற்கான ரசீது போல இருக்கும்
இக்காகிதத்தை வாக்காளர்கள் தொடவோ வீட்டுக்கு
எடுத்துச் செல்லவோ முடியாது. பார்க்க மட்டுமே முடியும். இருப்பினும் தான் வாக்களித்த
சின்னத்திற்குத்தான் தனது வாக்கு பதிவாகி உள்ளது
என்னும் மன நிறைவை இதன் மூலம் வாக்காளர்
அடைகிறார்.
பரீட்சார்த்த முறையில் முதன் முதலாக நாகாலாந்து
மாநிலத்தில் உள்ள நோக்சென் (Noksen) சட்டமன்றத்
தொகுதியில் செப்டம்பர் 2013ல் VVPAT பயன்படுத்தப் பட்டது.
தொடர்ந்து 2014 நாடாளுமன்றத் தேர்தலில் முன்னோடித்
திட்டம் என்ற பெயரில் 543 நாடாளுமன்றத்
தொகுதிகளில் 8 தொகுதிகளில் மட்டும் VVPAT அறிமுகப்
படுத்தப் பட்டது. அந்த எட்டில் மத்திய சென்னைத்
தொகுதியும் ஒன்று.
நாட்டின் 543 தொகுதிகளிலும் VVPAT இணைக்கப்
பட்ட EVM மூலமாகவே வாக்குப் பதிவு நடக்க
வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தேர்தல்
ஆணையத்துக்கு உத்தரவிட்டு உள்ளது. எனவே
நடைபெற்று வரும் 2019 நாடாளுமன்றத் தேர்தலில்
543 தொகுதிகளிலும் VVPAT இணைக்கப்பட்ட
EVMகளே வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த இடத்தில் மறைந்த எழுத்தாளர் சுஜாதா பற்றிக்
குறிப்பிட்டே ஆகவேண்டும்.பாரத் எலக்ட்ரானிக்ஸ் (BEL) நிறுவனத்தில் பொறியாளராக இருந்த சுஜாதா EVMஐ
உருவாக்கியவர்களில் ஒருவர். 1982ல் நடந்த வடக்கு பரவூர் (கேரளம்) தேர்தலில், சுஜாதாவே நேரடியாக தொகுதிக்குச் சென்று
EVMஐ இயக்கிக் காட்டினார். இன்று பிரம்மாண்டமாக
வளர்ந்து நிற்கும் மின்னணு வாக்களிப்பின் மூலவித்து அவரே.
பிற நாடுகளில் EVM மூலம் வாக்களிப்பு இல்லையா?
-----------------------------------------------------------------------------------
அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளுமே
EVM முறையைக் கைவிட்டு காகித வாக்குச் சீட்டு
முறைக்கு வந்து விட்டபோது, நாம் ஏன் EVMகளைப்
பயன்படுத்த வேண்டும் என்ற கேள்வி
EVM எதிர்ப்பாளர்களால் எழுப்பப் படுகிறது.
அமெரிக்கர்கள் பலரும் ஒரே மனைவியோடு
காலம் பூராவும் வாழ்வதில்லை. நாம் ஏன் ஒரே மனைவியுடன்
காலம் முழுவதும் வாழ வேண்டும் என்ற கேள்விக்கும் இதற்கும்
பெரிய வேறுபாடு இல்லை.
மேலும் அமெரிக்காவும் எல்லா ஐரோப்பிய நாடுகளும்
EVM முறையைக் கைவிட்டு காகித வாக்குச் சீட்டு
முறைக்கு வந்து விட்டன என்று கூறுவதும் உண்மையல்ல.
அமெரிக்காவில் 27 மாநிலங்களில் இந்தியாவில் உள்ளது
போன்ற EVM மூலம் வாக்களிக்கும் முறை இன்னமும் உள்ளது.
ஒரு சில நாடுகள் காகித வாக்குச்சீட்டு முறைக்குத்
திரும்பி இருப்பது உண்மையே. ஜெர்மனியில்
அந்நாட்டு உச்சநீதிமன்றம் (German Constitutional Court) 2009ல்
வழங்கிய தீர்ப்பின்படி, ஜெர்மனி காகித வாக்குச்சீட்டு
முறைக்குத் திரும்பி இருக்கிறது. இது போல ஒரு
சில நாடுகள், அங்குள்ள குறிப்பான சூழல்கள்
காரணமாக EVM முறையைக் கைவிட்டுள்ளன.
வாக்குச் சாவடிகளைக் கைப்பற்றுவது,
கள்ள ஓட்டுப் போடுவது, மக்களில் சில பிரிவினரை
வாக்களிக்க விடாமல் தடுப்பது,
தேர்தல் அதிகாரியை மிரட்டி தேர்தல் முடிவை
மாற்றிச் சொல்லுவது ஆகிய நடைமுறைகள்
மேற்கூறிய நாடுகளில் இல்லை என்பதால்
வாக்குச்சீட்டு முறைக்கே மீண்டும் திரும்புவதால்
அங்கெல்லாம் எந்த நஷ்டமும் கிடையாது.
இந்தியாவில் அப்படி அல்ல. வாக்குச் சீட்டு
முறைக்குத் திரும்புவதானது எவ்விதத்திலும்
நிலைமையைச் சீராக்காது என்பதுடன் முன்னிலும்
மோசமான நிலைக்கு இட்டுச் செல்லும்.
சரி, ஜெர்மனி போன்ற நாடுகள் ஏன் EVMகளைக்
கைவிட்டன? அங்கெல்லாம் ஒட்டு மொத்த தேர்தல்
நடைமுறையுமே முழுவதுமாகக் கணினிமயம்
ஆக்கப்பட்டிருந்தது. அமெரிக்காவிலும் அப்படியே.
அதாவது வேட்பு மனு தாக்கல் செய்வது முதல்
வாக்குகளை எண்ணி முடிவுகளை அறிவிப்பது
வரை அனைத்துமே கணினிமயம்.
இதன் காரணமாக அந்நாடுகளின் EVMகள் தகவல்
தொடர்பு வலைப்பின்னலுடன் இணைக்கப்
பட்டவையாக இருந்தன (connected to a communication network).
வலைப்பின்னலுடன் இணைக்கப்பட்ட EVMகளில்
மிகவும் சுலபமாக மோசடி செய்ய முடியும்.
அதாவது அத்தகைய EVMகளின் முடிவுகளை
எவர் வேண்டுமானாலும் எங்கிருந்து கொண்டேனும்
எளிதில் முறைகேடாக மாற்றியமைக்க முடியும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...