Friday, April 26, 2019

'மூன்று பேரிடமும் விளக்கம் கேட்டு, 'நோட்டீஸ்' அனுப்ப, சபாநாயகர் முடிவு செய்துள்ளார்'

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் மூன்று பேரை, தகுதி நீக்கம் செய்வதற்கான, ஆரம்ப கட்ட பணிகளை, அ.தி.மு.க, துவக்கி உள்ளது. அவர்களின் பதவியை பறிக்கும்படி, சபாநாயகருக்கு அரசு கொறடா பரிந்துரை செய்துள்ளார். இதுதொடர்பான புகார் மனுவுடன், வீடியோ காட்சிகள் மற்றும் ஆவணங்களையும், ஆதாரங்களாக சமர்ப்பித்துள்ளார். இதன் அடிப்படையில், 'மூன்று பேரிடமும் விளக்கம் கேட்டு, 'நோட்டீஸ்' அனுப்ப, சபாநாயகர் முடிவு செய்துள்ளார்' என, தகவல் வெளியாகி உள்ளது.

அ.தி.மு.க.,வில், தற்போது, 114 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். காங்., - முஸ்லிம் லீக் உள்ளிட்ட, தி.மு.க., கூட்டணிக்கு, 97 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். தினகரன், சுயேச்சை எம்.எல்.ஏ.,வாக உள்ளார்; 22 இடங்கள் காலியாக உள்ளன. இவற்றில், 18 சட்டசபை தொகுதிகளுக்கு, 18ம் தேதி தேர்தல் நடந்து முடிந்தது. மீதமுள்ள நான்கு சட்டசபை தொகுதிகளுக்கு, மே, 19ல் தேர்தல் நடக்க உள்ளது. தற்போதைய, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களில், அறந்தாங்கி - ரத்தினசபாபதி, விருத்தாசலம் - கலைச்செல்வன், கள்ளக்குறிச்சி - பிரபு ஆகியோர், தினகரன் ஆதரவாளர்களாக உள்ளனர். அ.தி.மு.க.,வின் இரட்டை இலை சின்னத்தில் வெற்றி பெற்ற, தமிமுன் அன்சாரி, நடிகர் கருணாஸ் ஆகியோரும், அ.தி.மு.க.,விற்கு எதிரான மன நிலையில் உள்ளனர்.இவர்களை தவிர்த்து, அ.தி.மு.க.,விற்கு, 109 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். பெரும்பான்மைக்கு இன்னும், ஒன்பது எம்.எல்.ஏ.,க்கள் தேவை. இடைத்தேர்தலில் எத்தனை தொகுதிகளில், வெற்றி கிடைக்கும் என, தெரியவில்லை. அ.தி.மு.க.,விற்கு, ஒன்பது தொகுதிகளுக்கும் குறைவான இடங்கள் கிடைத்தால், ஆட்சிக்கு சிக்கல் ஏற்படும். அதேநேரத்தில், தினகரன் ஆதரவு, எம்.எல்.ஏ.,க்களை தகுதி நீக்கம் செய்தால், பெரும்பான்மைக்கு தேவையான இடங்களின் எண்ணிக்கை குறையும். இதனால், தேர்தல் முடிவு வரும் முன், அ.தி.மு.க., காய்களை நகர்த்த துவங்கி உள்ளது.

கொறடா பரிந்துரை

தினகரன் ஆதரவு,எம்.எல்.ஏ.,க்களான, ரத்தினசபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகியோர், கட்சிக்கு விரோதமாக செயல்படுவதாக, அரசு தலைமை கொறடா ராஜேந்திரன், சபாநாயகர் தனபாலிடம், நேற்று புகார் அளித்தார். அவருடன், சட்ட அமைச்சர், சி.வி.சண்முகம், முன்னாள் எம்.பி., - மனோஜ்பாண்டியன் ஆகியோர் உடன் சென்றனர். புகாரை பெற்ற சபாநாயகர், 'மூன்று பேரிடமும் விளக்கம் கேட்டு, முதலில், நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்துள்ளார்' என, தகவல் வெளியாகி உள்ளது. மூன்று பேரும் தகுதி நீக்கம் செய்யப்பட்டால், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் எண்ணிக்கை, 111 ஆக குறையும்.அப்போது, காலியிடங்கள் மூன்று போக, 231 எம்.எல்.ஏ.,க்கள் இருப்பர். பெரும்பான்மைக்கு, 116 எம்.எல்.ஏ.,க்கள் தேவைப்படுவர். அதற்கு, இடைத்தேர்தலில், குறைந்தது ஐந்து தொகுதிகளில் வெற்றி பெற்றால் போதும். தமிமுன் அன்சாரி, கருணாஸ் ஆகியோரை தவிர்த்தால், ஏழு தொகுதிகளில் வெற்றி பெற்றால் போதும்.எனவே, மூன்று பேரை தகுதி நீக்கம் செய்தால், ஆட்சிக்கு சாதகமான சூழல் ஏற்படும். அவர்கள், மன்னிப்பு கடிதம் கொடுத்து, கட்சி தலைமைக்கு கட்டுப்படுவதாக கூறி, மீண்டும் வந்தாலும், ஆட்சிக்கு பலம் அதிகரிக்கும். இதை கருத்தில் கொண்டே, அ.தி.மு.க., தலைமை காய் நகர்த்த துவக்கி உள்ளது.
அவசரம் ஏன்?

தேர்தல் முடிவுகள் வந்தபின், மூவர் மீதும் நடவடிக்கை எடுக்கலாம் என்றால், நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டு, நடவடிக்கை எடுக்க காலதாமதம் ஏற்படும். அதற்குள், எதிர்க்கட்சிகள் பெரும்பான்மையை நிரூபிக்க கோரும் என்பதால், ஆட்சிக்கு சிக்கல் ஏற்படும்.அதற்கு வாய்ப்பு கொடுக்கக்கூடாது என்பதற்காக, தற்போது, மூன்று பேர் மீதும், சபாநாயகரிடம் புகார் கொடுத்துள்ளனர். சபாநாயகரும், அவர்களிடம் விளக்கம் கேட்பார்; விளக்கம் தர உரிய அவகாசம் வழங்குவார்; அதன் பின், நடவடிக்கை மேற்கொள்வார்.இதற்கிடையில், 'அவர்கள் சமாதானமாக வந்தால், நடவடிக்கையை தவிர்ப்பது; இல்லையேல், நடவடிக்கை எடுப்பது' என, அ.தி.மு.க., தலைமை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து, தலைமை செயலகத்தில், நேற்று, அரசு கொறடா ராஜேந்திரன் கூறியதாவது:அ.தி.மு.க.,விற்கு எதிராக, கட்சி விரோத செயல்களில், பிரபு, கலைச்செல்வன், ரத்தினசபாபதி ஆகியோர் ஈடுபட்டனர். அவர்கள் மீது, உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி, சபாநாயகரிடம் மனு அளித்துள்ளேன். மூன்று பேரும் பங்கேற்ற நிகழ்வுகள் குறித்த, வீடியோக்களையும் வழங்கி உள்ளோம். தினகரன் கட்சியில் பொறுப்புகளை பெற்றுள்ளனர். அதற்கான, ஆதாரங்களை வழங்கி உள்ளோம். சபாநாயகர், அவர்கள் மீது, சட்டப்பூர்வமாக, உரிய நடவடிக்கை மேற்கொள்வார். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...