Friday, January 2, 2015

காஸ் மானியம் வங்கிக் கணக்கில் செலுத்தும் திட்டம் -சிக்கல் ஏற்பட்டுள்ளது

வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கை, காஸ் இணைப்புடன் இணைப்பதில், வங்கிகள் தாமதம் செய்வதால், மானியம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ஜனவரி முதல், சமையல் காஸ் மானியம் வங்கிக் கணக்கில் செலுத்தும் திட்டம் அமலுக்கு வந்த நிலையில், தமிழகத்தில், 70 சதவீதம் வாடிக்கையாளரின், காஸ் இணைப்புகள், வங்கிக் கணக்குடன் இன்னும் இணைக்கப்படவில்லை. 

ஆதார் எண்: 'காஸ் மானியம் பெற, ஆதார் எண் மற்றும் வங்கிக் கணக்கு எண்ணை வழங்க வேண்டும்' என, எண்ணெய் நிறுவனங்கள், வாடிக்கையாளர்களை கேட்டுக் கொண்டன. பெரும்பாலான வாடிக்கை யாளர்களுக்கு, ஆதார் அட்டை இல்லாத நிலையில், வங்கிக் கணக்கு எண்ணை மட்டும் கொடுத்து, காஸ் இணைப்பு எண்ணுடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும், மானிய திட்டத்தில் இணைவதற்கு வழங்கப்பட்ட நான்கு விண்ணப்பங்கள், திரும்ப பெற்று, ஒரே படிவ மாக வழங்கப்பட்டது. ஆனால், காஸ் இணைப்புடன், வங்கிக் கணக்கை இணைக்கும் பணிகள், ஆமை வேகத்தில் நடந்து வருகின்றன.

இதுகுறித்து, தமிழ்நாடு முற்போக்கு நுகர்வோர் அமைப்பின் தலைவர் சடகோபன் கூறியதாவது:தமிழகத்தில், மொத்தம் உள்ள, காஸ் வாடிக்கையாளர்களில், 50 சதவீதம் பேருக்குத் தான், ஆதார் எண் உள்ளது. மற்றவர்கள், வங்கிக் கணக்கு எண்ணை நம்பியே, மானியம் பெற வேண்டும்.

போராட்டம்: டிசம்பர் இறுதி வரை, மானியம் பெற வங்கிக் கணக்குகள், 20 முதல், 30 சதவீத வாடிக்கையாளருக்கு மட்டுமே இணைக்கப்பட்டு உள்ளது. எஞ்சியவர்களுக்கு, இன்னும் இணைக்கப்படவில்லை. ஜனவரியில், வங்கி, அலுவலக நாட்கள் மிகவும் குறைவு. மேலும், வங்கி ஊழியர்கள், 21ம் தேதி முதல், தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளனர். எனவே, இம்மாதத்தில், வாடிக்கையாளர்கள் அனைவருக்கும், நேரடி மானியம் பெறுவதற்கான, வங்கி நடைமுறைகள் முழுமை அடையாது. ஜன., மாதத்தில், மானியத்தை முன்கூட்டியே, வாடிக்கையாளர் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்று, அரசு அறிவித்துள்ளது. வங்கிக் கணக்கு இணைக்கா தோருக்கு, முன்கூட்டியே அளிக்கப்படும் மானியம் கிடைக்காது. இதற்கு, நுகர்வோர் காரணம் அல்ல. எனவே, வங்கிக் கணக்கு மூலம் மானியம் அளிக்கும் திட்டத்தை, மார்ச் வரை நிறுத்தி வைக்க வேண்டும்.

பற்றாக்குறை: இந்த இடைவெளியில், வங்கி நடைமுறைகளை முடித்து, ஏப்ரல் முதல், மானியத்தை வங்கிக் கணக்குகளில் செலுத்தலாம். இதற்கு உரிய ஆணையை, மத்திய அரசு, வெளியிட வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார். 'ஊழியர்கள் பற்றாக்குறையால், வங்கிக் கணக்கை இணைப்பதில், தாமதம் ஏற்படுகிறது' என, பொதுத்துறை வங்கி ஒன்றின் மூத்த அதிகாரி ஒருவர் கூறினார்.

அவகாசம் குறைவு: அவர் மேலும் கூறியதாவது: வங்கியின் அன்றாட பணிகளை செய்யவே, போதிய ஊழியர்கள் இல்லை. இந்நிலையில், காஸ் மானியம் பெற, வங்கிக் கணக்கை இணைக் கும் பணி, கூடுதலாக உள்ளது. தமிழகத்தில், கோடிக்கணக்கான நுகர்வோர் உள்ளனர். இவர்களின், வங்கிக் கணக்கை இணைக்க, போர்க்கால நடவடிக்கையை, வங்கி நிர்வாகங்கள் மேற்கொண்டாலும், கால அவகாசம் மிகக் குறைவு.

முதன்மை வங்கி: பெட்டியில் இருந்து சேகரிக்கும் விண்ணப்பங் களை, மாவட்ட முதன்மை வங்கியிடம், காஸ் ஏஜென்சிகள் அளிக்க வேண்டும். வாடிக்கையாளரின் வங்கிக்கிளைக்கு, அவற்றை முதன்மை வங்கி அனுப்பி வைக்கும் ஏற்பாட்டை, எண்ணெய் நிறுவனங்கள் செய்துள்ளன. இந்த ஏற்பாடுகள் அனைத்தும், ஜன., மாதத்தில், மானியம் பெறுவதற்கு உதவாது என, நுகர்வோர் தரப்பில் கூறப்படுகிறது.
எஸ்.எம்.எஸ்., தகவல்: தமிழகத்தில், பொதுத்துறையைச் சேர்ந்த, இந்தியன் ஆயில் - 91 லட்சம்; பாரத் - 39 லட்சம்; இந்துஸ்தான் - 23 லட்சம் என, மொத்தம், 1.53 கோடி, சமையல் காஸ் சிலிண்டர் வாடிக்கையாளர்கள் உள்ளனர். கடந்த, 1ம் தேதி வரை, நேரடி மானிய திட்டத்தில், மூன்று எண்ணெய் நிறுவனங்களையும் சேர்த்து, 56.71 லட்சம் வாடிக்கையாளர்கள் பதிவு செய்துள்ளனர். இதில், சிலரின் வங்கிக் கணக்கில், நேற்று, முன்வைப்பு தொகையாக, 568 ரூபாய் வரவு வைக்கப்பட்டுள்ளது. இந்த தகவல், எஸ்.எம்.எஸ்., மூலம் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதன் முழு விவரம், வரும் திங்கள் கிழமை தெரிய வரும் என, தெரிகிறது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...