Thursday, May 24, 2018

தேடி வந்த மாப்பிள்ளை.

=========================
காஞ்சிப் பெரியவரைத் தரிசித்து, சென்னை திரும்பிய அந்த ஓவியர், வீடு வந்தார். சாய்வு நாய்காலியில் சோர்வோடு அமர்ந்தார். அவர் மனைவி ஆவலோடு கேட்டாள்:
'பெரியவாளை தரிசனம் செஞ்சேளா?
28 வயசாகியும் நம்ம பொண்ணுக்கு இன்னும் கல்யாணம் கூடி வரலியேங்கற கவலையைச் சொன்னேளா? பொருளாதார பிரச்னை தான் நம்ம பெண் கல்யாணத்தைத் தாமதப் படுத்தறதுன்னு தெளிவாச் சொல்லச் சொன்னேனே? பெரியவர் ஆசீர்வாதம் பண்ணினாப் போதும். நம்ம பெண் கல்யாணம் வெகுசீக்கிரம் நடந்துடும்.''
மனைவிக்கு எந்த பதிலும் சொல்லாமல் அவர் அமைதி காத்தார். அவருக்குச் சம்பளம் குறைவு. அன்றாடச் செலவுக்கே கடன் வாங்க வேண்டிய நிர்ப்பந்தம். இதில் கல்யாணத்திற்குப் பணம் சேர்ப்பது எப்படி?
மாப்பிள்ளை வீட்டார் கேட்கிற வரதட்சணையைப் பார்த்தால் மனம் மலைக்கிறது. வரதட்சணை வாங்கக் கூடாது என்று பெரியவர் ஓயாமல் சொன்னாலும் யார் கேட்கிறார்கள்?
ஓவியர் பெருமூச்சுடன், ''நான் தரிசனம் பண்ண வரிசைல நின்னேன். எக்கச்சக்கக் கூட்டம். அவர் அருகே நான் வந்தப்போ என்னால எதுவுமே பேச முடியலே. அவர் திருமுகத்தையே பார்த்தபடி மனசுல நம் பிரச்னையை நெனச்சுப் பிரார்த்தனை பண்ணினேன். வாய்திறந்து சொல்லத்தான் நெனச்சேன். அதுக்குள்ள பின்னாலிருந்து நகரச் சொல்லி நெருக்கினர். குங்குமப் பிரசாதத்தை வாங்கிண்டு வந்துட்டேன்... இப்படி ஆயிடுத்தேன்னு மனசு கலங்கறது.'
மனைவி தன்னைக் கோபித்துக் கொள்ளப் போகிறாள் என்று அவர் நினைத்தார். ஆனால் மனைவியின் எண்ணம் வேறு மாதிரி இருந்தது.
''எதுக்கு வாய்விட்டுச் சொல்லணும்? மனசில நெனச்சுண்டாலே போதும். பகவான்னா அவர்! பகவான் நம்ம கிட்டப் பேசறாரோ? ஆனால் நாம மனசுல வேண்டிண்டா நம்ம பிரார்த்தனையை நிறைவேத்தறார் இல்லையா? அது மாதிரிதான். சீக்கிரமே நல்லது நடக்கும்.''
அவர்கள் பேசிக்கொண்டிருந்த போது யாரோ கதவைத் தட்டினர். ஓவியரின் மனைவி கதவைத் திறந்தார். கணவனும் மனைவியுமாக இருவர் வீட்டினுள் நுழைந்தார்கள்.
வந்தவர்கள், ''நாங்க இதே வீதில குடிவந்து ஆறுமாசம் ஆச்சு. எங்க பையன் தினமும் உங்க பெண் போறப்போ வறப்போ பாத்திருக்கான். அவளோட அடக்கம் அவனைக் கவர்ந்திருக்கு. நீங்க சம்மதிச்சா உங்க பெண்ணைக் கல்யாணம் பண்ணிக்க விரும்பறான். அவன் வரதட்சணை வாங்காம கல்யாணம் பண்ணிக்கறதுன்னு உறுதியா இருக்கான். கல்யாணத்தை எங்க செலவிலேயே நடத்துவோம். அவன் கிட்ட எந்தக் கெட்ட பழக்கமும் கிடையாது. நிறையச் சம்பாதிக்கிறான். தான் நெனச்ச மாதிரிப் பெண் தனக்கு மனைவியா அமைஞ்சா, அவன் நம்பற ஒரே தெய்வமான பெரியவர் கிட்ட, தம்பதி சமேதரா ஆசீர்வாதம் வாங்கிக்கணும்னு மட்டும் சொல்றான்...'' அவர் பேசிக்கொண்டே போனார்.
ஓவியரின் மனைவி அளவற்ற மகிழ்ச்சியோடு தன் கணவரைப் பார்த்தாள். அவர் விழிகளில் கண்ணீர் தளும்பிக் கொண்டிருந்தது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...