Wednesday, June 28, 2023

பீட்டர் பாண்டியன் எனும் முரட்டு ஆங்கிலேய மீனாட்சி பக்தன்.

 மதுரை மீனாட்சிக்கு அழகு சேர்க்க பல வைர, வைடூரிய நகைகள் இருந்தாலும், ஒரு ஆங்கிலேயே முரட்டு பக்தன் இருநூறு வருடங்களுக்கு முன்னால் அம்மனுக்கு காணிக்கையளித்த ஷூக்கள் தான் மிகவும் ஹைலைட்டான விஷயம்.

தங்கத்தால் இழைக்கப்பட்ட விலை மதிக்க முடியாத மாணிக்கங்கள் பதித்த ஒரு ஜோடி காலணிகளை தன் பக்தியின் காணிக்கையாக வழங்கியவர் அப்போதைய மதுரை கலெக்டர் ரவுஸ் பீட்டர். பீட்டர் துரை 1812ல் ஒருங்கிணைந்த மதுரை ஜில்லாவுக்கு கலெக்டராக ஆங்கிலேயே அரசால் நியமிக்கப்பட்டவர் பீட்டர் துரை. பதினாறு நீண்ட வருடங்கள் அதாவது 1828 வரை மதுரை மாவட்டத்தின் கலெக்டராக இருந்தவர். அப்போதெல்லாம் மதுரை கலெக்டர் தான் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கும் தக்கார். கோயில் தக்கார் என்றால் கோயிலுக்கு தக்கவர் (Fit Person) மரியாதைக்குரியவர் என்று அர்த்தம்.
கோவில் தக்காரின் பணி என்னவென்றே தெரியாமல் முதலில் திணறி போனார் பீட்டர் துரை. பின்னர் அம்மனின் மகிமைகளை ஒவ்வொன்றாக கேட்டறிந்து, அவள் மேல் மரியாதையும், பக்தியையும் செலுத்த ஆரம்பித்தார்.
தினமும் தன்னுடைய குதிரையில் ஏறி மீனாட்சி அம்மன் கோயிலை வலம் வருவார். அதன் பிறகே தன்னுடைய அன்றாடப் பணிகளைத் தொடங்குவார். கிழக்கு கோபுரத்துக்கு முன்பகுதிக்கு வந்ததும் குதிரையில் இருந்து இறங்கி விடுவார். தன் ஷூக்களை அகற்றி விட்டு அனலாய் சுடும் அந்த கற்தரையில் வெறும் பாதங்களில் நின்று மீனாட்சியை வணங்குவார். தினமும் கோயில் கோபுர வாயிலில் நின்று மனமுருக வணங்கும் இந்த முரட்டு பக்தனை பார்த்து மதுரை மக்களுக்கு மட்டுமல்ல, அந்த மீனாட்சிக்கே மனசுருகி போயிருக்கும்.பீட்டர் ஆங்கிலேயராக இருந்தாலும்கூட, நம்முடைய கலாசாரத்தையும், ஆன்மிக உணர்வுகளையும் பெரிதும் மதிப்பவராக இருந்தார்.
மக்களுக்கு எந்த ஒரு கஷ்டமும் வராமல், அம்மனின் வழிகாட்டுதலின்படி ஆட்சி செய்தார். மதுரை மக்கள், தங்களுக்கு யாரையாவது பிடித்து போனால் எல்லையில்லா அன்பும் நன்றியும் செலுத்துவார்கள். தங்களிடம் மிகுந்த பரிவு காட்டிய இந்த கலெக்டரை ஒரு மன்னனுக்கு நிகராக நினைத்த மதுரை மக்கள் அவரை பீட்டர் பாண்டியன் என்றே அழைத்தனர். ஒருநாள் இரவு மதுரையில் இடியும் மின்னலுமாகப் பெருமழை பெய்தது. பெருத்த காற்றுடன் மழை கொட்டோ கொட்டு என்று கொட்டியது. வெள்ளத்தினால் மதுரைக்கும், மக்களுக்கும் பெரிய இடையூறு வருமே என்று கவலையுடன் உறக்கம் வராமல் கட்டிலில் புரண்டு கொண்டிருந்தார் பீட்டர் துரை. நள்ளிரவாகி விட்டது. பங்களாவுக்கு வெளியே ஒரு சிறுமி அழைப்பது போல பீட்டருக்கு கேட்டது. எழுந்து வெளி வராந்தாவுக்கு வந்தார். அந்த இடத்தில் அவரை நெருங்கி வந்த மூன்று வயது மதிக்கும் சிறுமி ஒருத்தி தன்னுடைய தளிர்க்கரங்களால் அவருடைய கைகளைப் பிடித்து இழுத்து மாளிகைக்கு வெளியில் அழைத்து போனாள்.
சிறுமியும் கலெக்டரும் வெளியில் வந்தது தான் தாமதம், அந்த மாளிகை அப்படியே இடிந்து விழுந்தது. மிரண்டு போனார் பீட்டர். தன்னை ஆபத்தில் இருந்து காப்பாற்றிய அந்த சிறுமிக்கு நன்றி சொல்ல தேடினார். சிறுமியை காணவில்லை. பின்னர் கொட்டும் மழையில் சற்றுத் தொலைவில் அந்தச் சிறுமி சென்றுகொண்டிருப்பதைப் பார்த்த கலெக்டர் பின் தொடர்ந்து ஓடினார். பிடிக்க முடியவில்லை. இறுதியில் அந்தச் சிறுமி மீனாட்சியின் திருக்கோயிலுக்குள் சென்று மறைந்தே போனாள்.
தன்னை ஆபத்தில் இருந்து காப்பாற்றியது அம்மன் மீனாட்சி தான் என்று கலெக்டர் ரவுஸ் பீட்டர் உறுதியாக நம்பினார். கொட்டும் மழையில் வெறும் காலோடு தன்னைக் காப்பாற்ற ஓடோடி வந்த அம்பிகையின் பாதங்களுக்கு அணியும்படி ஏதாவது அணிகலன் செய்து தரவேண்டும் என்று ஆலோசனை செய்தார். அவை தான் மேலே சொன்ன அந்த காணிக்கை காலணிகள். நன்றியுணர்வின் அடையாளமாக அவர் மீனாட்சிக்கு காணிக்கை அளித்த இந்த ஒவ்வொரு தங்க ஷூவின் எடை 28 டோலாக்கள் (ஒரு டோலா தங்கம் தோராயமாக 12 கிராம்). இதுபோக 412 சிவப்பு கற்கள், 72 மரகதங்கள், 80 வைரங்கள் மற்றும் பூனை கண், முத்துக்கள், சபையர் என்று நவரத்தினங்கள் காலணிகளை அலங்கரிக்கின்றன. அம்மனைத் தவிர அந்த நாட்களில் மதுரையில் குதிரை வலம் வருபவர் பீட்டர் மட்டும் தான். குதிரை சவாரி எவ்வளவு சிரமம் என்று அவருக்குத் தான் தெரியும். விழா காலங்களில் குதிரையில் வலம் வரும் அம்மன், சேணம் இல்லாததால் பேலன்ஸ் பண்ண சிரமப்படுவதாக அவரின் பக்திக்கண்களுக்கு பட்டது.
வெள்ளைக்காரர்கள் எதையும் மிஸ் பண்ண மாட்டார்கள். "எடுறா தங்கத்தை, அடிறா சேணத்தை" என்று நவரத்தினங்களால் இழைக்கப்பட்ட இரண்டு தங்க சேணங்களையும் செய்து, அவற்றையும் அம்மனுக்கு காணிக்கையாகச் சமர்ப்பித்தார். இன்றைக்கும் சித்திரை திருவிழாவின் ஐந்தாவது நாளில், மீனாட்சி தேவி தங்கக் குதிரையில் இந்த விசித்திரமான அணிகலங்களை பூட்டி, புன்னகையுடன் மாசி வீதிகளைச் சுற்றி வருகிறாள். முப்பது ரூபாய் குழல் மின் விளக்கை கோயிலுக்கு தானம் கொடுத்தாலும் "இன்னார் உபயம்" என்று பொறித்து கொடுப்பது தான் மதுரை மரபு. சரித்திரம் முக்கியமல்லவா. வெளிச்சமே தெரியாமல் போனாலும், விளக்கு முழுவதும் தெரியும்படி கொட்டை எழுத்துகளில் இனிஷியலோடு முழு பெயர், ஊருடன் எழுதப்படவேண்டும்.
அயல்நாட்டை சேர்ந்த பீட்டருக்கு இதன் தாத்பரியம் சரியாக பிடிபடவில்லை. பக்தியில் திளைத்த அவர், மீனாட்சி நடக்கும்போது அவள் திருப்பாதங்கள் தன் மேல் நடந்து போவதாக இருக்கட்டும் என்று சொல்லி, அவள் காலணிகளுக்கு அடிப்பாகத்தில் தன் பெயரை எழுத சொல்லி விட்டார். பணி ஓய்வுக்குப் பின்னரும் பீட்டர் இங்கிலாந்துக்கு திரும்பவில்லை. தனது கடைசி நாட்களை மீனாட்சி பட்டிணத்திலேயே கழித்தார். மதுரையிலேயே காலமான அவர் மதுரை, மேல ஆவணி மூல வீதி் செயின்ட் ஜார்ஜ் தேவாலயத்தில் அடக்கம் செய்யப்பட்டார். பீட்டரின் கல்லறை, தேவாலயத்தின் பலிபீடத்தின் அடியில் ஒரு பாதாள அறையில் அமைந்துள்ளது. கிறிஸ்தவ தேவாலயத்தின் அறையில் அவரது இறுதி விருப்பப்படி, அவர்தம் முகம் மீனாட்சி கோயிலை நோக்கி இருக்குமாறு அடக்கம் செய்யப்பட்டார்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...