Thursday, June 22, 2023

அதிர்ஷ்டக்கட்டை எனக்கு மாத்திரம்……….?

 ஒரு ரூபாய்க்குக் கிடைக்கும் பாப்கார்ன் இங்கே பத்து ரூபாய். எப்படி எல்லோராலேயும் இப்படி செலவு செய்ய முடியறது? நம்மாலே அதாவது என்னாலே முடியல்லியே. இது எப்படி அப்படின்னு ஒரு கவலை தோண ஆரம்பிச்சிடும். ஆனால் எனக்குப் புரியாதது நம்ம நாடோ ஏழை நாடுங்கறோம், *ஆனால் இங்கே சினிமா பாக்க வரவங்களைப்பார்த்தா அப்படித்தெரியல்லையே என்று எண்ணுவேன்.

நான் கொஞ்சம் வருஷமாகவே என்னைச்சுத்தி நடக்கிறதை பார்த்து ஆச்சரியப்படுவதுண்டு. சின்னக்கடை, பெரிய கடை என்று எந்தக் கடைக்குப்போனாலும் கூட்டமான கூட்டம் சொல்லி முடியாது. அநேகமாக எல்லாகடைத்தெருக்களுமே ரங்கநாதன் தெருவாக மாறிட்டு வருது. தங்க , வைர, வெள்ளி நகைக் கடைகளிலெல்லாம் உள்ளே நுழையறதே கஷ்டமாக இருக்கு. மூச்சு விடறது கூட சிரமமாயிடுது. அவ்வளவு கூட்ட நெரிசல்.
துணிக்கடைகளிலோ கேக்கவே வேணாம்.
ஒரு நல்ல ஓட்டலுக்குப்போனால் பசி நேரங்களில் க்யூவில் காத்திருக்க வேண்டி இருக்கு.
தீபாவளின்னு வந்தா மூன்று மாசத்திற்கு முன்னாலேயே பஸ்ஸாக இருந்தாலும்சரி, டிரெயினாக இருந்தாலும் சரி ரிசர்வேஷன் என்று ஆரம்பித்ததோ அன்றே எல்லா டிக்கட்டும் விற்றுத் தீர்ந்துவிடுகிறது. நல்ல வேளையாக இதிலும் 69% ரிசர்வேஷன் இன்னும் கொண்டு வரவில்லை. சமூக நீதி இங்கே இன்னும் நுழையல்லேன்னு நெனக்கிறேன்.
பஸ், ரயில்தான் இப்படின்னா, நான் ஒரு அவசரத்திற்கு பிளேனில் போகலாம்னு பார்த்தா, அதிலேயும் எல்லாம் ஃபுல்.
250 ரூபா கொடுத்து ஒரு சினிமா பாக்கப்போனா ஹவுஸ்ஃபுல்னு சொல்றான்.
அங்கே இருக்கிற சில தின்பண்டக்கடைகளுக்கு மாலே பரவாயில்லே. அப்படி ஒரு விலை.
சரி.
நாஸ்திகம் பெருத்துப்போன இந்தக்காலத்துலே கும்பல் இருக்காது, பெரிசா செலவு செய்ய வேண்டியும் இருக்காதுன்னு கோவிலுக்குப போனா அங்கேயும் ரங்கநாதன் தெரு மாதிரி கூட்டம். பெரியார் மண்ணுங்கறீங்க. ஆனா பாத்தா அப்படித் தெரியல்லே. பெரியாழ்வார் மண்ணாயிட்டுதோ. தெரியல்லே. பக்திப் பெருகினதைப்பாத்தா எதையும் நம்பும்படியா இல்லே. அங்கேயும்100 ரூபா க்யூ, 50 ரூபா க்யூன்னு மைல்கணக்குலே ஜனங்க நிக்கறாங்க. இவ்வளவு பக்தி முத்திப்போச்சா இந்த மண்ணுலேன்னு ஆச்சரியமாப்போயிட்டுது.
எங்கேயோ ஆரம்பிச்சி எங்கேயோ போயிட்டேனே. நான்சொல்ல வந்தது என்னன்னா. எங்கே பாத்தாலும் கும்பல் பெருத்துப்போச்சு. ஜனங்க விலைவாசியப் பத்தி அப்பப்ப கவலைப்பட்டாலும் எல்லாக்கடைகளிலேயும் கூட்டம்கூடிக்கிட்டே இருக்குன்னு சொல்ல வந்தேன். அதுலே எனக்கு வந்த டௌட் என்னன்னா இவ்வளவு கடைகள் இருக்கே, இவ்வளவு சாமான்கள் இருக்கே இத்தனையும் விலை போகுமா, கடைக்காரருக்குக் கட்டுப் படியாகுமா, வாங்கறவங்களுக்குக் கட்டுப்படியாகுமா அப்படீங்கறதுதான். இதை நான் என்ஃப்ரெண்டுகள் கிட்டே கேட்டப்போ உன் வேலையை நீ பாத்துட்டுப்போ. ஊரான் பத்தி எல்லாம் நீ ஏன் வீணாக்கவலைப்பட்டு எங்களைத் தொந்திரவு பண்றே அப்படின்னுட்டாங்க. என்வொய்ஃப் கிட்டே இதப்பத்தி பேசினா அவ “இது தான் இப்ப ரொம்ப முக்கியம். மாசத்துலே ஏதாவது ஒரு நாள் சினிமா, டிராமா, ஓட்டல்னு ஏதாவது உண்டா? அதுக்கு வக்கு இல்லே. ஊர் உலகத்தைப்பத்தி அவன் கடை என்ன ஆகும், இவன் கடை என்ன ஆகும், அவனுக்கு வியாபாரம் ஆகுமா, ஆகாதாங்கிறதான் இப்போ ரொம்ப முக்கியமா? வியாபாரம் ஆகாட்டா என்ன பண்ணுவான்னு கவலைப்பட்டுகிட்டு உக்காந்திருங்கன்னு” ஒரு போடு போட்டாளே பாக்கணும் அதுக்கப்புறம் இந்தப்பேச்சை அவகிட்டே எடுக்கிறதே இல்லை.
இருந்தாலும் அது எப்படி எல்லா ஜனங்களும் நம்மை விட அதிக செலவு பண்ணிக்கிட்டு சந்தோஷமா இருக்காங்கிற கவலை என்னை அரிச்சிகிட்டே இருக்கு. உலகத்துலே யாருக்குமே இந்த மாதிரி சந்தேகம் எல்லாம் வரதே இல்லியா? எனக்கு மாத்திரம்தான் வருதா தெரியல்லே. ஆனா என் வீட்டுக்காரி உங்களுக்கு மட்டும்தான் ஊர்லே, உலகத்துலே யாருக்கும் வராத சந்தேகங்களெல்லாம் வரும் என்கிறாள். இவள் சொல்வது உண்மைதானா என்ற சந்தேகம் என்னைப் படாத பாடு படுத்த ஆரம்பிச்சுட்டுது.
அதுமாத்திரமில்லே நான் காய்கறி மார்க்கெட்டுக்குப்போய் எது வாங்கினாலும் நான் வாங்கறதைவிட என் பக்கத்து வீட்டுக்காரன் வாங்கறது நல்லா இருக்கிற மாதிரி இருக்கே அது ஏன்? ஒரு வெண்டைக்காய் வாங்கினாக்கூட பக்கத்துவீட்டு பத்மநாபன் வாங்கற வெண்டைக்கா இளசா இருக்கு. வீட்டுக்கு வந்தா “ஒரு வெண்டைக்காய் கூட சரியா வாங்கிவரத்தெரியல்லே. பேச்சுலே மட்டும்குறைச்சலில்லேன்னு” அதுக்கு மேலேயும் என் வொய்.ஃப் பேசுவா. ஆனா அதை நான் பார்லிமெண்ட் ஸ்பீக்கர் expunge பண்ற மாதிரி அதாவது நீக்கிடறமாதிரி நீக்கி என் தன்மானத்துக்குக் குந்தகம் ஏற்படாம என்ன சொல்லணுமோ அதை மாத்திரம் சொல்லி இருக்கேன்.
எப்பவாவது தப்பித் தவறி ஓட்டலுக்குப் போனாலும் என்ன ஆர்டர் பண்றதுன்னு தெரியாம மெனு கார்டை ஒண்ணாம்பக்கத்துலே இருந்து ஒம்பதாம்பக்கம் வரையிலும் ஸ்கூல் பையன் பரீட்சைக்கு முதல் நாள் படிக்கிற மாதிரி திரும்பத் திரும்பப் படிச்சி, ஏதோ ஒண்ணை ஆர்டர் பண்ணினப்புறம் என் எதிரிலே உக்காந்து இருக்கிறவனுக்கு சப்ளையர் சப்ளை பண்ணின ஐடங்களைப்பாத்தவுடனே “அடேடே நாமும் அதை ஆர்டர் பண்ணி இருக்கலாமோ, இது நல்லா இருக்கும்போல இருக்கேன்னு தோணும். இப்படி எனக்கு மட்டுந்தான்தோணுமா இல்லே. எல்லாருக்குமே தோணுமா? இது மாத்திரமில்லை. என் எதிரிலே உக்காந்திருப்பவர் தோசை ஆர்டர் பண்ணினதைப்பாத்து நானும் தோசை ஆர்டர் பண்ணினேன். ஆனா என் அதிருஷ்டம் பாருங்க அவருக்கு வந்த தோசை என் தோசையை விட நல்ல முருகலா சைஸ் கூட கொஞ்சம் பெரிசா இருந்ததுன்னா பாத்துக்குங்களேன். இதுக்குப் பேர் என்ன? ஆன்லைன்லே டிக்கட் புக் பண்ணப்போனா எனக்கு வேண்டிய ட்ரெயின்லே ஸ்லீப்பர் கிடைக்க மாட்டேங்கறது. என்னவோ கதை சொல்லுவாங்களே, உப்பு விக்கப்போனா மழை பெய்யுது, பஞ்சு விக்கப்போனா பலமா காத்து அடிக்கிறது. அந்தக்காலத்துலே நான் காலேஜுலே படிச்ச போதுன்னு வார்த்தைக்கு வார்த்தை வாழ்க்கை சினிமாவுலே சாரங்கபாணி சொல்ற மாதிரி நான் பேசவேண்டியதா ஆயிட்டுது. நான் 2 அணாவுக்கு சாப்பிட்ட அதே தோசைக்கு வந்த மவுசை என்னன்னு சொல்ல. இப்ப அது 60 ரூபாயாம். மசால் தோசை 95 ரூபாயாம். அதையும் ஆர்டர் பண்ணி சந்தோஷமா சாப்பிட்டுட்டு ஜீரணம் பண்றவங்க இருக்காங்களே. அதைச் சொல்லுங்க. எதெதுக்கோ எல்லாம் நடு ரோட்டிலே நின்னு ஊர் ஜனங்களுக்கு வெறுப்பு வரமாதிரி தினமும்போராடுறாங்களே அவங்க ஒரு நாள் இந்த மசால் தோசை இவ்வளவு விலைக்கு விக்கறதே, இது காலை, மத்தியானம், சாயந்தரம் ( பகல்)+ ராத்திரிக் கொள்ளைன்னு கண்டிச்சு போராட்டம் நடத்தறாங்களா? ஊஹூம்.
நான் ஒரு ஊதுபத்தி வாங்கிட்டு வந்தா அது பக்கத்து வீட்டுப் பத்மாவீட்டிலே இருக்குற ஊதுபத்தி மாதிரி இதுலே வாசனை வரல்லியே என்கிறாள் என்மனைவி.
ஒரு நாள் தீபாவளிக்கு முன்னாலே கடைக்கு அவளோட போய் அவ அவளுக்குப் பிடிச்ச புடவையா ஒரு அரை நாள் செலவு பண்ணி, கடையையே புரட்டிப்போட்டு ஒரு சேலையை எடுக்க, அதுக்கு நான் பில் கட்டி முடிச்சி வீட்டுக்கு வந்தவுடன் அவ பட்ட சந்தோஷம் இருக்கே. என்னாலே நம்ப முடியல்லே. ஆனா அவ சந்தோஷம் அடுத்த வீட்டுப் பத்மாவை மறுநாள் பாக்கற வரையில்தான். அதுக்கப்புறம் அவ மூஞ்சி சுட்ட கத்திரிக்காய் மாதிரி சுருங்கிப் போயிட்டுது. ஏன்னு கேட்டா அந்த பத்மா வாங்கி இருக்கிற புடவை இவ வாங்கினதை விட ரொம்ப நல்லா இருக்கு, விலையும் இதை விடக் கம்மியா இருக்குன்னு சொல்லி ஓன்னு அழறா?
நல்ல வேளை நான் தப்பிச்சேன். அதுமாத்திரம் நான் செலக்ட பண்ணின புடவையா இருந்திருந்தா என் தலையே உருண்டு இருக்கும். தப்பிச்சேன்.
என் அண்ணன் பொண்ணுக்கு திருச்சியிலே கல்யாணம் மார்ச் மாதம் 22 ந்தேதி. என்அண்ணன் நான் கட்டாயம் கல்யாணம் முடுஞ்சப்புறம் அவனோட நாலு நாள் தங்கணும்னான். என் மனைவி “நீங்க வேணா போயி உங்க அண்ணனோட ஈஷிண்டு வாங்கோ. நான் வரல்லே கல்யாணத்துக்கு. இவளுக்கு ஸ்கூல் இருக்கு”ன் னு சொல்லி கழண்டுண்டுட்டாள். நானும் போனேன். என் துரதிருஷ்டம்.திடீர்னு லாக் டவுன் வந்துடுத்து.. அங்கே போனவன் இதோடு மூணு மாசம் ஆறது. கெளம்பி சென்னை வரமுடியல்லே. என் பாடு திண்டாட்டமாப் போயிடுத்து. என் கையிலே நாலு நாளைக்கு வேண்டிய துணியும் பணமும்தான் இருந்தது. இதை என்னன்னு சொல்றது?. இதுக்குன்னு ஒரு தனி
அதிருஷ்டம் வேணும்னு நெனக்கிறேன். இப்படித்தான் நான் ஒண்ணு நெனச்சி பண்ணினா வேறே ஒண்ணு நடக்கிறது.
நான் இப்படி எதையோ எடக்கு மடக்கா எழுதறதைப்பார்த்து ஒருத்தர் நீங்க அங்கே வந்து பாருங்க, இங்கே வந்து பாருங்க, இந்த மாதிரி எதுக்கும் யாருக்கும் தம்பிடிக்குக்கூட பிரயோசனமில்லாத விஷயத்தை எழுதறதுக்குப்பதிலா, எதையாவது உருப்படியாப்பண்ணப் பாருங்கன்னு எனக்கு படா அட்வைஸ் கொடுத்திருக்காங்க. நான் நினைக்கிறதும் எழுதறதும் பைத்தியக்காரத்தனம்னா, நான் இந்த விஷயத்துலே தனியா இல்லே. நான் நெனச்சதுலே ஒரு பெர்சண்ட்தான் நான் எழுதி இருக்கேன். இதுக்கே நீங்க இப்படி அலண்டு போனா என்மனசுலே இருக்கிற எல்லா சந்தேகங்களையும் சொன்னா, அப்ப நீங்க என்ன சொல்வீங்கன்னு புரியல்லே. உங்களுக்கு அனுபவம்பத்தாதுன்னு நெனக்கிறேன். நான் ஒரு க்யூவிலே நின்னா, அதென்னவோ தெரியல்லே, என் க்யூ மாத்திரம் லேசுலே நகரவே நகராது. ஆனா அதே என்னைவிட அம்பது நிமிஷம் லேட்டா வந்தவன் நிக்கிற அந்த க்யூ எவ்வளவு வேகமா நகருது தெரியுமா?
இப்படித்தான் அந்தக் காலத்துலே சினிமா பாக்க நீளமான க்யூவிலே கால்கடுக்க ஒருமணி நேரம் நின்னு, கௌண்டர்லே பணத்தோடு கையை நீட்டும்போது, ஹவுஸ்புல் போடற கொடுமை, எனக்கு எத்தனை தடவை நடந்திருக்கு தெரியுமா?
இது மாத்திரமா? நான் யாருக்கு ஓட்டுப்போட்டாலும் அந்த ஆள் ஒண்ணு, தோத்துப்போறார், இல்லே டெபாசிட் போகுது. இதை நான் பலமா சொன்னா ஒரு வேட்aபாளர் கூட என் பக்கம் வரமாட்டார். எனக்கு அவங்க ஓட்டுக்காக கொடுக்கிற பணம் கூட கிடைக்காம போயிடும்
****************
நான் ஒரு அதிருஷ்டக்கட்டை
நான் எதையோ எடக்கு மடக்கா எழுதறதைப்பார்த்து ஒருத்தர் நீங்க அங்கே வந்து பாருங்க, இங்கே வந்து பாருங்கa, இந்த மாதிரி எதுக்கும் யாருக்கும் (தம்மடிக்கக்aகூட ) தம்பிடிக்குக்கூட aபிரயோசனமில்லாத விஷயத்தை எழுதறதுக்குப்பதிலா, எதையாவது உருப்படியாப்பண்ணப் பாருங்கன்னு எனக்கு படா அட்வைஸ் கொடுத்திருக்காங்க. அவங்களுக்கு நன்றியோ நன்றி.
நான் நினைக்கிறதும் எழுதறதும் பைத்தியக்காரத்தனம்னா, நான் இந்த விஷயத்துலே தனியா இல்லே. நான் நெனச்சதுலே ஒரு பெர்சண்ட்தான் நான் எழுதி இருக்கேன். இதுக்கே நீங்க இப்படி அலண்டு போனா என்மனசுலே இருக்கிற எல்லா பைத்தியக்காரத்தனமான சந்தேகங்களையும் சொன்னா, அப்ப நீங்க என்ன சொல்வீங்கன்னு புரியல்லே. உங்களுக்கு அனுபவம் பத்தாதுன்னு நெனக்கிறேன். உங்கள் பெரும்பாலானவங்களுக்கு எனக்கு ஏற்பட்ட இந்த சில்லரை அனுபவங்கள் கட்டாயமா ஏற்பட்டு இருக்கும்னு நம்பறேன், ஆனா நீங்க அதை வெளியிலே காட்டிக்கிட்டா , நம்மை யாரேனும்தப்பா நெனச்சிட்டா என்ன பண்றதுங்கற சந்தேகத்துலேயோ, பயத்திலேயோ உங்க ஔடர் ( outer) வெளி இமேஜ் பாதிச்சிடக்கூடாதுன்னு கஷ்டப்பட்டு அதை பூசி மொழுகி உங்க வெளி இமேஜை தக்க வச்சிக்கிறீங்கன்னும் எனக்குத்தெரியும். அது கெடக்கு. விஷயத்துக்கு வருவோம்.
( அப்பா, இப்பவாவது விஷயத்துக்கு வரணும்னு தோணித்தேன்னு உங்களிலே பல பேர பெரு மூச்சு விடறது தெரியறது)
நான் ஒரு க்யூவிலே நின்னா, அதென்னவோ தெரியல்லே, என் க்யூ மாத்திரம் லேசுலே நகரவே நகராது. ஆனா அதே என்னைவிட அம்பது நிமிஷம் லேட்டா வந்தவன் நிக்கிற அந்த க்யூ எவ்வளவு வேகமா நகருது தெரியுமா?
ஒரு பையன் சினிமா க்யூவிலு நடுவுலே நுழஞ்சான். இதுதான் நம்ம ஊர்லே சர்வ சாதாரணம் ஆச்சே. அவனை ஒரு போலீஸ காரர் பிடிச்சி, அந்தக்யூவிலே கடைசியிலே போய் நிக்கச்சொன்னார். உடனே அந்தப்பையன் க்யூவோட கடைசியைத்தேடிக்கிட்டிப்போய் கொஞ்ச நேரத்துலே திரும்பியும் அந்த போலீஸ்கார்ர் நின்ன இடத்துக்கே் வந்தான். போலீஸ்கார்ருக்கோபமான்கோபம். “ஏண்டா பொடிப்பயலே க்யூவோட கடைசியிலே போய்நில்லுன்னு சொன்னேன் இல்லே். நிக்காம மறுபடியும் ஏன் இங்கே வந்து நின்னு என் கழுத்தை அறுக்கறேன்னு கோபமா கேட்டார். அப்ப அந்த பையன் சொன்னான். “சார் நீங்க சொன்னமாதிரி க்யூவோட கடைசியிலே நிக்கப்போனேன். ஆனா ஏற்கனவே ஓருத்தன் அந்தக்கடைசியிலே நின்னுக்கிட்டு இருக்கான் சார். அதான் திரும்ப வந்துட்டேன்” னு சொன்னான்.
நான் அப்படி ஒரு காலத்துலே சினிமா பாக்க நீளமான க்யூவிலே கடைசியிலே கால்கடுக்க ஒருமணி நேரம் நின்னு, ( எனக்குப பின்னாலே ஒரு 10 அல்லது 15 பேர்தான் இருப்பாங்க) கொஞ்சம் கொஞ்சமா நகர்ந்து கௌண்டர்லே பணத்தோடு கையை நீட்டும்போது, ஹவுஸ்புல் போடு போடற கொடுமை, எனக்கு எத்தனை தடவை நடந்திருக்கு தெரியுமா? இது ஒரு சின்னசாம்பிள்தான்.
ஒரு கல்யாண சாப்பாட்டு ஹாலில் ஒரு வரிசையிலே உக்காந்தவுடன், பரிமாறுபவர் எனக்கு ரொம்பவும் பிடித்த லாடு என்று வைத்துக்கொள்ளுங்களேன், பரிமாறிக் கொண்டே வருவார். நான் ஆவலாக அந்த முழு லாடையும் பார்த்து என் நாக்கை ரெடி பண்ணிக்கொண்டு இதோ அதை சுவைக்கப்போகிறேன் என்று ஏங்கிக்கொண்டு இருக்கும்போது, கொண்டு வந்தவர் பாத்திரத்தில் இருந்த கடைசி லட்டை எனக்கு முன்னால் இருப்பவரின் இலையில் போட்டுவிட்டு, நான் வயிற்றெரிச்சல்படும்படி லட்டுப் பாத்திரம் காலி என்பதை எனக்கு பாத்திரத்தை கவிழ்ப்பதன் மூலம் டெமான்
ஸ்டிரேட் பண்ணிவிட்டு, மறுபடியும் பாக்கி பேருக்கு பரிமாற லட்டுப்பாத்திரத்தை சமையற் கட்டுக்கு எடுத்துச் செல்லும்போது எனக்கு ஏற்படும் ஏமாற்றம் கொஞ்சநஞ்சமல்ல.
அது அப்பளமாக இருக்கட்டும், வடகமாக இருக்கட்டும், எனக்குப்பிடித்த எந்த பதார்த்தமாக இருக்கட்டும் அதெல்லாம் சொல்லிவைத்தாற்போல எனக்கு முதல்லே உக்காந்திருப்பவரோடு காலியாக, பரிசாரகர்கள், அதாவது சர்வர்கள் மறுபடியும் போய்கூடையையோ பாத்திரத்தையோ நிரப்பிக்கொண்டு, விட்ட இடத்தில் இருந்து தங்கள் பரிசாரகத்தொண்டை ஆரம்பிக்கும் போது, அது ஏனோ தெரியவில்லை அவர்கள என்னை மறந்துவிட்டு, அல்லது ஒதுக்கிவிட்டு, எனக்கு அடுத்த ஆளிடம் இருந்து செர்வ் செய்ய ஆரம்பிப்பார்கள். நான் என்னை விட்டுட்டீங்களேன்னு கத்தும் கதறல் அவர்களுக்குக் கேட்காமல் அவர்கள் பாட்டுக்குப்போய்க்கொண்டே இருப்பார்கள். இந்தமாதிரி எனக்கு பலதடவை நடந்து இருக்கிறது.
காலேஜ் ஹாஸ்டல் மெஸ்ஸில் சாப்பிடும்போதும் இதே மாதிரி நடக்கும்போது என் பக்கத்தில் உட்கார்ந்து பதார்த்தத்தை போட்டுக்கொண்டவர்கள் கட், கட் என்று கத்த அதை மற்றவர்களும் நம்மை ஒரு இளக்காரமாக கவனிப்பது என்பது உண்டு. இதில் என்ன இளக்காரம் இருக்கிறது என்று எனக்குப்புரியவில்லை. அது இந்தக் கல்யாணப் பந்தியிலும் நடக்கவே நான்நொந்து போனேன்..
சில சமயம் வேகமாக பாயசம் பரிமாறிக்கொண்டு இருக்கும்போது எனக்கு முன்னால் இருப்பவர் நீரிழிவு கேசாக இருக்கவே பாயசம், ஸ்வீட் இவை எல்லாம் வேண்டாம் என்று அவர் சொன்ன மாத்திரத்தில் ஜெட்வேகத்தில் பரிமாறிக்கொண்டு வந்தவர் சில ஸ்டேஷனில் நிற்காத எக்ஸ்பிரஸ் வண்டிபோல் என் இலையைக்கண்டுக்காமல் அடுத்த இலைக்குப் போய்விடுவார். சரி இனிமேல் நீரிழிவு ஆட்களுக்கு அடுத்து உக்காரக்கூடாது என்று நினைத்து அவருக்கு முன்னாடி அமரந்தால் அன்றைக்கென்று எப்போதும் ஒரு ரோவில் இடம் இருந்து வலமாக பரிமாறுபவர், நான் இருக்கிறேன் என்ற ஒரே காரணத்தினாலோ என்னவோ வலம் இருந்து இடமாக பரிமாற, மறுபடியும் அதே கதை.
நாலு வரிசை பந்தி இருந்தால் நான் எந்தப்பந்தியில் எந்தப் பக்கம் உக்காந்தாலும், எனக்குன்னு வரும்போது ஏதாவது குழப்பம் ஏற்பட்டு எனக்கு நியாயமா கிடைக்க வேண்டிய பதார்த்தம் கிடைக்காம் போயிடும்.
இப்ப எல்லாம் கல்யாண டின்னர்லே பொஃபே ஸ்டைல்தானே. அங்கே இருக்கிற ஐடெங்களுப்பார்த்தா இன்னிக்கி ஒரு பிடி பிடிச்சிட வேண்டியதுதான் மூணு நாளைக்கு முன்னாடியே நான் பிளான் பண்ணினாக்கூட பாழாப்போன என் வயறு அன்னிக்குப்பாத்து இல்லாத பொல்லாத சேஷ்டை/ தொந்தரவு பண்ணி அந்த டின்னரைஙசாப்பிடமுடியாதபடி அடிச்சிடும். சில சமயம் வயறு நன்றாக இருந்தாக்கூட என் கஷ்டகாலமோ இல்லை துரதிரு்ஷ்டமோ, முதல்மூணு ஐடங்களை சாப்பிட்ட உடனே வயறு ரொம்பித்தொலைஞ்சிடும். இதுக்காகவே நான் சர்வ ஜாக்கிரதையா ்நிறைய ஐடங்க இருப்பதாலே எல்லாத்தையும் ரேஷன் பண்ணி ஒருவகையா சாப்பிட்டு வெளியே வரும்போது ஒருத்தர் பீச்மெல்பா ஐஸ்கிரீம் இருந்ததே சாப்பிட்டேளோ என்று கேட்கும்போது அப்படியா, அது என்கண்ணுலேயே படல்லியேன்னு என் சோகக் கதையை சொல்ல அவர் அதை கடைசி டேபிளைக்குக்குக் கீழே ஒரு மூடின பாத்திரத்துலே இருந்ததைப்பாக்கலையா என்று ஒருவர் என் வயற்றெரிச்சலைக் கொட்டிக்கொள்வார். அட்டா, பீச் மெல்பாவை மிஸ் பண்ணிட்டோமே. அந்த எளவு எடுத்த காஷ்மீர் புலாவை கொஞ்சமா சாப்பிட்டு பீச் மெல்பாவை கண்டு பிடிச்சு ஒரு கை பார்த்திருக்கலாமே என்று வயறு புடைக்க தின்ற சந்தோஷம் போய் “பீச் மெல்பா” சாப்பிடாத சோகத்துடன் வீடு போய் சேர்வேன். இனிமே அடுத்த கல்யாண பொ.ஃபைலே இந்த மிஸ்டேக் பண்ணக்கூடாது. முத வேலையா என்னென்ன ஐடம்ஸ் இருக்குங்கிறதை நோட்டம் விட்டுட்டு அப்புறம் தான் சாப்பிட ஆரம்பிக்கணும்னு தீர்மானம் பண்ணிப்பேன். ஆனா இதுவரையிலே நான்போன பத்து பொ.ஃபையில, ஒவ்வொண்ணுலேயும் எனக்கு மிகவும் பிடித்த ஏதாவதை ஒரு ஐடத்தை மிஸ் பண்ணிட்ட சோகத்தோடதான் திரும்பி இருக்கேன்.
சரி. ஒரு நாலு பக்க லெட்டர் எழுதி அதை பின் பண்ணி போஸ்ட் செய்யணும்னா எப்பப்பார்த்தாலும் என்னை கண்ட இடத்துலே தறுக்குன்னு குத்தி ஆன்னு கத்த வெக்கிற ஒரு குண்டூசி கூட கிடைக்காது். அதே கதைதான் ஜெம் கிளிப், ஸ்டேப்ளர், ஸ்டேப்ளர் பின் இது வெல்லாம் என்க்குத்தேவை இல்லாத நேரத்துலே என் கையுலேயோ காலிலேயோ தட்டுப்பட்டு தொந்திரவு செய்யற சாமான்கள் நமக்கு வேணுங்கம்போது கண்ணுலேயே படாதுகள்.
சில சமயம் டேபிள் மேல வெச்சிருந்த என் பேனா மூடி மாயமாமறைஞ்சி போய், வேறே ஒரு புது பேனா வாங்கற வரைக்கும் பஞ்ச பாண்டவர்கள் அஞ்ஞான வாசம் மாதிரி கண்ணுலேயே படாது. கையிலே இருக்கிற எரேசர் வழுக்கிக்கீழே எங்கேயோ போய் ஒளிஞ்சிண்டு கண்ணுலே கடைசி வரையிலை படவே படாது. அப்படி ஏதாவது ஒரு மூலைக்குப்போனாலும் கைக்கு எட்டாத இடத்துலே போய் அது முடங்கிக் கெடக்கும்.
நாம அவசரமா தேடற பேனாவோ, கண்ணாடியோ அது எதுவாவாக இருந்தாலும் நமக்கு அது உடனே கிடைக்காது. இப்படி ஒவ்வொரு சின்ன விஷயமும் நம்மளை பழிவாங்காம விடாது.
நாம் அவசரமா ஒண்ணைத்தேடும்போது அது கெடைக்காது. போன மாசமோ,வருஷமோ தொலைஞ்ச பென்சிலோ பேனாவோ கெடச்சி நம்ம வயித்தெரிச்சலை கொட்டிக்கும்.
சிலபேர் இந்த பைசா பொறாத விஷயத்தை எல்லாம் எழுதி எங்க நேரத்தை வீண் அடிச்சுடறேன்னு குறை பட்டுக் கறாங்க. எனக்கு எனனை மாதிரி அதிருஷ்டக் கட்டைகள் எத்தனை பேர்னு தெரிஞ்சிக்கிறதுலே ஒரு ஆறுதல். அதுலே கிடைக்கிற சந்தோஷம் லாட்டரியிலே லட்சம்ரூபா விழுந்தாக்கூட கிடைக்காது. எப்பவும் நாம தனியா நம்ம துரதிஷ்டத்தை நெனச்சி புலம்பறதைவிட, நம்மைப்போல ஒரு நாலஞ்சு அதிருஷ்டக்கட்டைகள் இருக்குன்னு தெரிஞ்சிக்கும் போது ஏற்படற நிம்மதி வேறே எதுலேயும் கிடைக்காது., என்னை மாதிரி கஷ்டப்படற ஜன்மங்களோடேயும் போகட்டும். ஏன் நாம எல்லாரையும் கஷ்டப்படுத்தணும். (என் கஷ்டங்கள் தொடரும். ஆனா அதைப்பத்திய எழுத்துக்கள் தொடருமா, தொடராதான்னு தெரியல்லே)
*************

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...