Sunday, May 14, 2017

தானியங்கிமயமாக்கல்.

சில காலமாகப் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வரும் விஷயங்களில் தகவல் தொழில்நுட்பத்துறையின் எதிர்காலம் பற்றிய விவாதம் முக்கியமானது. இதைப் பற்றி ஒரு முன்னுரை சில மாதங்களுக்கு முன்பு எழுதியிருந்தேன். அதாவது 2008 பொருளாதார மந்தத்திற்குப் பிறகு இந்தத் துறையில் பெரிய மாற்றங்கள் இருக்காது என்றொரு எண்ணம் இருந்தது. ஆனால் 2010 ஆம் ஆண்டுக்குப் பின் ஏற்பட்ட மாற்றங்கள் இந்தத் துறையில் பல மாற்றங்களையும், இருபது வருடங்களுக்கான வாய்ப்புகளையும் உருவாக்கி உள்ளது என்று சொல்லியிருந்தேன். அவற்றைப் பற்றி ஒரு தொடராக எழுதும் முயற்சிதான் இது.
பொதுவாகத் தொழில்நுட்ப நிறுவனங்கள், ஒரு தொழில்நுட்பம் புதிதாகப் பயன்பாட்டுக்கு வரும் காலத்தில் அதை மேம்படுத்தி மக்களிடம் விற்று வருமானம் ஈட்டுவார்கள். பின்னர் புதுமைகளைப் புகுத்த வாய்ப்பில்லாத சூழ்நிலையில், செலவுகளைக் குறைக்கும் முறைகளைப் புகுத்தி இலாபத்தை அதிகரிப்பார்கள். செலவுகளைக் குறைப்பது என்றால் ஒரு இயந்திரத்தின் திறனை மேம்படுத்தி அது இயங்குவதற்கான செலவுகளைக் குறைப்பது, ஒரு இயந்திரத்தைத் தயாரிக்க, இயக்க, பராமரிக்க ஆகும் ஆட்களின் எண்ணிக்கையைக் குறைப்பது ஆகியவை. ஒரு காலத்தில் அனைத்து நிறுவனங்களும் தட்டச்சு இயந்திரம் பயன்படுத்தியபோது, எத்தனை பேர் தட்டச்சாளர்களாகவும், சுருக்கெழுத்தாளர்களாகவும் பணிபுரிந்தார்கள்? பின்னர் கணினி வந்தபோது அது அத்தனை வேலைகளையும் இடம் பெயர்த்தது. தட்டச்சு மட்டும் தெரிந்தவர்கள் அரசு வேலைகளை மட்டுமே நம்பியிருக்க வேண்டியிருந்தது. இப்பொழுது கணினித் துறை மற்றும் இயந்திரப் பொறியியல் துறை அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்த மாற்றத்தை உணர்ந்து அதற்கேற்ற மாதிரி தங்களை மாற்றிக் கொள்ளாதவர்கள் கண்டிப்பாகத் தனித்து விடப்பட்டதாக உணர்வார்கள்.
முதலில் தானியங்கிமயமாக்கல் என்றால் என்னவென்று பார்ப்போம். Routine jobs எனப்படும் ஒரே மாதிரியான பெரிதாகச் சிந்தனைத் திறன் தேவைப்படாத வேலைகளை, மென்பொருள் உதவியோடு இயந்திரமயமாக்குவதே தானியங்கிமயமாக்கல் எனப்படுகிறது. நான் வேலைக்கு வந்த புதிதில், மென்பொருள் சோதனை (software testing), தரப்பரிசோதனை (performance
testing) போன்றவை மட்டும் தானியங்கி முறையில் இயங்கிக் கொண்டிருந்தது. ஆனால் கடந்த பத்து வருடங்களில் தொலைதொடர்புத் துறையில் வாடிக்கையாளர் இடத்தில் கருவியை நிறுவுவது (Installation), கருவியின் அமைப்பு விவரங்களை மாற்றுவது (configuration), மென்பொருளை மேம்படுத்துவது (software update) போன்றவை கூட தானியங்கிமயமாக்கப்பட்டு விட்டது. அதாவது ஒரு காலத்தில் ஜெர்மனி போன்ற ஒரு நாட்டில் ஆயிரம் ரூட்டர்கள் பொருத்திப் பராமரிக்க ஒரு நூறு பேராவது ஒவ்வொரு வாடிக்கையாளர் இடத்திற்கும் செல்வது, கருவியை அமைப்பது, அதைப் பராமரிப்பது என்ற முறையில் தேவைப்படும். ஆனால் மென்பொருள் ரீதியான தானியங்கிமயமாக்கல் புகுத்தப்பட்டபின், ரூட்டரை வாடிக்கையாளரிடம் பார்சல் சேவை மூலம் சேர்த்துவிட்டு, அமைப்பு விவரங்களை ஒரு சர்வரில் வைத்துவிட்டு, வாடிக்கையாளர் இணையம் மூலம் அந்த ரூட்டர் தான் இயங்கத் தேவையான அமைப்பு விவரங்களை ஒரு வலைப்பக்கம் (web page) மூலம் தரவிறக்கம் (download) செய்துகொள்ள முடிகிறது.புதிதாக மென்பொருள் மாற்றம் செய்ய வேண்டுமென்றாலும் இதே முறைதான். நேராக ஒருவர் போய் செய்யத் தேவையில்லை. இந்த உதாரணப்படிப் பார்த்தால் அமைப்புப் பொறியாளர்களின் (configuration engineers) வேலையை ஒரு சர்வர் இணையம் மூலம் செய்து விடுகிறது. இந்த அமைப்பைப் பராமரிக்க இரண்டு திறமைசாலிகள் போதும். பயணச் செலவும் மிச்சம். வேலையும் சீக்கிரம் முடியும். தானியங்கிமயமாக்கல் குறைந்த சிந்தனைத் திறன் தேவைப்படும் வேலைகளை விழுங்குவதால் புதிதாகத் தொழில்நுட்பத்துறையில் நுழைய விரும்புபவர்களுக்கான வாய்ப்புகள் குறைந்து வருகிறது.
தானியங்கிமயமாக்கலுக்கு நிரல் (script) எழுதப் பெரும்பாலும் பயன்படுத்தப்படும் மொழிகள் பைதான், ரூபி, டிசிஎல் ஆகியவை. இதற்குத் தேவையான வலைப்பக்கம் அமைப்பதில் ஜாவாஸ்க்ரிப்ட், பிஎச்பி போன்றவை பயன்படுத்தப்படுகிறது. தானியங்கிமயமாக்கலில் ஈடுபட விரும்புவோர் இவற்றில் நிபுணத்துவம் பெற வேண்டும். மேலும் நீங்கள் ஈடுபடும் துறை ( வங்கி, நிதியியல், சில்லறை வணிகம், தொலைதொடர்பு போன்றவை) பற்றி முழுமையான பார்வையும், ஆழமான அறிவும் கொண்டிருக்க வேண்டும்.
இதே போல இயந்திரப் பொறியியல் (Mechanical Engineering) துறையில் Programmable Logic Controllers மூலம் இயந்திரங்களைத் தானியங்கி முறையில் இயக்குவது 2000 ஆண்டுகளின் துவக்கத்திலேயே பரவலாகி விட்டது. இதில் அடுத்த கட்டம் Internet of Everything எனும் தொழில்நுட்பம். இதைப் பற்றிப் பிந்தைய பகுதி ஒன்றில் பார்ப்போம்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...