Wednesday, March 31, 2021

எம்.ஜி.ஆரைச் சுற்றி மக்கள் கூட்டம் தான்!

 எம்.ஜி.ஆர்., அமைச்சரவையில், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராக இருந்த, எச்.வி.ஹண்டே, எம்.ஜி.ஆரின் நல்ல குண இயல்புகளை கூறுகிறார்: 

 எம்.ஜி.ஆரைச் சுற்றி மக்கள் கூட்டம் தான்!

அமெரிக்காவில் சிறுநீரக மாற்றுச் சிகிச்சை எடுத்து, சென்னை திரும்பி, மூன்றாவது முறையாக முதல்வர் ஆனதில் இருந்து, அவரின் உடல்நலப் பொறுப்பு, அவரின் குடும்ப மருத்துவரான, டாக்டர் பி.ஆர்.சுப்ரமணியம் வசம் விடப்பட்டது. ஒரு முறை, அமெரிக்க டாக்டர் பிரட்மன், எம்.ஜி.ஆரை பரிசோதனை செய்ய சென்னை வந்திருந்தார். அவரை வழியனுப்பி வைக்க, மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு, அவருடன் என்னை, எம்.ஜி.ஆர்., அனுப்பியிருந்தார். பிரட்மனுடன் காரில் சென்று கொண்டிருக்கையில், 'சாக்ஸ் அணியாமல், வெறும் 'ஷூ'வை, எம்.ஜி.ஆர்., அணிகிறார். நீரிழிவு நோய் இருப்பதால், அவரின் கால் பாதங்களில் புண் வரும் ஆபத்து உள்ளது; இதை, எப்படி நீங்கள் அனுமதிக்கிறீர்கள்?' என்றார்.இரண்டு நாட்களுக்கு பின், இந்த தகவலை, எம்.ஜி.ஆரிடம் சொல்ல, அவரின் ராமாவரம் இல்லத்திற்கு சென்றேன். அங்கு என்னை பார்த்த அவர், காரில் தன்னுடன் ஏறச் சொன்னார். 'என்ன விஷயம்?' என்றார். டாக்டர் பிரட்மன் கூறியதை கூறினேன். அதை ஏற்க மறுத்தவர், தன் இரு கைகளை அசைத்து, நான் கூறியதை பொருட்படுத்தாதது போல சைகை செய்தார்.எனக்கு வருத்தமாக போய்விட்டது. ஒரு வாரம் ஆகிவிட்டது. சட்டசபையில் நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருந்தன. முதல் வரிசையில், எம்.ஜி.ஆருக்கு, எட்டாவது இடத்தில் நான் அமர்ந்திருந்தேன். என்னை பார்த்து, அருகில் வருமாறு சைகை காண்பித்தார். நான், அவர் அருகில் சென்றேன். அருகில் அமர்ந்துஇருந்த நெடுஞ்செழியனை சற்று நகருமாறு கூறி, என்னை அருகே அமர்த்திக் கொண்டார்; எனக்கு ஒன்றும் விளங்க வில்லை.திடீரென தன் கால்களை காட்டி, சாக்ஸ் அணிந்திருப்பதை சுட்டிக் காட்டினார்; எனக்கு கண்கள் கலங்கிவிட்டன. என் முதுகை தட்டி, 'டாக்டர் பிரட்மனிடம் தெரிவித்து விடுங்கள்' என்றார். அப்போது எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.இன்னொரு நாள், அவரின் அறைக்கு நான் சென்ற போது, முட்டை வெள்ளைக்கரு, 'சூப்' அருந்திக் கொண்டிருந்தார். அதை காட்டி, 'சிறுநீரகம் பாதிக்கப்பட்டுள்ளதால், உப்பு சப்பில்லாத இந்த வெள்ளைக்கருவை சாப்பிட கொடுத்துள்ளனர் மருத்துவர்கள்' என்றார் சிரித்தபடி.எம்.ஜி.ஆர்., எப்போதும் மக்கள் வெள்ளத்தில் இருந்ததால், அவருடன் சஜகமாக பழகுவதற்கும், பேசுவதற்கும், பயமில்லாமல் யோசனைகளை கூறுவதற்கும், விரல் விட்டு எண்ணக் கூடிய நபர்கள் தான் இருந்தனர் என்பதை, நான் அறிந்தேன்!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...