Sunday, December 20, 2020

ஸ்படிகலிங்கம் என்றால் என்ன?

 ஸ்படிகம் சிவனின் நெற்றியை அலங்கரிக்கும் சந்திரனிலிருந்து விழுந்ததாகக் நம்பப்படுகிறது. பூமியிலிருந்து கிடைக்கும் ஸ்படிகம் சக்தியின் அம்சமானது.

ஸ்படிகம் என்பது ஒரு வகை கிரிஸ்டல். பல நுறு வருடங்களாக பூமிக்கு அடியில் தேங்கியுள்ள நீர் பாறையாக மாறும். அந்த பாறையில் இருந்து சுத்தமான கற்களை தேர்ந்தெடுத்து செய்வதுதான் ஸ்படிக லிங்கம். சுயம்புவாக அதாவது இயற்கையாக கிடைக்கக்கூடியது இது என்பதால் மிக உயர்ந்த ஸ்தானத்தில் வைத்து மதிக்கப்படுகிறது.
ஸ்படிக லிங்கம் என்பது பொதுவாக நீண்ட குச்சி போன்ற வடிவமும், சுமார் ஒரு இன்ச்சிலிருந்து, பத்து இன்ச் வரை உயரமும் ஆறு முகங்கள் அல்லது பட்டைகள் உடையதாகவும் இருக்கும். இதன் தனிச் சிறப்பு என்னவென்றால் இது ஒரு வினாடிக்கு, 32,768 தடவை நேர்மறையாக அதிரக்கூடிய தன்மை உடையது.
அதனால் தான் ஒரு ஸ்படிக லிங்கம், கருங்கற்களால் செய்யப்பட்ட ஆயிரம் லிங்கங்களுக்குச் சமம் என்றும், 12 லட்சம் ஸ்படிக லிங்கங்கள் ஒரு பாண லிங்கத்துக்குச் சமம் என்றும் சாஸ்திரங்கள் கூறுகின்றன.
தூய்மையான நிலையில் கண்ணாடி போலக் காணப்படும் இது மிகவும் குளிர்ந்த தன்மையது. அதனால் இதன் மணிகளை மாலையாகக் கோத்து பெரியவர்கள் அணிவதும் உண்டு.
பாரதத்தின் வடபகுதியில் இருந்த ஸ்படிகம் தென்பகுதி வந்தது மிகுந்த சுவாரசியமாகும். ஆதிசங்கரர் கைலாய மலை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது வழியில் சிவபெருமான் அவருக்குக் காட்சி அளித்து, ஐந்து ஸ்படிக லிங்கங்களை அளித்து அவற்றை பூஜிக்கும் முறை பற்றியும் விளக்கமாக கூறியருளினார்.
அவை முக்தி லிங்கம், வர லிங்கம், மோட்ச லிங்கம், போக லிங்கம், யோகலிங்கம் எனப் பெயர் கொண்டவை. அந்தப் பஞ்ச லிங்கங்களை ஆதிசங்கரர் ஐந்து தலங்களில் பிரதிஷ்டை செய்தார்.
முக்தி லிங்கம் - கேதார்நாத், வரலிங்கம் - நீலகண்ட ஷேத்திரம் (நேபாளம்), மோட்ச லிங்கம்-சிதம்பரம், போகலிங்கம் -சிருங்கேரி, யோகலிங்கம் - காஞ்சிபுரம்.
சிதம்பரத்தில் ஸ்படிக லிங்கம் சந்திர மவுலீஸ்வரராக வழிபடப்படுகிறது. தினமும் விடியற்காலையில் இதற்கு பூஜைகள் செய்யப்படுகின்றன. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலிலும் ஸ்படிக லிங்கம் இருக்கிறது.
காஞ்சிபுரத்தில் ஏகாம்பரேஸ்வரர் கோயிலிலும் ஸ்படிக லிங்கம் உள்ளது. உற்சவ மூர்த்தி இங்கே கண்ணாடிக் கருவறையில் ருத்திராட்சப் பந்தலின் கீழ் வீற்றிருக்கிறார். இவருக்கு முன்னால் மற்றொரு சிறிய சன்னதி இருக்கிறது. இங்குதான் ஸ்படிக லிங்கம் நந்தியோடு சேர்த்து பூஜிக்கப்படுகிறது. இது பழம் பெருமை வாய்ந்தது.
ராமேஸ்வரம் தலத்தில் ஒரு விசேஷம் என்னவென்றால், அதிகாலை நான்கு மணிக்கு இக்கோயிலில் உள்ள ஜோதிர்லிங்கத்தின் முன் ,ஸ்படிக லிங்க தரிசனம் செய்துவிட்டு, கோவிலில் இருக்கும் அனைத்து புண்ணிய தீர்த்தங்களிலும் புனித நீராடுவது மிகவும் சிறப்பு வாய்ந்தது. ராமரும் சீதையும் பூஜித்த லிங்கமாக இது கருதப்படுகிறது.
இவை தவிர திருவெண்காடு எனப்படும் ஸ்வேதாரண்யத்திலும், நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலிலும் ஸ்படிக லிங்கம் வழிபடப்படுகிறது. இக்கோயில்கள் தவிர வேறு சில இடங்களிலும் ஸ்படிக லிங்கங்கள் உள்ளன. .
வரலாற்றுக்கு முந்தைய கால கட்டத்திலேயே லிங்க வழிபாடு மிகவும் பிரபலமாக இருந்திருக்கிறது. இறைவனின் உருவமற்ற தன்மையை குறிக்கும் வகையிலும், அவரின் நிர்க்குணமற்ற தன்மையைக் குறிக்கும் வகையிலும் ஸ்படிக லிங்கங்கள் குறியீடுகளாகக் கருதப்பட்டு பூஜிக்கப்பட்டன.
தன்னருகில் வைக்கப்படும் பொருட்களின் தன்மையை பிரதிபலிக்கக்கூடியதால், ஸ்படிகமானது மங்களகரமான ஒன்றாக கருதப்படுகிறது.
யஜுர் வேதம் சிவனை ஜோதி ஸ்படிக மணி லிங்க வடிவானவன் என்று கூறுகிறது. சிவன் ஜோதியாகவும், லிங்க ரூபமாகவும், ஸ்படிக ரூபமாகவும் விளங்குகிறார் என்பது இதன் விளக்கம். ஸ்படிகத்தின் ஒவ்வொறு அணுவிலும் சிவனின் குற்றமற்ற தூய்மை நிறைந்திருக்கிறது.
ஸ்படிக லிங்கத்தை எப்படி வழிபட்டால் அதன் பலனை பெறலாம் ?
வீட்டில் வைத்தும் ஸ்படிக லிங்கத்தை பூஜிக்கலாம். அவ்வாறு பூஜை செய்பவர்கள் லிங்கத்திற்கு பாலாலும் பழச்சாறுகளாலும் தூய நன்னீராலும் அபிஷேகம் செய்து, பூக்களால் பூஜித்து தூப தீபம் காட்டி வழிபட சகல பாவங்களும் நீங்கும். வீட்டில் ஐஸ்வர்யமும் சந்தோஷமும் பெருகும்.
ஸ்படிக விநாயகர், சிவலிங்கம் போன்றவற்றை நமது பூஜை அறையில் வைத்து பூஜிக்கும் போது ஈர்ப்பு சக்தி நன்றாக இருக்கும். ஸ்படிகத்தை யானை வடிவில் வைக்கும்போது லட்சுமி கடாட்சம் வரும்.
ஸ்படிக லிங்கத்துக்கு விபூதியால் அபிஷேகம் செய்தால் கர்ம வினைகள் நீங்கும். முன்பு சொன்னது போல இதன் நேர்மறையான அதிர்வுகள் நவகிரகங்களின் கெட்ட பலனை பெரிதும் அழிக்கும். ஸ்படிக லிங்கத்தின் முன் அமர்ந்து தூய மனதோடு சிவனின் பஞ்சாட்சர மந்திரத்தை 108 தடவை ஜபிக்க எல்லா பாவங்களிலிருந்தும் விமோசனம் கிடைக்கும்.
நாம் சொல்லும் மந்திரங்களுக்கு முழுமையான பலன் கிட்ட வேண்டுமானால் அம்மந்திரத்தை ஸ்படிக லிங்கத்தின் முன் அமர்ந்து பய பக்தியுடன் ஜபித்தால் பலன் பல மடங்கு கிட்டும் என்பது ஐதீகம். . நாம் என்ன எண்ணத்துடன் அந்த லிங்கத்தை வணங்குகிறோமோ, அதற்குரிய பலனே நமக்கு கிடைக்கும்.
மேலும் ஸ்படிக லிங்கத்தின் முன் சிவனை மட்டும்தான் வழிபட வேண்டும் என்றில்லை. எடுத்துக்காட்டாக லட்சுமியின் அருள் வேண்டி லட்சுமி அஷ்டோத்திர மந்திரம் சொல்வோர், அம்மந்திரத்தை ஸ்படிக லிங்கத்தின் முன் அமர்ந்து சொன்னால் பலன் பல மடங்கு பெருகும்.
ஸ்படிக லிங்கத்தின் மற்றொரு பெரும் சிறப்பு என்னவென்றால். . அபிசார தோஷம் அதாவது , ஏவல் பில்லி சூனியங்களால் பிரச்சினை உள்ளவர்கள்,ஸ்படிக லிங்கத்தின் முன் மனமுருகி தினமும் அரை மணி நேரம் என தொடர்ந்து இருபத்தொரு நாட்கள் அமர்ந்தால் எல்லா தோஷங்களிலிருந்தும் விடுபடலாம் என்பது நம்பிக்கை.
ஸ்படிகம் என்பது நம் மனதை அப்படியே பிரதிபலிக்கும் தன்மையது. அதனால் அதை வணங்கும்போது தூய்மையான மனதோடு வணங்குதல் அவசியம். தீய எண்ணங்கள்,அலைபாயும் மனத்துடன் வணங்கினால் எதிர்மறையான பலன் ஏற்பட்டுவிடும். அதனால் ஸ்படிகத்தை வணங்கும்போது மிகவும் கவனம் தேவை.
வியாபாரிகள் இந்த ஸ்படிக லிங்கத்தை தங்கள் வியாபாரக் கேந்திரத்தில் வைத்து வழிபடலாம். முறைப்படி பூஜிப்பதால் ஸ்படிகம் தன ஆகர்ஷண சக்தி படைத்ததாக மாறுகிறது. அதனால் நல்ல லாபம் கிடைப்பதுடன் தொழிலும் மேலும் மேலும் விருத்தியடையும்.
சனிபெயர்ச்சி காலத்தில் உங்கள் வீடு, தொழில் நிறுவனங்களில் வைத்து வழிபடுவதால் , கிரக தோஷங்களை நீக்கி உயர்ந்த நன்மைகள் நடைபெறும்.
மாணவர்களும் ஸ்படிக லிங்கத்தை வீட்டில் வைத்து வழிபடலாம். தொடர்ந்து இதைப் பத்து நிமிடம் பார்த்துக் கொண்டிருந்தாலே நல்ல ஞாபக சக்தி, விஷயங்களை கிரகித்துக் கொள்ளும் ஆற்றல் ஆகியவை கிட்டும்.
ஸ்படிகப் பாறைகளை அனைவரினதும் கண்பார்வை படுமாறு வைக்கும் போது அந்த இடத்தின் தன்மை மிகவும் சாந்தமாகவும்,சந்தோஷமாகவும் இருக்கும். ஸ்படிகத்தை எந்த வடிவில் வைத்திருந்தாலும் வாரம் இருமுறையாவது தண்ணீருக்குள் அந்த ஸ்படிகத்தைக் குறைந்தது 4 மணி நேரம்ஊறவிடவேண்டும், பின்பு அதை அதன் இடத்திலேயே வைக்கலாம்.
ஸ்படிக மாலை அணிவதால் கிடைக்கும் பலன்கள்:
ஸ்படிக லிங்கத்தைப் போலவே ஸ்படிக மணி மாலையும் மிகவும் புனிதமானது மற்றும் விசேஷமானதும்கூட. ஸ்படிக மணி மாலையை வைத்து மந்திரங்கள் ஜபிப்பவர்களுக்கு பலன் முழுவதுமாகவும், விரைவிலும் கிட்டும்.
மகாபாரதத்தில் பீஷ்மர் ஸ்படிக மணி மாலை அணிந்து இருந்ததால்தான் அவருக்கு மனத்திண்மையும், தோற்றப் பொலிவும், திடமனதும் இருந்ததாகக் கூறப்படுகிறது. ஸ்படிகம் நம் மனதில் தன்னம்பிக்கையையும், எதையும் எதிர் கொள்ளும் நெஞ்சுரத்தையும் வழங்கும் தன்மை உடையது.
ஸ்படிக மாலை சிறுவர் முதல் பெரியவர் வரை ஆண்கள், பெண்கள் யார் வேண்டுமானாலும் அணியலாம். மேலும் அதிக உஷ்ணம் உள்ள குழந்தைகள் ஸ்படிகத்தை அரைஞாண் கயிறில் அணியலாம்.
ஆனால் ஸ்படிக மாலையை ஒருவர் அணிந்த பின் மற்றவர்கள் மாற்றி அணியும் போது தண்ணீருக்குள் குறைந்தது 3 1/2 மணி நேரமாவது ஊறவிட வேண்டும்.
ஸ்படிக மணி மாலை அணிவதால் தோற்றத்திலும் ஒரு பொலிவு உண்டாகும். ஸ்படிக மாலை அணிவது நமது உடலில் உண்டாகும் சூட்டை சீரான,சரியான அளவில் வைத்துக் கொள்ளும்.
ஸ்படிக மாலை நமது மனதை, அலை பாயும் நிலையில் இருந்து, அமைதியான நிலைக்கு அழைத்து செல்லும். ரத்த கொதிப்புஉள்ளவர்களுக்கு ஸ்படிக மாலையை விடசிறந்த மருந்து எதுவும் இல்லை.
நல்லுணர்வை இது ஊக்குவிப்பதால் சொல் வன்மை மிகும். இந்த ஸ்வர்ண ஸ்படிக மாலையை அணியும் ஜோதிடர்கள், ஆசிரியர்கள், சட்ட வல்லுநர்கள் வாக்கு பலிதத்தைப் பெறுவார்கள்.
இந்த ஸ்வர்ண ஸ்படிக மாலை குபேர மந்திரத்தால் உருவேற்றப்பட்டது. இதனை அணிந்திருப்பவர்களிடம் எதிரிகள் சரணடைவர். இதனை அணிந்து சென்றால் எண்ணிய காரியங்கள் கைகூடும்.
வாகனத் தொழிலில் இருப்பவர்களுக்கும், அடிக்கடி வாகனத்தில் பயணம் மேற்கொள்பவர்களுக்கும், இயந்திரத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு இது மிகுந்த பாதுகாப்பைக் கொடுக்கும்.
சுத்தமான ஸ்படிக மணியை தண்ணீரில் போட்டால் மணி இருப்பது தெரியாது. சூரிய ஒளியில் இம்மணியை காண்பித்தால் (7 கலர் ) வானவில் ஒளி தெரியும்,நல்ல படிகத்தை ஒன்றுடன் ஒன்று மோதினால் தீப்பொறி உண்டாகும் . இதுவே படிகத்தை சோதிக்கும் முறை.
இதை அணிய உத்தமமான நட்சத்திரம் கார்த்திகையாகும். ஒரு நாள் பசுவின் சாணத்தில் மூழ்கவைத்து படிக மாலையை தண்ணீர் பால் என்பவற்றில் கழுவி குருவின் உதவியால் அணிய வேண்டும் என்பது ஆசாரவிதி. ஸ்படிகம் பூமியிலிருந்துஎடுப்பதால் முறையான பஞ்சபூத பரிகாரம் , தீட்சை மந்திரம் சொல்லாமல் மாலையாக அணியக்கூடாது.
அசைவ உணவு சாப்பிடும்,தூங்கும் போது, தீட்டு வீடுகளுக்கு செல்லும்போது மட்டும் மாலையை அணியக்கூடாது. இந்த ஸ்படிக மாலையை இரவில் கழற்றித் தரையில் வைக்க வேண்டும். அப் போது பூமியின் ஈர்ப்பு சக்தியினால் மறுபடியும் ஈர்ப்புப் பெறும். தினமும் இதைச் செய்ய வேண்டும். எத்தனை நாட்களுக்கு அணிந்தாலும் அதன் சக்தி குறையவே குறையாது. வாரம் இருமுறையாவது அபிஷேகம் செய்யும் போது அதன் சக்தி அப்படியே இருக்கும்.
ஸ்படிக லிங்க தத்துவம்:
யோகிகள், தங்கள் சிரசிலுள்ள சகஸ்ரார கமலத்தில், சிவனை ஜோதி வடிவாக வைத்து தியானம் செய்வார்கள். அப்போது, சந்திரமண்டலத்தில் இருந்து அமிர்தம் கொட்டுமென்றும் அதில் அவர்கள் பரமானந்த நிலையில் திளைப்பார்கள் என்றும் புராணங்கள் சொல்கிறது.
இதன் காரணமாகவே, உலக வடிவான ஜோதிர்லிங்கம் குளிரும். அது குளிர்ந்தால் உலகமே குளிரும் என்றும் சொல்லப்படுகிறது . உலகம் குளிர்வது என்றால் மழை பொழிவது,நாடு செழிப்பாவது, அதாவது, மக்கள் சுபிட்சமாக வாழ்வார்கள் என்று ஐதிகம்.
Image may contain: text that says 'ஸ்படிக லிங்கத்தின் சிறப்புகள்!! சகலவிதமான பாவங்களிலிருந்தும் விடுபட இதை செய்யுங்க!!'

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...