Tuesday, June 28, 2022

எம்.ஜி.ஆர்., சொன்ன திறமை யாரிடம் உள்ளது?

 எம்.ஜி. ஆர்., முதல்வராக இருந்த போது, 'அண்ணா' நாளிதழின் கேள்வி - பதில் பகுதியில் ஒரு வாசகர், 'உங்கள் கட்சிக்கு வாரிசு யார்?' என்று கேட்டார். அதற்கு, 'திறமை உள்ளவர் கட்சிக்கு தலைமை ஏற்று வழி நடத்தட்டும்; கட்சிக்கு வாரிசு யார் என்று சொல்ல மாட்டேன்' என பதிலளித்தார்.


எம்.ஜி.ஆர்., மறைவுக்குப் பின், 132 அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களில், 98 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவுடன் வி.என்.ஜானகி முதல்வரானார்; மீதி, 34 எம்.எல்.ஏ.,க்கள் ஜெயலலிதாவுக்கு ஆதரவு அளித்தனர். சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க, போதிய எம்.எல்.ஏ.,க்கள் பலம் இல்லாததால், தி.மு.க.,வின், 24 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு கேட்டு, கருணாநிதியிடம் ஆர்.எம்.வீரப்பனை துாது அனுப்பினார் வி.என்.ஜானகி; கருணாநிதி ஆதரவு தரவில்லை என்பதால், 22 நாளில் ஆட்சி கவிழ்ந்தது.

ஆட்சி கவிழ்ந்தது பற்றி, அ.தி.மு.க., தொண்டர்கள்கவலைப்படவில்லை. மாறாக, ஆட்சியைக் காப்பாற்ற கருணாநிதி வீட்டு வாசலை மிதித்ததே தவறு என்று, ஜானகி மீது கோபம் கொண்டனர். அதனால், ஜானகி ஆட்சியை கவிழ்த்த ஜெயலலிதாவின் செயலை தொண்டர்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அதுவே, ஜெயலலிதாவுக்கு சாதகமானது; கட்சியையும், அவர் தன் வசப்படுத்தினார்.


latest tamil news


எம்.ஜி.ஆர்., சொன்ன அந்த திறமை ஜெயலலிதாவிடம் உள்ளது என்பது, அப்போது நிரூபணமானது. ஜெயலலிதா மறைவுக்கு பின், சசிகலாவின் சூழ்ச்சியால், அ.தி.மு.க., இரண்டாகப் பிரிந்தாலும், பின், ஒன்றாக இணைந்தது. ஒருங்கிணைப்பாளராக பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக பழனிசாமியும் செயல்பட்டனர். சில நாட்களுக்கு முன், அ.தி.மு.க., - எம்.பி.,யான பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத், முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசியது மட்டுமின்றி, அவரது ஆட்சி சிறப்பாக இருக்கிறது என்றும் கூறியுள்ளார். இது, அ.தி.மு.க., தொண்டர்களின் மத்தியில் எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது.

இவை உட்பட, வேறு பல விஷயங்களும் பன்னீருக்கு பாதகமாக மாறின. அதனால், இது தான் சரியான சந்தர்ப்பம் என்று பன்னீரை ஓரங்கட்டி, ஒற்றைத் தலைமையாக உருவெடுக்க நினைக்கிறார் பழனிசாமி. எம்.ஜி.ஆர்., சொன்னபடி தி.மு.க.,வை எதிர்த்து அரசியல் செய்யும் திறமை, ஜெயலலிதாவுக்கு அடுத்ததாக பழனிசாமியிடம் உள்ளது என்பது, சமீபத்திய நிகழ்வுகள் வாயிலாக உறுதியாகின்றன. ஆனாலும், காலம் யாருக்கு சாதகமாக உள்ளது என்பது, அடுத்த சில நாட்களில் தெரிந்து விடும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...