Tuesday, June 28, 2022

OPS ஐ நீக்க முடியுமா?

 'நான் தான்' அதிமுக என ஜானகியும், ஜெயலலிதாவும் பிரிந்து நடத்திய யுத்தத்தில் இரட்டை இலை சின்னம் 1988 இறுதியில் தேர்தல் ஆணையத்தால் முடக்கப்பட்டது. 1989 தேர்தலில் ஜானகி இரட்டைப் புறாவையும், ஜெயலலிதா சேவலையும் சின்னமாக பெற்று, இரு அணிகளும் மோதின.


ஜானகி Vs ஜெயலலிதா என்றிருந்தாலும், அது RMV Vs ஜெயலலிதா என்ற யுத்தமாகவே பார்க்கப்பட்டது. அந்த தேர்தலில் 27 MLA க்களை பெற்று 22.37% வென்றெடுத்திருந்தார் ஜெயலலிதா. ஜானகி அணி 9.19% வாக்குகளையும் 2 தொகுதிகளையும் பெற்றிருந்தது.


ஆக, அதிமுகவின் 31% வாக்குகள் இரண்டாக பிளந்ததால் திமுக ஆட்சிக்கு வந்தது என்று நம்பப்பட்டது. ஒரு கட்டத்தில் ஜானகி, தான் பெற்ற 9.19% வாக்குகளுக்கான அணியை அப்படியே ஜெ.விடம் ஒப்படைத்தார். ஜெ மற்றும் RMV இணைப்புக்கு பிறகே இரட்டை இலை சின்னம் மீண்டது. இந்த வரலாறு அனைவருக்கும் தெரியும்.


இதே நிலை மீண்டும் 2017ல் வந்தது. சசிகலாவையும், டிடிவியையும், அவரால் முதல்வராக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராகவும் ஓபிஎஸ் கிளர்ந்தெழுந்தார். மீண்டும் அதிமுக சின்னம் முடங்கியது.


தான் முதல்வராக வேண்டும் என்று காலியான R.K.நகர் இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் இல்லாமல் அதிமுக தேர்தலை சந்திக்க வேண்டிய நிலை வந்தது. டிடிவி அணி தொப்பியும், ஓபிஎஸ் அணி மின்விளக்கையும் பெற்று தேர்தலில் போட்டியிட்டது.


இன்று இபிஎஸ்ஸோடு உள்ள அனைவரும் அன்று டிடிவியோடு இருந்தார்கள். முதல்வர் இபிஎஸ் கூட டிடிவிக்குத்தான் பிரச்சாரம் செய்தார். ஆனால் யாருடைய பலமும் நிரூபிக்கப்படாமல் அந்தத் தேர்தல், இடைநிறுத்தம் செய்யப்பட்டது. பின்னாட்களில் இபிஎஸ் Vs டிடிவி உருவானது; ஓபிஎஸ் - இபிஎஸ் இணைவு உருவானது.


ஓபிஎஸ் - இபிஎஸ் இணைவு வந்தவுடன், டிடிவி தன் ஆதரவு எம்எல்ஏக்களை பிரித்துக்கொண்டு வெளியேறினார். அவர்கள் நீக்கப்பட்டார்கள். மீண்டும் வந்த RK நகர் இடைத்தேர்தலில் ஓபிஎஸ் - இபிஎஸ் இணைவால் இரட்டை இலை சின்னத்தில் அதிமுக போட்டியிட்டது, சுயேட்சை குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு, இரட்டை இலை - உதயசூரியன் இரண்டையும் வென்றார் டிடிவி.


பின் 2019ல், நீக்கப்பட்ட MLA க்களுக்கு இடைத்தேர்தல் கொண்டு வரப்பட்டு, அதில் வென்று அதிமுக ஆட்சியை தக்க வைத்ததை பார்த்தோம்.நிற்க.


இதில் ஜெ Vs ஜாவுக்கும்,ஓபிஎஸ் Vs இபிஎஸ்க்கும் உள்ள நுணுக்கமான வேறுபாடு இங்கேதான் உள்ளது.இரட்டை இலை சின்னம் முடங்கி வேறு சுயேட்சை சின்னங்களில்,ஒரு பொதுத்தேர்தலில் இருவரும் போட்டியிட்டு தங்கள் பலத்தை நிரூபித்தனர் ஜெ - ஜா.


அதில் செல்வி.ஜெயலலிதாவால்தான் கட்சியை நடத்த முடியும் என்று ஜா அணி ஜெயலலிதா அணியோடு இணைந்து இரட்டை இலையை பெற்றது.ஆனால் ஒரு தேர்தலில் இபிஎஸ் - ஓபிஎஸ் இரு அணிகளும் தங்கள் பலத்தை நிரூபிக்கும் முன்பே,சசிகலா - டிடிவி தலைமைமை ஏற்க விரும்பவில்லை என்ற பொதுப்புள்ளியில் இணைந்தது.


ஓபிஎஸ் - இபிஎஸ் இணைவுக்கு பிறகு அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையிலான அணிக்கு இரட்டை இலையை வழங்கியது தேர்தல் ஆணையம்.


ஆக, தன் பலத்தை நிரூபித்து, தன் தலைமை ஏற்றுக் கொண்டவர்களுடன் ஜெயலலிதா, இரட்டை இலையை பெற்றதும், ஓபிஎஸ் பலத்தை ஏற்றுக் கொண்டு அவருக்கு ஒருங்கிணைப்பாளர் பதவியை வழங்கி இபிஎஸ் அணி, இரட்டை இலையை மீட்டதும் ஒரே அளவுகோல் கொண்டதல்ல.


2017ல் மீண்ட இரட்டை இலை சின்னத்திற்கு இபிஎஸ் மட்டும் உரிமை கோர முடியாது. யாருடைய பலமும் நிரூபிக்கும் முன்னே இரட்டை இலையை ஓபிஎஸ் உதவியுடன் மீட்டு, ஒருங்கிணைப்பாளராக ஏற்றுக்கொண்டாகிவிட்டது.


நாடாளுமன்றம், இடைத்தேர்தல், ஊரக உள்ளாட்சி, சட்டமன்றம், நகர்ப்புற உள்ளாட்சி என எல்லா தேர்தலுக்கும், இருவரும் கையெழுத்திட்டே இரட்டை இலையை கொடுத்துள்ளார்கள். அதற்கு வந்த வாக்குகளுக்கு எல்லாம், இருவரும் உரிமை கோரும் விதமே அதிகாரம் உள்ளது.


அதிமுகவின் சட்டவிதிகளின் படி பொதுச் செயலாளரை பொதுக்குழுவோ, நிர்வாகிகளோ சேர்க்க - நீக்கவெல்லாம் முடியாது. திமுகவில் கருணாநிதி அப்படித்தான் தன்னை எளிமையாக நீக்கிவிட்டாரென யோசித்து, சிறப்பான சட்டங்களை வகுத்துள்ளார் எம்ஜிஆர்.


பொதுச் செயலாளரையோ அல்லது அதற்கு நிகராக மாற்றப்பட்ட ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் பதவியையோ பொதுக்குழுவால் நீக்கவோ, நியமிக்கவோ முடியாது. அப்படி நியமிக்கப்பட்ட பொது செயலாளர் சசிகலா, துணை பொதுச்செயலாளர் டிடிவி நீக்கம், செல்லுபடியானது.


ஆனால், ஒருங்கிணைப்பாளர் - இணை ஒருங்கிணைப்பாளர் பதவி, சட்டவிதிகளின்படி தேர்தல் முறையில் தேர்ந்தெடுத்துவிட்டார்கள். அதை பொதுக்குழு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது ஒரு புள்ளி என்றாலும், பொதுக்குழுவே செல்லுமா - செல்லாதா என்கிற கேள்விகள் எழுந்த பிறகு, அவைத்தலைவர் நியமனம் செல்லுமா என்ற குழப்பமும் வந்த பிறகு, தேர்தல் ஆணையத்தில் கொடுத்த ஒருங்கிணைப்பாளர் - இணை ஒருங்கிணைப்பாளர் தான் நிற்கும்.


ஒருவேளை ஒருங்கிணைப்பாளர் - இணை ஒருங்கிணைப்பாளர் காலாவதி ஆனது செல்லும் என்றால் கூட ,அவைத்தலைவர் நியமனம் கேள்விக்குள்ளாகும். அதிமுக சட்ட விதிகளின் படி, பொதுச் செயலாளர் - துணை பொதுச் செயலாளர், அடுத்தது பொருளாளர்; அதற்கடுத்து தலைமை நிலைய செயலாளர் என்பது தான் அதிகார படிநிலை.


ஆகவே, பொதுச் செயலாளர் பதவிக்கு நிகரான ஒருங்கிணைப்பாளர் / இணை ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதி ஆனால் கூட, ஓபிஎஸ்க்கு அதிமுகவின் மறைந்த பொதுச் செயலாளர் ஜெ, போட்ட பொருளாளர் பதவியை யாராலும் நீக்க முடியாது. இபிஎஸ் தலைமை நிலையச் செயலாளராக இருந்தாலும், பொருளாளர் பதவிக்கு பாதி அதிகாரம் போய்விடும்.


அதை, தற்காலிக பொதுசெயலாளர் சசிகலாவாலேயே நீக்க முடியவில்லை அப்போது.


திமுக - அதிமுகவில் மிக முக்கியமான அதிகார பதவி பொருளாளர்..


அதுவும் அதிமுக சட்டவிதிகளின்படி, தலைமைப் பதவியான பொதுச் செயலாளர் / துணை.பொ.செ அல்லது ஒருங்கிணைப்பாளர் / இணை ஒருங்கிணைப்பாளர் பதவி காலி என்றால், அது வரை நிர்வாகம், பொருளாளர் மற்றும் தலைமை நிலைய செயலாளருக்கு மாறும்..


அப்படிப் பார்த்தாலும், 50/50 கட்சி ஓபிஎஸ் - இபிஎஸ்க்குத்தான்.


ஓபிஎஸ்ஸை யாராலும் நீக்க முடியாது..நீக்கி அறிவித்தாலும் செல்லாது.


அவர் கையெழுதில்லாமல் வருகிற ஜூலை 9 ந்தேதி நடக்க உள்ள உள்ளாட்சி தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை கொடுக்க முடியாது. அதிமுகவினர் சுயேட்சை சின்னத்தில் தான் போட்டியிடும் சூழல் வரும்.


முதல்வர் வேட்பாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் பதவி போல இதை விட்டுக்கொடுக்க மாட்டார் ஓபிஎஸ். காரணம், இரட்டை இலை சின்னம்தான் வாக்குகளை பெற்றது, அந்த சின்னத்திற்கு தன்னுடைய கையெழுத்து வேண்டும்; அதை, தான் விட்டுக் கொடுக்காத வரை, யாராலும் பறிக்க முடியாது என்பதை புரிந்திருக்கிறார்..


இறுதியாக இந்த பிரச்சனை ஒரு நிலையைத்தான் அடையும். அது, முறையாக பொதுச் செயலாளருக்கு தேர்தல் வைப்பது. அல்லது ஒருங்கிணைப்பாளருக்கு தேர்தல் வைத்து தேர்ந்தெடுப்பது. 


அப்படி நகர்ந்தால் பலர் அந்த தலைமை பதவிக்கு போட்டி போடலாம். அதில் ஒன்றிய, நகர, மாவட்ட, மாநகர என எல்லா கிளைகளிலும் பெட்டியை வைத்து, மினி தேர்தலையே ஆணையம் நடத்தும். இதில் ஓபிஎஸ் - இபிஎஸ் மட்டுமல்ல செங்கோட்டையன் கூட போட்டியிடலாம். இப்படி ஒரு நிலை வருவதற்கு முன்பே ஓபிஎஸ்ஸை நீக்கிவிடலாம் என்று நினைத்தால், அது கானல் நீராகவே போகும்... பார்ப்போம்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...