"அப்பா ...."
"ஞாயிற்றுக்கிழமை போலாம் ..."
"இவ்ளோ பெரிய வீடு இருக்கு. எதுக்கு அவங்கள எங்கையோ கொண்டு போய் வச்சிருக்கீங்க.? எப்பவாச்சும் பாக்கப் போகும் போதெல்லாம் அவங்க எப்படி அழுவுறாங்க தெரியுமா ...? "
"எங்கள வீட்டுக்கு கூட்டிட்டுப் போனு உங்கிட்ட கேட்டாங்களா ...?"
"ஒருதடவை கூட அப்படி கேட்டதில்லப்பா. நல்லா படிக்கணும் , நல்லா சாப்பிடணும், அப்பா அம்மா பேச்சு கேட்டு சமத்தா இருக்கணும் இப்படித்தாம்ப்பா சொல்வாங்க. ஆனா போய்ட்டு வரேன்னு சொன்னதும் கையப் புடிச்சுக்குவாங்க. அவங்க கண்ணெல்லாம் கலங்கும். கையெல்லாம் நடுங்கும்பா.... "
"இப்ப என்ன பண்ணனும்கிறே .. அவங்கள போய் பாத்துட்டு வரணுமா , வீட்டுக்கு கூட்டிட்டு வரணுமா....? "
"அவங்கள நம்ம கூடவே வச்சுக்கலாம்ப்பா ..."
"சரி ... நான் சொல்ற மாதிரி செஞ்சீன்னா தாத்தாவும் பாட்டியும் வீட்டுக்கு வந்துருவாங்க ... "
"என்ன செய்யணும் சொல்லுங்க ... என்ன வேணா செய்றேன்ப்பா ... "
அவன் என்ன செய்ய வேண்டும் என்பதை அப்பா விளக்கமாக சொல்கிறார். இரண்டு நாட்கள் கடந்து வந்த ஒரு சனிக்கிழமை அரைநாள் பள்ளிக்கூடம் முடிந்து வீட்டுக்கு வந்த மகன் கையில் ஒரு பரிசுக் கோப்பையோடு அம்மாவைத் தேடுகிறான்.
"அம்மா ... அம்மா .... "
"என்னடா செல்லம் ..."
"பள்ளிக்கூடத்துல எனக்கு பரிசுக் கோப்பை குடுத்தாங்கம்மா ..."
"அப்படியா .. வெரிகுட் ... எதுக்காக குடுத்தாங்க ...?"
"என் வீடு - அப்படிங்கற தலைப்புல ஓவியப் போட்டி வச்சாங்க. நான் ஒரு வீடு கட்டுனா எத்தனை அறை இருக்கும் . அதுல யாரெல்லாம் இருப்பாங்க. வீட்டைச் சுத்தி எப்படிப் பராமரிப்பீங்க வீடு என்ன டிசைன்ல இருக்கும் .... இது மாதிரி அம்சங்களோட எங்க கனவு வீட்டை வரைஞ்சு குடுக்கச் சொன்னாங்க.... "
"ஓஹோ ... நீ எப்படி வரைஞ்சே ..?"
"நான் நம்ம வீட்டையே ரோல் மாடலா வச்சு வரைஞ்சேன் "சூப்பர் ... அதான் பரிசு கிடைச்சிருக்கு. இது உன் அப்பா டிசைன் பண்ண வீடாச்சே ... நீ வரைஞ்ச படத்தைக் காட்டேன் பார்க்கலாம் "இந்தாங்கம்மா " "அடடா அழகா இருக்கே .. முன்னால ஒரு பூந்தோட்டம். பின்னால ஒரு காய்கறித் தோட்டம். வீட்டைச் சுத்தி தென்னை, முருங்கை, பப்பாளி மரங்கள். சூப்பர்டா "வீட்டுக்குள்ள பாருங்கம்மா ... "
"அய்யோ விசாலமான ஹால் , ஹாலோட ரெண்டு பக்கமும் அறைகள். ஒண்ணு உனக்கும் உன் மனைவிக்கும்... ஓக்கே. ஒண்ணு உன் குழந்தைகளுக்கு. டபுள் ஓக்கே . எதிர்த்தாப்புல கிச்சன். அதுக்கு பக்கத்துல ஒரு ரூம் பூட்டிக் கிடக்குதே ஏன் ....? பாத்ரூமா ...? எங்களோட ரூம் எங்கே? " "அய்யோ அம்மா பாத்ரூம் வெளிய இல்ல. மூணு ரூம்லயும் அட்டாச்டு. பூட்டிக்கிடக்குதே அதுதான் உங்க ரூம். அதுல என்ன எழுதி இருக்கேன்னு படிச்சுப் பாருங்க .... "
"அப்பாவையும் அம்மாவையும் முதியோர் இல்லத்தில் சேர்த்து விட்டதால் பூட்டப்பட்டிருக்கிறது" "என்னடா இப்படி எழுதி இருக்கிறே ... "
"உங்களை விட பரவாயில்லைல அம்மா. நீங்க தாத்தாவையும் பாட்டியையும் முதியோர் இல்லத்துல சேர்த்துட்டு அவங்க ரூமை ஸ்டோர் ரூம் ஆக்கிட்டீங்க... ஆனா நான் உங்களை முதியோர் இல்லத்துல சேர்த்தாலும் உங்க ரூமை உங்க ரூமா மட்டும்தான் வச்சிருக்கேன் ... இந்த ஒரு பாய்ண்ட்டுக்குதாம்மா எனக்கு முதல் பரிசே கிடைச்சுது ...! "
"அடப் போடா நீயும் உன் பாய்ண்ட்டும் .... "
"ஏங்க நான் ஸ்டோர் ரூமை சுத்தம் பண்றேன். நீங்க காரை ரெடி பண்ணுங்க .... போய் அத்தையும் மாமாவும் கூட்டிட்டு வந்துரலாம்..... "
"என்ன திடீர்னு .... நாளைக்குத்தானே ஞாயித்துக்கிழமை ... இன்னைக்கே பாக்கப் போலாம்ங்கிறே ... நாளைக்கு ஏதாவது புரோகிராம் வச்சிருக்கியா ...? "
"மண்ணாங்கட்டி ... நாம அவங்களை பாக்கப் போகல கூட்டிட்டு வரப் போறோம் ... "
"கனவேதும் கண்டியா ... அவங்களை கூட்டிட்டு வந்து கொஞ்சநாள் வீட்டுல வச்சிருக்கணும்னு ." "கனவு இல்லைங்க. பையன் கற்றுத்தந்த பாடம். அவங்கள நிரந்தரமா நம்ம கூடவே வச்சுக்கப் போறோம். அதுவும் ராஜா ராணியாட்டம்... "
காரை ரெடி செய்வது போல் போர்டிகோ சென்ற அப்பாவும் மகனும் உள்ளங்கைகள் உயர்த்தி தட்டிக் கொண்டார்கள்.
"செம நடிப்புடா மகனே ... "
"நீங்க சொன்னபடி செஞ்சேன். செம மூளைப்பா உங்களுக்கு ... "
இவர்களைப் பார்த்ததும் வாயகலச் சிரிக்கப் போகும் தாத்தா பாட்டியைப் போல, காசுக்கு வாங்கிய அந்த பரிசுக்கோப்பையும் வாய் விரிய சிரித்துக் கொண்டிருந்தது.
No comments:
Post a Comment