மகாபாரதம் கிளைக்கதைகள்
ஒருமுறை பஞ்ச பாண்டவரின் வனவாசத்தின் போது கிருஷ்ணர் அவர்களைச் சந்திக்க வந்தார்.
பீமனுக்கு சந்தேகம் வந்தது.
திரௌபதி எப்படி எல்லாரையும் கணவனாக ஏற்றுக் கொண்டு குற்ற உணர்ச்சி இல்லாமல் இருக்கிறாள்.
கிருஷ்ணன் முன்னால் பீமன் முகம் சுருங்கிக் கிடந்தது.
கிருஷ்ணர் பீமனின் சந்தேகத்தை ஊகித்துக் கொண்டார்.
திரெளபதியைக் கண்களால் பார்த்துச் சிரித்தார்.
திரெளபதியும் கிருஷ்ணரைப் பார்த்துச் சிரித்தாள்.
பீமனுக்குக் கோபம் வந்தது. தனிமையில் கிருஷ்ணரைச் சந்தித்து கிருஷ்ணா உனக்கே இது நியாயமா இவ்வளவு நாள் எனக்கு அண்ணியாக இருந்தவள் எனக்குத் தாய் ஸ்தானத்தில் இருந்தவள் இன்று முதல் ஒரு வருஷத்திற்கு மனைவி என்றால் என்னால் எப்படி
ஏற்க முடியும்?
நீயும் சிரிக்கிறாய் திரெளபதியும் சிரிக்கிறாளே என்று கேட்டான்.
கிருஷ்ணர் சொன்னார் பீமா நடப்பவை எல்லாம் உன்னைக் கேட்டு நடக்கவில்லை.
ஏற்கெனவே இது இவ்வாறு நடக்கும் என்று எழுதப்பட்டவை தான் நடக்கிறது.
இதில் நீ வருத்தப்படுவதற்கு ஒரு காரணமும் இல்லை.
உன் ஆறுதலுக்கு ஒரு விஷயம் சொல்கிறேன் கேள்.
வருடத்திற்கு ஒரு முறை திரெளபதி நள்ளிரவில் தனியாக வெளியில் செல்வாள் பார்த்திருக்கின்றாயா என்று கேட்டார்.
ஆம் பார்த்திருக்கிறேன்.
ஒரு வருஷம் முடிந்ததும் ஒவ்வொரு நள்ளிரவிலும் வெளியே சென்று விட்டுப்
பின் காலை உதயத்தில் திரும்பி வருவாள் என பீமன் சொன்னான்.
அப்போது திரெளபதி எப்படி இருப்பாள் என்று கிருஷ்ணர் கேட்டார்.
பீமனோ புடம் போடப்பட்ட
புதுப் பொன்னைப் போல் ஜொலிப்பாள்.
அவள் முகத்தின் தேஜஸ் சுடர் விட்டுப் பிரகாசிக்கும் என்றான்.
பீமா இன்றிரவு அம்மாதிரித் திரெளபதி வெளியே போகும்போது நீயும் உடன் போய்ப் பார் என்றார் கிருஷ்ணர்.
அன்றிரவில் நள்ளிரவில் திரெளபதி வெளியே போக பீமனும் கிருஷ்ணனும் அவளுக்குத் தெரியாமல் பின்தொடர்ந்து செல்கிறார்கள்.
அவர்கள் இருவரும் மறைந்து இருந்து பார்க்கும் வேளையில் தீ மூட்டிய திரெளபதி தானும் அந்தத் தீயில் விழுகிறாள்.
மனம் பதைத்த பீமன் அவளைக் காப்பாற்ற ஓட முயற்சிக்க தடுத்து அங்கே பார் என்றார்.
பீமன் கண்களுக்கு தீக்குள் திரெளபதி சாட்சாத் அகிலாண்டேஸ்வரி சர்வ உலகத்தையும் காத்து
அருளும் மஹா சக்தி
அன்னையாக தன் சுய
உருவில் காட்சி அளிக்கிறாள்.
திகைத்துப் போன பீமனை அழைத்து வந்து புரிய
வைத்தார் கிருஷ்ணர்.
பீமா நீங்கள் ஐவரும் பஞ்ச பூதங்கள் என்றால் உங்களை ஆளும் மஹாசக்தி திரெளபதி.
அவளுக்குள் நீங்கள் அடக்கமே அன்றி அவள் உங்களுக்குள் அடக்கம் இல்லை.
எப்படி இந்தப் பிரபஞ்சமானது பஞ்சபூதத்தையும் வெளிக்காட்டி ஆளுமை செய்கிறதோ அதை ஆளுமை செய்யும் சக்தி இவளே.
நீங்கள் ஐவரும் ஐம்புலன்கள் என்றால் உங்கள் உடலில் உள்ள ஜீவாத்மா இந்தத் திரெளபதி ஆவாள்.
இந்த ஜீவாத்மா எப்படிப் பரமாத்மாவிடம் ஐக்கியம் ஆகிறதோ அப்படி நீங்கள் அனைவரும் அவளுள் ஒடுங்குவீர்கள்.
இந்த உண்மைதான் உங்கள் ஐவரையும் திரெளபதி மணம் புரிந்ததாகக் காட்டப்படும் காட்சி
இந்தத் தத்துவத்தை உணர்ந்தவர்கள் என்னையே உணர்ந்தவர்கள் ஆவார்கள்.
உனக்கு இந்த உண்மை புரியவேண்டும் என்பதற்காக இந்தக் காட்சியைக் காட்டினேன்.
இந்த உண்மை உனக்குள் உறைந்து போகட்டும்.
இவளை விடக் கன்னியோ அல்லது பத்தினியோ இவ்வுலகில் இல்லை.
நீ கவலை இல்லாமல் உன் கடமையைச் செய் என்றார்.

No comments:
Post a Comment