Sunday, June 26, 2016

எல்லாவித மனப்பொருத்தத்தோடும் புரிதல்களோடும் 25 வருடங்கள் வாழ்வது பெரியவிஷயம் கிடையாது,

ஒரு பெரிய அரங்கம் 
25 வருடங்களுக்கு மேல் சேர்ந்து வாழ்ந்த தம்பதிகளில் சிறந்த தம்பதியை தேர்ந்தெடுத்து
ஒரு கார் பரிசு வழங்குவது என்று ஒரு நிறுவனம் முடிவு செய்து விளம்பரம் செய்தது
நூற்றுக்கணக்கான தம்பதிகள் கலந்துகொண்டார்கள் 
அதில் ஒரு மனைவி 
''அப்படி என்னத்த பெருசா வாழ்ந்து கிழிச்சிட்டோம்னு சொல்ல சொல்ல கேக்காம இந்த போட்டிக்கு கூட்டிட்டு வர்றீங்க '' என்றபடி சண்டையிட்டு கொண்டே உள்ளே வந்தார்! 
கொஞ்ச நேரத்தில் 
போட்டி தொடங்கியது, கணவன் மனைவியை தனித்தனியாக அழைத்து நிறைய கேள்விகள் கேட்டார்கள் கலந்து கொண்டவர்களில் பெரும்பாலானோர் ஓரளவுக்கு சரியான பதிலை சொன்னார்கள் 
அதில் ஒரு தம்பதி 
சொன்ன பதில்கள் அரங்கத்தையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியது 
யாரிடமும் இல்லாத அளவிற்கு அவர்களிடத்தில் அவ்வளவு ஒற்றுமையும் பரஸ்பர புரிதலும் விட்டுகொடுத்தலும் எல்லாமே நிறைந்திருந்தது 
அவர்களுக்கு கிடைத்த மதிப்பெண் 100/100! எல்லோருக்குமே தெரிந்துவிட்டது அவர்கள் தான் ஜெயிக்கப்போகிறார்கள் என்று, 
எல்லோரிடமும் கேள்வி கேட்டு முடித்தபின் நூறு மதிப்பெண்கள் வாங்கிய அந்த சிறந்த தம்பதியையும்
மிகக்குறைவாக பூஜ்ஜியம் மதிப்பெண் வாங்கிய 
ஒரு தம்பதியையும் மேடைக்கு அழைத்தார்கள்! 
பூஜ்ஜியம் வாங்கியது வேறுயாரும் இல்லை, வரும்போதே சண்டைபோட்டுக்கொண்டு வந்தார்களே அவர்கள் தான் இரண்டு தம்பதிகளும் மேடைக்கு வந்தார்கள், 
ஜீரோ மதிப்பெண் பெற்ற தம்பதியை அழைத்து காதல் திருமணமா என்று கேட்க, இல்லை arranged marriage என்றார்கள் 
எத்தனை குழந்தைகள் என்றதற்கு நான்கு என்றார்கள், திருமணம் ஆகி எவ்வளவு வருடங்கள் ஆகிறது என்றதற்கு 
35 வருடங்கள் என்று சொல்ல, எல்லோரும் சிரித்துவிட்டார்கள்!
35 வருடங்களாகியும் 
ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளவில்லை
என்று ஏளனமாய் கேலி பேசினார்கள், 
அவமானம் தாங்கமுடியாமல் அவர்களுக்கு அழுகை வர கஷ்டப்பட்டு அடக்கிக்கொண்டார்கள்
ஆனால் போட்டியின் நடுவர் 
இந்த போட்டியில் கலந்துகொண்ட 500 தம்பதிகளில் மிகச்சிறந்த தம்பதி இவர்கள்தான் என்று அறிவித்து ஜீரோ மார்க் வாங்கிய தம்பதிக்கு காரை பரிசளித்தார்! 
காரணம்...
எல்லாவித மனப்பொருத்தத்தோடும் புரிதல்களோடும் 25 வருடங்கள் வாழ்வது பெரியவிஷயம் கிடையாது, 
எந்த ஒரு மனஒற்றுமையும் புரிதலும் இல்லாவிட்டாலும் 
35 வருடங்கள் சேர்ந்து வாழ்ந்திருக்கிறார்களே இதுதான் உண்மையிலேயே மிகப்பெரிய விஷயம் என்று பாராட்டினார்! இருவரும் 
ஆனந்தக்கண்ணீரோடு 
கார் சாவியை வாங்கிக்கொண்டு செல்ல எல்லோரும் எழுந்து நின்று கைதட்டினார்கள்! 
சிறிது நேரத்தில் எல்லோரும் கலைந்து செல்ல, தூரத்தில் யாரோ சண்டை போடுவது போல் சத்தம் கேட்டது, 
எல்லோரும் திரும்பி பார்க்க காரை சுற்றி சுற்றி வந்தபடி அந்த மனைவி : நானும் எத்தனையோ நாள் தலைபாடா அடிச்சிகிட்டேன் சும்மா இருக்கிற நேரத்துல எதாவது உருப்படியா பண்ணுங்கன்னு, 
டிரைவிங் கத்திருந்தாலாவது இந்நேரம் உபயோகமா இருந்திருக்கும்...
உங்கள கட்டிகிட்டு என்ன சுகத்தை கண்டேன்...
என திரும்ப, கணவனும் பின்னாலேயே சுற்றிவர 
எதுக்கு இப்படி குட்டிபோட்ட பூனை மாதிரி பின்னாடியே சுத்தறீங்க ?!
உங்களுக்கு தான் மூட்டுவலி இருக்கு இல்ல.. 
பேசாம ஒரு இடத்துல உட்காருங்க.. அப்புறம் ராத்திரிபூரா லட்சுமி லட்சுமின்னு பொலம்புவீங்க நான்தான் என்னவோ ஏதோன்னு எண்ணை தேச்சி விடனும்...
எனக்குன்னு பாத்து கட்டிவச்சான் பாரு எங்கப்பன்...சீமையில இல்லாத மாப்பிள்ளைய 
அவன சொல்லனும்...
என்றபடி காரை 
சுற்றி சுற்றி வர 
வேடிக்கை பார்த்த தம்பதிகள் புன்னகையோடு விரல் கோர்த்து நடந்தார்கள்! 
..........................................
அன்பையும் காதலையும் வெளிப்படுத்த அழகான வார்த்தைகள் தான் வேண்டும் என்று யார் சொன்னது? 
மானங்கெட்ட கேள்வியிலும் மறைந்திருக்கும் காதல்!!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...